blank'/> muhilneel: ஏமாற்றாதே! ஏமாறாதே ! - சிறுகதைக்கான விமர்சனம்.

Friday, October 24, 2014

ஏமாற்றாதே! ஏமாறாதே ! - சிறுகதைக்கான விமர்சனம்.

VGK 18 - ஏமாற்றாதே ! .... ஏமாறாதே .... !!

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-




காலை நேரம். தன் தள்ளாத வயதில், அந்தக்கிழவி தேங்காய் வியாபாரம் செய்ய, அந்தத் தெருவோரமாக, சாக்குப்பையை விரித்து, காய்களை சைஸ் வாரியாக அடுக்கி முடித்தாள்.  

வெயில் ஏறும் முன்பு காய்களை விற்றுவிட்டால் தேவலாம். வெயில் ஏற ஏற உடம்பில் ஒருவித படபடப்பு ஏற்பட்டு, படுத்துத்தூங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
அந்த அரசமர பிள்ளையார் கோயில் அருகிலுள்ள பொதுக்குழாயில் குடிநீர் அருந்திவிட்டு, சற்றுநேரம் அந்தமரத்தடி மேடை நிழலிலேயே தலையை சாய்த்து விட்டு, பொழுது சாய்ந்ததும் வெயில்தாழ வீட்டுக்குச் சென்று விடுவது அவள் வழக்கம்.
இளம் வயதில் ஒண்டியாகவே நூற்று ஐம்பது காய்கள் வரை உள்ள பெரிய மூட்டையை, தலையில் சும்மாடு வைத்து சுமந்து வந்தவள் தான். இன்று வெறும் ஐம்பது காய்களைக்கூட தூக்க முடியாதபடி உடம்பு பலகீனமாகப் போய் விட்டது.
ஒரு காய் விற்றால் ஐம்பது காசு முதல் ஒன்றரை ரூபாய் வரை இலாபம் கிடைக்கும். பேரம் பேசுபவர்களின் சாமர்த்தியத்தைப்பொறுத்து லாபம் கூடும் அல்லது குறையும். ஏதோ வயசான காலத்தில் தன்னால் முடிந்தவரை உழைத்து குடும்பத்திற்கு தன்னால் ஆன பண உதவி செய்யலாமே என்று நினைப்பவள்.
வரவர கண் பார்வையும் மங்கி வருகிறது. கணக்கு வழக்கும் புரிபடாமல் குழப்பம் ஏற்படுகிறது. அழுக்கு நோட்டு, கிழிந்த நோட்டு, செல்லாத நோட்டு, எண்ணெயில் ஊறி பிசுக்கு ஏறிய நோட்டு பிரச்சனைகள் மட்டுமின்றி, இந்த ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நாணயங்கள் இரண்டுமே ஒரே மாதிரியாக இருந்து தொலைப்பதிலும் அந்தக் கிழவிக்கு மிகப்பெரிய தொல்லையாக உள்ளது.
“சாமீ .... வாங்க ... தேங்காய் வாங்கிட்டுப்போங்க” குரல் கொடுத்தாள்.
“தேங்காய் என்ன விலைம்மா?” வந்தவர் கேட்டார்.
“வாங்க சாமீ .... எடுத்துட்டுப்போங்க .... எவ்வளவு காய் வேணும்?”  
“முதலிலே காய் என்ன விலைன்னு சொல்லும்மா, நீ சொல்லும் விலையை வைத்துத்தான், நான் உங்கிட்ட தேங்காய் வாங்கலாமா வேண்டாமான்னு முடிவே செய்யணும்” என்றார்.


