blank'/> muhilneel

Saturday, July 18, 2015

நெஞ்சில் முள்


வெளியில் ஆளே விறைத்து விடும் அளவுக்கு குளிர். குளிருக்கான ஆடைகளான கம்பளி அங்கி, தொப்பி என அனைத்தையும் மாட்டிக் கொண்டு, கதவைத் திறந்தார் எழிலரசி.  காலையில் வாசலை தெளித்து, கோலம் போட்டால் தான் எழிலரசிக்கு அன்றைய பொழுது தொடங்கியதாக அர்த்தம்.

ஊரில் இருக்கும் வரை, அன்றாடம் காலையில் வீட்டு வாசலில் சாணம் தெளித்து, கோலம் போட்டு, வண்ணப் பொடி கொண்டு  அழகாக வண்ணம் தீட்டி, பண்டிகை காலங்களில் வாசல் தொடங்கி வீதி வரை  வண்ணக் கோலம் போட்டு பழகிய  எழிலரசிக்கு அமெரிக்கா வந்த புதிதில், அடுக்கு மாடிக் குடியிருப்பில், சிறிய வாசலில் எப்படி கோலம் போடுவது என்ற யோசனையே மேலோங்கியது.  

அரிசியை சற்று நெருநெருவென்று அரைத்து அதை வைத்து கோலம் போட்டு வாசலை அலங்கரித்து விடுவார். இவரது கோலம் போடும் ஆர்வத்தை கடும் குளிரும் கலைத்து விடவில்லை.பண்டிகை காலங்களிலும், வண்ணக் கோலங்கள் வாசலை நிச்சயம் அலங்கரித்திருக்கும். அரிசி மாவுடன் மஞ்சள் தூள் மற்றும் உணவில் கலக்கக் கூடிய வண்ண திரவங்களை (food coloring)   கலந்து வண்ண பொடிகள் செய்வார்.

பெரிய கோலமாக போட முடியாவிட்டாலும், வாசலுக்கு அளவாக,  சிறியதாக சிக்குக் கோலங்களும், கோட்டுக் கோலங்களும் போடுவார். பூஜைக்கென்று தனி அறை இல்லாது போனாலும், சமையலறையில் தெய்வத்திற்கென்று சிறு இடம் ஒதுக்கி, படங்களை அடுக்கி வைத்து, கோலம் போட்டு நாளும் பூஜை செய்வார்.

கதவு திறக்கும் சப்தம் கேட்டு  இனியா தூக்கம் கலைந்து எழுந்து வந்தாள். அம்மா வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருப்பதைக் கண்டதும்,

" ஓ ! அம்மா ! வெளியில விறைக்குற அளவுக்கு குளிர் அடிக்குது. எதுக்காக இந்த குளிரிலேயும் கோலம் போடறீங்க ? சீக்கிரமா உள்ள வாங்க ! " அக்கறையுடன் அன்னையிடம் கூறினாள் இனியா.

கோலம் போட்டுவிட்டு உள்ளே வந்த எழிலரசி,
“ அப்பப்பா ! பயங்கர குளிர் ! “ என்றவாறு கம்பளியை இழுத்துப் போர்த்திக் கொண்டார்.

“ இந்தக் குளிர்ல எதுக்காக கோலம் போட வெளியில போறீங்க ? “ அக்கறையுடன் கோபித்துக் கொண்டாள் இனியா.

“கோலம் போடுறதுக்கு முக்கிய காரணம், அரிசி மாவுல கோலம் போட்டா, அதை எறும்பு சாப்பிடும். இதனால, ஒரு சின்ன உயிருக்காவது இன்னைக்கு சாப்பிடறதுக்கு வழி பண்ணுன திருப்தி “

“அது மட்டுமில்ல. குனிஞ்சு கோலம் போடுறது நல்ல உடற்பயிற்சியும் கூட “ என்று விளக்கமளித்தார் எழிலரசி.

சற்று நேரம் யோசித்த இனியா, “ பிறகு எதுக்காக அம்மா, வீட்டுக்குள்ள எறும்பு வந்துட்டா உடனே மருந்தடிக்க பெஸ்ட் கன்ட்ரோல் (Pest Control) கூப்பிடறீங்க ? எறும்பு சாப்பிட்டுட்டு போகட்டும் அப்படின்னு விட்டுடலாமே ? அது எவ்வளவு சாப்பிட்டுடப் போகுது ? என்றாள்.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார் எழிலரசி.

Tuesday, July 7, 2015

அன்பின் உருவம் அன்னை

 
நன்றி, புகைப்படம் இணையத்திலிருந்து  எடுக்கப்பட்டது.


