blank'/> muhilneel: தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவுக் கலன்கள்

Thursday, August 29, 2019

தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவுக் கலன்கள்

இயற்கை நமக்களிக்கும் செல்வங்கள் அளப்பரியது. நமக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாதது.அதே போல், நாம் வாழும் இந்த பூமிக்கும் இயற்கை பொருட்களால் கேடு ஏற்படாது. இதை மறந்து, நாம் செயற்கையை நாடி செல்கையில் நமக்கும் பெரும் கேடு வந்து சேர்வதோடு, இயற்கைக்கும் பெரும் கேடு விளைகிறது.

சில காலத்திற்கு முன் வரை , சமைக்கவும், சமைத்த உணவை பரிமாறவும் இயற்கை பொருட்களையே பயன்படுத்தி வந்தோம். காலமாற்றம், நாகரீகம், நேர சிக்கனம் என்று துரித சமையல் முறைகள், பயன்படுத்த இலகுவான பாத்திரங்கள்(Non-stick, Plastic, Tupperware) என்று, எப்போது செயற்கையுடன் நாம் கைகோர்க்க ஆரம்பித்தோமோ, அப்போது ஆரம்பித்தது பிரச்சனைகள். பலவகையான நோய்கள், உடல் உபாதைகள் என்று சிரமப் படுகிறோம்.

இவற்றிற்கு தீர்வு தான் என்ன? முடிந்த வரை இயற்கையான பொருட்கள் அல்லது, இயற்கைக்கு குந்தகம் விளைவிக்காத பொருட்களை பயன்படுத்துவதே ஆகும். இதனால், நமக்கும் நன்மை, பூமித் தாயும் குளிர்வாள்.


நாம் அனைவருக்கும் இந்த அனுபவம் நிச்சயம் இருக்கும். சுற்றுலாவுக்கு செல்கையில், அல்லது ஏதேனும் கோயிலுக்கோ பயணம் மேற்கொள்கையில், வாழை இலையில் உணவினை கட்டி, செய்தித் தாளில் சுற்றி, உணவுப் பொட்டலம் எடுத்துச் சென்றிருப்போம். உணவினை நாமும் உண்டு, நம்மை நாடி வரும் காக்கை, குருவி, நாய் போன்ற ஜீவராசிகளுக்கும் கொடுத்து சாப்பிட்டு முடித்ததும், இலைகளை குப்பைத்தொட்டியில் போட செல்கையில், அங்கே தயாராய் காத்திருக்கும், ஆடுகளும் மாடுகளும். ஆக, ஒருவருக்கு என்று எடுத்துச் சென்ற உணவில், எத்தைனை ஜீவராசிகள் பசியாறி இருக்கிறோம் என்று பார்த்துக் கொள்ளுங்கள். இதே, நெகிழி பயன்படுத்தியிருந்தால் ?

இது மட்டுமல்ல, வாழையிலையில் உணவுனை சூடாக வைத்துக் கட்டுகையில், அந்த சூட்டில் இலையும் சற்றே சூடாக, அதன் மணம் நாம் கட்டும் உணவில் கலந்து போக, சற்று நேரம் கழித்து சாப்பிடுகையில், அந்த உணவின் சுவையும் மணமும்....அதை அனுபவத்தால் தான் உணர முடியும்.

வாழை இலை மட்டுமல்ல, வாழை நார்களைக் கொண்டும், தட்டுகள் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு வருகிறது.



இப்படி உணவு பொட்டலம் கட்ட, பலரும் அறிந்த வாழையிலை தவிர, இன்னும் சில இலைகள் பயன்படுகின்றன. அவற்றுள் சிலவற்றை குறித்து காணலாம்.

பனை ஓலை -பனை ஓலையினாலான விளையாட்டு பொருட்களை நாம் அனைவரும் நிச்சயம் சிறு வயதில் விளையாடி மகிழ்ந்திருப்போம். அந்த இலைகளில் நுங்கு, பதநீர் குடித்த அனுபவம் இருக்கிறதா? பனை குறுத்து ஓலையை அழகாக மடித்து, அதில், நுங்கு மற்றும் பதநீரினை, வியாபாரி வைத்து தரும் அழகே தனி.



