blank'/> muhilneel: September 2015

Tuesday, September 29, 2015

நெகிழி பொருட்களில் இருக்கும் எண்கள் - நாம் எதை பயன்படுத்துகிறோம் ?

நெகிழி பொருட்களில் மறுசுழற்சி குறியீடும், அந்த குறியீட்டினுள் ஒன்று முதல் ஏழு வரை உள்ள எண்களுள் ஏதேனும் ஒரு எண் குறிப்பிடப்பட்டிருக்கும். இதை எத்தனை பேர் அறிவோம் ? அடுத்த முறை நெகிழி குடிநீர் புட்டிகளோ, அல்லது வேறு ஏதேனும் நெகிழி பொருள் வாங்குகையில், அதில் கீழ்க்காணும் குறியீடும்,அந்த குறியீட்டினுள் ஏதேனும் எண்கள் இருக்கின்றனவா என்றும் பாருங்கள். 



இவை தான் மறுசுழற்சி குறியீடுகள். நாம் வாங்கும் நெகிழிப் பொருட்கள் அனைத்திலும்,  இது போன்ற குறியீடு இருக்கும். மேலுள்ள படத்தில் இருக்கும் குறியீடுகள் அனைத்தும் மறுசுழற்சியை குறிக்கும் குறியீடுகளே.

இது போன்ற குறியீடுகள் நெகிழியினாலான புட்டிகள் (bottles),  இன்னபிற நெகிழி பொருட்கள் அனைத்திலும் இருக்கும். இக்குறியீட்டினுள் இருக்கும் எண்கள் நெகிழியின் நச்சுத்தன்மை குறித்தும், அதில் பயன்படுத்தப்பட்டுள்ள வேதிப்பொருட்கள் குறித்தும், எந்த அளவு சூட்டிற்கு உட்படுத்தப் பட்டால் அவை உருகக் கூடும், அதன் மக்கும் தன்மை, மொத்தத்தில் அவை பயன்படுத்த உகந்தவை தானா, மனிதர்களுக்கு பாதுகாப்பானவை தானா போன்ற பல தகவல்களை உள்ளடக்கியது. 

இனி ஒவ்வொரு எண்ணும் எதை குறிக்கின்றன, அவை எவ்வகையான நெகிழி, அதில் உள்ள இரசாயன மூலக்கூறுகள் குறித்து காணலாம்.



எண் ஒன்று கொண்ட குறியீடு PETE அல்லது PET ஆகும். இதன் விரிவாக்கம் Polyethylene Terephthalate. இவ்வகை நெகிழிகளைக் கொண்டு குடிநீர் புட்டிகள், குளிர்பான புட்டிகள் தயாரிக்கப் படுகின்றன. இவ்வகை நெகிழி பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும், இவற்றுள் பாக்டீரியாக்கள் வளர வாய்ப்பிருக்கிறது. மேலும் இவற்றுள் அடைக்கப் பட்டிருக்கும் பொருட்கள் மற்றும் பானங்களின் சுவை (flavor) இப் புட்டிகளிலேயே தங்கி விட வாய்ப்புள்ளது. நாம் புட்டிகளில் வாங்கி பயன்படுத்தும் பெப்ஸி(Pepsi), கோக்(Coke), ஃபான்டா(Fanta), மிராண்டா(Miranda) போன்ற குளிர்பானங்கள் காலியானதும், அவற்றை குடிநீர் நிரப்ப பயன்படுத்துகையில், அந்த குளிர்பானங்களின் சுவை நீரிலும் ஏறியிருப்பதை கவனித்திருக்கலாம்.

எண் ஒன்றினால் குறியிடப் பட்டிருக்கும் நெகிழி புட்டிகள் (Plastic bottles) பெரிய கைப் பைகளாகவும், நெகிழியினாலான மேசை, நாற்காலி தயாரிக்கவும் , தரை விரிப்புகளாகவும் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

 


எண் இரண்டு கொண்ட குறியீடு HDPE - High Density Poly Ethylene.  இவ்வகை நெகிழி பாதுகாப்பானதாக கருதப்படும் மூன்று வகை நெகிழிகளுள் ஒன்றாகும். நெகிழி பழச்சாறு புட்டிகள் (Plastic Juice bottles), சவர்க்காரத் திரவ புட்டிகள் (shampoo bottles), சலவைக்கார புட்டிகள் (detergent bottles), இருசக்கர மற்றும் நாற்சக்கர வண்டிகளுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் புட்டிகள் (motor oil bottle) போன்றவை தயாரிக்க இவ்வகை நெகிழி பயன்படுகிறது.

இவ்வகை நெகிழிகள் மற்ற பொருட்களில் ஊடுருவும் தன்மையும், உருகும் தன்மையும் குறைவாக இருப்பதால் இவையும் பாதுகாப்பானவையாக கருதப்படுகின்றன.

இவ்வகை நெகிழிகள் பேனாக்கள்(Pens), சலவைக்கார புட்டிகள்(Detergent bottles), மறுசுழற்சி கொள்கலன்கள் (Recycling containers) போன்றவை தயாரிக்க மறுசுழற்சி செய்யப்படுகின்றன.



வகை மூன்றை சார்ந்த நெகிழிப் பொருட்கள் PVC என்றழைக்கப்படும் தேறலியத்தினால் (Vinyl) உருவாக்கப்பட்டது. இவை உணவுகளை உறையிட்டு மூட பயன்படும் தாட்கள் (food wrap), நீர்க் குழாய்கள் (plumbing pipes) போன்றவை செய்ய பயன்படுத்தப் படுகின்றன. இவ்வகை நெகிழிகளில் phthalate எனும் வேதிப் பொருள் இருக்கிறது. இந்த வேதிப் பொருளினால் பல வகையான உடல் நலக் கேடுகள் ஏற்படுகின்றன. கருவின் வளர்ச்சியில் பாதிப்புகள் ஏற்படுவதோடு, சமயங்களில் இவ்வேதிப் பொருள்  கருச் சிதைவும் கூட ஏற்படுத்துகிறது. 

இவ்வகை நெகிழிகளில் DEHA (Di Ethyl Hydroxyl Amine) என்ற வேதிப் பொருள் உள்ளது. அதிக காலம் இவ்வகை நெகிழிப் பொருட்களை பயன்படுத்தினால், இவை புற்று நோய்க் காரணியாகவும் (carcinogen)ஆகிவிடுகின்றன. 

இவ்வகை நெகிழியை பயன்படுத்தி மருத்துவ சாதனங்கள், எண்ணெய் புட்டிகள், உணவு பொட்டலங்கள் / டப்பாக்கள் போன்றவை தயாரிக்கப் படுகின்றன.

உணவு / திண்பண்டங்கள் விற்பனைக்கு பயன்படுத்தப்படும் நெகிழி டப்பா.