இந்த உலகில் புதிதாய் ஒவ்வோர் உயிரும் ஜனிக்கும் வேளையில் ஓர் அன்னையின் ஜனனமும் நிகழ்கிறது. நாம் இந்த மண்ணில் வாழும் காலத்தில் நமக்கு எத்தனை எத்தனையோ உறவுகள் கிடைக்கலாம்.  இவ்வுலகில் நமக்கான முதல் உறவு – நம் தாய். அன்னைக்கு அடுத்தபடியாக நமக்கு இருக்கும் உறவுகள் அனைத்தையும் நமக்கு அறிமுகம் செய்பவர் நம் அன்னையே.

இவ்வுலகில் தான் படைத்த அனைத்து ஜீவரசிகளுக்கும் தானே துணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இறைவன் உருவாக்கிய படைப்பே “தாய்”. இறைவனது படைப்பில், உலகில் தன்னலம் கருதாத படைப்பாக்கம் ஒன்று இருக்குமாயின், அவரே “அன்னை”.

அம்மா என்ற வார்த்தையில் இருக்கும் மூன்று எழுத்துகள்,

“ அ “ – உயிரெழுத்து , கருவிற்கு உயிர் கொடுக்கிறார் அன்னை.

“ ம் “ – மெய்யெழுத்து , உயிர் கொடுத்த கருவிற்கு தனது மெய்யில் இடம் கொடுக்கிறார்.

“ மா “ – உயிர் மெய்யெழுத்து , தான் உருவாக்கிய கருவுக்கு உயிரும் மெய்யும் கொடுத்து, உலகின் வெளிச்சத்தை காண வழிகாட்டுகிறார்.

இந்த தத்துவத்தின் அடிப்படையில் உருவான சொல்லே “அம்மா”.

நமக்கான அனைத்துத் தேவைகளையும் பார்த்துப் பார்த்து செய்து, நாம் மேற்கொள்ளும் ஒவ்வோர் முயற்சியிலும் நமக்கு ஊக்கம் அளித்து, நம் வெற்றிகளில் நம்முடன் குதூகலித்து, அதே வேலையில் நாம் பெற்ற வெற்றியின் தாக்கம் நம்மை நிலைகொள்ளாது, கீழே தள்ளிவிடும் நிலையில் நாம் இருந்தாலும், அதை நமக்கு உணர்த்தி பாதுகாப்பவர். தோல்வியிலும் துவண்டு விடாது தோள் கொடுத்து நல்லதோர் தோழியாய், துணை நிற்பார் நம் அன்னையே.

தன் மனையாளுக்கு உற்ற துணையாய், பிள்ளை வளர்ப்பில் தன் பங்கென்பது, பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து, அறிவுரை கூறுவதோடு தன் கடமை முடிந்து விட்டதாக எண்ணாது, தன் பிள்ளைகட்காய், தன் மனையாளுடன் அடுக்களை உதவி முதல் துவங்கி, பிள்ளைகட்கு உணவூட்டி, சீருடை அணிவித்து, தலை வாரி, காலணி அணிவித்து, பிள்ளையின் புத்தகச் சுமையை தான் சுமந்து, பள்ளி வாசல் வரை சென்று விட்டு வரும் ஒவ்வோர் தந்தையும் தாயுமானவரே.

கணவரது ஒவ்வோர் முயற்சியிலும் உற்ற துணையாய், பக்க பலமாய் நின்று ஊக்குவிப்பதோடு, தன் பங்கிற்கு தன்னாலான வரையில் பொருளீட்டி, சேமித்து, சிக்கனத்துடன் குடும்பம் நட்த்தும் ஒவ்வோர் அன்னையும் தந்தையுமானவரே.  அன்னையின் அஞ்சறைப் பெட்டியில், சிறுகச் சிறுக சேமித்த சில்லரைக் காசுகளும் சமயங்களில், எதிர்பாரா பெரும் செலவுகட்கும் கூட கைகொடுக்கும். அஞ்சறைப் பெட்டிகளில் சுவையும் மணமும் மட்டுமல்ல, சமயங்களில், அவை உண்டியலாகவும் மாறி, நம் அவசரத் தேவைக்கு உறுதுணையாய் நிற்கும்.

ஐயிரு திங்கள் மடிசுமந்து, பிள்ளைக்கு தன் உதிரத்தையே பாலாக்கி, உணவு, உறக்கம் என்பதையெல்லாம் மறந்து, தன் பிள்ளையே உலகமென, அவர்தம் நலனே தலையாயதாக எண்ணி பெண்டிர் செய்யும் பல தியாகங்கள், இன்றளவும் நம் சமூகத்தில், அது பெண்ணுக்கு மட்டுமே உரித்தான கடமையாக சித்தரிக்கப்படுகிறது. பல வேளைகளில், ஒரு தாயின் கஷ்டம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளப் படுவதில்லை.

தன் உதிரத்தை பாலாக்கி, நமக்கு ஊட்டும் நம் தாய், தன் உதிரத்தை வியர்வையாக்கி நமக்காய் உழைக்கும் நம் தந்தை என, அம்மை அப்பன் இருவருமே தாயுமானவர்களே.


