blank'/> muhilneel: அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...

Tuesday, April 14, 2015

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...



        “ டிங் ! டிங் ! டிங் ! “  பள்ளிக்கூட மணி ஓசை கேட்டதும்,  அதுவரை பேச்சும் சிரிப்பும், கூச்சலும் கும்மாளமுமாய் விளையாடிக் கொண்டிருந்த சிறார் கூட்டம், “கா ! கா ! “ என்ற குரல் கேட்டதும் தம் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்ள பறந்தோடி வரும் காக்கை இனத்தைப் போல, தம் அறிவுப் பசியைத் தீர்த்துக் கொள்ள தத்தம் வகுப்பறை நோக்கி ஓடினர்.

      அன்று முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி துவங்கியது. விடுமுறையில் சுற்றுலா சென்று வந்த இனிய நினைவுகள், அங்கு தாங்கள் கண்ட பல புதிய விஷயங்கள், உறவினர்களை சந்தித்த மகிழ்ச்சியான தருணங்கள், சிறாருடன் கோலி, பம்பரம், பட்டம் என ஆசை தீர நாளெல்லாம் விளையாடிய நினைவுகள், கோயில் திருவிழா மகிழ்வலைகள் என்று தத்தமது இன்ப தருணங்களை நண்பர்களுடன் பகிர்ந்தவாறு சிறார் சலசலத்துக் கொண்டிருந்தனர்.
 
  முதல் இருக்கையில் கண்மணியும் வள்ளியும் அருகருகே அமர்ந்திருந்தனர். கண்மணியின் கையில் புதிதாய் ஒரு கடிகாரம். நடுவில் வாத்து பொம்மையின் முகம். அதைத் திறந்தால், உள்ளே அழகான கடிகாரம். அதைக் கண்டதும் வள்ளிக்கு மிகவும் பிடித்துப் போனது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அதை தொட்டுப் பார்த்துக் கொண்டாள். வள்ளி அதை தொட்டுப் பார்க்கும் போதெல்லாம் மெல்லியதாய் ஒரு புன்முறுவலுடன் வள்ளியை பார்ப்பாள் கண்மணி. சமயங்களில், ஆசிரியர் பாடம் நடத்தும் போதும், வள்ளியின் கவனம் கடிகாரத்தின் மீதே சென்றது. சிரமப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள் வள்ளி. 

      உணவு இடைவேளையின் போது, கண்மணி வள்ளியிடம்,
“ வள்ளி ! இந்தா புள்ள, நீ இந்த கடிகாரத்தை கொஞ்ச நேரம் கட்டிக்கோ. உனக்கு இது ரொம்ப புடிச்சிருக்குன்னு எனக்கு தெரியும். நான் சாயங்காலம் பள்ளிக்கூடம் முடிஞ்சு போகையிலே வாங்கிக்கறேன் “ என்றாள்.

   ஆனால் வள்ளியோ, அவசரமாக “ ஐயோ ! வேணாம் புள்ள ! அது விலை உசந்ததா இருக்கும் போல இருக்கு. நான் ஏதாச்சும் தெரியாம உடைச்சோ, பழுதாக்கியோ வெச்சுட்டேன்னா, நீ வீட்டுல திட்டு வாங்குவ. என்னால புதுசா வாங்கியும் தர முடியாது” என்று மறுத்தாள்.

  மாலையில் வீடு திரும்பியதும், அன்று பள்ளியில் நடந்தவை ஒன்று கூட விடாமல் தன் தாய் தகப்பனிடம் கூறிக் கொண்டிருந்தாள்.

“ ஐயா, இன்னைக்கு அந்த காரை வீட்டுப் பிள்ளை கண்மணி இல்ல, அது புதுசா ஒரு கடிகாரம் கட்டியிருந்தது. பாக்கவே ரொம்ப அழகா இருந்துச்சு. வாத்து பொம்மை போட்ட கடியாரம் அது. அந்த பொம்மை மொகம் மூடி மாதிரி இருந்துச்சு. அந்த மூடிய திறந்ததும் உள்ள அழகா கடிகாரம். நம்ம வீட்டுல இருக்குற கடியாரத்துல இருக்கற மாதிரி முள் எல்லாம் இல்ல. அதுல மணி அப்படியே வந்துச்சு. அதுல இருக்குற பட்டன அமுக்குனா கீ ! கீ !  சத்தம் கூட வந்துச்சு. அத அப்படியே பாத்துட்டே இருக்கலாம் போல இருந்துச்சு. அந்த பிள்ளை என்னைய  அந்த கடியாரத்தை கட்டிப் பாக்க சொன்னுச்சு. ஆனா, நாந்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்றாள் வள்ளி.

  கடிகார நினைவுகளோடே உறங்கியும் போனாள். கனவிலும் அதே கடிகாரம் வந்து மகிழ்வூட்டியது. “ அழகா இருக்கு புள்ள. விலை உசந்ததா இருக்கும் போல. பத்திரமா வெச்சுக்கோ “ என்று தூக்கத்தில் பேசிக் கொண்டாள். மகளின் பேச்சைக் கேட்டு பெற்றோரும் புன்முறுவல் பூத்தனர்.