வகை நான்கைச் சார்ந்த நெகிழிப் பொருட்கள் LDPE (Low Density Polyethylene) ஆகும். இவ்வகை நெகிழிப் பொருட்களைக் கொண்டு கடைகளில் பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகள், பிழிய பயன்படுத்தும் டப்பாக்கள் ( ketchup bottles, Jam bottles) ,  உடைகள், தரைவிரிப்புகள் போன்றவை தயாரிக்கப் படுகின்றன.

இவ்வகை நெகிழிகள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு, குப்பைத் தொட்டிகள், தரை ஓடுகள் (floor tiles), உரம் தயாரிக்க பயன்படும் கலன்கள் (Compost bins), குப்பைத் தொட்டிகளில் பயன்படுத்தப் படும் குப்பை பைகள் (trash liner), தபால் உறைகள் போன்றவையாக உருமாறுகின்றன.

குப்பைத் தொட்டிகள் / கூடைகளில் பயன்படுத்தப்படும் குப்பை பைகள் (trash liner)


வகை ஐந்தைச் சார்ந்த நெகிழிப் பொருட்கள் Poly Propylene. இவ்வகை நெகிழி, மருந்து புட்டிகள், தயிர் டப்பாக்கள், தேன் மற்றும் இன்னபிற பாகு பதத்தில் இருக்கும் உணவுப் பொருட்களை ( Glucose syrup, Cane syrup, Maple syrup ) அடைத்து விற்கவும் பயன்படுத்தப் படுகின்றன. இவ்வகை நெகிழியும் பாதுகாப்பானதாக கருதப் படுகிறது.


வகை ஆறினை சார்ந்த நெகிழி Polystyrene. இது styrofoam என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வகை நெகிழி, மறுசுழற்சி செய்ய இயலாது. இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் உடல் நலக் கேடு அதிகம். இவற்றிலிருந்து வெளியேறும் நச்சு வேதிப் பொருட்கள், குறிப்பாக எரிக்கையில் வெளியேறும் வேதிப் பொருட்கள் நலக் கேட்டினை ஏற்படுத்தும்.

இவ்வகை நெகிழிகள் முட்டைப் பெட்டிகள், மாமிசம் விற்பனைக்கு பயன்படுத்தப்படும் தட்டுகள், குறுவட்டு வைக்கக்கூடிய பைகள் போன்றவை தயாரிக்க பயன்படுத்தப் படுகின்றன.


மேற்கண்ட வகைகளில் வகைப்படுத்த இயலாத நெகிழிப் பொருட்கள்  வகை ஏழைச் சாரும். இவ்வகையில் பல வகையான நெகிழிகள் கலந்திருக்கின்றன. Poly carbonate, Bisphenol A (BPA). இவற்றில் நம் உடலின் சுரப்புநீர்களை தடை செய்யும் காரணிகள் (Harmone Disruptors) இருப்பதாகவும், அங்கனம் சுரப்புநீர்கள் தடை செய்யப்பட்டால், மலட்டுத் தன்மை(Infertility), மிகைச் சுறுதி (hyper activity), இனப்பெருக்க பிரச்சனைகள் (Reprductive Problems) போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

நெகிழியின் பயன்பாட்டினால், இத்தனை பிரச்சனைகள் இருக்கையில் அவற்றை முற்றிலுமாக பயன்படுத்தாமல் விட்டு விடலாமே. நமக்குத் தான் துணிப் பைகள், சாக்குப் பைகள், சணல் கொண்டு செய்யப்பட்ட பைகள், பாத்திரங்களில் வெள்ளிப் பாத்திரம், ஈயப் பாத்திரம், நிலை வெள்ளி (Ever-silver) என்று எத்தனையோ  இருக்கின்றனவே. அப்படியும் முடியாது போனாலும் நெகிழிப் பொருட்களில் 1, 3, 6, 7 ஆகிய மறுசுழற்சி எண்கள் கொண்டவற்றை முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும். 2,4, 5 ஆகிய மறுசுழற்சி எண்கள் கொண்டவற்றை வேண்டுமானால் பயன்படுத்தலாம்.

நாம் தான் விழிப்புணர்வுடன் நடந்து கொண்டு நம்மையும், நம் சந்ததியையும் காத்துக் கொள்ள வெண்டும்.

 தகவல் திரட்ட உறுதுணையாக இருந்த வலைப்பக்கங்கள்

www.nationofchange.org 

signsanddisplays.wordpress.com 

 மொழிபெயர்ப்புக்கு உறுதுணையாக இருந்த வலைப்பக்கங்கள்

Google Translate

English to Tamil Dictionary - Translation Online : Tamil Cube





உறுதிமொழி

இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ வகை-(2)   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டிக்கா எழுதப்பட்டது  என்று உறுதிமொழி அளிக்கிறேன்.

 இப்படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்.

Monday, September 28, 2015

Altered book

Here is my try to alter a book.
I started by creating a small window in the book. Then I painted the pages with watercolors.


I thought of making a page about bees. So, I used the cardboard from cereal boxes to make honey bee, honey comb and flowers. I used some old papers too to make flowers.


I had tried some simple doodling too.

Finally, I added the quote " Hope is the only Bee that makes honey without flowers ".


Linking this to

LESSology Challenge #51: It's reading time!

Altered Eclectics: September Challenge - ANYTHING GOES MIXED MEDIA/ALTERED ART 

Tuesday, September 22, 2015

கணினியில் தமிழ் மொழி வளர்ச்சி



நமது ஆழ்மனத்தின் எண்ணங்கள், உள்ளத்தில் அமிழ்ந்து கிடக்கும் கனவுகள், ஆசைகள், கற்பனைகள் இவற்றை எல்லாம் பிறரிடம் பகிர்ந்து கொள்கையில், அவற்றின் சாரம் மாறாமல், தயக்கமோ, தடையோ ஏதுமில்லாது எடுத்துக் கூற ஓர் கருவியாக இருப்பது அவரவரது தாய் மொழி. என்ன தான் நாம் நமது பணி நிமித்தமாக, அந்நிய மொழியை கற்று, அதையே பயன்படுத்தி, நம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டாலும், அந்நிய மொழியில் வார்த்தைகளை கோர்வையாக்கி, அதை நம் மனதுள் நிச்சயமாக நமது தாய் மொழியில் சொல்லி ஒத்திகை பார்த்துக் கொள்வோம். இப்போது, நமது எண்ணங்களை கருத்துக்களை எல்லாம் நமது தாய் மொழியிலேயே விளக்க விவரிக்க நல்லதோர் வாய்ப்பாக நம்மால் கணினியிலும் நமது தமிழ் மொழியை பயன்படுத்த முடிகிறது.  

