blank'/> muhilneel: தாயுமானவள் - சிறுகதைக்கான விமர்சனம்

Sunday, October 26, 2014

தாயுமானவள் - சிறுகதைக்கான விமர்சனம்


’தாயுமானவள் ’

சிறுகதைத்தொடர்

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-





திருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டரைத்தெரு மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேர்த்திருவிழா. மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மலையைச் சுற்றியுள்ள நான்கு பெரிய வீதிகளிலும், மழை பெய்ததுபோல, வாடகைக்கு எடுத்த முனிசிபல் லாரிகள் மூலம் காவிரி நீர் பீய்ச்சப்பட்டு, கலர் கலராகக் கோலங்கள் போடப்பட்டுள்ளன.   

  

 


ஆங்காங்கே மாவிலைத் தோரணங்களுடன் தண்ணீர் பந்தல்கள். பானகம், நீர்மோர், உப்புடன் பாசிப்பருப்பு கலந்த வெள்ளரிப் பிஞ்சுக்கலவை என ஏதேதோ பக்தர்களுக்கும், பசித்துக்களைத்து வருபவர்களுக்கும் இலவச விநியோகங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 


வடக்கு ஆண்டார் தெருவின் மேற்கு மூலையில், தெருவோரமாக உள்ள அரசமரப் பிள்ளையார் கோயில் வாசலில், பெரிய பெரிய அண்டாக்களிலும், குண்டான்களிலும், கஞ்சி காய்ச்சப்பட்டும், இனிய சர்க்கரைப்பொங்கல், தயிர்சாதம் முதலியன தயாரிக்கப்பட்டும் ஏழைபாழைகளுக்கு அன்னதானம் செய்ய ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

 


வேப்பிலைக்கொத்துடன் தீச்சட்டிகளைக் கையில் ஏந்தி, மஞ்சள் நிற ஆடையணிந்து மாலையணிந்த மங்கையர்க் கூட்டத்துடன், மேள தாளங்கள், கரகாட்டம், காவடியாட்டம், வாண வேடிக்கைகள் என அந்தப்பகுதியே கோலாகலமாக உள்ளது. எங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக! 

 


 



 


முனியாண்டி தன் தொழிலில் மும்முரமாக இருக்கும் நேரம். அவனைச்சுற்றி ஒரே மழலைகள்கூட்டம். கையில் நீண்ட மூங்கில் பட்டைக் கிளைகளுடன், கூடிய பெரியதொரு குச்சி. அதில் ஆங்காங்கே தொங்கவிடப்பட்டுள்ள கலர் கலர் பலூன்கள். கூலிங் க்ளாஸ் கண்ணாடிகள், விசில்கள், நீர் நிரம்பிய பலூன் பந்துகள், ஊதினால் மகுடிபோல் ஆகி குழந்தை அழுவதுபோல சப்தமெழுப்பி பிறகு ஓயும் பலூன்கள், ஆப்பிள், பறங்கி, பூசணி, புடலங்காய் போன்ற பல்வேறு வடிவங்களில் பலவிதமான கலர்களில் பலூன்கள் பார்ப்பவரைப் பரவசப்படுத்தும் விதமாக. அவனைச் சுற்றி நின்ற குழந்தைகளுக்கோ ஒரே குதூகலம். 


