blank'/> muhilneel: நெஞ்சில் முள்

Saturday, July 18, 2015

நெஞ்சில் முள்


வெளியில் ஆளே விறைத்து விடும் அளவுக்கு குளிர். குளிருக்கான ஆடைகளான கம்பளி அங்கி, தொப்பி என அனைத்தையும் மாட்டிக் கொண்டு, கதவைத் திறந்தார் எழிலரசி.  காலையில் வாசலை தெளித்து, கோலம் போட்டால் தான் எழிலரசிக்கு அன்றைய பொழுது தொடங்கியதாக அர்த்தம்.

ஊரில் இருக்கும் வரை, அன்றாடம் காலையில் வீட்டு வாசலில் சாணம் தெளித்து, கோலம் போட்டு, வண்ணப் பொடி கொண்டு  அழகாக வண்ணம் தீட்டி, பண்டிகை காலங்களில் வாசல் தொடங்கி வீதி வரை  வண்ணக் கோலம் போட்டு பழகிய  எழிலரசிக்கு அமெரிக்கா வந்த புதிதில், அடுக்கு மாடிக் குடியிருப்பில், சிறிய வாசலில் எப்படி கோலம் போடுவது என்ற யோசனையே மேலோங்கியது.  

அரிசியை சற்று நெருநெருவென்று அரைத்து அதை வைத்து கோலம் போட்டு வாசலை அலங்கரித்து விடுவார். இவரது கோலம் போடும் ஆர்வத்தை கடும் குளிரும் கலைத்து விடவில்லை.பண்டிகை காலங்களிலும், வண்ணக் கோலங்கள் வாசலை நிச்சயம் அலங்கரித்திருக்கும். அரிசி மாவுடன் மஞ்சள் தூள் மற்றும் உணவில் கலக்கக் கூடிய வண்ண திரவங்களை (food coloring)   கலந்து வண்ண பொடிகள் செய்வார்.

பெரிய கோலமாக போட முடியாவிட்டாலும், வாசலுக்கு அளவாக,  சிறியதாக சிக்குக் கோலங்களும், கோட்டுக் கோலங்களும் போடுவார். பூஜைக்கென்று தனி அறை இல்லாது போனாலும், சமையலறையில் தெய்வத்திற்கென்று சிறு இடம் ஒதுக்கி, படங்களை அடுக்கி வைத்து, கோலம் போட்டு நாளும் பூஜை செய்வார்.

கதவு திறக்கும் சப்தம் கேட்டு  இனியா தூக்கம் கலைந்து எழுந்து வந்தாள். அம்மா வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருப்பதைக் கண்டதும்,

" ஓ ! அம்மா ! வெளியில விறைக்குற அளவுக்கு குளிர் அடிக்குது. எதுக்காக இந்த குளிரிலேயும் கோலம் போடறீங்க ? சீக்கிரமா உள்ள வாங்க ! " அக்கறையுடன் அன்னையிடம் கூறினாள் இனியா.

கோலம் போட்டுவிட்டு உள்ளே வந்த எழிலரசி,
“ அப்பப்பா ! பயங்கர குளிர் ! “ என்றவாறு கம்பளியை இழுத்துப் போர்த்திக் கொண்டார்.

“ இந்தக் குளிர்ல எதுக்காக கோலம் போட வெளியில போறீங்க ? “ அக்கறையுடன் கோபித்துக் கொண்டாள் இனியா.

“கோலம் போடுறதுக்கு முக்கிய காரணம், அரிசி மாவுல கோலம் போட்டா, அதை எறும்பு சாப்பிடும். இதனால, ஒரு சின்ன உயிருக்காவது இன்னைக்கு சாப்பிடறதுக்கு வழி பண்ணுன திருப்தி “

“அது மட்டுமில்ல. குனிஞ்சு கோலம் போடுறது நல்ல உடற்பயிற்சியும் கூட “ என்று விளக்கமளித்தார் எழிலரசி.

சற்று நேரம் யோசித்த இனியா, “ பிறகு எதுக்காக அம்மா, வீட்டுக்குள்ள எறும்பு வந்துட்டா உடனே மருந்தடிக்க பெஸ்ட் கன்ட்ரோல் (Pest Control) கூப்பிடறீங்க ? எறும்பு சாப்பிட்டுட்டு போகட்டும் அப்படின்னு விட்டுடலாமே ? அது எவ்வளவு சாப்பிட்டுடப் போகுது ? என்றாள்.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார் எழிலரசி.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சரியான கேள்வி...

Tamizhmuhil Prakasam said...

தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றிகள் ஐயா.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
நல்ல கதை அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Tamizhmuhil Prakasam said...

மிக்க நன்றி சகோதரரே.

Post a Comment