கணினியில் தமிழ் மொழியை கருத்துப் பரிமாற்றத்திற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் பெரும்பாலும் பயன்படுத்துபவர்கள் யார் ? தமிழை சரளமாக பேசும் தமிழ் மக்கள் அனைவராலும் எளிதாக தமிழை கணினியில் பயன்படுத்த முடிகிறதா ? தமிழ் மொழியை கருத்துப் பரிமாற்றத்திற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் பயன் படுத்துவோர், தமிழ் மொழி மீது ஈடுபாடும் ஆர்வமும், கணினியில் தமிழ் பயன்பாட்டினை பெரிதும் விரும்புவோர் மட்டுமே. இது தமிழ் மொழியை கணினியில் பயன்படுத்தும் ஓவ்வொருவரும் அவரவரது தனிப்பட்ட முயற்சியால் அறிந்து கொண்டு, செயல்படுத்தப்பட்டது ஆகும். இப்படி அறிந்து கொள்ள வாய்ப்பில்லாது, ஆனால், தமிழ் மொழியை மட்டுமே தங்களது கருத்துப் பரிமாற்றத்திற்கு பயன் படுத்தும் பலருக்கு கணினியில் அல்லது கைபேசிகளில் தமிழில் தட்டச்சு செய்வது எங்ஙனம் என்பது தெரிவதில்லை. இதனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் ? தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தகவல் பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள். இன்றளவும் தமிழில் மின்னஞ்சல் அனுப்பினாலோ, அல்லது மின்னஞ்சல் அரட்டையில் ( chat ) தமிழில் எழுதி உரையாடினாலோ, எப்படி முடிகிறது என்று ஆச்சர்யமாக கேட்பவர்கள் உண்டு. இதில் மகிழ்ச்சிகரமான செய்தி என்னவெனில், தமிழ் தட்டச்சிற்கான வழிமுறைகளை கேட்டறிந்து, அவற்றை பின்பற்றி, தாங்களும் மகிழ்வுடன் தமிழிலேயே தட்டச்சு செய்து,  உரையாடி,  நம்மையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவோரும் உண்டு. நாமும் பிறருக்கு புதியாய் ஒன்றை கற்க உதவி புரிந்துள்ளோம் என்ற மனநிறைவு கிடைக்கும்.

தமிழில் தட்டச்சு செய்ய கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் முதலில் முயற்சித்து பார்ப்பது, கூகுள் வழங்கும் ஒலிபெயர்ப்பு (Google transliteration) முறை தான். அதில் முயற்சி செய்து பார்த்து விட்டு, மனதிற்கு திருப்தியும் நிறைவும் ஏற்பட்ட பின், மெல்ல மெல்ல தமிழ் தட்டச்சு மென்பொருட்களான, ஏ - கலப்பை (E- kalappai) , என் எஹெச் எம் ரைட்டர் (NHM Writer),  அழகி (Azhagi) போன்றவற்றை பயன்படுத்த முயற்சி எடுக்கின்றனர். ஆனால், அறிந்து கொள்ள ஆர்வம் இருப்பினும், அவர்தம் பணிக்கோ, அல்லது கல்வியறிவு வளர்ச்சிக்கோ முக்கியமானதாக இவை இருப்பதில்லை. அதனால், தமிழ் தட்டச்சினை யாரும் விரும்பி கற்றுக் கொள்வதில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

தமிழை தங்களது முதல் பாடமாக கொண்டோர், தமிழில் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட விரும்புவோர், தமிழில் முனைவர் பட்டப்படிப்பு பயில்வோர் என்று தமிழைச் சார்ந்து இருப்பவர்கள் கூட கணினித் தமிழ் குறித்து விரிவாக அறிந்திருப்பதில்லை. கணினித் தமிழில் ஆராய்ச்சி மேற்கொள்வோர், தமிழ் ஆவணங்களை எண்ணிமப் (Digitize/ Digital) படுத்தி உலகிலுள்ளோர் அனைவரும் பயன்படுத்தி மகிழ்வுற வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டோர், தங்களது தாய்மொழியாம் தமிழ் மொழியிலேயே தங்களது எண்ணங்களை, கருத்துக்களை, தங்களது மொழி பால் கொண்ட பற்றின் காரணமாக இலக்கியங்கள் படைத்து வெளியிடுவோர் என்று சொற்பமானவர்களே கணினியில் தமிழை பயன்படுத்துகின்றார்கள்.

இன்னொரு சாராரும் கணினியில் தமிழ் தட்டச்சு கற்றுக் கொள்கிறார்கள். யார் தெரியுமா ? DTP  (Desktop Publishing) நிறுவனங்களில் பணிபுரிவோர். தமிழில் ஆவணங்கள் தட்டச்சு செய்பவர்கள் இவர்கள். ஆங்கில ஆவணங்கள் தட்டச்சு செய்ய ஆகும் கட்டணத்தைவிட, தமிழில் ஆவணங்களை தட்டச்சு செய்ய ஆகும் கட்டணம் அதிகம். தமிழ் படிப்பு சோறு போடுமா ? என்று கேட்கும் பலருக்கு பதில் இதோ ! தமிழ் யாரையும் கைவிட்டு விடாது. தமிழ் தட்டச்சு முறை பலரது வருமானத்திற்கு வழி செய்கிறது. எதையும் விருப்பத்துடனும், ஆர்வத்துடனும் கற்றுக் கொள்ளும் முறையில் தான் இருக்கிறது, அதிலிருந்து நாம் பயனடைகிறோமா இல்லையா என்பது.

கணினியில் தமிழ் வளர்க்க பல அறிவியல் துறை சார்ந்த கலைச்சொற்களை தமிழ் மொழியில் மொழி பெயர்த்து அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் மொழி வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். இது கணினி அறிவியலுக்கு மட்டுமன்றி, அனைத்து அறிவியல் துறைகளுக்கும் பொருந்தும். கணினி அறிவியல், மருத்துவம், பொறியியல் துறைகளை சேர்ந்த சொற்களை தமிழ் மொழியில் மொழிபெயர்த்து அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், அது தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். மொழி பெயர்த்து பத்திரமாக வைத்துக் கொண்டால் மட்டும் போதாது. அவற்றை நிச்சயம் அன்றாட பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் வேண்டும்.

கணினியில் தமிழ் வளர்ச்சி குறித்து விவாதிக்கும் வேளையில், இன்னொரு முக்கியமான விடயம் குறித்தும் சொல்வது அவசியமாகிறது. அது என்னவெனில் எழுத்துப் பிழை. பிழையின்றி எழுதுவதிலும் பேசுவதிலும் தானே மொழியின் அழகு அடங்கியிருக்கிறது. டண்ணகர, றண்ணகர பிழைகள், லகர, ழகர, ளகர வேறுபாடு அறியாது, ஒன்றிற்கு ஒன்று மாற்றி எழுதி சொல்லும் பொருளும் பிழையாக இணையத்தில் பதிந்து வைத்திட்டால், நாளை அந்த ஆவணங்களை இணையத்தில் வாசிக்க தலைப்படுவோருக்கு தவறான வழிகாட்டுதலாக அவை அமைந்து விடக்கூடாது அல்லவா ?