முனியாண்டியின் உள்ளத்தில் ஓர் உவகை.    இன்று எப்படியும் மாரியம்மன் அருளால் முன்னூறு ரூபாய் சம்பாதித்தே ஆக வேண்டும். டாக்டர் சொன்ன தொகை மூவாயிரத்துக்கு இந்த முன்னூறு மட்டுமே பாக்கி. கடந்த மூன்று வருடங்களாக நினைத்து ஏங்கிய ஒரு காரியம் நிறைவேறப்போகிறது. மனைவி மரகதத்தை எப்படியும் மகிழ்விக்க வேண்டியது அவன் கடமை.
காலையிலிருந்து நாஸ்தா செய்யக்கூட நேரமில்லை முனியாண்டிக்கு. நாக்கு வரண்டு விட்டது.  நீர் மோரை ஒரு குவளையில் வாங்கி ஒரே மடக்காகக் குடித்துவிட்டு, பலூன்களை ஊதுவதும், ஊதியவற்றைக் கயிறு போட்டுக்கட்டுவதும், கேட்பவர்களுக்குக் கேட்பவற்றை எடுத்துக்கொடுத்து வியாபாரம் செய்வதும், காசை வாங்கி ஜோல்னாப்பையில் போடுவதும் என அவனின் பத்து விரல்களும் பத்துவிதமான பணிகள் செய்து வந்தன.

இத்தகையத்  தேர்திருவிழாக்களில், முனியாண்டியைச் சுற்றி எப்போதும் குழந்தைகளின் கூட்டம்.  ஆனாலும் தனக்கென இதுவரை ஒரு வாரிசு உருவாகவில்லையே என்ற ஏக்கம் உண்டு முனியாண்டிக்கு. திருமணம் ஆகி விளையாட்டுப்போல ஏழு ஆண்டுகள் உருண்டோடிப் போய் விட்டன.

மரகதமும் தன்னால் முடிந்த கூலி வேலைகளுக்குப்போய், சம்பாதித்து வரும் அன்பான அனுசரணையான மனைவி தான்.  முனியாண்டியும் மரகதமும் மனம் ஒத்த மகிழ்வான தம்பதிகளே. கஞ்சியோ கூழோ இன்பமாகப் பகிர்ந்துண்டு, கடன் ஏதும் இல்லாமல் காலம் தள்ளிவரும் ஜோடிகளே. காவிரிக்கரையோரம் ரயில்வே லைனை ஒட்டிய ஒரு சற்றே பெரிய குடிசை வீடு, அதுவே அவர்கள் இன்பமுடன் இல்லறம் நடத்தி வரும் அரண்மனை.  
திடீரென்று அடுத்தடுத்து பெரிய வேட்டுச்சத்தங்கள். குழந்தைகள் அனைவரும், தங்கள் காதைப்பொத்திக்கொண்டு, பலூன்களைக் கையில் பிடித்துக்கொண்டு, இங்கும் அங்கும் ஓடுகிறார்கள்.


 



போலீஸ்காரர்கள் கையில் தடியுடன் நடுரோட்டில் யாரும் நிற்காதபடி கூட்டத்தை ஒழுங்கு படுத்தி வருகின்றனர். முனியாண்டியும் ரோட்டின் ஒரு ஓரத்திற்குத் தள்ளப்படுகிறான். கூட்ட நெரிசலில் இரண்டு மூன்று பலூன்கள் பட்பட்டென வெடித்துச் சிதறுகின்றன. 
தேரில் அம்மன் தெருமுனைக்கு வந்து கொண்டிருக்கிறாள். ஆண்களும் பெண்களும் போட்டிபோட்டுக்கொண்டு தேர் வடத்தை எப்படியாவது தொட்டுக்கும்பிட முண்டியடித்து வருகின்றனர். 
அர்ச்சனை சாமான்களுடன் அலைமோதும் பக்தர்கள் முன்னுரிமை எடுத்துக்கொண்டு தேரின் நடுவே நெருங்க, கையில் அதை அப்படியே வாங்கி தேங்காயை மட்டும் தன் கை அரிவாளால் ஒரே போடு போட்டு குருக்கள் அவர்களிடம் எம்பியபடி அனுப்பி வைக்க ஒருசிலர் தேரில் தொங்கிக்கொண்டிருந்தனர். கட்டிக்கட்டியாக சூடம் அம்மனுக்குக் கொளுத்திய வண்ணமாக இருந்தனர். மிக முக்கியமான தெரு முனையானதால் தேர் நகரவே மிகவும் தாமதம் ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே. 
வியர்த்துக்கொட்டும் மேனியுடன் தேர் இழுக்கும் ஆட்களில் சிலர், கும்பலாக வீடுகளுக்குள் புகுந்து, தண்ணீர் வாங்கியும், ஆங்காங்கே உள்ள ஒரு சில கிணறுகளில் தண்ணீர் இழுத்து மொண்டும், தங்கள் தலைகளில் ஊற்றிக்கொண்டு, வெளிச்சூட்டைத் தணித்துக்கொள்கின்றனர். வறுமைப்பிடியிலுள்ள கடும் உழைப்பாளிகளான அவர்களின் மனதில் உள்ள உள்சூடு எப்போது தான் தணியுமோ? அது அந்த மாரியம்மனுக்கே வெளிச்சம்.  
”பலூன்காரரே! இந்தப்பாப்பாவைக்கொஞ்சம் பார்த்துக்கோ! பத்தே நிமிடத்தில் தேரிலுள்ள அம்மனைச்சற்று அருகில் சென்று கும்பிட்டுவிட்டு ஓடியாறேன்”  என்று மின்னல் வேகத்தில் சொல்லிச்சென்ற கைலிக்காரனின் முகம் கூட மனதில் சரியாகப்பதியவில்லை முனியாண்டிக்கு.

