blank'/> muhilneel: கடித இலக்கியம்
Showing posts with label கடித இலக்கியம். Show all posts
Showing posts with label கடித இலக்கியம். Show all posts

Thursday, December 29, 2016

அன்புள்ள மணிமொழிக்கு


மதுரை
12.03.2014


அன்புள்ள மணிமொழி அக்காவிற்கு,

                அன்புடன் உன் தங்கை மணிமேகலை எழுதிக் கொள்வது. இங்கு அனைவரும் நல்ல சுகம். அதுபோல் அங்கு உனது மற்றும் அத்தான் நலம் குறித்தும், பிள்ளைகள் கவின்பாரதி, கவின்மலர் நலம் குறித்தும் அறிய ஆவல். 

                கல்லூரியில் உனது விரிவுரையாளர் பணி எப்படி போய்க் கொண்டிருக்கிறது ? மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்கப் போவதாக சொல்லிக் கொண்டிருந்தாயே ? விண்ணப்பித்து விட்டாயா?

              அக்கா ! என் மனதை மிகவும் நோகடித்துக் கொண்டிருக்கும் சில விஷயங்களை உன்னிடம் பகிர்ந்து கொண்டு ஆறுதல் தேடிக் கொள்ளவே இக்கடிதத்தை எழுதுகிறேன். மனதிற்குள்ளேயே போட்டு வைத்து குமைந்து கொண்டிருப்பதை விட எவரிடமேனும் கொட்டித் தீர்த்து விட்டால், மனம் சற்று இலேசாகும் என்ற எண்ணத்தின் விளைவே இக்கடிதம். 

             நீ பலமுறை என்னிடம் கூறியிருக்கிறாய். "பெண்ணுக்கு பெண்ணே எதிரி ! " என்று. நானோ, அதெப்படி இருக்க முடியும் என்று உன்னிடம் வாதிட்டிருக்கிறேன். இப்போது எனக்கு ஏற்பட்டுள்ள சில அனுபவங்கள், நீ கூறியவை எல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை என்று பறைசாற்றுபவையாகவே இருக்கின்றன. என் மனதில் தோன்றியுள்ள இந்த எண்ணம் சரியானது தானா என்பது எனக்கு விளங்கவில்லை. 

என்னை இவ்வாறு எண்ண வைத்த சில சம்பவங்கள்: 

திருமண வயதுப் பெண்ணொருத்தி, நல்ல மணவாழ்க்கை வேண்டி இறைவனுக்கு விரதங்கள் மேற்கொண்டு, பூஜை வேளைகளில் இறைவனுக்கு விளக்கேற்றச் செல்கிறாள். அப்படி செல்கையில், தனக்கு துணையாக தன் சமவயது தோழியையும் உடனழைத்துச் செல்கிறாள். தோழியும் பூஜையில் கலந்து கொள்கிறாள். அப்படி கலந்து கொண்ட சில நாட்களிலேயே, உடன் சென்ற தோழிக்கு பல நல்ல இடங்களில் இருந்து திருமண வரன்கள் வருவதாகவும், விரதம் மேற்கொண்டவளுக்கு வரன்கள் ஏதும் அமையவில்லையே என்று வருத்தப் படுவது போல பேசிவிட்டு, இனிமேல் நீ மட்டும் கோவிலுக்குப் போய் உன் பிரார்த்தனைகளை செலுத்திக் கொள் என்று முகத்தில் அறைந்தாற் போல் சொல்லி, அந்தப் பெண்ணின் மன வருத்தத்தை மேலும் அதிகமாக்குகிறாள்.

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் அந்தப் பெண்ணிற்கு மனதில் இரக்கம் இல்லை என்று எண்ணுவதா, அல்லது, அடுத்தவர் படும் துன்பத்தில் இன்பம் காண்பவள் என்று எண்ணுவதா ?

மற்றோர் சம்பவம்.

பல வருட காலமாக சந்திக்காத தோழி  ஒருத்தியை சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்தால், மகிழ்ச்சி அடையாதவர் எவரும் உளரோ ? அப்படி ஓர் சந்தர்ப்பம் கிடைக்குமாயின் வழக்கமாக நிகழ்வது எதுவாக இருக்கும் ? பரஸ்பரம் நலன் விசாரிப்பு, படிப்பு முடித்து வேலைக்குச் செல்லும் வயதுப் பெண்களாயிருப்பின், திருமணம் குறித்த பேச்சுக்கள், இவை தானே. இப்படியான பேச்சுகள் சகஜம் தானே. அப்படி பேசும் வேளையில், தோழியிடம், " உனக்கு திருமணம் எப்போது ? வீட்டில் வரன்கள் பார்க்கிறார்களா ?" என்று கேட்க, " உனக்குத் தான் திருமணமாகி இரண்டாண்டுகள் ஆகப் போகிறதே, உனக்கு இன்னும் குழந்தை இல்லை. உனக்கு குழந்தை பிறந்ததும் எனக்குத் திருமணம் " என்று  படபடவென்று பேசிவிடுகிறாள். 