ஆங்கில மொழியில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வாக சொற் செயலிகளை (Word Processors) பயன்படுத்துகையில், அல்லது வலைப்பதிவுகள் (blog post) தட்டச்சு செய்கையில், நாம் ஏதேனும் சொல்லை பிழையாக தட்டச்சு செய்து விட்டால், அதற்கான சரியான சொல், அதைப் போன்றே ஒலிக்கும் வேறு சரியான சொற்கள் என்று நமக்கு பரிந்துரை (suggestions) வழங்குகின்றது , பிழையான சொற்களை சிகப்பு அடிக்கோட்டினால் குறிப்பிட்டு காட்டுகிறது. சில செயலிகளில் தானியங்கி திருத்தம் (Auto-correct)  வசதியும் உண்டு. தமிழ் தட்டச்சு செய்கையில், இது போன்று தானியங்கி திருத்தம் மற்றும் சொல் பரிந்துரை வசதிகள் உருவாக்கப் பட்டால், தமிழ் ஆவணங்கள் பிழையின்றி உருவாக்க பேருதவியாக இருக்கும். Google வழங்கும் blogger உதவி கொண்டு நாம் தமிழில் வலைப்பதிவுகள் உருவாக்கினால், வார்த்தைகளை தானியங்கு பரிந்துரைக்கும் (auto-suggest) வசதியும் உண்டு. அதைப் பயன்படுத்தியேனும் பிழையில்லா ஆவணங்களை இணையத்தில் உலவ விடலாமே. பிழை நிறைந்த ஆவணங்கள் மொழியின் வளர்ச்சிக்கு தடையாகத் தானே இருக்கும். இணையத்தில் தமிழ் தட்டச்சு செய்து ஆவணங்களை உருவாக்குவோர் யாவரும் இதனை நினைவில் கொள்ளுதல் அவசியம்.

இணையத்தில் தமிழ் இலக்கணம், பழங்கால இலக்கியம் தொடங்கி தற்கால இலக்கியம் வரை, கதை, கவிதை, கட்டுரை என்று தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் விரவிக் கிடக்கின்றன. தமிழ் எண்ணிம நூலகங்களில் பல ஆண்டுகளுக்கு முன் அச்சில் ஏற்றப்பட்ட நூல்களும் கூட கிடைக்கின்றன. அது மட்டுமல்லாது, தற்காலத்தில் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களால் அவர்தம் படைப்புகளை மின்னூலாக வெளியிட்டு அவற்றை பிறருடன் பகிர்ந்து கொள்ள நல்லதொரு வாய்ப்பும் கிட்டுகிறது. இதில் இன்னொரு வசதி என்னவெனில், தங்களது மின்னூல்களை ஆண்டிடாய்ட் (Android), கிண்டில் (Kindle) போன்ற சாதனங்களுக்கு  தரவிறக்க விரும்புவோரிடம் கட்டணம் வசூலிக்க விரும்பினாலும் வசூலித்துக் கொள்ளலாம். இது எழுத்தாளருக்கு வருவாய்க்கான வாய்ப்பாகவும் அமைகிறது. நமது மின்நூல்களை அமேசான்.காம் போன்ற வர்த்தக இணையதளங்களிலும் விற்பனை செய்யலாம். நூல்களை அச்சில் ஏற்ற ஆகும் செலவு, பதிப்பகத்தாரால் வெளியிட ஆகும் செலவு இவற்றை கருத்தில் கொண்டு பலரும் தற்போது தங்களது படைப்புகளை மின்னூலாக வெளியிடுகின்றனர். இப்படி வெளியிடும் நூல்கள் கண்டிப்பாக பல வாசகர்களை சென்றடையும். இதனால், புத்தகம் வெளியிடுவோருக்கும் செலவில்லை, வாசிப்போரும் இலவசமாகவே வாசித்து தங்களது மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். வாசகர்களின் வரவேற்பினை பொறுத்து, நூலினை அச்சில் ஏற்றலாம்.

மேற்கூறியுள்ள கருத்துக்கள் கணினித் தமிழ் வளர்ச்சிக்கு பயனுள்ளவையாய் இருக்கும் என்ற நோக்கில், என் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்கள் மற்றும் கருத்துகளின் தொகுப்பே ஆகும். கருத்துகள் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இக்கட்டுரையில் பயன்படுத்தியுள்ள கணினி புகைப்படம் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றி,  columbiabusinesstimes.com

உறுதிமொழி

இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ வகை-(1) கணினியில் தமிழ் வளர்ச்சி - கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது  என்று உறுதிமொழி அளிக்கிறேன்.

 இப்படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்.

Sunday, September 20, 2015

விழித்தெழு பெண்ணே !



"ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி"

என்று வீரமாகப் பாட்டெழுதி, பெண்களின் மனத்திலும் அந்த வீரத்தினை விதைத்திட்டவர் பாரதியார்.

வீரமும் விதையாக விழுந்து விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. ஆனால், அந்த வீரம் தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் பரிமளிக்கிறதா என்பது தான் கேள்வி. பெரும்பாலான நேரங்களில் அங்கனம் பரிமளிக்கின்ற வீரம் பெண்ணிற்கே ஆபத்தாக வந்து முடிகிறது. இதனால், பல பெண்களும் மெளனத்தையே  தங்கள் கவசமாகக் கொண்டு விடுகிறார்கள். " அப்படி அல்ல ! எம்மைப் பெற்ற, எம்முடன் பிறந்த, எம் மீது நம்பிக்கை கொண்ட, எம்முடன் எமக்காக வாழும் பெண்டிரின் மெளனத்தினை மொழி பெயர்க்கத் தெரிந்தவர்கள் நாங்கள் ! அவர்தம் உள்ளத்தை உணர்ந்து அவர்களை புண்படுத்தாது அனுசரித்து செல்ல எம்மாலும் முடியும். அவர்தம் முயற்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உத்வேகமாகவும் தூண்டுகோலாகவும் எம்மால் இருக்க முடியும் " என்று உரக்கச் சொல்லும் ஆண்குலங்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்.