குழந்தை முகம் மட்டும் பளிச்சென்று, அந்த அம்மனே தேரிலிருந்து இறங்கி நேரில் வந்தது போல இருந்தது.

நல்ல அழுக்கேறிய ஒரு ஆடை [கெளன்] ; கையில் மட்டும் ஒருசில ரப்பர் வளைகள்; காதுகளிலிருந்து தொங்கட்டான்கள் கழட்டப்பட்டதற்கு அடையாளம் போல வெறும் ஓட்டைகள்; காலில் மிகவும் அழுக்கேறிய செருப்புகள். கொலுசுகள் முன்பு ஒரு நாள் போடப்பட்டிருக்கும் என்பதை யூகம் செய்ய ஒருசில சுவடுகள். சிடுக்கும் சிக்குமாக பலநாட்களாக எண்ணெயே பார்த்திராத தலைமுடி. இரட்டைப்பின்னல் இட்டதற்கான அறிகுறிகள்.

பெரிய பலூன் ஒன்றை ஊதி அந்தப்பெண் குழந்தையின் கையில் கொடுத்தான் முனியாண்டி. சிறிய புன்னகையுடன் “தாங்க்யூ அங்கிள்” என்று சொன்ன அந்தக்குழந்தை, ”ரொம்பவும் பசிக்குது அங்கிள்” என்றது.



  