“ தாயிற் சிறந்த கோயிலுமில்லை

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை “
இந்த உயர் சிந்தனையை நாம் எந்நாளும் மனதில் கொள்ள வேண்டும்.
ஒரு குழந்தைக்கு பாலூட்டி, சீராட்டி வளர்ப்பதோடு ஒரு தாயின் கடமை முடிந்து விடுவதில்லை. அந்தக் குழந்தை வளர வளர, அதன் வாழ்க்கையின் ஒவ்வோர் நிலையிலும், ஊக்கம் அளித்து, உற்சாகம் ஊட்டி, உறுதுணையாய் நிற்பார்  அன்னை. பிள்ளைக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்க, ஓர் தாய் பெரிய பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. அவர் பெற்ற அனுபவங்களே நமக்கோர் பல்கலைக்கழகமாக திகழும்.

அன்னை தன் கிள்ளைக்கு உணவூட்டும் போது சொல்லும் கதைகளின் உதவியுடன், இரண்டு கை உணவு அதிகமாக உள்ளே செல்கிறது. அத்தோடு மட்டுமல்லாமல், நல்ல எண்ணங்களும் சிந்தனைகளும் மனதில் பதிகிறது. அதே போல், உறங்குகையில் தாய் சொல்லச் சொல்ல “ உம்…உம்…” என்று சொல்லியபடியே கதை கேட்டு உறங்கும் குழந்தை நல்ல கற்பனை சக்தியுடன், எதையும் தெளிவாக விளக்கமாக விவரிக்கும் தன்மை உடையவராய் விளங்கும்.

நமக்காக நாளெலாம் பார்த்துப் பார்த்து செய்யும் அன்னையின் பெருமையை எண்ணிப் பார்க்க, கொண்டாட, வாழ்த்த வருடத்தில் ஒரு நாள் மட்டும் போதுமா ? 


சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அன்னைக்கு நன்றி சொல்வோம். அன்னையின் கரம் பற்றி அன்புடனும் அனுசரனையுடனும் நடந்து கொள்வோம்.நமக்காக மூன்று வேளையும் உணவு பரிமாறி, நாம் உண்ணும் வரை அருகே இருந்து, நாம் உண்ட திருப்தியில் மனம் மகிழும் அன்னைக்கு ஒருநாள் உணவு பரிமாறி, நாமும் மகிழ்ந்து அவரையும் மகிழ்விப்போம்.
 


  அன்னையை போற்றுவோம். அன்னையின் அன்பில் நம் வாழ்வு நலமும் வளமும் அடையும்.


குறிப்பு:
இக்கட்டுரை தமிழ்க் குடில் நடத்திய அன்னையர் தின கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது.

Wednesday, May 27, 2015

பயன்மிகு இணையவழிச் சேவைகள் - இணைய நூலகங்கள்



 நூலகங்கள் நம் எண்ணங்கள், கனவுகள்,திறன்கள் என அனைத்தையும் தன்னுள் காத்து வைத்திருக்கும் பொக்கிஷ கிடங்கு. ஒவ்வொரு தனி மனிதரின் ஆர்வத்திற்கும், தேடல்களுக்கும் வடிகாலாக விளங்குபவை நூலகங்கள்.

இணையத்தின் வாயிலாக பல நூலகங்கள்  நூல்களை தரவிறக்கம் செய்யும் வசதியுடனுன், இலாப நோக்கின்றி புத்தகங்களை தரவேற்றும் தனிநபர்கள் பலரின் வலைப்பூக்களும்   நமக்கு இலவசமாக கிடைக்கின்றன.அத்தகைய நூலகங்கள் மற்றும் வலைப்பூக்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

இணைய ஆவணகம்( Internet Archive : Digital Library )


Internet Archive எனப்படும் இணைய ஆவணகம், இணையத்தில் செயல்படும் இலாப நோக்கற்ற எண்ணிம நூலகம் ( Digital Library ) ஆகும். இந்நூலகத்தில் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள், திரைப்படங்கள், மென்பொருட்கள், பத்திரிகைகள், பாடல்கள்,லிப்ரி வாக்ஸ் ( LibriVox)  ஒலி நூல்களின் தொகுப்பு, நுண் படங்கள் ( Micro film)என அனைத்தும் கிடைக்கின்றன.

 இந்நூலகத்தில் உலகில் உள்ள பல இணைய நூலகங்களின் தொகுப்பும் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, அமெரிக்க நூலகங்கள், கனேடிய நூலகங்கள், ஐரோப்பிய நூலகங்கள்,நாசா புகைப்படங்கள், மருத்துவ பாரம்பரிய நூலகத்தின் ( The Medical Heritage Library ) நூற்தொகுப்பு, இறையியல் நூற்தொகுப்பு , சீன நூல்கள், இஸ்லாமிய புத்தகங்களின் தொகுப்பு என பல வகையான நூல்களின் தொகுப்பு இந்த இணைய ஆவணகத்தில் கிடைக்கின்றது.

இந்நூலகத்தை கீழ்காணும் சுட்டியில்  பயன்படுத்தலாம். 