பெண் பிள்ளைகள் குடும்பத்தின் சொத்தாக, குலவிளக்காக எண்ணி, பெண் பிள்ளைகள் வேண்டுமென தவமிருந்து பெற்று சீராட்டி பாராட்டி ஆண் பிள்ளைக்கு நிகராக, கல்வி கேள்விகளில் சான்றோராய் ஆக்கி அழகு பார்க்கும் பெற்றோர் இன்று அதிகம். அதற்குப் பின் தானே வருகிறது, திருமணம். இருமனம் இணையும் திருமண பந்தம் இன்று பணம் கொண்டு நிர்ணயிக்கப் படுகிறது. அப்படி தான் இணைந்தாகி விட்டது. அதன் பின்னும் பணமே பிரதானம். ஒன்று பெண்ணானவள் சம்பாதித்து ஆக வேண்டும். அது இல்லையேல், பெண்ணைப் பெற்றோர் அவ்வப்போது சீதனமாக தந்தாக வேண்டும். இல்லையேல், அவள் பாடு திண்டாட்டம் தான். சற்றே சீறி விட்டாலோ, முடிவு விவாகரத்து. தட்சணை  கொடுத்து வாழ துவங்கினாலும், ஏனோ வாழ்க்கை பலருக்கு இனிப்பதில்லை.

இங்கே முகப்புத்தகத்தில் படித்த ஓர் கருத்தினை பகிர்ந்து கொள்கிறேன். மனதினைக் கவர்ந்த, மிகவும் ஈர்த்த கருத்து என்றும் சொல்லலாம்.

" It's not that we expect too much from our boyfriend or husband ..... it's just our dad has set very high standards oh how we should be treated "

" கணவரிடமிருந்து அளவிற்கு அதிகமாக நான் எதையும் எதிர்பார்க்கவில்லை....(இங்கே அன்பு, ஆதரவு, மதிப்பு அனைத்தும் அடங்கும்).
நாங்கள் சமூகத்தால், எம்மைச் சுற்றி இருப்பவர்களால் மதிப்புடனும் கண்ணியத்துடனும் நடத்தப் பட வேண்டிய முறை குறித்து அதிகமான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் எம்முள் விதைத்தவர் எம் தந்தை "

உண்மையில் பெண்ணின் முன்னேற்றம் என்பதற்கு வித்தே, நமது தாய்
தந்தையர், நமது இல்லத்திலிருந்தே தொடங்குகிறது.


சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா ? இல்லை. பெண் என்பவள் ஒர் போகப் பொருளாகவும், கேலியும் கிண்டலுக்கும் உரிய ஒரு பொருளாகவே பார்க்கப் படுகிறாள்.  ஆணுக்கு காதல் மலர்ந்து விட்டதென்றதும், அவன் கண்ட பெண்ணுக்கும் உடனே காதல் வந்துவிட வேண்டும். அவளுக்கு விருப்பம் இல்லை என்றாலோ, அவள் முகம் சிதைக்கப் படுகிறாள் அல்லது தாக்கப்படுகிறாள், அவதூறுகளுக்கு ஆளாகிறாள். அப்படி ஓர் கொடூரத்தை செய்யும் முன் அவர்தம் எண்ணங்களில், அவரது தாயும், சகோதரிகளும் நினைவில் வரமாட்டார்களா என்ன ?

பெண்ணென்பவளும் உயிர் உள்ளவளே. அவளுக்கும் உள்ளம் என்பது உண்டு. அந்த உள்ளத்தினுள் ஆசைகளும் கனவுகளும் அதிகம் உண்டு. அதைவிட திடமும் தைரியமும் நிரம்பவே உண்டு. எதிர்ப்பு, தடை என்று எது வரினும் துணிந்து போராட திண்ணமும் அதிகம் உண்டு.

சமூகத்தையும் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் பற்றி இதுவரை அலசி ஆராய்ந்தோம். இப்போது, பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்தம் சமூக நிலைக்கு அவர்கள் எங்ஙனம் காரணமாகின்றனர் ? சுதந்திரம் கிடைக்காத வேளையில் அதற்காக ஏங்கித் தவிப்பதும், அப்படி கிடைத்த சுதந்திரத்தை எல்லை மீறிய நடவடிக்கைகளால் பறிகொடுத்து  சிரமப்படுவதும் ஏன் ? ஆண்களுக்கு எவ்விதத்திலும் சளைத்தவர் இல்லை தாம் பெண்கள். அதை கல்வி, கேள்வி, தொழில், திறமை, நிர்வாகம் என்று அனைத்திலும் நிலைநாட்டுகின்றனர். இது வரவேற்கத்தக்க விஷயம். அதுவே, ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமானம். அதனால், குடி, போதை, புகைப்பிடித்தல் இது போன்ற செய்கைகள் ஆண்களைப் போல செய்வதில் என்ன பிழை ? என்று விவாதம் செய்வது எதற்கு ? ஆணோ, பெண்ணோ யாராயினும் தீங்கு விளைவிக்கக் கூடியதை விட்டு விலகியிருத்தல் நலம் தானே ? இவையெல்லாம் செய்தால் தான் பெண் உரிமைகளும், ஆண் - பெண் சமத்துவமும் நிலைநாட்டப் படுவதாக எண்ணினால், அது தவறானதோர் கணிப்பாகும்.

பெண் என்பவள் வணிக நோக்கிற்காக ஆபாசமாக சித்தரிக்கப் படுகிறாள். இதை அன்றாடம் நாம் திரைப்படங்களிலும், வணிக விளம்பரங்களிலும் காண்கிறோம். அதைக் கண்டு முகம் சுழிக்கிறோம். இப்போது காட்டப்படும் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில், பெண் பாத்திரங்களின் சித்தரிப்பு, ஏதோ பெண் என்பவள் கொடுமை, வன்மம், குரோதத்தின் மொத்த உருவமாக சித்தரிக்கப்படுகிறாள். பொதுவாகவே, பெண்கள் மென்மையானவர்கள். மென்மையோடு உறுதியும் வாய்ந்தவர்கள். அதை இது போன்ற தொலைக்காட்சி நெடுந்தொடர்களில்  அடிமைகளாகவும் ஆட்டிப் படைப்பவர்களாகவும் சித்தரிப்பது ஏனோ ? இவற்றை காண்போரேனும் இவையெலாம் மாயை என்பதை உணர்ந்த அந்த மாயையிலிருந்து  வெளிவருதல் வேண்டும்.