”கொஞ்சம் பொறுத்துக்கும்மா, இப்போ அப்பா வந்துடுவாரு” என்றான் முனியாண்டி.
”அப்பாவும் அம்மாவும் தான் செத்துப்போய்ட்டாங்களாமே! எப்படி இப்போ வருவாங்க? என்றது அந்தப்பெண்குழந்தை.
அதைக்கேட்ட முனியாண்டிக்குத் தலை சுற்றியது.
”உங்க வீடு எங்கம்மா இருக்கு” என்றான்.
”நாகப்பத்திணம். (நாகைப்பட்டிணம் என்பதை மழலையில் சொல்கிறது) நான் ஸ்கூல் விட்டு ஆட்டோவில் திரும்ப வீட்டுக்கு வருவதற்குள் அப்பாவையும் அம்மாவையும் சுனாமின்னு ஒரு Sea Water [கடல் தண்ணீ ] வந்து அடிச்சுட்டுப் போய்ட்டதாச் சொன்னாங்க” குழந்தை கண்கலங்கியவாறு சொல்லியது.
”இப்போது கூட்டியாந்த மாமா யாரும்மா” முனியாண்டி அவள் கண்களை தன் வேட்டித் தலைப்பால் துடைத்து விட்டு, பரிவுடன் வினவினான்.
”அவரு யாருன்னு எனக்குத்தெரியாது அங்கிள்; அவரு தான் எங்க ஊர்லேந்து என்னை பஸ்ஸிலே கூட்டியாந்து இங்கே உங்கள்ட்டே விட்டுட்டுப் போய்ட்டாரு. ராத்திரி பஸ்ஸிலே வரும்போதே பசிக்குதுன்னு சொன்னேன். சாப்பிட எதுவுமே வாங்கித்தராம பயமுறுத்திக்கிட்டே வந்தாரு. அவரு வெரி வெரி பேடு [BAD] அங்கிள்” என்றது அந்தப்பெண் குழந்தை.
சுமார் மூன்று வயதுக்குழந்தை பசியால் அழுதது முனியாண்டியின் வயிற்றைப் பிசைந்தது. 
தேர் நின்றுகொண்டிருந்த முச்சந்தியில் இருந்த “ராமா கஃபே” என்ற ஹோட்டலுக்குக் குழந்தையைக் கூட்டிச்சென்றான்.
சுற்றிமுற்றிப்பார்த்தும், அந்தத் தேர்த்திருவிழாக் கும்பலில் அந்தக் கைலிக்காரனை முனியாண்டியால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.
சூடான சுவையான இரண்டு இட்லிகளை மட்டும் சாம்பார் சட்னியில் தோய்த்து சாப்பிட்டுத் தண்ணீர் குடித்த குழந்தையின் முகத்தில் ஓர் புதுப்பொலிவு.
“பலூன் அங்கிள்! யூ ஆர் வெரி குட் ஸ்வீட் அங்கிள்!! தாங்க்யூ வெரி மச்; ஐ லவ் யூ சோ மச்” என்று கூறி அவன் கழுத்தைக்கட்டிக்கொண்டு, கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தது.
முனியாண்டிக்கு இது ஒரு இனம் புரியாத பேரின்பத்தையும், அதே நேரம் இந்தக் குழந்தையை நான் என்ன செய்வது? என்ற கவலையையும் அளித்தது.
அம்மனின் தேர் அந்த முச்சந்தியையும், அந்த ”ராமா கஃபே” ஹோட்டலையும் தாண்டி நகரத்தொடங்கியதில், அந்தப்பகுதியில் சற்றே கூட்டம் குறைந்திருந்தது.
குழந்தையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, தேர் சென்ற திக்கிலேயே, தேரின் பின்புறமாகச் சற்று தள்ளி, தன் வியாபாரத்தையும் கவனித்துக்கொண்டு, அந்தக் கைலிக்காரனையும் தன் கண்களால் தேடிக்கொண்டு, கிரிவலமாகப் புறப்பட்டான் முனியாண்டி.




தன் வயிற்றுப்பசிக்கு, ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த இலவச தண்ணீர்ப் பந்தல்களில் கிடைத்த நீர்மோர், கஞ்சி, குடிநீர் போன்ற ஏதோவொன்றை வாங்கிக்குடித்து வந்தான் முனியாண்டி. 
ஆசையுடன் தன் கையில் பெரிய பலூன் ஒன்றை இறுக்கிப்பிடித்து நடந்து வந்த குழந்தைக்கு, நல்லதொரு ஸ்வீட்டான ”பலூன்அங்கிள்’ கிடைத்து விட்டதில் மட்டில்லா மகிழ்ச்சி.
ஊரு பேரு நாகப்பட்டிணம். தன் பெயரு விஜி, அப்பா பெயரு கோபால், அம்மா பெயரு ராஜி, தாங்க்யூ வெரி மச், வெரி குட், வெரி பேட், ஐ லவ் யூ சோ மச், வெரி ஸ்வீட் முதலியவை தவிர வேறு எந்தத் தகவலும் சொல்லத்தெரியாத மழலையாக இருந்தது அந்தக்குழந்தை.
மதியம் மூன்று மணி. உச்சி வெயில் மண்டையைப் பிளக்கிறது. அம்மன் தேர், உச்சிப்பிள்ளையார் மலைக்கோயிலின் பிரதான நுழைவாயிலைத் தாண்டி,  “சாரதாஸ்” ஜவுளிக்கடலுக்கும், “மங்கள் மங்கள்”  நகைக்கடலுக்கும் இடையே, ஆமை வேகத்தில் நகர்ந்து செல்கிறது.
உச்சிப்பிள்ளையார் மலைக்கோயிலின் பிரதான நுழைவாயிலில் புகுந்து, குழந்தையுடன் மாணிக்க விநாயகர் சந்நதியை அடைந்தான், முனியாண்டி.