   அடுத்த நாள் பள்ளிக்கூடம் முடிந்து, வீட்டிற்கு வந்த வள்ளி, பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். வீதியில் “ ஜிங் ! ஜிங் !” என்ற ஒலி. வாசலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வள்ளியின் தந்தை, 

   “ அம்மாடி வள்ளி ! இங்க வா தாயீ !  என்று அழைத்தார். “ அதோ ! அங்கன போற ஜவ்வு மிட்டாய்க்காரரை கூப்பிடு ! “ என்றார்.

வாசலுக்கு ஓடி வந்த வள்ளி, ஜவ்வு மிட்டாய்க்காரரை கூப்பிட, வள்ளியின் தந்தை “ அப்பா ! ஒரு கடியாரம் செஞ்சு குடுப்பா !” என்றார்.
வள்ளிக்கு அவர் வைத்திருந்த பெரிய கழியின் உச்சியில் அழகாக சிங்காரம் செய்யப்பட்டு, காதுகளில் ஜிமிக்கி, கைகளில் வளையல், கழுத்தில் சங்கிலி அணிந்து, இரண்டு கைகளையும் ஜால்ரா போல சேர்த்து “ஜிங் ! ஜிங் ! “ என்று தட்டிக் கொண்டிருக்கும் பொம்மையை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது. பொம்மையின் அடியில், கழியில் ரோஸ் மற்றும் வெள்ளை நிறக் கலவையுடன் ஜவ்வு மிட்டாய். ஜரிகைக் காகிதம் சுற்றப் பட்டு இருந்த அந்த ஜவ்வு மிட்டாயிலிருந்து கொஞ்சம் எடுத்து அதை இழுத்து, வளைத்து, உருட்டி அழகான கைக்கடிகாரமாக மாற்றிக் கொடுத்தார் அந்த ஜவ்வு மிட்டய்க்காரர். சிறிது மிட்டாயை எடுத்து மோதிரமாக மாற்றி விரலில் அணிவித்து விட்டு, இன்னும் கொஞ்சம் எடுத்து அவளது கன்னத்திலும் ஒட்டி விட்டார். வள்ளிக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

“ ஐயா ! இன்னொரு மயில் மிட்டாய் செஞ்சு வாங்கிக்கவா ? “ என்று ஆசை ஆசையாய் கேட்டாள் வள்ளி.

“ யாருக்கு தாயீ ? “

“ என் கூட படிக்கிற கண்மணிக்கு !” 

“சரி , வாங்கிக்கோ ! “ என்றபடி

“இன்னொன்னு செஞ்சு குடுத்துருப்பா “ என்றார் வள்ளியின் தகப்பனார்.
அதை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டாள் வள்ளி.

“அம்மாடி ! இப்போதைக்கு இந்த கடியார மிட்டாய வெச்சுக்கோ. இன்னும் செத்த நாள் பொறுத்து ஐயா உனக்கு நிஜ கடியாரமே வாங்கித் தாரேன் “ என்றார்.

மகிழ்ச்சியுடன் “ சரி ஐயா “ என்றவாறு குதித்தோடினாள் வள்ளி.

அடுத்த நாள் பள்ளிக்கு செல்கையில், மறவாமல் ஜவ்வு மிட்டாய் வைத்திருந்த தூக்கினை எடுத்துக் கொண்டாள்.

கண்மணியும் தன் தந்தை தனக்காக இருவேறு நிறங்களில் வாங்கிக் கொடுத்திருந்த கைகடிகாரங்களில், ஒன்றை தனக்கென வைத்துக் கொண்டு மற்றொன்றை ஆசைப்பட்டு கேட்ட தன் தோழிக்கு கொடுக்கப் போவதாய் சொல்லி தந்தையிடம் அனுமதி பெற்று வாங்கி வந்தாள். 

“ அன்பிற்கும் உண்டோ,  அடைக்கும் தாழ் “

குறிப்பு :

இக்கதை நண்பர் கோவை ஆவி அவர்கள் நடத்திய
வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை - குறும்பட- சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெற்றது.






7 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்தச்சிறுகதை மிகவும் அழகாகவும் சிம்பிளாகவும் பாஸிடிவ் ஆகவும் எழுதப்பட்டுள்ளது.

//இக்கதை நண்பர் கோவை ஆவி அவர்கள் நடத்திய வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை - குறும்பட- சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெற்றது.//

மிக்க மகிழ்ச்சி. மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

பகிர்வுக்கு நன்றிகள். மேலும் பல வெற்றிகள் கிட்டவும் என் வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் மகிழ்ச்சி...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழ்மணம் பட்டை என்னவாயிற்று...?

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

கதை மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Tamizhmuhil Prakasam said...

@ வை.கோபாலகிருஷ்ணன்
நன்றி ஐயா.

Tamizhmuhil Prakasam said...

@ திண்டுக்கல் தனபாலன்
நன்றி ஐயா.

தங்களது அன்பான புத்தாண்டு வாழ்த்துகட்கு நன்றிகள் பல.

ஆங்கிலத்திலும் எழுதுவதால் தமிழ் மணம் இணைப்பதில் சிக்கல்.

Tamizhmuhil Prakasam said...

@ ரூபன்

நன்றி சகோ.
தங்களது அன்பான புத்தாண்டு வாழ்த்துகட்கு நன்றிகள் பல.

Post a Comment