 இந்நூலகத்தில் இருக்கும் நூல்களை பல வடிவங்களில் ( format ) பெறலாம். Pdf, zip file, torrent, epub  என பல வடிவங்களில் தரவிறக்கம் செய்யும் வசதியும் கிடைக்கிறது.



திறந்த நூலகம் ( Open Library )

Open Library
Open Library  என்றழைக்கப்படும் திறந்த நூலகம் பல பொது தளங்கள் மற்றும் இப்போது அச்சில் இல்லாத பல பழைய நூல்களையும் இணையத்தில் படிக்க வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகின்றது.

திறந்த நூலகம் அனைவருக்கும் பொதுவானது, இலவசமானது.  யார் வேண்டுமானாலும் இந்நூலகத்திலுள்ள நூல்களின் விபரங்களை மாற்றி அமைக்கலாம். இந்நூலாகத் திட்டத்தின் முக்கிய நோக்கமே, இதுவரை வெளியாகியுள்ள அனைத்து நூல்களுக்கும், ஒரு நூலுக்கு ஒரு வலைப்பக்கம் வீதம் உருவாக்குவதே ஆகும்.


இந்நூலகத்தில் உள்ள நூல்களில் ஏதேனும் தட்டச்சுப் பிழைகள் இருப்பின், அவற்றை திருத்தலாம், புதிதாக புத்தகங்களை பதிவேற்றலாம், தவறாக குறிப்புகள் இருப்பின் அவற்றை திருத்தலாம்.புதிய தகவல்களுடன் கூடிய நிரல்பலகை ( widget ) சேர்க்கலாம். 

திறந்த நூலகம் 23 மில்லியனுக்கும் மேலான நூல்களின் விபரங்களை தருகிறது. இந்நூலகத்தில் இருக்கும் நூல்கள் பயனர்களின் தேவைக்கேற்ப பல கோப்பு வடிவங்களில் ( file formats ) கிடைக்கிறது.

PDF, Plain text, ePub, DjVu, Kindle, DAISY ஆகிய கோப்பு வடிவங்களில் நூல்கள் கிடைக்கின்றன. இதில் DAISY என்பது Digital Accessible Information SYstem என்பதைக் குறிக்கின்றது. எண்ணிம ஒலி  நூல்கள், வார மற்றும் மாத பத்திரிகைகள் இவற்றை வாசிக்க இம் மென்பொருள் பயன்படுகிறது. DAISY அச்சுப் பிரதிகளுக்கு மாற்றாக கிடைக்கும் ஒலிக் கோப்புகள் ஆகும். இது பார்வையற்றோர், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் என அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கிடைக்கிறது.

இந்நூலகத்தினை கீழ்க்காணும் இணைய முகவரியில் பயன்படுத்தலாம்.

 Http://openlibrary.org/

சென்னை  நூலகம்  


இந்நூலகம் திரு.கோ.சந்திரசேகரன் என்பவரின் தனிப்பட்ட முயற்சியால் உருவான நூலகம் ஆகும். இந்நூலகம் வணிக நோக்கில் இயங்கும் நூலகம் ஆகும். இந்நூலகம் கெளதம் இணைய சேவைகள் ( Gowtham Web Services ) நிறுவனத்தினரால் நடத்தப்படும் இணையதளம் ஆகும். இந்நூலகத்தில் பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை கிடைக்கின்றன. உறுப்பினர்களாக இணைவோருக்கு இந்நூலகத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ள நூல்களை pdf கோப்புகளாக தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியையும், கெளதம் பதிப்பகத்தாரால் வெளியிடப்படும் நூல்களை  20 % சலுகை விலையில் பெறும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

இந்நூலகத்தில் இலவசமாக கிடைக்கும் மின்னூல்களை கீழ்காணும் வலைப்பக்கத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

 http://www.chennailibrary.com/ebooks/ebooks.html

இந்நூலகத்தின் இணையதள முகவரி

 http://www.chennailibrary.com

நூலகம் திட்டம்  (noolaham.org) :

நூலகம் திட்டம் ஈழத்து தமிழ் நூல்களையும் எழுத்து ஆவணங்களையும் மின்வடிவில் இணையத்தில் பேணி பாதுகாத்து வைப்பதற்கான இலாப நோக்கில்லா தன்னார்வ கூட்டுழைப்பாகும்.

இத்திட்டத்தில் பங்களிக்க விரும்புவோர் எவர் வேன்டுமானாலும், எந்த நூலை வேண்டுமானாலும் மின்னூலாக்கம் செய்யலாம். குறிப்பாக,  மின்னூலாக்கம் செய்யப்படும் நூல் ஈழத்து எழுத்தாளரால் எழுதப் பட்டதாக இருக்க வேண்டும்.