 

  


மாணிக்க விநாயகர் சந்நதிக்கு எதிர்புறம் அமைந்துள்ள பெரிய மண்டப நிழலில் சந்தோஷி மாதா படத்தருகே சற்றே அமர்ந்தான். வெளியே அடிக்கும் வெய்யிலுக்கு அந்த இடம் குளிரூட்டப்பட்ட அறை போல மிகக்குளுமையாகவே இருந்தது.
அங்குள்ள குருக்கள் ஐயா ஒருவர் தொன்னையில் சர்க்கரைப்பொங்கல் விநியோகம் செய்து கொண்டிருந்தார். தானும் வாங்கிக்கொண்டு, அந்தக்குழந்தைக்கும் வாங்கிக் கொடுத்தான். பலூன்கள் அனைத்தும் அநேகமாக விற்றுத்தீர்ந்திருந்தன. 
தன் தலைப்பாகைத் துண்டை உதறி விரித்து, குழந்தையை ஒரு தூண் ஓரமாகப்படுக்க வைத்தான். தானும் தன் வியாபாரப்பொருட்களை ஒரு ஓரமாக வைத்து விட்டு அந்தக் குழந்தையின் அருகிலேயே அமர்ந்து கொண்டான்.  
குழந்தை கண் அசந்து தூங்கத்தொடங்கியது. ஆனால் அதன் பிஞ்சு விரல்கள் மட்டும் முனியாண்டியின் சட்டையை இறுக்கமாகப் பற்றியிருந்தது.  அதன் மற்றொரு கையில் வைத்திருந்த மிகப்பெரிய பலூன் கைநழுவி அந்த மிகப்பெரிய கோயில் மண்டபத்தினுள் அடித்த காற்றில், இங்குமங்கும் பறந்து, தனக்குத்தானே விளையாடிக் கொண்டிருந்தது. முனியாண்டியும் உட்கார்ந்திருந்த நிலையிலேயே கண்ணை மூடிக்கொண்டு தூங்க ஆரம்பித்திருந்தான். 




  

குழந்தையின் அருகே உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிக்கொண்டிருந்த முனியாண்டியை, ஐந்து மணி சுமாருக்கு பக்தர் ஒருவர் உடைத்த சதிர் தேங்காய்த்துண்டு ஒன்று தெரித்துத் தட்டி எழுப்பியது. அங்கிருந்த குழாய் நீரில் தன் முகத்தைக்கழுவிய முனியாண்டி, குழந்தையுடன் படிவாசல் பிள்ளையாராகிய மாணிக்க விநாயகரை வணங்கி விட்டு, தெப்பக்குளத்தையும் வலமாகச் சுற்றி வந்து, அப்போது தான் தேரில் நிலைக்கு வந்து சேர்ந்துள்ள வாணப்பட்டரை மாரியம்மனை மிக அருகில் சென்று வணங்கி விட்டு, தன் வீடு நோக்கிப்புறப்பட்டான்.