“பெரிய காய் ஏழு ரூபாய் சாமீ; சின்னக்காய் ஆறு ரூபாய்” என்றாள் கிழவி.
“விலையைச் சொல்லிக்கொடுத்தால் ஒரு பத்து பன்னிரெண்டு காய் எடுத்துக்கொள்வேன்” என்றார்.
“பன்னிரெண்டு காயாவே எடுத்துக்கோ சாமீ; மொத்தப் பணத்திலே ஒரு ரெண்டு ரூபாய் குறைச்சுக்கொடு சாமீ” என்றாள்.
“பெரியகாய் பன்னிரெண்டுக்கு எழுபது ரூபாய் வாங்கிக்கோ” என்றார்.
“கட்டுப்படியாகாது சாமீ ..... ஒரு காய் விற்றால் நாலணா [25 பைசா] தான் கிடைக்கும்” என்றாள். 
அவளுடன் ஏதேதோ பேசிக்கொண்டே ஒவ்வொரு தேங்காய்களையும் தன் காதருகே வைத்து ஆட்டிப்பார்த்தும், கட்டை விரலையும் ஆள்காட்டிவிரலையும் சேர்த்து வைத்து ஒவ்வொரு காய்களின் மீது தன் ஆள்காட்டி விரல் நகத்தினால் மிருதங்கம் வாசித்தும், பன்னிரெண்டுக்கு பதிமூன்றாகத் தன் பையில் போட்டுக்கொண்டு, நூறு ரூபாய்த் தாள் ஒன்றை நீட்டியபடி, “மீதிப்பணம் கொடு” என்றார் அவசரமாக.
“ஆறே முக்கால் [Rs. 6.75 P] ரூபாய்ன்னா பன்னிரெண்டு காய்களுக்கு எவ்வளவு சாமீ ஆச்சு?” கிழவி கேட்டாள்.
“எண்பத்தோரு [ Rs. 81 ] ரூபாய் ஆகுது. அவ்வளவெல்லாம் தர முடியாது. முடிவா ஆறரை ரூபாய்ன்னு போட்டுக்கோ. பன்னிரெண்டு காய்க்கு எழுபத்தெட்டு ரூபாய் எடுத்துண்டு, மீதி இருபத்திரண்டு ரூபாயைக்கொடு, நாழியாச்சு” என்றார். 
அவளும் சற்று நேரம் மனக்கணக்குப்போட்டு குழம்பி விட்டு, அவரிடம் இருபத்திரெண்டு ரூபாயைக் கொடுத்து விட்டு, ”கணக்கு சரியாப்போச்சா, சாமீ?” என்று ஒரு சந்தேகமும் கேட்டு விட்டு, அவர் கொடுத்த நூறு ரூபாய்த் தாளைப் பிரித்துப்பார்த்து விட்டு, மீதித்தேங்காய்களின் மேல், அந்த ரூபாய் நோட்டை ஒரு சுற்று சுற்றிவிட்டு, கண்ணில் ஒத்திக்கொண்டு, ”முதல் வியாபாரம் சாமீ” என்று சொல்லி விட்டு, தன் சுருக்குப்பையில் பணத்தைப்போட்டு இடுப்பில் சொருகிக்கொண்டாள்.
இது போன்ற டிப்டாப் ஆசாமிகளில் சிலர் மிகவும் அல்பமாக இருப்பார்கள். வண்டியில் பெட்ரோலை நிரப்பிக்கொண்டு பெரிய செருப்புக்கடைக்குப் போவார்கள். காலுக்குப் புத்தம் புதிய ஷூ வாங்குவார்கள். அதில் போட்டுள்ள விலையான ரூபாய் 2199.95 P வுடன் ஐந்து பைசா சேர்த்து இரண்டாயிரத்து இருநூறு ரூபாயாகக் கொடுத்து விட்டு, திருடனுக்குத் தேள் கொட்டியது போல, ஓசைப்படாமல் வருவார்கள். அங்கு பேரம் பேச மாட்டார்கள். பேசினாலும் ஒரு ரூபாய் கூட குறைத்து வாங்க முடியாது என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
அது போலவே பெரிய ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் போன்றவற்றில் அவர்கள் சொல்லுவது தான் விலை. யாரும் பேரம் பேசுவது கிடையாது. தப்பித்தவறி பேரம் பேசுபவர்களை ஒரு மாதிரியாக பட்டிக்காட்டான் என்பது போலப் பார்த்து பரிகாசம் செய்வார்கள்.
தெருவோரம் காய்கறி வியாபாரம் செய்யும், அதுவும் ஒருசில வயதானவர்களிடம் தான், பேரம் பேசுவார்கள், விலையைக் குறைப்பார்கள், அசந்தால் ஏதாவது ஒன்றை காசு கொடுக்காமல் கடத்தியும் வந்து விடுவார்கள். அதில் ஒரு அல்ப ஆசை இவர்களுக்கு.  
கீரை வகைகள், காய்கறிகள், கருவேப்பிலை, கொத்துமல்லி, இஞ்சி, பச்சைமிளகாய், எலுமிச்சம்பழம் முதலியன விற்கும் தெருவோர ஏழை மற்றும் வயதான வியாபாரிகளிடம் தான் இவர்கள் பாச்சா பலிக்கும்.
அவர்களும் கூட இப்போதெல்லாம் தங்களுக்குள் சங்கம் அமைத்துக்கொண்டு ’ஒரே விலை - கறார் விலை’ என்று சொல்லி மிகவும் உஷாராகி வருகின்றார்கள். 
மூன்று அல்லது நான்கு பேர்கள் உள்ள சிறிய குடும்பத்திற்கே காய்கறி வாங்க தினமும் 60 முதல் 100 ரூபாய் வரை தேவைப்படுகிறது. குழம்புத்தானுக்கு ஐந்து அல்லது ஆறு முருங்கைக்காய் வாங்கினாலே, அதற்கு மட்டுமே 25 அல்லது 30 ரூபாய் தேவைப்படுகிறது. என்ன செய்வது? எல்லாப்பொருட்களின் விலைகளுமே அடிக்கடி ஏறித்தான் வருகிறது.  

