blank'/> muhilneel: அன்பின் உருவம் அன்னை

Tuesday, July 7, 2015

அன்பின் உருவம் அன்னை

 
நன்றி, புகைப்படம் இணையத்திலிருந்து  எடுக்கப்பட்டது.


இந்த உலகில் புதிதாய் ஒவ்வோர் உயிரும் ஜனிக்கும் வேளையில் ஓர் அன்னையின் ஜனனமும் நிகழ்கிறது. நாம் இந்த மண்ணில் வாழும் காலத்தில் நமக்கு எத்தனை எத்தனையோ உறவுகள் கிடைக்கலாம்.  இவ்வுலகில் நமக்கான முதல் உறவு – நம் தாய். அன்னைக்கு அடுத்தபடியாக நமக்கு இருக்கும் உறவுகள் அனைத்தையும் நமக்கு அறிமுகம் செய்பவர் நம் அன்னையே.

இவ்வுலகில் தான் படைத்த அனைத்து ஜீவரசிகளுக்கும் தானே துணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இறைவன் உருவாக்கிய படைப்பே “தாய்”. இறைவனது படைப்பில், உலகில் தன்னலம் கருதாத படைப்பாக்கம் ஒன்று இருக்குமாயின், அவரே “அன்னை”.

அம்மா என்ற வார்த்தையில் இருக்கும் மூன்று எழுத்துகள்,

“ அ “ – உயிரெழுத்து , கருவிற்கு உயிர் கொடுக்கிறார் அன்னை.

“ ம் “ – மெய்யெழுத்து , உயிர் கொடுத்த கருவிற்கு தனது மெய்யில் இடம் கொடுக்கிறார்.

“ மா “ – உயிர் மெய்யெழுத்து , தான் உருவாக்கிய கருவுக்கு உயிரும் மெய்யும் கொடுத்து, உலகின் வெளிச்சத்தை காண வழிகாட்டுகிறார்.

இந்த தத்துவத்தின் அடிப்படையில் உருவான சொல்லே “அம்மா”.

நமக்கான அனைத்துத் தேவைகளையும் பார்த்துப் பார்த்து செய்து, நாம் மேற்கொள்ளும் ஒவ்வோர் முயற்சியிலும் நமக்கு ஊக்கம் அளித்து, நம் வெற்றிகளில் நம்முடன் குதூகலித்து, அதே வேலையில் நாம் பெற்ற வெற்றியின் தாக்கம் நம்மை நிலைகொள்ளாது, கீழே தள்ளிவிடும் நிலையில் நாம் இருந்தாலும், அதை நமக்கு உணர்த்தி பாதுகாப்பவர். தோல்வியிலும் துவண்டு விடாது தோள் கொடுத்து நல்லதோர் தோழியாய், துணை நிற்பார் நம் அன்னையே.

தன் மனையாளுக்கு உற்ற துணையாய், பிள்ளை வளர்ப்பில் தன் பங்கென்பது, பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து, அறிவுரை கூறுவதோடு தன் கடமை முடிந்து விட்டதாக எண்ணாது, தன் பிள்ளைகட்காய், தன் மனையாளுடன் அடுக்களை உதவி முதல் துவங்கி, பிள்ளைகட்கு உணவூட்டி, சீருடை அணிவித்து, தலை வாரி, காலணி அணிவித்து, பிள்ளையின் புத்தகச் சுமையை தான் சுமந்து, பள்ளி வாசல் வரை சென்று விட்டு வரும் ஒவ்வோர் தந்தையும் தாயுமானவரே.

கணவரது ஒவ்வோர் முயற்சியிலும் உற்ற துணையாய், பக்க பலமாய் நின்று ஊக்குவிப்பதோடு, தன் பங்கிற்கு தன்னாலான வரையில் பொருளீட்டி, சேமித்து, சிக்கனத்துடன் குடும்பம் நட்த்தும் ஒவ்வோர் அன்னையும் தந்தையுமானவரே.  அன்னையின் அஞ்சறைப் பெட்டியில், சிறுகச் சிறுக சேமித்த சில்லரைக் காசுகளும் சமயங்களில், எதிர்பாரா பெரும் செலவுகட்கும் கூட கைகொடுக்கும். அஞ்சறைப் பெட்டிகளில் சுவையும் மணமும் மட்டுமல்ல, சமயங்களில், அவை உண்டியலாகவும் மாறி, நம் அவசரத் தேவைக்கு உறுதுணையாய் நிற்கும்.