இந்நூலகத்தில் கிட்டத்தட்ட ஐயாயிரம் ஈழத்து நூல்கள், ஆறாயிரத்துக்கும் மேலான இதழ்கள், இரண்டாயிரத்துக்கும் மேலான பத்திரிகைகள் கிடைக்கின்றன.

இந்நூலகத்தினை கீழ்காணும் இணையதளத்தில் பயன்படுத்தலாம்.

http://www.noolaham.org

மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு  திட்டம் ( Project Madurai ):

உலகளாவிய தமிழர்கள் இணையத்தின் வாயிலாக ஒன்று கூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புகளை உருவாக்கி, உலகில் உள்ள எவர் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள இலவசமாக வழங்கும் சேவை முயற்சியே மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு திட்டம் ஆகும். 

இத்திட்டத்தில் எவர் வேண்டுமானாலும் தங்களது பங்களிப்பை வழங்கலாம். 
தமிழ் நூல்களை மின்னூலாக்கம் செய்து தரவேற்றலாம். புதிதாக தரவேற்றப்பட்டுள்ள நூல்களை ஒப்பச்சு ( Proof Read ) செய்தும் நம் பங்களிப்பை இந்நூலகத்துக்கு வழங்கலாம்.
 
இத்திட்டத்தின் வாயிலாக பல இலக்கண இலக்கிய நூல்களையும் நாம் தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

Project Madurai






இத்திட்டத்தினை  கீழ்காணும் இணையதளத்தில் பெறலாம்.

http://www.projectmadurai.org/index.en.html

இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் புத்தகங்களின் பட்டியலை இங்கு காணலாம்.

http://www.projectmadurai.org/pmworks.html 

புத்தகங்களை  pdf   கோப்புகளாகவும், Unicode, TSCII  எழுத்துருக்களிலும் பெற்றுக் கொள்ளும் வசதியும் கிடைக்கிறது.



தமிழ் இணைய கல்விக்கழகம் ( Tamil Virtual University) :



தமிழ் இணைய கல்விக் கழகத்தின் மின் நூலகம் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள், சங்க இலக்கிய நூல்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள்,நெறி நூல்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள், கவிமணி தேசிக விநாயகம் கவிதைகள், கவிஞர் கண்ணதாசன் படைப்புகள் என்று பலவகையான நூல்களும் கிடைக்கின்றன.

 சங்க இலக்கிய நூல்களுக்கான உரைகளும் இந்நூலகத்தில் கிடைக்கின்றன. ஒரு நூலினுள் நமக்குத் தேவையானவற்றை குறிச்சொற்களின் உதவியுடன் தேடும் வசதியும் கிடைக்கிறது.

இந்நூலகத்தில் பால்ஸ் அகராதி (Pal's dictionary ), ஆங்கிலம் தமிழ் அகராதி,சென்னை பல்கலைக்கழக ஆங்கில தமிழ் அகராதி, தமிழ் தமிழ் அகரமுதலி, தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் உச்சரிப்புடன் கூடிய மின் அகராதி, சங்க இலக்கிய அகராதி என்று பல அகராதிகள் கிடைக்கின்றன.

நூல்கள், அகராதிகள், நிகண்டுகள், கலைச்சொற்கள், சுவடிக் காட்சியகம், பண்பாட்டுக் காட்சியகம் என்று பல சேவைகள் இந்நூலகத்தில் கிடைக்கின்றன.

இணைய கல்விக் கழகத்தின் நூலகத்தினை கீழ்க்காணும் இணைய பக்கத்தில் பெறலாம்.




செய்யுட் பாடல்கள், பாடல்களுக்கான உரைகள் என அனைத்தும் தெளிவாக, பயனாளர்கள் எளிதாக பெற்றுக் கொள்ளும் வகையில் கிடைக்கிறது.


திறந்த வாசிப்பகம் ( Open Reading Room):



 தமிழ் இலக்கியங்களின் தொகுப்பாக இணையத்தில் செயல்படும் நூலகம் திறந்த வாசிப்பகம் ஆகும். இங்குள்ள நூல்கள் அனைத்தும் பயனாளர்களுக்கு இலவசமாக கிடைக்கிறது. நாளும் புதிதாக நூல்கள் பலவும் தரவேற்றம் செய்யப் படுகிறது.

இத்திட்டம் சிங்கப்பூரை சேர்ந்த பத்திரிகையாளர் மற்றும் தமிழ் மொழி ஆர்வலர் திரு. இரமேஷ் சக்ரபாணி அவர்களின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 திறந்த வாசிப்பகத்தினை கீழ்காணும் இணைய பக்கத்தில் காணலாம்.