சொல்லப்போனால் இந்த காய்கறிகள் மட்டுமே, ஷேர் மார்க்கெட் போலவே,  சில சமயங்களில் ஏறினாலும் பலசமயங்களில் கிடுகிடுவென்று இறங்கி விடுவதும் உண்டு. விளைச்சல் அதிகமானால், வேறு வழியில்லாமல் அவற்றின் விலைகள் போட்டாபோட்டியில் குறைக்கப்படுவது உண்டு. விற்பனையாகாமல் தேங்கிவிட்டால் அழுகி வீணாகி விடும் அபாயமும் உண்டு.  மற்ற பொருட்கள் அப்படியில்லை; ஏறினால் ஏறினது தான். இறங்கவே இறங்காது. பதுக்கப்படுவதும் உண்டு.
பார்க்க மனதிற்கு நிறைவாகவும், காய்கறிகள் பச்சைப்பசேல் என்று ஃப்ரெஷ் ஆகவும் இருந்து, சரியான எடையும் போட்டுக் கொடுக்கும் வியாபாரிகளிடம், அவர்கள் சொல்லும் விலை ஓரளவு நியாயமாக இருப்பின், அநாவஸ்யமாக பேரம் பேசுவதில் அர்த்தமே இல்லை. 
ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் முன்னபின்ன சொன்னால் தான் என்ன; நாமும் கொடுத்தால் தான் என்ன; குறைஞ்சாப்போய் விடுவோம்? பிறர் வயிற்றில் அடிக்காமல் நியாயமான விலை கொடுத்து வாங்கி வந்தால் அதன் ருசியே தனியாக இருக்குமே! பேரம் பேசி விலையைக் குறைக்காமல், அவர் கேட்ட பணத்தை அப்படியே கொடுத்த நமக்கு காய்கறிகளை, மனதார வாழ்த்தியல்லவா கொடுத்திருப்பார் .... அந்த வியாபாரியும். 
இன்று இந்தக்கிழவியிடம் தேங்காய் வாங்கியவர் ஒரு வேண்டுதலை நிறைவேற்றத்தான், அதுவும் கடவுளுக்காகவே தேங்காய்கள் வாங்கியுள்ளார்.  அந்த மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையாருக்கு ஒன்றும், மலையடிவாரத்தில் உள்ள கீழ்ப்பிள்ளையாருக்கு ஒன்றும், மலையைச்சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் உள்ள மற்ற பத்து பிள்ளையார்களுக்கு ஒவ்வொன்றும் என மொத்தம் 12 சதிர் தேங்காய்கள் அடிப்பதாக வேண்டுதல் செய்து கொண்டுள்ளார்.   

சதிர் தேங்காய் உடைக்கும் அவருடன் ஏழைச்சிறுவர்கள் ஒரு கும்பலாகப் போய், உடைபட்டுச் சிதறும் சதிர் தேங்காய்களை பொறுக்குவதில் தங்களுக்குள் முண்டியடித்து வந்தனர்.

கிழவியிடம் வாங்கிய அனைத்துக் காய்களும் மிகவும் அருமையாகவும், பளீரென்று வெளுப்பாகவும், நல்ல முற்றிய காய்களாகவும், தூள்தூளாக உடைந்து சிதறியதில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.