இந்திய பெண்கள் தான் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்றோர் ஆய்வு சொல்கிறது. எதனால் ? இந்தியப் பெண்களுக்கு இந்நிலை ஏன் ? அவர்கள் தமது வாழ்வின் இளம் பிராயம் தொட்டு இருக்கும் ஆர்வங்களை திறமைகளை வளர்த்துக் கொள்ளாததும் கூட இதற்கோர் காரணமாக இருக்கலாம். எடுத்துக் காட்டாக, ஒருவர் நன்கு படம் வரையும் திறமையோ, பாடும் திறமையோ கொண்டவராக இருக்கலாம். இளம் பிராயத்தில் அத்திறமைகளை வளர்த்துக் கொள்ள நல்லதோர் வாய்ப்பு அமையாது போயிருக்கக் கூடும். பள்ளிப் படிப்பு, கல்லூரி படிப்பு, பின்பு வேலை, அதன் பின் குடும்பம், குழந்தைகள், உத்தியோகம் என்று எப்போதும் ஏதாவது ஒன்றினால் ஆக்கிரமிக்கப் பட்டு இருந்திருப்பார்கள். வயதாகி பணி ஓய்வு பெற்று இருக்கும் வேளையில், ஏதோ சும்மா இருப்பது போலவும், எப்போதும் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், உடலுக்கு ஓய்வு கொடுக்கையில், மனம் ஏதோ ஒன்றை இழந்து விட்டது போன்று பாடுபடும். பணி ஓய்வு பெற்றவர்கள் மட்டுமல்ல, வேலைக்கு செல்லாது, வீட்டிலிருந்து குடும்பப் பொறுப்பை நிர்வகிக்கும் பெண்களுக்கும் இந்நிலை ஏற்படும். இதற்கு தீர்வு காண்பது எப்படி ? வீட்டிலுள்ளோருக்கு தேவையானவற்றை செய்து முடித்து விட்டு ஓய்வாக இருக்கும் அவர்கள், அந்த ஓய்வு நேரத்தில் தங்களுக்கென்று, தங்களது திறமைகள், விருப்பங்கள் ஆகியவற்றிற்கு சிறிது நேரம் ஒதுக்குதல் அவசியம். இவர்களது மனநிறைவுக்கும், அமைதிக்கும் குடும்பத்தாரின் முழுமனதுடனான ஆதரவும் அரவணைப்பும் நிச்சயம் தேவை. அவர்கள் விரும்பும் ஏதேனும் ஒரு செயலில் ஈடுபடுதல் அவர்களுக்கு மனநிறைவையும், மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையையும் நிச்சயம் வழங்கும். அவர்களுக்கென  ஒதுக்கும் நேரத்தில் ஆடலாம், பாடலாம், வரையலாம், வண்ணந்தீட்டலாம், எழுத்து திறமையை வெளிக்கொணரலாம், கைவினைகள் செய்யலாம், புகைப்படம் எடுக்கலாம், தோட்டம் அமைக்கலாம். இவையெல்லாம் நமது மனதிற்கு அமைதியையும் தெளிவையும் தருவதோடு, பிறரிடம் நமக்கென தனி மதிப்பினை ஈட்டித் தரும். இதனால், மனமும் மகிழ்வும் நிறைவும் அடையும்.


பெண்கள் தங்களை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடக்கிக் கொள்ளாது, தம்மையும் தாம் சார்ந்த சமூகத்தினையும் சுற்றி நடக்கும் நன்மைகள், தீமைகள் என அனைத்து நிகழ்வுகளையும் அறிந்து கொண்டால், விழிப்புணர்வும், நம்பிக்கையும், மனோதிடமும் நிச்சயம் கிடைக்கும் என்பது திண்ணம்.

குறிப்பு :

புகைப்படம் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றி,
http://www.slideshare.net/KunalNagpal2/women-empowerment-35827905

உறுதிமொழி

இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ வகை-(3)  பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது  என்று உறுதிமொழி அளிக்கிறேன்.

 இப்படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்.

Wednesday, September 16, 2015

நெகிழி (Plastic) பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்

நெகிழி - நம் அன்றாட வாழ்க்கையில் ஓர் நாளேனும் இதனை பயன்படுத்தாது இருக்கிறோமா ? இல்லை என்றே  அடித்துச் சொல்லலாம். அந்த அளவுக்கு நெகிழி பயன்பாடு நம்மிடையே உள்ளது. விடியற்காலை நெகிழிப் பைகளில் பால் வாங்குவது தொடங்கி,  கடைகளில் மளிகைப் பொருட்கள் வாங்குவது, புதிய துணிமணிகள், குடிதண்ணீர் பாட்டில்கள், உணவகங்களில் உணவு வாங்கினால், சூடான உணவுப் பொருட்கள், கொதிக்கும் குழம்பு வகைகள் வரை அனைத்துமே நெகிழிப் பைகளில் என்றாகி விட்டது. 

இந்த நெகிழிப் பைகளை பயன்படுத்தி விட்டு என்ன செய்கிறோம் ? குப்பைகளில் தூக்கி எறிந்து விடுகிறோம். அப்படி தூக்கி எறியும் நெகிழிப் பைகள் என்னவாகின்றன ? மற்ற பொருட்களைப் போல் மண்ணில் மக்கி அழிந்து போகின்றனவா ? இல்லை. மண்ணுள் அப்படியே தங்கிப் போய்விடுகின்றன. காற்றில் அலைக்கழிக்கப் பட்டு, நீர் நிலைகளில் சென்று சேர்ந்து நீரினையும் மாசு படுத்துகின்றன. 

நெகிழிப் பைகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப் படும் இரசாயனங்கள் நச்சுத் தன்மை கொண்டவை.  நெகிழிப் பைகள் தயாரிக்கப் பயன்படும் ஸைலீன் (Xylene), எத்திலீன் ஆக்சைடு (Ethylene oxide), பென்ஸீன் (Benzene) ஆகிய இரசாயனங்கள்,  உயிரினங்களுக்கு பல விதமான நோய்களையும் உடல் நலக் கோளாறுகளையும் ஏற்படுத்துகின்றன. இந்த இரசாயங்களால் நீர், நிலம், காற்று என்று நம் வாழ்வுக்கு ஆதாரமான அனைத்துமே பாழ்பட்டுப் போகின்றன.

நெகிழிப் பைகளை அழிப்பதாக எண்ணி அவற்றை எரித்தாலும், புதைத்தாலும் அதனால் விளையும் கேடுகளே அதிகம். எரிக்கையில் வெளியேறும் நச்சு வாயுக்கள் உயிரினங்களின் நலனுக்கு கேடாக அமைகின்றன. நாம் தூக்கி எறியும் நெகிழிப் பைகளின் நிறங்களினால் ஈர்க்கப் பட்டு பறவைகளும் விலங்குகளும் அவற்றை உண்டு விடுகின்றன. கடலில் மற்றும் நீர்நிலைகளில் சென்று சேரும் நெகிழிப் பைகள், நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வுக்கு எமனாக அமைகின்றன.