தெப்பக்குள ரோட்டு ஓரக்கடை ஒன்றில், பேரம் பேசி குழந்தைக்கு மாற்று உடையாக கெளன் ஒன்று வாங்கிக்கொண்டு, தன் அரண்மனையாகிய குடிசைக்குள், குழந்தையுடன் நுழைந்தான்.


சூடாக தோசை சுட்டுக்கொண்டிருந்த மரகதம், குழந்தை ஒன்றுடன் வந்துள்ளத் தன் கணவனை, தன் இரு புருவங்களையும் உயர்த்தி ஒரு பார்வை பார்க்கும் போதே, குழந்தை விஜியோ “அ..ய்..ய்..யா.....தோசை ! மம்மி .... மம்மி ....  ஸாரி ... ஸாரி ... ஆண்ட்டீ ... ஆண்ட்டீ ... எனக்கு ஒரு தோசை வேணும் .... தருவீங்களா?”  எனச்சொல்லி வெட்கம் கலந்த ஆசையுடன், தன் பிஞ்சு விரல்களைக் குவித்தபடி தன் கையை நீட்டியது.    

குழந்தையை ஒருவித வாஞ்சையுடன் தன் மடியில் அமர்த்திக்கொண்ட மரகதம், தோசையை அதற்கு ஊட்டிக்கொண்டே, அதன் கதை முழுவதையும் முனியாண்டி சொல்லச்சொல்ல கவனத்துடன் கேட்டுக்கொண்டாள்.


ஆசையுடன் தோசை சாப்பிட்டு முடித்த குழந்தையை பாய் ஒன்றைத் தட்டிப்போட்டு படுக்க வைத்தபின், மேற்கொண்டு இந்தக்குழந்தையை நாம் என்ன செய்வது என இருவரும் நெடுநேரம் யோசித்து, தங்களுக்குள் விவாதித்துப் பேசிக்கொண்டிருந்ததில், நள்ளிரவு வெகுநேரம் ஆகிவிட்டது.

காலையில் எழுந்த குழந்தைக்கு உடல் அனலாகக் கொதித்தது. பயத்தில் கை கால்கள் நடுங்கின. அழ ஆரம்பித்தது. முனியாண்டியும், மரகதமும் என்னவெல்லாமோ சொல்லி சமாதானம் செய்ய முயன்றனர்.

“காஃபி, டீ ... ஏதாவது வாங்கி வரட்டா? உனக்கு என்னடாக் கண்ணு வேணும்? ஏன் அழுவறே? என்று பரிவுடன் பரிதவித்துப்போய்க் கேட்டனர். 

”எனக்கு ஒண்ணும் வேணாம். என்னயத்தான் போலீஸ் ஸ்டேஷன்லே கொண்டுபோய் விடப்போறீங்களே! நேத்து ராத்திரி நீங்க பேசிட்டு இருந்தீங்களே! நான் உங்க கூடவே இருக்கேனே .... ப்ளீஸ் ... என்னய நீங்க எங்கேயும் கொண்டுபோய் விட்டுடாதீங்க .... ப்ளீஸ் ... ப்ளீஸ்” எனக்கெஞ்ச ஆரம்பித்தக் குழந்தையின் மேனியும் நடுங்கிக்கொண்டிருந்தது.


குழந்தையை கட்டிப்பிடித்துத் தூக்கிக்கொண்ட மரகதம், “சரி, சரி, நீ எங்களோடேயே இருக்கலாம்டா கண்ணு, உன்னய எங்கேயும் கொண்டுபோய் விடமாட்டோம்டா, நீ சமத்துப்பாப்பா இல்லையா? அழக்கூடாது” என்று சொல்லி தன் புடவைத்தலைப்பால் குழந்தையின் கண்களைத் துடைத்து விட்டு, அள்ளி அணைத்து முத்தமிட்டாள், மரகதம்.
குழந்தைத்தலைக்கு எண்ணெய் தடவி, படிய தலைவாரி, ரிப்பன் கட்டி, புதுச்சொக்கா போட்டு விட்டாள், மரகதம்.

