blank'/> muhilneel: மாணவர் சமுதாயம்

Monday, December 21, 2015

மாணவர் சமுதாயம்

அந்தப் பள்ளியின் மதிய உணவு இடைவேளை முடிந்ததற்கான அறிகுறியாய் மணி ஒலிக்க, சிறார் தங்களது உணவு பாத்திரங்களை மூடி கூடைகள் அல்லது பைகளில் வைத்துக் கொண்டு, வேகவேகமாக தத்தமது வகுப்பறை நோக்கி ஓட்டமெடுத்தனர்.

தம் பிள்ளைகட்கு உணவளிக்க  வந்திருந்த தாய்மாரும், உணவுக் கூடைகளை எடுத்துக் கொண்டு வீடுகளுக்கு கிளம்ப ஆயத்தமாயினர். சற்று நேரத்திற்கெல்லாம், பள்ளிக்கூட மைதானமே காலியானது.

மணிச் சத்தம் கேட்டதும், துள்ளியோடும் சிறார்களை கவனித்தவாறு நின்றிருந்தார் தலைமையாசிரியை ஜூலியட் அவர்கள். வெறுமையாகக் கிடந்த மைதானத்தை நோட்டமிட்டவாறு நின்றவரின் கண்களில் பட்டது, ஆங்காங்கே இறைந்து கிடந்த குப்பைகள் தாம்.

காலை துவங்கி, மதியம் வரை துப்புரவுப் பணியாளர்கள் சுந்தரி அம்மாளும், சின்னம்மாளும் பள்ளிக்கூடம் முழுவதும் குப்பைகளில்லாது துப்புரவு செய்து வைத்திருந்தனர். ஒரு மணி நேர இடைவெளியில், பள்ளிக் கூடம் குப்பைகளாலும் தாட்களாலும்    நிரம்பி வழிந்தது. மீண்டும் சுந்தரி அம்மாளும், சின்னம்மாளும் தமது துப்புரவுப் பணியை தொடங்கினர்.

இந்தப் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்றெண்ணியபடி, தனது அலுவலகத்தினுள் நுழைந்தார் தலைமையாசிரியை ஜூலியட். சற்று நேரம் யோசித்தவர், உதவி தலைமை ஆசிரியரிடம் ஆலோசித்து விட்டு, பள்ளியின் அறிவிப்பு பலகையில் கீழ்வருமாறு ஓர் அறிக்கையினை வெளியிடச் செய்தார்.

" பெற்றோர் கவனத்திற்கு :

தங்களது பிள்ளைகட்கு மதிய உணவு இடைவேளையின் போது உணவளிக்க வரும் பெற்றோர்கள், பள்ளி வளாகத்தினுள் குப்பை போட்டுச் செல்ல வேண்டாமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். "

இந்த அறிவுப்பு பள்ளியின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டது.

அடுத்து வந்த நாட்களில், பள்ளி வளாகத்திள் குப்பைகள் சேர்வது குறைந்தாலும், ஆங்காங்கே குப்பைகள் கிடக்கத் தான் செய்தது. மாணவர்கட்கு சுத்தமாக இருப்பதன் நன்மை, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் கற்றுத் தர எண்ணினார் தலைமையாசிரியை.

மதிய வகுப்புகள் ஆரம்பித்ததும், வகுப்புகளை கண்காணித்தவாறு பள்ளியை சுற்றி வந்தார் தலைமையாசிரியை ஜூலியட். குழாயடிக்குப் பக்கத்தில், உணவுப் பொருட்கள் அதிக அளவில் இறைந்து கிடந்தன. அவற்றை காகங்களும் குருவிகளும் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. ஒரு நாயும் கூட பள்ளியின் சுற்று வேலி வழியாக குழாயடி நோக்கி வந்தது.

ஒரு நாளைக்கு ஒரு நடுநிலைப் பள்ளியில் இவ்வளவு உணவு வீணாகிறதெனில், அந்த நகரில் இருக்கும் இருநூறுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் எவ்வளவு உணவு வீணாகும் ? இது போல் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு மாநிலத்திலும் நிகழுமெனில், இந்தியா முழுவதும் ஒரு நாளைக்கு எவ்வளவு உணவு வீணாகும் ?  இது தவிர எத்துனையோ இடங்களில் உணவு வீணடிக்கப் படுகிறது.

விவசாயி பயிரை விளைவித்து,  அதை பக்குவமாக பாதுகாத்து, நமக்காக வழங்கும் வரையில் எத்துனை உழைப்பு அதில் இருக்கிறது. அவரது நூறு சதவிகித உழைப்பும் உணவினை வீணடிப்பதால், உதாசீனப் படுத்தப் படுகிறது.

