blank'/> muhilneel: அமிலத்தில் ஆடிய அனிச்சங்கள்

Thursday, October 1, 2015

அமிலத்தில் ஆடிய அனிச்சங்கள்

பெண்கள் மீதான அமிலத் தாக்குதல் என்பது அவர்கள் காதலிக்க மறுத்த ஒரே காரணத்திற்காக என்று இத்தனை நாள் எண்ணியிருந்தேன். ஆனால், புது டில்லியில் உள்ள ஷெரோஸ் ஹேங் அவுட்(Sheroes Hangout) என்ற தேநீர் அங்காடி பற்றியும், அதை நடத்தும் அமில தாக்குதலுக்கு உள்ளான ஐந்து பெண்கள் பற்றியும், அவர்களுக்கு நிகழ்ந்த கொடூர சம்பவங்களை பற்றியும் படிக்கையில், இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா , இவர்களும் மனிதர்கள் தானா அல்லது மாக்களில் இவர்கள் சேர்த்தியோ என்ற எண்ணமே மேலோங்குகிறது. இந்த ஷெரோஸ் அங்காடி, " Stop Acid Attack " http://www.stopacidattacks.org/ இயக்கத்தினால் நடத்தப்படுகிறது. வீரர்களை heroes என்று ஆங்கிலத்தில் சொல்வதைப் போல, வீராங்கனைகளை sheroes என்று குறிப்பிடும் விதமாகவே, இவ்வங்காடிக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.


இந்த அங்காடியை நடத்துவோர், ஐந்து பேர் கொண்ட குழு. நீத்து, ரூபா, சான்ச்சல் பஸ்வான், கீதா, ரீத்து ஆகிய ஐவரும் தான் இந்த அங்காடியை நடத்துகிறார்கள். இவர்கள் ஐவருமே, அமில வீச்சுக்கு ஆளானவர்கள். 




 இப்புகைப்படம் இவர்களது முகநூல் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

நீத்துவிற்கு மூன்று வயதாக இருக்கையில், அவரது தந்தையாலேயே அமில வீச்சுக்கு ஆளானவர். அமில வீச்சினால் இவரது கண் பார்வையையும் இழந்து விட்டார்.

ரூபாவின் இந்நிலைக்கு காரணம் அவரது மாற்றாந் தாய்.

ரீத்துவின் முகத்தை சிதைத்து, அவரது கனவு, கற்பனை, இலட்சியம் அனைத்தையும் அழித்தவர், முகமறியா ஒருவர்.

சான்ச்சல் பஸ்வான் உறக்கத்தில் இருக்கையில், போக்கிரிகளால் அமில தாக்குதலுக்கு ஆளானவர்.

ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, தனது கணவராலேயே, அமிலம் வீசி சிதைக்கப்பட்டவர் கீதா.

இந்த தேநீர் அங்காடியின் சிறப்பு என்னவெனில், இது ஓர் தேநீர் அங்காடி மட்டுமல்ல, இங்கு புத்தகங்கள் வாசிக்க, ஓர் புத்தக அங்காடியும் உண்டு (Reader's Cafe).  

இங்கு, செயற்திறன் பட்டறையும் (Activism workshop) நடத்தப்படுகிறது. அமிலத் தாக்குதலுக்கு உள்ளான பெண்கள் பெரும்பாலும் சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் இருக்கும் குடும்பத்தைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களில் பலரும் எழுதப் படிக்க கூட தெரியாதவர்கள். இவர்களில் பலர் கணினி பயன்பாடு, கைபேசி பயன்பாடு போன்றவை அறியாதவர்கள் தாம். இந்த செயற்திறன் பட்டறையின் முக்கிய நோக்கம் என்னவெனில், இது போன்ற பெண்களுக்கு கணினி பயன்பாடு, கைபேசிகள் மற்றும் இன்னபிற தகவல் தொழில் நுட்பங்களை கற்றுக் கொடுத்து, அதன் மூலம் அவர்கள் முன்னேற்றம் அடைய வாய்ப்பளிக்கிறது.

இங்கிருக்கும் மற்றுமோர் அம்சம், கைவினைகள் கண்காட்சி மற்றும் விற்பனைப் பிரிவு. இந்தக் கண்காட்சியில், தாக்குதலுக்கு உள்ளான பெண்களின் கைவினைகள், அவர்தம் ஓவியங்கள், படைப்புகள், புத்தகங்கள், கையால் செய்யப்பட்ட நகைகள் போன்றவை  எப்போதும் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டிருக்கும். இது தவிர, நாட்டிலுள்ள எவர் வேண்டுமானாலும், தத்தமது திறமைகளை இங்கு வெளிக்காட்டலாம். இதன் மூலம் கிடைக்கும் பணம், இந்த தேநீர் அங்காடியை நடத்த பயன்படுத்தப் படுகிறது.

இவர்களது வலைதளம் : http://sheroeshangout.com/
இவர்களது முகநூல் பக்கம் : https://www.facebook.com/SheroesHangout

இந்த தேநீர் அங்காடியில்  உணவு வகைகள் மற்றும்  பானங்கள் விற்கப்படுகின்றன. இவர்களது உணவு பட்டியலட்டையில் (menu card) உணவு மற்றும் பானங்களின் வகைகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றிற்கான விலைப்பட்டியல் கொடுக்கப்படவில்லை. வாடிக்கையாளர்கள் என்ன கொடுக்க விரும்புகிறார்களோ (Pay-what-you-want) அதைக் கொடுக்கலாம். இந்த அங்காடி செயல்பட 70 சதவீதத்திற்கும் மேலான பண உதவி, வெளிநாட்டு சுற்றுலாவாசிகளால் வழங்கப்படுகிறது.

இப்பெண்களின் முக்கிய நோக்கம், மக்களிடையே அமில தாக்குதல் மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான்.

அமிலத்தில் ஆடிய அனிச்சங்கள்
உரு தொலைத்த உன்னதங்கள்
தன்னம்பிக்கையும் விடாமுயற்சியையும்
விடாது கைப்பற்றிக்  கொண்டு
அழகென்பது உருவிலல்ல 
நல்ல உள்ளத்தில் தானென
உலகிற்கே நம்பிக்கைக்கு உதாரணமான
உயர் ஜீவன்கள் !

தகவல் திரட்ட உதவிய வலைப்பக்கங்கள்:



உறுதிமொழி

இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ வகை-(3)  பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது  என்று உறுதிமொழி அளிக்கிறேன்.

 இப்படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்.

5 comments:

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அமில வீச்சு மிகக் கொடூரமானது. மூன்று வயதுக் குழந்தை மேலுமா!!!
sheroes பற்றிப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி தோழி.
வெற்றிபெற வாழ்த்துகள்

Kurinji said...

nice post Mukil, wish you all the very best!!!

Tamizhmuhil Prakasam said...

@ கிரேஸ்

தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி.

Tamizhmuhil Prakasam said...

@ குறிஞ்சி

நன்றி தோழி.

Tamizhmuhil Prakasam said...

அறியத் தந்தமைக்கு நன்றிகள் ஐயா.

Post a Comment