திருவிழாவில் பலூன் விற்ற பணத்தை எண்ணி முடித்த முனியாண்டி, ”செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்ய, அந்த டாக்டரம்மா நம்மிடம் கேட்டிருந்த மூவாயிரம் ரூபாயும் சேர்ந்து விட்டது தாயீ!” என மரகதத்திடம் சொல்லிவிட்டு, எப்போது நாம் டாக்டர் அம்மாவைப் பார்க்கப்போகலாம்?” என வினவினான்.


”இதோ பாருய்யா, மச்சான்! அந்த வாணப்பட்டரை மகமாயீ, மாரியாத்தாளே இந்தப்பச்சப்புள்ளைய, நமக்கே நமக்குத்தான் சொந்தம்னு இந்தத் தேர் திருவிழாவிலே கொடுத்திருக்கும் போது, நமக்கு இப்போ இன்னொரு குழந்தை எதுக்குய்யா வேணும்?; 
இந்தப்புள்ளைய நல்லபடியா வளர்த்து ஆளாக்கினா அதுவே போதுமய்யா! அந்தப்பணத்தை அப்படியே எடுத்துட்டுப் போயீ, பக்கத்துல உள்ள இஸ்கூலிலே, இதை சேர்த்துப்பாங்களான்னு, விசாரித்துட்டு வாய்யா” என்றாள் மரகதம்.

திருச்சி மலைக்கோட்டைத் ”தாயுமானவர்” அருளால், ஒரே நாளில் “தாயுமானவள்” (தாயும்+ஆனவள்) ஆன தன் மனைவியை ஆசையுடன் அள்ளி அணைக்கச் சென்ற முனியாண்டியைப் பார்த்து, வெட்கத்துடன் சிரித்தது, குழந்தை விஜி.  

  

  



oooooOooooo
 
 
 
எனது விமர்சனம்


பத்து ஆண்டுகளுக்கு முன் கண்டு களித்து இன்புற்று, இனி  அதுபோன்ற  இனிய  அனுபவங்கள் வாழ்வில் கிடைக்குமா என்று எண்ணி ஏங்கும்  வேளையில்,  கோயில் திருவிழாவிற்கு சென்று வந்தது போன்ற இனிய அனுபவத்தை  இக்கதை ஏற்படுத்திக் கொடுத்து மனதை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிட்டது.
நீர்ப் பந்தல், பானக பந்தல், மோர்ப் பந்தல், அக்கினிச் சட்டி, கரும்புள்ளி - செம்புள்ளி, வேப்பிலை காப்புகள், தேரோட்டம்   என்று ஒரு கோயில்  திருவிழா சூழலை கண்முன் நிறுத்தி நம்மையும் பக்திப் பரவசத்திலும் மன மகிழ்ச்சியிலும் ஆழ்த்தி விடுகிறார் ஆசிரியர்.

கோயில் திருவிழாவோ, திருமண விழாவோ அங்கு பலூன்களுக்கு முக்கிய இடம் உண்டு. வண்ண மயமாய், பல்வேறு வடிவங்களில், மழலைப் பட்டாளங்களின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும். இக்கதையில், மழலைப் பட்டாளங்களை கவர்ந்திழுக்கும் பாத்திரத்தில் முனியாண்டி. ஆனால், முனியாண்டி-மரகதம் தம்பதியினருக்கோ, பிள்ளைப் பேறு இன்னும் வாய்க்கவில்லை.

இறைவனின் திருவிளையாடல் தான் என்னே ! அவனுக்காக நடக்கும் விழாவில், முனியாண்டி- மரகதம் தம்பதியனரின் வாழ்வை வளமாக்க, அழகாக்க கோபால் - ராஜி தம்பதியினரின் மகள் விஜியை எங்கோ நாகப்பட்டினத்தில் இருந்து சுனாமி என்னும் ஆழிப்பேரலையை காரணமாகக் கொண்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் முனியாண்டி - மரகதம் தம்பதியரின் வாழ்வில் இணைக்கிறார்.