இது மட்டுமல்ல, பழங்காலங்களில், இனிப்புகள், காரங்களை எல்லாம் வாங்குகையில், அவற்றை பனை ஓலைகளினாலான கொட்டான்களில் தான் போட்டு தருவார்கள். நெகிழி பயன்பாட்டினால், வெகுவாக குறைந்து இருந்த பனையோலை கொட்டான்கள், இப்போது நெகிழி தடையால் மீண்டும் பயன்பாட்டில் வர ஆரம்பித்து இருப்பது, வரவேற்கத்தக்க மாற்றம்.



தையல் இலைகள் - இலைகளை ஒன்றாக விரும்பும் வடிவத்தில் அடுக்கி, ஈர்க்குச்சியால் இணைத்து பயன்படுத்தும் இலைகளே தையல் இலைகள். இம்முறையில், வேங்கை இலைகள், தாமரை இலைகள்,மாவிலைகள்,ஆலமர இலைகள் , பூவரச இலைகள்,மந்தார இலைகள் தைத்து உணவு உண்ண பயன்படுத்தப்பட்டன.




நாம் கோயில்களில் பெறும் தெய்வப் பிரசாதங்கள், தையல் இலை முறையில் தயாரிக்கப்பட்ட தொன்னைகளிலேயே பெறுகிறோம்.


பாக்கு மட்டை -  உணவு பரிமாற பாக்கு மட்டைகள், தற்போது நெகிழிக்கு மாற்றாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மரத்திலிருந்து உதிரும் பாக்கு மட்டைகள், குறிப்பிட்ட காலம் நீரில் ஊற வைக்கப்பட்டு, பின்னர், நவீன இயந்திரத்தின் உதவியுடன், வெப்பமாக்கி, வேண்டிய வடிவில் அச்சுகளின் உதவியுடன், அழகிய வடிவம் பெறுகின்றன.

இம்முறையில், உணவுத் தட்டுகள், கிண்ணங்கள், தேநீர் கோப்பைகள், குவளைகள், தேக்கரண்டிகள், முள் கரண்டிகளும் தயாரிக்கப்படுகிறது.

தென்னை

தென்னை ஓலைகளில் இருந்து கீற்றுகளை பிரித்தெடுத்து, அவற்றை கூடைகளாக பின்னுகின்றனர். இந்த கூடைகள், பழங்கள், காய்கறிகள், பூக்களை வைப்பதற்கு பயன்படுத்தப் படுகிறடுது. வாழை இலைகளில் உனவு வேக வைக்கப் படுவது போலவே, தென்னங்கீற்றுகளை குடுவை போல் பின்னி, அதில் உணவினை வைத்து வேக வைக்கின்றனர்.

தேங்காய் சிரட்டைகளும் கூட சமையலுக்கு பயன்படுத்தப் படுகிறது.சிரட்டைகளில் உணவு வேகவைக்கப்படுகிறது. புட்டு, இடியாப்பம்,இட்லி போன்ற ஆவியில் வேக வைக்கப்படும் உணவுகள் செய்ய சிரட்டைகள் பயன்படுத்தப் படுகின்றன.

 தானிய உமி

தானியங்களின் உமி நாம் அனைவரும் அறிந்ததே. அந்த உமியினை  பயன்படுத்தி, அவை இயற்கைக்கு தீங்கு விளைவிக்கா வண்ணம் உணவு கலன்கள் தயாரிக்கப்படுகிறது.


செயற்கைக்கு மாற்றாக இயற்கையை தேடுவோம். இயற்கையை பயன்படுத்துவோம். ஆரக்கியமாய், நலமுடன் வாழ்வோம்.

நன்றி,
கீழை இளையவன் வலைப்பக்கம்
விகடன்.காம்
விக்கிபீடியா
ஸ்பைஸ் இந்தியா ஆன்லைன்


குறிப்பு:

பிரதிலிபி தளம் நடத்திய, நம்ம சமையல் போட்டிக்காக எழுதப்பட்டது.

தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவுக் கலன்கள்

No comments:

Post a Comment