பிறரது மன உணர்வுகள், தனது பேச்சால் பின்விளைவுகள் என்ன விழையும் என்பதை சற்றும் சிந்தியாது இருக்கும் இது  போன்ற பெண்களை என்னவென்று சொல்வது ? பிள்ளைப் பேறு என்பது ஒரு பெண்ணுக்கு எவ்வளவு உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதை உணராத பெண்களும் இருப்பார்களோ ?

இன்னொரு பெண்ணோ, பிள்ளைப் பேற்றுக்காக ஏங்கி தவம் கிடக்கும் பெண்ணொருத்தியிடம்,

" என்ன ! குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணமில்லை போலுள்ளதே ! இப்போது தான் மணமுடித்துக் கொண்ட இளம் தம்பதியரைப் போல், வாழ்வை அனுபவிக்கிறீர்கள். மணமாகி இரண்டாண்டு ஆகப் போகிறது. குழந்தை என்று வந்து விட்டால், இஷ்டம் போல் வாழ்வை அனுபவிக்க முடியாது  என்ற எண்ணமோ ? "  

இப்படி எல்லாம் ஒரு பெண்ணின் வாழ்வில் நடைபெறும் ஒவ்வோர்  நிகழ்வுகள் சார்ந்த விஷயங்களில், சம்மந்தப்பட்ட பெண்ணின் மனதை புண்படுத்துவது பெண்களே தான். இதை எல்லாம் அவர்கள் உணர்ந்து தான் செய்கிறார்களா என்பதை இறைவனொருவனே அறிவான்.

பெண் என்பவள் தாயாக, சகோதரியாக, மகளாக, மனைவியாக, தோழியாக என்று தன் வாழ்நாளில் பல பரிணாமங்களை எடுக்கிறாள். அவள் தான் எடுக்கும் காரியத்தை செவ்வனே செய்து முடிக்க தன்னையே அர்ப்பணிக்கிறாள். இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் எவருக்கும் எழுவதில் அர்த்தமில்லை. ஆனால், அவளது தியாகம், அன்பு, பொறுமை, பெருமை எனும் மேன்மை பொருந்திய குணங்களனைத்தும் அவளது சிந்தை தவறிய ஒரு நொடிப் பொழுது பேச்சால் நசிந்து போய்விடுகின்றனவே. இதை உணர்ந்து நடந்து கொண்டால், பெண்ணின் பெருமை எந்நாளும் நிலைத்து நிற்குமன்றோ.

என் மனதில் தோன்றிய எண்ணங்களை, வருத்தங்களை, கோபதாபங்களை எல்லாம் இக்கடிதத்தை ஒரு வடிகாலாய் எண்ணி உன்னிடம் கொட்டித் தீர்த்து விட்டேன் அக்கா. எதிர்காலத்திலேனும், நீ சொல்வாயே, " பெண்ணுக்குப் பெண்ணே எதிரி " என்று. இந்தக் கூற்று பொய்யாய்ப் போய்விடில் மகிழ்ச்சியே.

கவின்பாரதி, கவின்மலர் இருவருக்கும் அன்பு முத்தஙகள். மற்றவை உன் கடிதம் கண்டு.

                                                    அன்புடன்,
                                            உன் தங்கை மணிமேகலை
 

Wednesday, March 12, 2014

அன்புள்ள மணிமொழிக்கு



22.02.2014
சென்னை.

அன்புள்ள  மணிமொழிக்கு,
              
        உன் தோழி மலர்விழி எழுதிக் கொள்வது. நான் இங்கு நலம். உன் நலம் பற்றி அறிய ஆவல். அம்மா , அப்பா மற்றும் கனிமொழி நலம் குறித்தும் அறிய ஆவல். அனைவரது நலனுக்காகவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

கல்லூரி  எனும்   நந்தவனத்தில்  மணம்  கமழும்  வண்ண மலராய்  முகிழ்த்தது   நம்  நட்பு. அந்த  நட்பு  எனும்  மலரில்,  இன்பமெனும்  தேன்  பருகிய  கவலையிலா  வண்ணத்துப்  பூச்சிகள் நாம். நினைவுகளில்  பசுமையாய்  நிறைந்து  நிற்கும்   வசந்த  காலம்  அது. காலங்களும் மாறின. காட்சிகளும் மாறின.       நமது  வாழ்க்கைப் பயணம் திசைக்கு ஒன்றாய்  ஆகிப் போக, வாழ்வு இட்டுச் சென்ற திசையிலேயே நமது  பயணத்தைத் தொடர்ந்தோம்.

