blank'/> muhilneel: October 2016

Tuesday, October 11, 2016

பயன்மிகு இணையவழிச் சேவைகள் - Free Tamil ebooks

ஒவ்வொரு படைப்பாளருக்கும் இருக்கும் பேராவல், தமது படைப்புகள், பிறரால் அறியப்பட்டு, அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். சில வருடங்களுக்கு முன்பு வரை, கவிஞர்கள், கட்டுரையாளர்கள், கதாசிரியர்கள், இவர்களின் படைப்புகளை நாம் அச்சு நூல்களாக, அதாவது புத்தகங்களாக வாசித்து மகிழ்ந்தோம். தற்போது, கணினி அறிவியலில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம், உலகையே நம் கைக்குள் கொண்டு வந்து விட்டது.

என்னதான் நாம் வலைப்பூக்களிலும், வலைதளங்களிலும் நமது படைப்புகளை வெளியிட்டு, வாசகர்கள், சக வலை நண்பர்களின் கருத்துக்களையும், பாராட்டுதல்கள், விவாதங்கள் என்று நம் படைப்பிற்கென்று ஓர் அங்கீகாரம் கிடைத்தாலும், நமது எழுத்துக்கள், அழகாக வடிவமைக்கப்பட்டு, புத்தகமாக நமக்கு கிடைக்கையில் நமது உள்ளந்தனில் ஊற்றெடுக்கும் மகிழ்ச்சிக்கு அளவென்பதேது ? நாளொரு புதிய கண்டுபிடிப்புகளுடன் வளர்ந்து வரும் கணினி அறிவியலின் துணையுடன், பல பிரபல்யமான எழுத்தாளர்களின் நூல்கள் மட்டுமின்றி, மிகவும் பழமையான நூல்கள் பலவும் நமக்கு இன்று மின்னூலாக கிடைக்கிறது.

மதுரைத் திட்டத்தின் வாயிலாக, பல காப்பியங்கள், இலக்கண இலக்கிய நூல்கள் பலவும் மின்னூலாக நமக்கு கிடைக்கின்றன. தற்கால எழுத்தாளர்களின் நூல்கள் பலவற்றையும், பல புதிய எழுத்தாளர்களையும் நமக்கு அறிமுகப்படுத்தும் திட்டம் தான் இலவச தமிழ் மின்னூல்கள் திட்டம் (Free Tamil eBooks). இத்திட்டம், ஒவ்வொரு எழுத்தாளனின் நூலாசிரியர் கனவினை நிஜமாக்குகிறது. எழுத்துக்களின் மீது ஆர்வம் கொண்ட வாசகர்களும், தமது விருப்பமான எழுத்தாளரின் எழுத்துக்களை இலவசமாக வாசிக்க நல்லதோர் வாய்ப்பும் கிட்டுகிறது.

இந்தச் சேவையை பயன்படுத்தி பல புதிய நூல்கள் வாசிக்க விருப்பமா ? அல்லது, பொக்கிஷமென பாதுகாக்கும் படைப்புகளுக்கு நூல் வடிவம் கொடுக்க பேராவலா ? இவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய  வலைத்தளம் freetamilebooks.com.

இப்போது பல எழுத்தாளர்கள், பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள், என்று பலரால் நூல்கள் எழுதப்படுகிறன.இது தவிர, வலைப்பூக்கள், வலைதளங்களில் எழுதுவோரின் எண்ணிக்கையும் அதிகம்.  இலக்கியம், கலாச்சாரம், விளையாட்டு, அரசியல், மருத்துவம், உணவு என்று பல துறை சார்ந்து பலரும் தமிழ் மொழியில் எழுதுகின்றனர். இங்கனம், இணையத்தில் எழுதும் ஆசிரியரது படைப்புகளை தொகுத்து மின்னூலாக வெளியிடுகிறார்கள்.

 இத்தளத்தில் வெளியிடப்படும் மின்னூல்கள் Creative Commons உரிமத்துடன் வெளியிடப்படுகிறது. இந்த உரிமத்துடன் வெளியிடுவதால் என்ன பயன் எனில், ஒரு படைப்பாளரின் படைப்பை, படிக்கும் அனைத்து வாசகர்களும் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் உரிமை உள்ளதால், பலரால் பகிரப்பட்டு, நமது எழுத்துக்கள் பல வாசகர்களை சென்றடையும். அப்படி ஒவ்வொரு முறை பகிரப்படும் போதும், நமது எழுத்துக்கள் நமது பெயருடனேயே பகிரப்படும். நமது பெயரும், படைப்பும் உலக அளவு வாசகர்களிடையே பரிச்சயமாகும்.

இத்தளத்தில் கிடைக்கும் நூல்கள் யுனிகோட் எழுத்துருக்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. பல வகையான கருவிகளில், பல வகையான செயலிகளில் மின்னூல்களை பயன்படுத்த வசதியாக மின்னூல்கள்  தயாரிக்கப்படுகிறது. இத்தளத்தில் கிடைக்கும் மின்னூல் வடிவங்கள் epub, pdf, mobi & azw3.




இலவச மின்னூல்கள் தளத்திற்கான உரையாடல் களம்  (Google Groups) - FreeTamilEbooksForum
https://groups.google.com/forum/#!forum/freetamilebooksforum 

 இவர்களது முகநூல் பக்கம்
Free Tamil Ebooks 
https://www.facebook.com/FreeTamilEbooks