இறந்து போன கடல் பறவையின் வயிற்றினுள் காணப்பட்ட நெகிழிப் பொருட்கள்

நீரில் மிதக்கும் நெகிழிப் பையை ஜெல்லி மீனாக எண்ணி சாப்பிட எத்தனிக்கும் கடல் ஆமை இணைய பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம்  moocs.southampton.ac.uk   .
இது போன்று, ஏதேனும் ஒரு நீர்வாழ் உயிரினம் நெகிழிப் பைகளை அறியாமையால் உட்கொண்டு விட்டால், அதனால் அனைத்து நீர்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படும். அது எப்படி ? நெகிழிப் பையை உட்கொள்வதால் ஓர் நீர்வாழ் விலங்கினம் முற்றிலுமாக அழிந்து போய் விடும் எனில், உணவுக்காக அந்த உயிரினத்தை சார்ந்திருக்கும் மற்றோர் இனத்திற்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும். இப்படி ஏற்படுவதால், ஓர் உணவுச் சங்கிலி (food chain) அறுபட்டு விடுகிறது. உணவுச் சங்கிலி அறுபட்டால், ஒரு இனம் அளவிற்கு அதிகமாக பெருகவும், வேறோர் இனம் உணவின்றி அழியும் அபாயமும் ஏற்படுகிறது.

நமது இந்தியாவில் சாலைகளில் கிடக்கும் நெகிழிப் பைகளை அறியாமையால் உணவாகக் கொண்டு விடுகின்றன கால்நடைகள். மாடுகளின் வயிற்றில் இருந்து சுமார் அறுபது கிலோ வரை நெகிழிப் பைகள் எடுக்கப் படுகின்றன. எங்கிருந்து இவை நெகிழிப் பைகளை உட்கொள்கின்றன ? பசும் புல் மற்றும் இலை தழைகள் இல்லாத பட்சத்தில், சாலையோரம் சுவர்களில் ஒட்டப் பட்டிருக்கும் சுவரொட்டிகளை ஆடுகளும் மாடுகளும் உண்பதை  நாளும் கண்கூடாக காண்கிறோம். அப்படிப் பட்ட சூழ்நிலையில், இவை நெகிழிப் பைகளையும் சேர்த்தே உணவாகக் கொண்டு விடுகின்றன. அப்படி அவை உணவாக கொள்ளும் நெகிழி, நம்மை அறியாது நமது உணவுகளிலும் வந்து விடுகின்றன. இப்படி நெகிழி உண்டுவிடும் மாடுகள் தரும் பாலிலும், நெகிழியின் நச்சுத் தன்மை இருக்கிறது. அதுமட்டுமல்லாது, இது போன்று நெகிழி உட்கொண்டு விட்ட கால்நடைகளின் மாமிசத்தினை நாமும் உண்ண நேர்ந்தால், அந்த நெகிழியின் தீமைகள் நம்மையும் வந்தடையும்.

நிலங்கள் மற்றும் காடுகளை  ஆக்கிரமித்திடும்  நெகிழிப் பைகளை  உணவாகக் கொண்டுவிடும் விலங்குகளின் வயிற்றில் அவை அப்படியே தங்கிப் போய், அவற்றிற்கு ஏற்படும் செரிமானக் கோளாறுகளினால் மூன்று மாதத்திற்கு ஒரு காட்டு விலங்கு வீதம் அழிகின்றன. இந்நிலை தொடர்ந்தால், பூமியில் உள்ள உயிர் இனங்கள் ஒவ்வொன்றாக அழிந்து விடும் பேராபத்தும் இருக்கிறது.

மண்ணிலும் விளைநிலங்களிலும் மண்டிவிடும் நெகிழிப் பைகள் நிலத்தடி நீரோட்டத்தினை பாதிக்கின்றன. மேலும், தாவரங்களின் வேர்கள் நிலத்தினுள் பரவி ஓடை இயலாதவாறு தடை செய்கின்றன. இதனால், செடி கொடிகளின் வளர்ச்சி மற்றும் மகசூல் பாதிக்கப் படுகிறது.

நெகிழிப் பைகளால் விழையும் இத்தகைய தீங்குகளில் இருந்து நம்மையும் நமது சுற்றுச் சூழலையும் காத்துக் கொள்வது எங்கனம் ? நெகிழி பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுதல் வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய நெகிழிப் பைகளை மீண்டும் பயன்படுத்தலாம். அவை நமக்கு பயன்படாது என்று எண்ணினால், அவற்றை குப்பைகளில் வீசி, அல்லது எரித்து சுற்றுச் சூழல் மாசு ஏற்படுத்தாது, அவற்றை மறுசுழற்சி மையங்களில் (Recycling Centers) கொடுத்து விட்டால், அவர்கள் அந்தப் பைகளைக் கொண்டே மீண்டும் புதிய பைகளை உருவாக்கி விடுவார்கள்.

நாம் கடைகளுக்கு செல்கையில் நாமே கைகளில் பைகளை கொண்டு சென்றால், கடைகளில் இருந்து வாங்கி வரும் நெகிழிப் பைகளின் எண்ணிக்கை குறையும். அவை வீணாக குப்பையில் சென்று சேர்வதும் தவிர்க்கப்படும்.

கனடாவிற்கு வந்த புதிதில், ஒரு கடையில் சாமான்கள் வாங்கச் சென்றிருந்த போது, வாங்கிய சாமான்களை போட்டுத் தர நெகிழிப் பை வேண்டுமெனில், அவற்றிற்கு தனியாக கட்டணம் வசூலித்தார்கள். இதனால் அக்கடைக்கு வரும் மக்கள் அனைவருமே தம்முடன் பைகள் வைத்திருந்தனர். இது போன்ற திட்டமும் கூட, நெகிழிப் பைகளின் பயன்பாட்டை குறைக்கும்.

நெகிழி தண்ணீர் பாட்டில்கள் அழகான பைகளாக உருமாற்றி, நாம் கடைத் தெருக்களுக்கு செல்கையில் பயன்படுத்தும் வகையில் பயனுள்ளதாக மாற்றி விற்பனை செய்கின்றனர். இதை பாருங்களேன்.


படத்திற்கு நன்றி, arcmate.com.

இவையனைத்திற்கும் மேலாக, மிகவும் முக்கியமான செய்தி ஒன்று.

" துணிப் பைகளையும், பொட்டலம் போடும் முறையையும் கேவலமாக எண்ணிக் கொண்டே இருக்கும் வரை, நெகிழி அரக்கனின் பிடியிலிருந்து நாம் நம்மையும் நமது சுற்றத்தையும்  காப்பது சிரமம். "



தகவல் திரட்ட உறுதுணையாக இருந்த வலைப்பக்கங்கள்

http://www.care2.com/causes/6-animals-who-died-after-swallowing-plastic.html 
arcmate.com
answers.com 
University of Southampton - Exploring our Oceans

பொட்டலம் புகைப்படம் கீழ்க்கண்ட வலைப்பக்கத்தைச் சார்ந்தது

http://stepoutofhome.blogspot.ca/2008/09/good-ol-pottalam.html



உறுதிமொழி

இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ வகை-(2)   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டிக்கா எழுதப்பட்டது  என்று உறுதிமொழி அளிக்கிறேன்.

 இப்படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்.