பெற்றால் தான் பிள்ளையா என்ன ? அன்னை தந்தையை இழந்து அல்லலுறும் குழந்தையை, காவலரிடம் ஒப்படைத்து விட்டால் ஒரு வித மனநிறைவு ஏற்படலாம். ஆனால், பின்னர் அதன் நிலையை எண்ணி எண்ணி கவலையுற்று, கயவர்கள் கைகளில் சிக்கிக் கொள்ளுமோ, என்னானதோ, ஏதானதோ என்றெண்ணி வருந்துவதைக் காட்டிலும் தாங்களே ஆதரவளித்து காப்பாற்ற எண்ணுவது சிறப்பு. 
தாயுமானவ சுவாமியின் அருளால் ஒரே நாளில் தாயுமானவள் ஆகி விட்டாள் மரகதம். அவர்களிடம் தஞ்சமடைந்த பிள்ளை விஜிக்காக தங்களுக்கென்று பிள்ளை ஒன்று வேண்டி வைத்தியத்திற்கு வைத்திருந்த பணம் தனை செலவு செய்கின்றனர். அந்த பிள்ளை விஜி, மரகதத்திற்கு மனைவி என்ற ஸ்தானத்திலிருந்து தாய் என்கிற ஸ்தானத்திற்கு உயர்த்தி விடுகிறாள். விஜியின் அதிர்ஷ்டத்தில், அந்தத் தம்பதியருக்கு மேலும் பிள்ளைச் செல்வம் பெருகட்டும். விஜிக்கும் சகோதர உறவுகள் எனும் நிறைவான செல்வம் கிட்டட்டும்.
தன்னலம் கருதாது அன்பினை வாரி வழங்கினால், அந்த அன்பே நமக்கு பல செல்வங்களையும் கொடுக்கும். அன்பே எந்நாளும் உலகில் நிலைக்கட்டும். அன்பே உலகை ஆளட்டும்.


நல்லதோர் வாய்ப்பினை வழங்கிய 
திரு. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

3 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புடையீர், வணக்கம்.

தங்களின் இந்த விமர்சனம் வெகு அழகாகவும், படிக்க சுவையாகவும் உள்ளது.

தங்களின் வலைத்தள வாசகர்களையும் அந்த என் சிறுகதையை வாசிக்க வைக்கத் தூண்டுதலாகவும் அமைந்துள்ளது.

தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

என் ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததற்கும் அதை இன்று இங்கே தனிப்பதிவாக வெளியிட்டுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

அன்புடன் கோபு [VGK]

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அவர்களிடம் தஞ்சமடைந்த பிள்ளை விஜிக்காக தங்களுக்கென்று பிள்ளை ஒன்று வேண்டி வைத்தியத்திற்கு வைத்திருந்த பணம் தனை செலவு செய்கின்றனர். அந்த பிள்ளை விஜி, மரகதத்திற்கு மனைவி என்ற ஸ்தானத்திலிருந்து தாய் என்கிற ஸ்தானத்திற்கு உயர்த்தி விடுகிறாள். விஜியின் அதிர்ஷ்டத்தில், அந்தத் தம்பதியருக்கு மேலும் பிள்ளைச் செல்வம் பெருகட்டும். விஜிக்கும் சகோதர உறவுகள் எனும் நிறைவான செல்வம் கிட்டட்டும்.//

நிறைந்த மனதுடன் தாங்கள் சொல்லியுள்ள இந்த வரிகள் மனதுக்கு நிறைவாக உள்ளன.
பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள். VGK

Tamizhmuhil Prakasam said...

தங்களது அன்பான உற்சாகமூட்டும் கருத்துரைகட்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா .

Post a Comment