 
அவரின் நெடுநாள் பிரார்த்தனை இன்று தான் ஒருவழியாக நிறைவேறியுள்ளது. இந்தப்பிள்ளையார்களுக்கு சதிர் தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டு விளையாட்டு போல 15 வருஷங்கள் ஆகிவிட்டன. திருச்சியிலுள்ள அந்த மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக இண்டர்வ்யூவுக்கு வந்த போது வேண்டிக்கொண்டது.  

பிறகு அவருக்கு வேலை கிடைத்தும் அவசரமாக போபாலில் போய் வேலைக்குச் சேர வேண்டும் என்று உத்தரவு வந்ததால், வேண்டிக்கொண்ட பிரார்த்தனையை உடனே நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது.

இப்போது அவர் மீண்டும் திருச்சிக்கே பணி மாற்றத்தில் வந்தாகி விட்டது. இனியும் பிள்ளையாருக்கான பிரார்த்தனையை தாமதிக்கக்கூடாது என்று, இன்று பிரார்த்தனையை நிறைவேற்றக் கிளம்பி விட்டார். 

’பதினைந்து வருஷங்கள் முன்பே இந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றி இருக்கலாம். அப்போது தேங்காய் விலையும் மிகவும் மலிவு. பன்னிரெண்டு காய்களையும் சேர்த்து பன்னிரெண்டு ரூபாய்க்கோ அல்லது பதினெட்டு ரூபாய்க்கோ வாங்கி இருக்கலாம்;

இன்று சுளையாக எழுபத்தெட்டு ரூபாய்களை செலவழிக்க நேரிட்டு விட்டது. அநியாயமாக இப்படி ஒரு தேங்காயையே ஆறரை ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியுள்ளது; 

தான் புத்திசாலித்தனமாக அந்தக்கிழவியிடம் சுட்டு வந்த ஒரு காய் மட்டும் தான் லாபம். அதையும் சேர்த்துக் சராசரியாகக் கணக்குப் பார்த்தாலும், ஒரு காய் ஒன்று [78/13 = 6]ஆறு ரூபாய் வீதம் அடக்கம் ஆகிறது என்று, கடவுளுக்கு வேண்டிக்கொண்டதற்கு பலவிதமான லாப நஷ்டக் கணக்குகள் பார்த்து, 12 காய்களையும் சதிர் காய்களாக அடித்து விட்டு, மீதியிருந்த ஒரே ஒரு தேங்காயுடன் வீட்டை அடைந்து, அதைத் தன் மனைவியிடம் கொடுத்தார்.

அதிகாலையிலேயே குளித்துவிட்டுப் புறப்பட்டுப் போனவர்; பசியோடு வருவாரே என்று அவசர அவசரமாக சமையலை முடித்து விட்ட அவரின் அன்பு மனைவி, தேங்காயை உடைத்துத் துருவிப் போட்டு விட்டால், சூடாக சாப்பாடு பரிமாறி விடலாம் என்று தேங்காயை நன்றாக அலம்பி விட்டு, நாரையும் உரித்து விட்டு, அரிவாளால் லேஸாக ஒரு போடு போட்டாள்.

தேங்காயின் இளநீரை கீழே சிந்தாமல் சிதறாமல் ஒரு சிறிய பாத்திரத்தில் பொறுமையாகப் பிடித்து, வெயிலில் அலைந்து திரிந்து விட்டு வந்துள்ள தன் கணவருக்குக் குடிக்கக் கொடுத்து விட்டு, சமையல் அறைக்கு வந்து தேங்காயை அரிவாளால் மீண்டும் ஒரு போடு ஓங்கிப் போட்டாள்.

”என்னங்க இது; இந்தத்தேங்காய் அழுகலாக உள்ளதே! பார்த்து வாங்கியிருக்கக்கூடாது! ஸ்வாமிக்கு உடைத்ததெல்லாமாவது நன்றாக இருந்ததா?” என்று கேட்டவாறே அந்த அழுகின தேங்காயைத் தன் கணவனிடம் காண்பித்தாள்.