ஐயிரு திங்கள் மடிசுமந்து, பிள்ளைக்கு தன் உதிரத்தையே பாலாக்கி, உணவு, உறக்கம் என்பதையெல்லாம் மறந்து, தன் பிள்ளையே உலகமென, அவர்தம் நலனே தலையாயதாக எண்ணி பெண்டிர் செய்யும் பல தியாகங்கள், இன்றளவும் நம் சமூகத்தில், அது பெண்ணுக்கு மட்டுமே உரித்தான கடமையாக சித்தரிக்கப்படுகிறது. பல வேளைகளில், ஒரு தாயின் கஷ்டம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளப் படுவதில்லை.

தன் உதிரத்தை பாலாக்கி, நமக்கு ஊட்டும் நம் தாய், தன் உதிரத்தை வியர்வையாக்கி நமக்காய் உழைக்கும் நம் தந்தை என, அம்மை அப்பன் இருவருமே தாயுமானவர்களே.


“ தாயிற் சிறந்த கோயிலுமில்லை

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை “
இந்த உயர் சிந்தனையை நாம் எந்நாளும் மனதில் கொள்ள வேண்டும்.
ஒரு குழந்தைக்கு பாலூட்டி, சீராட்டி வளர்ப்பதோடு ஒரு தாயின் கடமை முடிந்து விடுவதில்லை. அந்தக் குழந்தை வளர வளர, அதன் வாழ்க்கையின் ஒவ்வோர் நிலையிலும், ஊக்கம் அளித்து, உற்சாகம் ஊட்டி, உறுதுணையாய் நிற்பார்  அன்னை. பிள்ளைக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்க, ஓர் தாய் பெரிய பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. அவர் பெற்ற அனுபவங்களே நமக்கோர் பல்கலைக்கழகமாக திகழும்.

அன்னை தன் கிள்ளைக்கு உணவூட்டும் போது சொல்லும் கதைகளின் உதவியுடன், இரண்டு கை உணவு அதிகமாக உள்ளே செல்கிறது. அத்தோடு மட்டுமல்லாமல், நல்ல எண்ணங்களும் சிந்தனைகளும் மனதில் பதிகிறது. அதே போல், உறங்குகையில் தாய் சொல்லச் சொல்ல “ உம்…உம்…” என்று சொல்லியபடியே கதை கேட்டு உறங்கும் குழந்தை நல்ல கற்பனை சக்தியுடன், எதையும் தெளிவாக விளக்கமாக விவரிக்கும் தன்மை உடையவராய் விளங்கும்.

நமக்காக நாளெலாம் பார்த்துப் பார்த்து செய்யும் அன்னையின் பெருமையை எண்ணிப் பார்க்க, கொண்டாட, வாழ்த்த வருடத்தில் ஒரு நாள் மட்டும் போதுமா ? 


சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அன்னைக்கு நன்றி சொல்வோம். அன்னையின் கரம் பற்றி அன்புடனும் அனுசரனையுடனும் நடந்து கொள்வோம்.நமக்காக மூன்று வேளையும் உணவு பரிமாறி, நாம் உண்ணும் வரை அருகே இருந்து, நாம் உண்ட திருப்தியில் மனம் மகிழும் அன்னைக்கு ஒருநாள் உணவு பரிமாறி, நாமும் மகிழ்ந்து அவரையும் மகிழ்விப்போம்.
 


  அன்னையை போற்றுவோம். அன்னையின் அன்பில் நம் வாழ்வு நலமும் வளமும் அடையும்.


குறிப்பு:
இக்கட்டுரை தமிழ்க் குடில் நடத்திய அன்னையர் தின கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அன்னைக்கு ஈடுயிணை ஏது...? சிறப்பான கட்டுரை...

வாழ்த்துகள்... பாராட்டுகள்...

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த தளம் ஏன் தமிழ்மணத்தில் இணைக்கவில்லை...?

dindiguldhanabalan@yahoo.com / 9944345233

Tamizhmuhil Prakasam said...

@ திண்டுக்கல் தனபாலன்

நன்றி ஐயா.

தமிழ் மணத்தில் இணைக்க இயலவில்லை ஐயா. ஆங்கிலத்திலும் பதிவுகள் இருப்பதால் தளம் தமிழ்மணத்தில் ஏற்கப்படவில்லை ஐயா.

Tamizhmuhil Prakasam said...

@ திண்டுக்கல் தனபாலன்

மீண்டும் இப்போது முயற்சித்துள்ளேன் ஐயா. ஏற்றுக் கொள்ளப் படுகிறதா என்று பார்க்கலாம்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அன்னைக்கு எதுவும் நிகராகது... நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Tamizhmuhil Prakasam said...

மிக்க நன்றி சகோதரரே.

Post a Comment