காலமது நம்மைப் பிரித்தாலும் கடிதங்கள் நம் நட்பை உரமூட்டி வளர்க்கின்றன. தொலைபேசி வழியே குரல் கேட்டு மகிழ்ந்தாலும், காலமும் கட்டணமும் நம் உரையாடல்களை சுருக்கி விடுகின்றன. விலாவாரியாக உன் மனதை என்னிடமும், என் மனதை உன்னிடமும் விளக்கிக் கூறுபவை நாம் அனுப்பிக் கொள்ளும்  கடிதங்களே.  இன்லேன்ட் லெட்டெர் எல்லாம் நம் எண்ணங்களையும் அன்பையும் கொட்டித் தீர்க்க போதுமானதாக இல்லை.எனவே, முழுநீள தாளில் ஐந்து ஆறு பக்கம் வரை தொடரும் கடிதம்.

இப்படியே நாட்கள் நகர, அவ்வப்போது எவரேனும் உன்னைக் காதலிப்பதாக சொல்லி கடிதத்தில் எழுதுவாய். அதைக் கண்டதும் என் மனதில் பயம் புளியைக் கரைத்திடும். வெள்ளந்தியான உன்னிடம் காதல் என்ற பெயரைச் சொல்லி எவரேனும் உன்னை ஏமாற்றி விட்டால், என்ன செய்வதென்று மனம் பதைபதைக்கும். உனக்கோ, உன்னிடம் உண்மையாகப் பழகுபவர் யார், சந்தர்ப்பத்திற்கேற்ப  உன்னை  பயன்படுத்திக்  கொள்பவர்கள் யார்  என்பது தெரியாது. உன்னைப் பொறுத்த வரை அனைவரும் நல்லவர்களே. வெளுத்ததெல்லாம் பால்  என்று எண்ணிக் கொள்பவள் நீ. உன்னருகே நான் இல்லையே என்றெண்ணி என் மனம் துடிதுடிக்கும். ஒவ்வொரு முறையும் உன்னிடம் “கவனமாய் இரு ! கவனமாய் இரு !! “  என்று எச்சரிக்கை செய்து வந்தேன். என்னிடம் எதையுமே என்றுமே மறைத்திட மாட்டாய் என்று  மலையளவு உன் மீது நம்பிக்கை வைத்தேன். ஆனால் !

சில  மாதங்களாக  உன்னிடமிருந்து  கடிதங்களும்  இல்லை. தொலைபேசி  அழைப்புகளும் இல்லை. கடிதம் அனுப்பினால் பதிலேதும்  இல்லை.  மாதங்கள்  வருடங்களாயின. என்னவோ ஏதோ  என்றெண்ணி  பதறித் துடித்தது  மனம். ஒரு நாள்  திடீரென்று  தொலைபேசியில்  அழைத்தாய்.  மனம் குதூகலித்தது.  ஆனால்,  எனக்கு பெரும்  அதிர்ச்சி தரும்  செய்தி ஒன்றை சொல்வாயென எதிர்பார்க்கவில்லை. ஆம் !

உனக்கு திருமணம்  ஆகி விட்டதென்று கூறினாய். காதல் திருமணம் செய்து கொண்டேனென்றாய். மனம் போல் உனக்கு மாங்கல்யம் அமைந்ததென்று மகிழ்ந்தேன்.

“ என்னிடம்  சொல்லக் கூட முடியவில்லை உன்னால் ? “ என்று  சற்று  காட்டமாக  கேட்க,    

“ சொல்லியிருந்தால்  நீ  செய்ய  விட்டிருக்க  மாட்டாயே ! என்னை எப்படியேனும்  தடுத்து  நிறுத்தியிருப்பாயே ! “  என்றாய்.

கணவரைப் பற்றிக்  கேட்க, வானமே  என் மீது இடிந்து விழுந்தது போல் ஓர்  பதிலை  சர்வ  சாதாரணமாகச்  சொன்னாயே !  கணவருடன்  வாழ  விருப்பமில்லை . அதனால், பெற்ற  பிள்ளையுடனும் தாய் தங்கையுடன் வாழ்வதாய்  சொன்னாய். உனக்கு  ஆதரவளிக்க  தாயும், தங்கையும்  உன்னுடன்  வந்துவிட, தந்தையோ, உனக்கு  ஆதரவளித்ததற்காக  தாயை  பகைத்துக்  கொள்ள, இன்று  குடும்பமே  சின்னாபின்னப் பட்டுப் போய்  நிற்கிறதே !  