இதற்கிடையில் ஆசையுடன் வாயில் தான் ஊற்றிக்கொண்ட அழுகிய இளநீரை துப்பவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அவதிப்பட்ட அந்த ஆளு, ஒருவழியாக வாஷ்பேசின் வரை ஓடிச்சென்று துப்பிவிட்டு வாய் அலம்பிக்கொண்டு வந்தார்.

மனைவி கையில் வைத்திருந்த அந்த அழுகல் தேங்காய் மூடிகளை உற்று நோக்கினார். அதில் அந்த ஏழைக் கிழவியின் தளர்வான முகம் அவருக்குக் காட்சியளித்தது.


  
அனைத்துப் பிள்ளையார்களும் தன்னைப்பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போலவும் அவருக்குத் தோன்றியது. தான் செய்த தவறுக்கு சரியான தண்டனை கைமேல் கிடைத்து விட்டதாக உணர்ந்தார்.   

oooooOooooo


oooooOooooo 

விமர்சனம் 

மனிதன் கடவுளுக்கு கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற காலக்கெடு என்ற ஒன்றை வரம் அருளும் கடவுளும் நிர்ணயிப்பதில்லை, வரம் பெற்றுக் கொண்ட மனிதனும் குறிப்பிட்ட காலத்துக்குள் வாக்குறுதியை நிறைவேற்றி விடவேண்டுமெனெ எண்ணுவதில்லை. வாக்குறுதியை நிறைவேற்றுவது, எப்போது மனிதருக்கு வசதிப் படுகிறதோ, அப்போது நிறைவேற்றுவது, சமயங்களில் நிறைவேற்றாது கூட விட்டுவிடுவது என்று மனிதரின் மனஓட்டத்தைப் பொறுத்தும், பல வேளைகளில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தடையாகிப் போவதும், காலம் கடந்து கொண்டே போவதுமாக  அமைந்து விடுகிறது.

இக்கதையில் தன் இளைய பிராயத்தில், பொதுத்துறை நிறுவனத்தில் நல்லதோர் வேலை வேண்டி, இறைவனிடம் மனு போட்டு, அந்த மனுவும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, தேவையான உதவியை தக்க சமயத்தில் இறைவன் செய்து கொடுத்தும் விடுகிறார். சந்தர்ப்ப சூழ்நிலைகளால், உதவி புரிந்த கடவுளுக்கு உடனடியாக தான் வாக்களித்த அன்பளிப்பை கொடுக்க இயலாத கதையின் நாயகர்,  பதினைந்து வருடங்கட்கு பின், தான் கொடுப்பதாய் வாக்களித்த அன்பளிப்பை கொடுக்க வருகிறார்.

எந்தச் செயலை செய்தாலும், அதில் தனக்கேதும் இலாபம் உண்டா என்று எண்ணுவது மனித மனத்தின் இயல்பு.  இங்கு, இறைவனுக்கு தான் நிறைவேற்றுவதாக எண்ணியதை, செய்து முடிக்க எண்ணுகையில், அதிலும் தனக்கு பலன் எதிர்பார்க்கும்  மனம் எட்டிப் பார்க்கிறது. 

ஏழை மூதாட்டியவள், தள்ளாத வயதிலும், தன் வயிற்றுப் பிழைப்பிற்காய் மேற்கொள்ளும் வியாபாரம். அதில் அவள் பெரிதும் செல்வம் சேர்த்து விடப் போவதில்லை. கண் பார்வையும் மங்கிப் போன போதும், தன் குடும்பத்திற்கு தன்னாலான உதவிகளை செய்ய கடை விரித்து வைத்திருக்கும் மூதாட்டியை ஏமாற்றியதில் ஒரு தேங்காய் இலாபம்  என்று எண்ணிக் கொண்டிருக்கையில், எத்தகைய சூழலிலும் ஏமாற்றுதல் என்பது குற்றமே என்பதை உணர்த்த வந்த தேவதையாகவே காட்சிப்படுகிறார் தேங்காய் விற்கும் மூதாட்டி.