Happy Ganesh Chaturthi


Chair made for Ganesha with waste newspapers.


Decorated with handmade paper flowers.


Ganesha Rock Painting.






















Monday, September 14, 2015

தமிழ் வலைப்பதிவர் திருவிழா -2015 மற்றும் தமிழ் இணைய கல்விக்கழகம் இணைந்து நடத்தும் உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!

உலகளாவிய மின்தமிழ்இலக்கியப் போட்டிகள்! - மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!





“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை”
“தமிழ் இணையக் கல்விக் கழகம்”
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்!
முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு ரூ.2,000
ஒவ்வொரு பரிசுடனும்
“தமிழ்க்களஞ்சியம்” இணையம் வழங்கும்
மதிப்புமிகு வெற்றிக் கேடயம்!
இவ்வாறாக   ஐந்து போட்டிகளுக்குமான
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
------------------------------------
வகை-(1)  கணினியில் தமிழ்வளர்ச்சி - கட்டுரைப் போட்டிகணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள்  -ஏ4 பக்க அளவில் 4பக்கம்.  இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்
வகை-(2)   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி - சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வ யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்
வகை-(3)    பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி - பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும் 
வகை-(4)    புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு
வகை-(5)    மரபுக்கவிதைப் போட்டி-  இளைய சமூகத்திற்கு நம்பிக்கை யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24வரி. அழகியல் ஒளிரும் தலைப்போடு
போட்டிக்கான விதிமுறைகள்

(1) படைப்பு தமது சொந்தப் படைப்பே எனும் உறுதிமொழி தரவேண்டும்.

(2) இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” என்னும் உறுதிமொழியும் இணைக்கப்ட வேண்டும்.

(3) “இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்னும் உறுதி மொழியுடன் தமது தளத்தில் வெளியிட்டு, அந்த இணைப்பை மட்டுமே மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.

(4) வலைத்தமிழ் வளர்ச்சியே போட்டியின் நோக்கம் என்பதால் வலைப்பக்கம் இல்லாதவர் இப்போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது. இதற்காகவே புதிதாக வலைப்பக்கம் தொடங்கியும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டி முடியும் வரை அந்த வலைப் பக்கம் செயல்பாட்டில் இருத்தல் வேண்டும்.

(5) படைப்பு வந்துசேர இறுதிநாள், 30-9-2015 (இந்திய நேரம் இரவு11.59க்குள்)

(6)11-10-2015 புதுக்கோட்டையில் நடக்கும் “வலைப்பதிவர் திருவிழா- 2015”இல் தமிழ்நாடு அரசின் தமிழ்இணையக் கல்விக் கழகத்தினர் (TAMIL VIRTUVAL ACADEMY-http://www.tamilvu.org/ ) வழங்கும் உரிய பரிசுத்தொகையுடன் பெருமைமிகு வெற்றிக் கேடயமும் சான்றோரால் வழங்கப்படும்.

(7) உலகின் எந்த நாட்டிலிருந்தும் அவரவர் வலைப்பக்கம் வழியாக எத்தனை போட்டிகளில் வேண்டுமானாலும், (ஒவ்வொரு தலைப்பிலும் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும்) அனுப்பிப் பங்கேற்கலாம். அனைத்துவகைத் தொடர்பிற்கும் மின்னஞ்சல் தொடர்பு மட்டுமே. மின்னஞ்சல் – bloggersmeet2015@gmail.com

(8) தளத்தில் படைப்புகளை போட்டிவகைக் குறிப்புடன் வெளியிட்டுவிட்டு, போட்டிக்கு அந்த இணைப்பை அனுப்பும்போது, பதிவரின் பெயர், வயது, புகைப்படம், மின்னஞ்சல், செல்பேசி எண், வெளிநாட்டில் வாழ்வோர்- இந்தியத் தொடர்பு முகவரியுடன் கூடிய அஞ்சல் முகவரி, வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்படவுள்ள கையேட்டிற்கு உரிய விவரங்கள் தரப்பட்டுவிட்டதையும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். இவ் விவரங்கள் இன்றி வரும் அனாமதேயப் படைப்புகளை ஏற்பதற்கில்லை. வலைப்பக்க முகவரி தவிர, மற்றுமுள்ள விவரங்களை வெளியிட வேணடாம் எனில் அதனைக் குறிப்பிட வேண்டும்.

(9) வெற்றிபெறுவோர் நேரில் வர இயலாத நிலையில், உரிய முன் அனுமதியுடன் தம் பிரதிநிதி ஒருவரை அனுப்பி, தொகை மற்றும் வெற்றிக் கேடயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை அஞ்சலில் அனுப்புதல் இயலாது.

(10) மற்ற பொது நடைமுறைகளில் போட்டி நடுவர்களின் முடிவே இறுதியாகும்.

அன்பான வேண்டுகோள் ஐந்து

(1) போட்டி விவரங்கள் அடங்கிய இந்தப் பதிவை, நம் தமிழ் வலைநண்பர்கள் தமது வலைப்பக்கத்தில் எடுத்து மறுபதிவு இட்டு, இந்த இணைப்பையும் தந்து போட்டியில் அதிகபட்சப் பதிவர்கள் பங்கேற்க உதவ வேண்டுகிறோம்.

(2) விழாவில் வெளியிடவுள்ள “தமிழ்வலைப்பதிவர் கையேடு-2015”விவரத்தை உங்கள் முகநூல் நண்பர்களிடம் தெரிவித்து, அவர்களை வலைப்பக்கம் தொடங்கி எழுதுமாறு ஒரு வேண்டுகோள் விடுக்கவும் வேண்டுகிறோம்.

(3) அப்புறமென்ன? போட்டியில் கலந்துகொண்டு கலக்குங்கள்... அப்படியே (11-10-2015 ஞாயிறு) புதுக்கோட்டை வர ஏற்பாடுகளையும் செய்துவிடுங்கள்!

(4) எல்லாவற்றுக்கும் விழாக்குழுவின் இந்த வலைப்பக்கம் தினமும் வாருங்கள் - http://bloggersmeet2015.blogspot.com

(5) உங்கள் மின்-நண்பர்களுக்கு தொகுப்பு மின்னஞ்சல் வழியாகவும், முகநூல்,சுட்டுரை, கூகுள்+ வழியாகவும் நமது விழாப் பற்றிய இவ் வலைப்பக்கத்தை இணைப்புத் தந்து அனைவர்க்கும் அறிமுகப்படுத்தி வாருங்கள்..! இணையத் தமிழால் இணைவோம்.

மேற்கண்ட தகவல்கள் கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்களின் பக்கத்தில் இருந்தும், வலைப்பதிவர் சந்திப்பு - 2015  பக்கத்தில் இருந்தும் எடுத்து இங்கு பகிரப் பட்டுள்ளன.