பிரித்தானிய தமிழ் நூற்சேகரம்:



பிரித்தானிய தமிழ் நூற்சேகரம் என்கிற இத்திட்டம் பிரித்தானிய நூலகங்களும், தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation)
அமைப்பும் இணைந்து மேற்கொள்ளும் திட்டம் ஆகும். இத்திட்டத்தில் தற்சமயம் பத்து நூல்கள் மட்டுமே கிடைக்கின்றன.இத்திட்டம் இந்திய மின் நூலகம் (Digital Library of India), மதுரை திட்டம் (Project Madurai), Million books project,TADILNET ஆகியோரின் கூட்டு முயற்சியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பூவில்  பல தமிழ் ஆவணங்கள், அரிய பழைய தமிழ் நூல்களும் தரவிறக்கம் செய்யும் வசதியையும் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பூவினை கீழ்க்காணும் இணைய முகவரியில்  பார்த்து பயன் பெறலாம்.


தமிழ் மரபு நூலகத்தின் வலைப்பூவினை கீழ்காணும் இணைப்பில் காணலாம்.


தமிழகம் வலை வழங்கும் தமிழ் மின் நூலகம் :


   தமிழகம் வலை வழங்கும் தமிழ் மின் நூலகத்தில் தமிழகம் வலையின் மின் வெளியீடுகளாக டாக்டர். பி.ஆர். அம்பேத்கரின் நூல்கள், பெரியாரின் நூல்கள், மார்க்ஸிச நூல்கள், பல எழுத்தாளர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல்களும் கிடைக்கின்றன.

இணையத்தில் இயங்கும் இன்ன பிற தமிழ் எண்ணிம நூலகங்களுக்கான இணைப்புகளும், நூல் விற்பனைத் தளங்கள் மற்றும் நூல் தரவு தளங்களுக்கான இணைப்புகளும் கிடைக்கிறது.

தமிழகம் வலை வழங்கும் நூலகத்திற்கான இணைப்பு இதோ



 இலவச தமிழ் மின்னூல்கள் :



மின் புத்தகங்களை படிக்க இன்று பல வகையான கருவிகள் கிடைக்கின்றன. அமேசான் (Amazon), பார்ன்ஸ் & நோபிள் (Barnes & Noble), புக்கீன் (Bookeen), எக்டாகோ (Ectaco), கோபோ (Kobo), பாக்கெட் புக் (Pocket Book) போன்ற நிறுவனங்கள் வழங்கும் இக்கருவிகளில் பயன்படுத்த ஏதுவாக மின் புத்தகங்களை வடிவமைத்து வழங்கும் தளம் தான் FTE ( Free Tamil Ebooks).

 பழந்தமிழ் நூல்களை மின்னூலாக்கம் செய்து சேமிக்க பல திட்டங்கள் செயல்படுகின்றன. புதிதாக தற்காலத்தில் எழுதும் எழுத்தாளர்களின் நூல்களை  மின்னூலாக்கம் செய்து அந்நூல்களை Creative Commons உரிமத்துடன் வெளியிடப்படும் போது, அந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கான உரிமைகள் பாதுகாக்கப் படுகின்றது. அதே வேளையில், அப்புத்தகங்களை எவர் வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம், மற்றவருடன் பகிர்ந்து கொள்ளலாம்.

இதன் மூலம் புதிதாக வெளியாகும் தமிழ் புத்தகங்களை நாம் எளிதாக பெறலாம்.

இலவச தமிழ் மின்னூல்களை கீழ்காணும் இணையதளத்தில் பெறலாம்.



கூகுள் புத்தகங்கள் : 

கூகுள் நிறுவனம் வழங்கும் சேவை கூகுள் புக்ஸ் ஆகும். இத்தளத்தில் தமிழ் புத்தகங்களும் கிடைக்கின்றன.  இச்சேவையை கீழ்காணும் தளத்தில் பெறலாம்.

http://books.google.com/

 கூகுள் புத்தகங்களை தரவிறக்கம் செய்ய விரும்பினால், கீழ்காணும் கூகுள் ப்ளே பக்கத்தில் சென்று தரவிறக்கி, நமது மின்னஞ்சல் சேமிப்பில் சேர்த்து வைத்துக் கொள்ளலாம்.

https://play.google.com/books
 

குறிப்பு :

இக்கட்டுரையில் பயன்படுத்தியுள்ள படங்கள் அனைத்தும் இங்கு குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் இருந்து எடுக்கப்பட்டவை.


இக்கட்டுரை வல்லமை மின்னிதழில் வெளியானது.
http://www.vallamai.com/?p=56279















   

Friday, April 24, 2015

April Showers....

Scrapbook page for welcoming the colourful spring.


 I have used an old directory for creating this scrapbook page.
The umbrella, rain drops were drawn and cutout from waste cardboard.


The flowers and birds were from advertisement flyers and old magazines. I have added some Spring quotes.




Linking this to

LESSology Challenge #46: Typeface

Mixed Media Monthly Challenge #11 - April Showers

Recycle Re-Purpose Re-Invent April1 April30 Must Recycle

Tuesday, April 21, 2015

Recycled Magazine Silhouette

My first try on recycled magazine silhouette. I have used old magazine pages to create this one. 

I rolled the strips of newspapers and arranged them on the template picture.

I have chosen the picture of a Kangaroo as the template.

Here is the final look.