உன் நிலை  கண்டு  தங்கை கனிமொழியோ  மண வாழ்க்கை  என்ற ஒன்றையே  வெறுத்து  ஒதுக்கி விட்டு  உனக்காகவும்  உன் பிள்ளைக்காகவும்  உன்னுடனே  வாழ்கிறாள்.

தாயும்  தங்கையும்  உன் மீது கோபப்படுவதாக மிகவும் வருத்தம் கொள்கிறாயே. இந்நிலைக்குக்  காரணம்  நீயே  தானென்பதை  ஏன் உணர  மறுக்கிறாய். உனக்காக  உன் தாய்,  தந்தையை  பிரிந்து வாழ்கிறார். திருமணத்திற்கு பின்  உன் கஷ்டங்களைக்  கண்டு  உன் தங்கை மணவாழ்வே  வேண்டாமென்று  இருக்கிறாள். உனக்காகவே  வாழும் அவர்களை புரிந்து கொள். அவர்களுக்கு  மன நிம்மதியைக் கொடு. 

உன் மீது  பாசமும் நேசமும் அக்கறையும் கொண்ட உறவுகளை, அவர்களின் உணர்வுகளை, உன்னால் அவர்களுக்கு ஏற்பட்ட வலிகளையும் வேதனைகளையும் புரிந்து கொள். அவர்களது கோபம் என்பது நியாயமானதே. சொல்லப் போனால், அவர்கள் தான் உனக்காக தங்களது இன்பங்களையும் வாழ்வையும் மறந்து நிற்கின்றனர். நீ  ஏதும் துன்பம் துயரத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக உனக்கு உறுதுணையாய் இருக்கிறார்கள். அடங்காத பிள்ளை மீது என்ன அக்கறை வேண்டியிருக்கிறது என்று உன் தாயும் சகோதரியும் உன் அப்பாவுடனே இருந்திருக்கலாம். ஆனால், உனக்காக அவரது கோபத்திற்கும், சமூகத்தின் கேலிப் பேச்சிற்கும் ஆளாகி நிற்கிறார்கள் உன் தாயும் சகோதரியும். ஒரு நாளும் அவர்களை குறைவாய் எண்ணாதே. கோயில் கட்டி வணங்க வேண்டிய தெய்வங்கள் அவர்கள். நினைவில் கொள். 

காதல்  உன்  கண்களை  மறைக்க, காதலன் என்று  வந்தவனின்  ஆசை  வார்த்தைகள்  உன் புத்தியை  மழுங்கடிக்க, சிறிதும்  யோசிக்காமல்,  புத்தி  கெட்டவளாய்  வீட்டிலிருந்த நகை பணம் அனைத்தையும்  வாரிச்  சுருட்டிக் கொண்டு  அவன் பின் ஓடினாயே ! இன்று  உனக்கு உறுதுணையாய்  இருப்பவர்  யார் ?  நீ  நம்பிப்  போன உன்  காதலனா அல்லது நீ நம்பிக்கைத்  துரோகம் செய்து விட்டு  ஓடி வந்த உன் குடும்பமா ?  நம்பி வந்தவன், உன் கையில் ஓர் குழந்தையை கொடுத்துவிட்டு  ஓடி விட்டான். இன்று உன்னைக்  காத்து நிற்பது உன்னை நம்பி ஏமார்ந்து போன உன் தாய் தான். அதை ஓர் நாளும் மறவாதே.

கற்ற கல்வியை உறுதுணையாகக் கொள். நல்லதொரு வேலையில் சேர்ந்து வருமானம் ஈட்டு.நியாயமாக செய்யும் தொழில் அனைத்தும்  உயர் தொழிலே. உன் கல்வித் தகுதியை  உயர்த்திக்  கொள். கற்ற கல்வியே என்றென்றும் துணை நிற்கும். உன் பிள்ளைக்கு கல்விச் செல்வத்தை வழங்கிடு. நம்பிக்கையை எந்நாளும் துணை கொள். உன் நல்வாழ்வுக்காய் நாளும் இறைவனை பிரார்த்திக்கிறேன். 

அம்மாவிற்கு என் வணக்கங்களை சொல்லவும். கனிமொழிக்கு என் அன்பை தெரிவிக்கவும். மற்றவை உன் கடிதம் கண்டு.

என்றும் அன்புள்ள,
உன் தோழி மலர்விழி


நன்றி, வல்லமை மின்னிதழ்