பள்ளியை சுத்தமாக வைத்துக் கொள்ள கற்றுத் தருவதோடு, உணவின் சிறப்பும், அதை மாணவர்கள் வீணாக்குவதை தடுக்கவும், நாம் உண்ணும் உணவு, நம்மை வந்தடைவதற்கு எத்துனை பேருடைய பல கால உழைப்பும், கஷ்டமும் அதில் இருக்கிறது என்று மாணாக்கருக்கு உணர்த்தவும் எண்ணினார்.

முதல் முயற்சியாக, பள்ளியை சுத்தம் செய்ய ஒவ்வொரு வகுப்பைச் சேர்ந்த மாணவர்கட்கும், பதினைந்து நாட்கள் பள்ளியின் சுற்றத்தினை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய பணி அளிக்கப்பட்டது. மதிய உணவு இடைவேளை முடிந்ததும், மாணவர்கள் குழுக்களாக பிரிந்து, பள்ளி வளாகத்தில் ஆங்காங்கே கிடக்கும் காகிதக் குப்பைகளை அப்புறப் படுத்தி, குப்பைக் கூடைகளில் சேர்த்தனர். இதே போல் நாளும் பல வகுப்பு மாணவர் குழுக்கள் இந்த பள்ளியின்  சுற்றத்தை சுத்தமாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தலைமை  ஆசிரியையின் இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தது. மாணவர்கட்கு சுத்தத்தின் சிறப்பும் விளங்கியது. அடுத்த கட்ட நடவடிக்கையாக, உணவினை வீணாக்காது இருக்கச் செய்ய என்ன செய்வது என்றெண்ணினார். உணவுப் பொருட்களை உருவாக்குவதில் இருக்கும் சிரமத்தை மாணவர்கட்கு உணர்த்த எண்ணினார்.

ஒவ்வொரு வகுப்பு மாணவர்கட்கும் பள்ளியின் பின்புறம் இருக்கும் காலி இடத்தில், தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டது. அந்த இடத்தினை செப்பனிட்டு, அதில் காய்கறிகள் பயிரிட்டு  வளர்க்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. அவ்வூரில் இருக்கும் அரசு வேளாண் துறையின் உதவியுடன், மாணாக்கருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அந்தப் பயிற்சியின் பலனாய், மாணவர்கள் பள்ளியில் தோட்டம் அமைத்துப் பழகினர். அதோடு மட்டுமல்லாது, மாணவர்கட்கு வேளாண் துறையில் இருந்தே விதைகள் வழங்கப் பட்டது. மாணவர்கள் வீடுகளில் தோட்டம் அமைத்துப் பயன்பெற இது ஓர் நல்வாய்ப்பாக அமைந்தது.

இது மட்டுமல்லாது இயற்கை உரத்தின் சிறப்பும், அதை உருவாக்கும் விதத்தையும் கற்றுத் தரப்பட்டது.

உணவினை உருவாக்குவதில் இருக்கும் சிரமமும்,  அதை உருவாக்குவதற்கு மேற்கொள்ள வேண்டியிருக்கும் உழைப்பினையும் அறிந்த மாணவர்கள், உணவினை வீணாக்குவதை நிறுத்தினர்.

இது மட்டுமல்லாது, மாணவர்கள் மூன்று முதல் நால்வர் கொண்ட குழுக்களாய் பிரிக்கப் பட்டனர். ஒவ்வொரு குழுவுக்கும், மரக் கன்று வழங்கப் பட்டது. அதை மாணவர்கள் பேணிக் காத்து வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரே வருடத்தில், பள்ளியை சுற்றி மரங்கள் வளர்ந்து தண்மையை வழங்கின.

பள்ளியில் அறிவை வளர்க்க பாடங்களை கற்றுக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், வாழ்க்கைக்கு தேவையான பாடங்களையும் கற்றுக் கொடுப்பதே உண்மையான கல்வி.

சுத்தம், சுகாதாரம், இயற்கையினை காக்க வேண்டிய பொறுப்பு, இவையனைத்தும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இளம் பிராயத்திலேயே கற்றுக் கொண்டு விட்டால், அது பிற்காலத்தில் பெரும் உதவியாக அமையும். இளைய தலைமுறையை நெறிப்படுத்தினால், நல்லதோர் சமுதாயம் மலருமென்பது திண்ணம்.




2 comments:

G.M Balasubramaniam said...

சொல்லித்தெரிவதைவிட செய்து பழகுவது மேலானது.எல்லாப்பள்ளிகளும் பின்பற்ற வேண்டியது அவசியம்

Tamizhmuhil Prakasam said...

தங்களது வருகைக்கும் அன்பான கருத்துப் பகிர்வுக்கும் நன்றிகள் ஐயா.

Post a Comment