 



Linking this to

Create Something Catchy Challenges : CSCC #13, Anything Goes..

Recycle Re-Purpose Re-Invent Challenge Blog : Recycle Re-Purpose Re-Invent Apr1-Apr 30 

Tuesday, April 14, 2015

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...



        “ டிங் ! டிங் ! டிங் ! “  பள்ளிக்கூட மணி ஓசை கேட்டதும்,  அதுவரை பேச்சும் சிரிப்பும், கூச்சலும் கும்மாளமுமாய் விளையாடிக் கொண்டிருந்த சிறார் கூட்டம், “கா ! கா ! “ என்ற குரல் கேட்டதும் தம் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்ள பறந்தோடி வரும் காக்கை இனத்தைப் போல, தம் அறிவுப் பசியைத் தீர்த்துக் கொள்ள தத்தம் வகுப்பறை நோக்கி ஓடினர்.

      அன்று முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி துவங்கியது. விடுமுறையில் சுற்றுலா சென்று வந்த இனிய நினைவுகள், அங்கு தாங்கள் கண்ட பல புதிய விஷயங்கள், உறவினர்களை சந்தித்த மகிழ்ச்சியான தருணங்கள், சிறாருடன் கோலி, பம்பரம், பட்டம் என ஆசை தீர நாளெல்லாம் விளையாடிய நினைவுகள், கோயில் திருவிழா மகிழ்வலைகள் என்று தத்தமது இன்ப தருணங்களை நண்பர்களுடன் பகிர்ந்தவாறு சிறார் சலசலத்துக் கொண்டிருந்தனர்.
 
  முதல் இருக்கையில் கண்மணியும் வள்ளியும் அருகருகே அமர்ந்திருந்தனர். கண்மணியின் கையில் புதிதாய் ஒரு கடிகாரம். நடுவில் வாத்து பொம்மையின் முகம். அதைத் திறந்தால், உள்ளே அழகான கடிகாரம். அதைக் கண்டதும் வள்ளிக்கு மிகவும் பிடித்துப் போனது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அதை தொட்டுப் பார்த்துக் கொண்டாள். வள்ளி அதை தொட்டுப் பார்க்கும் போதெல்லாம் மெல்லியதாய் ஒரு புன்முறுவலுடன் வள்ளியை பார்ப்பாள் கண்மணி. சமயங்களில், ஆசிரியர் பாடம் நடத்தும் போதும், வள்ளியின் கவனம் கடிகாரத்தின் மீதே சென்றது. சிரமப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள் வள்ளி. 

      உணவு இடைவேளையின் போது, கண்மணி வள்ளியிடம்,
“ வள்ளி ! இந்தா புள்ள, நீ இந்த கடிகாரத்தை கொஞ்ச நேரம் கட்டிக்கோ. உனக்கு இது ரொம்ப புடிச்சிருக்குன்னு எனக்கு தெரியும். நான் சாயங்காலம் பள்ளிக்கூடம் முடிஞ்சு போகையிலே வாங்கிக்கறேன் “ என்றாள்.

   ஆனால் வள்ளியோ, அவசரமாக “ ஐயோ ! வேணாம் புள்ள ! அது விலை உசந்ததா இருக்கும் போல இருக்கு. நான் ஏதாச்சும் தெரியாம உடைச்சோ, பழுதாக்கியோ வெச்சுட்டேன்னா, நீ வீட்டுல திட்டு வாங்குவ. என்னால புதுசா வாங்கியும் தர முடியாது” என்று மறுத்தாள்.

  மாலையில் வீடு திரும்பியதும், அன்று பள்ளியில் நடந்தவை ஒன்று கூட விடாமல் தன் தாய் தகப்பனிடம் கூறிக் கொண்டிருந்தாள்.

“ ஐயா, இன்னைக்கு அந்த காரை வீட்டுப் பிள்ளை கண்மணி இல்ல, அது புதுசா ஒரு கடிகாரம் கட்டியிருந்தது. பாக்கவே ரொம்ப அழகா இருந்துச்சு. வாத்து பொம்மை போட்ட கடியாரம் அது. அந்த பொம்மை மொகம் மூடி மாதிரி இருந்துச்சு. அந்த மூடிய திறந்ததும் உள்ள அழகா கடிகாரம். நம்ம வீட்டுல இருக்குற கடியாரத்துல இருக்கற மாதிரி முள் எல்லாம் இல்ல. அதுல மணி அப்படியே வந்துச்சு. அதுல இருக்குற பட்டன அமுக்குனா கீ ! கீ !  சத்தம் கூட வந்துச்சு. அத அப்படியே பாத்துட்டே இருக்கலாம் போல இருந்துச்சு. அந்த பிள்ளை என்னைய  அந்த கடியாரத்தை கட்டிப் பாக்க சொன்னுச்சு. ஆனா, நாந்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்றாள் வள்ளி.