இறைவனுக்கு உடைக்கையில் அழுகல் தேங்காய் வந்திருந்தால், மனம் படும் பாடு சொல்லி மாளாது. அதுவும், தான் மனதில் நினைத்ததை நிறைவேற்றிக் கொடுத்த தெய்வத்திற்கு காணிக்கையாக கொடுப்பதில், அழுகல் இருந்திருந்தால், தான் இறைவனது கோபத்திற்கு ஆளாகி விட்டோமோ என்றெண்ணி மனம் பதைபதைக்கும். அப்படி ஏதும் நிகழாமல், தன் உபயோகத்திற்கு ஒரு காய் இலாபம் என்று மூதாட்டியை ஏமாற்றிய தேங்காயில் அழுகலை வைத்த இறைவன், பக்தன் தனக்களித்த காணிக்கையை மனமகிழ்வோடு ஏற்றுக் கொண்டு இருக்கிறார். அதே வேளையில், மூதாட்டியை ஏமாற்ற நினைத்த தன் பக்தனுக்கு நல்லதொரு பாடத்தையும் புகட்டி இருக்கிறார். இறைவனது கருணையே கருணை.

பகட்டும் படாடோபமும் நம்மை வியப்பில் விழியகலச் செய்து, வாயடைத்து விடுகின்றன. எளிமையும் அமைதியும் நம்முள் மிகச் சாதாரணமான எண்ணங்களை விதைத்து விடுகின்றன. பகட்டும் படாடோபமும்  எந்நாளும் எல்லா சந்தர்ப்பங்களிலும் உயர்வானவை என்று எண்ணுதல் கூடாது. அதே வேளையில், எளிமையும், ஏழ்மையும் தாழ்வானவை என்ற எண்ணமும் கூடாது. 


பகட்டும் படாடோபமான கடைகளில் எவ்வளவு அதிக விலையாயினும் சொன்ன விலைக்கு அமைதியாக வாங்கி வருவதும், எளியோரிடம்  குறைந்த விலையாக இருந்தாலும், அதிலும் பேரம் பேசி இன்னும் அடிமாட்டு விலைக்கு கேட்பதும் நமது அன்றாட வாழ்வில் கண்கூடாக காணும் ஓர் நிகழ்வே. இதை அழகாக ஆசிரியர்  விளக்குகிறார்.


"ஒருவரை ஏமாற்றும் எண்ணம் தலையெடுக்கும் போதே, நமக்கும் ஏமாற்றம் ஒன்று காத்திருக்கிறது என்பது நினைவில் எழ வேண்டும். இல்லையேல், நிச்சயம் ஏமாற்றத்தை எதிர்கொள்ள வேண்டும்"
என்ற நல்லதோர் கருத்தை வலியுறுத்தும், நீதியை புகட்டும் கதை.


நல்லதோர் வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள் பல ஐயா.

5 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பகட்டும் படாடோபமும் நம்மை வியப்பில் விழியகலச் செய்து, வாயடைத்து விடுகின்றன. எளிமையும் அமைதியும் நம்முள் மிகச் சாதாரணமான எண்ணங்களை விதைத்து விடுகின்றன. பகட்டும் படாடோபமும் எந்நாளும் எல்லா சந்தர்ப்பங்களிலும் உயர்வானவை என்று எண்ணுதல் கூடாது. அதே வேளையில், எளிமையும், ஏழ்மையும் தாழ்வானவை என்ற எண்ணமும் கூடாது. //

வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புடையீர், வணக்கம்.

தங்களின் இந்த விமர்சனம் வெகு அழகாகவும், படிக்க நல்விருந்தாகவும் அமைந்துள்ளது.

தங்களின் வலைத்தள வாசகர்களையும் அந்த என் சிறுகதையை வாசிக்க வைக்கத் தூண்டுதலாகவும் அமைந்துள்ளது.

தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

என் ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததற்கும் அதை இன்று இங்கே தனிப்பதிவாக வெளியிட்டுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

அன்புடன் கோபு [VGK]

ooooooooooooooooooooooooooo

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
விமர்சனம் மிக அருமையாக உள்ளது போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Tamizhmuhil Prakasam said...

@ வை.கோபாலகிருஷ்ணன்

மதிப்பிற்குரிய ஐயா,

தங்களது வருகைக்கும் அன்பான பாராட்டுதல்கட்கும் வாழ்த்துகட்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

Tamizhmuhil Prakasam said...

@ ரூபன்

போட்டியில் வெற்றி கிட்டவில்லை சகோதரரே. ஆனாலும், நான் இதுவரை எழுதிய விமர்சனங்களை ஐயா அவர்களின் சிறுகதைகளோடு எனது வலைப்பூவில் சேமித்து வருகிறேன்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.

Post a Comment