  கடிகார நினைவுகளோடே உறங்கியும் போனாள். கனவிலும் அதே கடிகாரம் வந்து மகிழ்வூட்டியது. “ அழகா இருக்கு புள்ள. விலை உசந்ததா இருக்கும் போல. பத்திரமா வெச்சுக்கோ “ என்று தூக்கத்தில் பேசிக் கொண்டாள். மகளின் பேச்சைக் கேட்டு பெற்றோரும் புன்முறுவல் பூத்தனர்.

   அடுத்த நாள் பள்ளிக்கூடம் முடிந்து, வீட்டிற்கு வந்த வள்ளி, பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். வீதியில் “ ஜிங் ! ஜிங் !” என்ற ஒலி. வாசலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வள்ளியின் தந்தை, 

   “ அம்மாடி வள்ளி ! இங்க வா தாயீ !  என்று அழைத்தார். “ அதோ ! அங்கன போற ஜவ்வு மிட்டாய்க்காரரை கூப்பிடு ! “ என்றார்.

வாசலுக்கு ஓடி வந்த வள்ளி, ஜவ்வு மிட்டாய்க்காரரை கூப்பிட, வள்ளியின் தந்தை “ அப்பா ! ஒரு கடியாரம் செஞ்சு குடுப்பா !” என்றார்.
வள்ளிக்கு அவர் வைத்திருந்த பெரிய கழியின் உச்சியில் அழகாக சிங்காரம் செய்யப்பட்டு, காதுகளில் ஜிமிக்கி, கைகளில் வளையல், கழுத்தில் சங்கிலி அணிந்து, இரண்டு கைகளையும் ஜால்ரா போல சேர்த்து “ஜிங் ! ஜிங் ! “ என்று தட்டிக் கொண்டிருக்கும் பொம்மையை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது. பொம்மையின் அடியில், கழியில் ரோஸ் மற்றும் வெள்ளை நிறக் கலவையுடன் ஜவ்வு மிட்டாய். ஜரிகைக் காகிதம் சுற்றப் பட்டு இருந்த அந்த ஜவ்வு மிட்டாயிலிருந்து கொஞ்சம் எடுத்து அதை இழுத்து, வளைத்து, உருட்டி அழகான கைக்கடிகாரமாக மாற்றிக் கொடுத்தார் அந்த ஜவ்வு மிட்டய்க்காரர். சிறிது மிட்டாயை எடுத்து மோதிரமாக மாற்றி விரலில் அணிவித்து விட்டு, இன்னும் கொஞ்சம் எடுத்து அவளது கன்னத்திலும் ஒட்டி விட்டார். வள்ளிக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

“ ஐயா ! இன்னொரு மயில் மிட்டாய் செஞ்சு வாங்கிக்கவா ? “ என்று ஆசை ஆசையாய் கேட்டாள் வள்ளி.

“ யாருக்கு தாயீ ? “

“ என் கூட படிக்கிற கண்மணிக்கு !” 

“சரி , வாங்கிக்கோ ! “ என்றபடி

“இன்னொன்னு செஞ்சு குடுத்துருப்பா “ என்றார் வள்ளியின் தகப்பனார்.
அதை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டாள் வள்ளி.

“அம்மாடி ! இப்போதைக்கு இந்த கடியார மிட்டாய வெச்சுக்கோ. இன்னும் செத்த நாள் பொறுத்து ஐயா உனக்கு நிஜ கடியாரமே வாங்கித் தாரேன் “ என்றார்.

மகிழ்ச்சியுடன் “ சரி ஐயா “ என்றவாறு குதித்தோடினாள் வள்ளி.

அடுத்த நாள் பள்ளிக்கு செல்கையில், மறவாமல் ஜவ்வு மிட்டாய் வைத்திருந்த தூக்கினை எடுத்துக் கொண்டாள்.

கண்மணியும் தன் தந்தை தனக்காக இருவேறு நிறங்களில் வாங்கிக் கொடுத்திருந்த கைகடிகாரங்களில், ஒன்றை தனக்கென வைத்துக் கொண்டு மற்றொன்றை ஆசைப்பட்டு கேட்ட தன் தோழிக்கு கொடுக்கப் போவதாய் சொல்லி தந்தையிடம் அனுமதி பெற்று வாங்கி வந்தாள். 

“ அன்பிற்கும் உண்டோ,  அடைக்கும் தாழ் “

குறிப்பு :

இக்கதை நண்பர் கோவை ஆவி அவர்கள் நடத்திய
வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை - குறும்பட- சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெற்றது.






Friday, April 10, 2015

Spring Tower

A simple recycled craft to celebrate Spring.

I have used some waste cardboards from cereal box and the tissue rolls to make this craft. 

The flowers used were made with tissue papers. 

The bird and small leaves were made with waste cardboard.

I have added some words related to spring...sunshine...birds....butterflies....flowers.









Linking this to LESSology Challenge #46: Typeface

I have used 5 different fonts.

KRAFTZONE : CHALLENGE #14 -ALTERED ART