blank'/> muhilneel: அழகு

Saturday, July 26, 2014

அழகு

இரண்டு நாட்களாகவே பொன்மதியின் முகத்தில் சந்தோஷம், வெட்கம் கலந்த பூரிப்பு  நிழலாடியது. வழக்கத்தை விட சற்று அதிகமாகவே மஞ்சள் பூசிய முகம்  பளபளத்தது. பொன்மதியின் இந்த திடீர் பூரிப்பிற்கும், பளபளப்பிற்கும் காரணம், அந்த வாரக் கடைசியில், பொன்மதியை பெண் பார்க்க, மாப்பிள்ளை வீட்டார் வர இருக்கிறார்கள்.

 பொன்மதி - காட்சிக்கு எளிமையானவள், மன உறுதி மிகக் கொண்டவள், எவரிடமும் கலகலப்பாய் பழகும் சுபாவம் கொண்டவள். நிறம் சற்று கருப்பென்றாலும், களையான முகம் கொண்டவள். உள்ளமோ, கள்ளம் கபடமறியா தூய்மையான பாலின் நிறத்தை ஒத்தது. கல்லூரிப் படிப்பை அந்த ஆண்டு தான் முடித்திருந்தாள்.

ஒரு நாளும் பொன்மதிக்கு, தன் கருப்பு நிறம் ஓர் பெரும் குறையாகவே தோன்றியதில்லை. " நிறமோ, உருவமோ ஒருவருக்கு உயர்வையும் உன்னதத்தையும் தருவதில்லை. மனதில் தோன்றும் எண்ணங்களே மனிதனை உயர்த்தவோ, தாழ்த்தவோ செய்கின்றன " என்ற உயரிய கருத்தை அவளது உள்ளத்தில் ஆழப் பதித்து வளர்த்திருந்தனர் அவளது பெற்றோர்.

எவரிடமும் கயமை பாராட்டாது, முடிந்தவரை பிறருக்கு தன்னாலான உதவிகளை செய்து , அனைவரிடமும் அன்பு பாராட்டி வந்தாள் பொன்மதி. எவரிடமும் சற்றும் அதிர்ந்து பேச மாட்டாள். கோபம் கொள்ள மாட்டாள். தன்னைப் பற்றி எவரேனும் அவதூறு பேசினாலோ, கிண்டல் கேலி செய்து பேசினாலோ, அதைக் கண்டு கோபம் கொள்ளாது அமைதியாக சென்று இருந்து விடுவாள்.

" உன்  காதுபடவே  உன்னை  இவ்வளவு கிண்டல் பண்றாங்களே, நீ எப்படி இதையெல்லாம் கேட்டுட்டு பொறுமையா இருக்க ? " என்று கேட்கும் தோழிகளுக்கு,

" போகட்டும் விடு. இப்போ, அவங்க வாய்க்கு நான் அவலா இருக்கேன். நாளைக்கு  பேச புதுசா கிடைச்சதும், நான் அவங்களுக்கு நமநமத்துப் போயிடுவேன். கொஞ்ச நாள் தானே. இது மூலமா அவங்களுக்கு ஏதோ சந்தோஷம், அனுபவிச்சிட்டுப் போகட்டும் விடு " என்று சமாதானம் சொல்வாள்.

தன்னைப் பெண் பார்க்க வரப் போகிறவர் எப்படி இருப்பாரோ என்று எண்ணிக் கொண்டிருக்கையில், அவளது தந்தை நாகராஜன், 

" மாப்பிள்ளை வீட்டிலிருந்து வர்ற வெள்ளிக்கிழமை உன்னை பெண் பார்க்க வருகிறார்கள் அம்மா " என்ற தந்தைக்கு, நாணம் கலந்த புன்னகையை பதிலாக உதிர்த்து விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றாள் பொன்மதி.

வெள்ளிக் கிழமையும் வந்தது. பொன்மதிக்கு ஒருபுறம் மகிழ்ச்சி, ஒருபுறம் படபடப்பு என்று இனம் புரியாத உணர்வலைகள் மனதுள் அலைமோதின. மாலையில் நல்ல நேரம் எப்போதென்று பார்த்து அப்போது கோயிலுக்கு செல்வதாக ஏற்பாடாகி இருந்தது. மாப்பிள்ளை வீட்டாரும் கோயிலுக்கு வந்து விடுவதாக சொல்லியிருந்தார்கள்.

மாலையில் தனது பெற்றோர் மற்றும் சில நெருங்கிய உறவுகளுடன் கோயிலுக்குச் சென்றனர். அங்கு மாப்பிள்ளை வீட்டார் ஏற்கனவே வந்து காத்திருந்தனர். பொன்மதியை தூரத்திலிருந்து பார்த்தவர்கள், என்ன நினைத்தார்களோ, என்னவோ, சட்டென்று தாங்கள் வந்திருந்த காரிலேறி சென்று விட்டனர். என்ன ஏதென்று காரணம் புரியாது பெண் வீட்டார் தவித்தனர்.

ஓரிரு நாட்களுக்குப் பின், பெண் பார்க்க ஏற்பாடு செய்திருந்த நாகராஜன்  அவர்களின் மாமா வந்த போது  சொன்ன பின்னர் தான் அவர்கள் பொன்மதி கருப்பு நிறமாக இருக்கிறாளென்றும், அதனால் பெண்ணைப் பிடிக்கவில்லை என்றும் சொல்லி  இருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்தது.

பொன்மதியின் பெற்றோருக்கு மனம் என்னவோ போலிருந்தது.  தங்கள் மகள் வருத்தப் படுவாளே என்று எண்ணி மிகவும் வருத்தப்பட்டனர். இரண்டு நாட்களாக வீட்டில் அனைவரிடையேயும் ஒரு வித அமைதி நிலவியது.  அனைவரும் மௌனத்தையே துணையாக்கிக் கொள்ள, அனைவரது மௌன தவத்தையும் கலைப்பவளாய் பொன்மதி பேச ஆரம்பித்தாள்.

" அம்மா ! அப்பா ! எதுக்கு இப்போ வருத்தப்படுறீங்க ? பலதரப்பட்ட மனிதர்கள், அவர்களோட எண்ணங்கள், குணாதிசயங்கள், எதிர்பார்ப்புகள் இப்படி பல விஷயங்களை தெரிஞ்சிக்க கிடைத்த ஒரு வாய்ப்பா இதை எடுத்துக்குவோமே. நிறத்தை வெச்சு ஒருத்தரை எடை போடும் இத்தகைய மனிதர்களுடன், நாளை என்னோட வாழ்வு அமைஞ்சிருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சு பாருங்க. " நடப்பதெல்லாம் நன்மைக்கே " அப்படின்னு எடுத்துப்போம் " என்றாள் பொன்மதி.

ஓர் பெருத்த ஏக்கப் பெருமூச்சு மட்டுமே பெற்றோரிடமிருந்து பொன்மதிக்கு பதிலாக கிடைத்தது.

மீண்டும் பொன்மதியே தொடர்ந்தாள். முடி கருப்பா இருந்தால் தான் அழகு. நம் பார்வைக்கு கண்ணின் கருவிழி தான் ஆதாரம். அதில் வெள்ளை விழுந்தால் கண் புரை என்று சொல்கிறோம்.தோலில் திட்டு திட்டாக பளீரென்று வெள்ளை நிறமாக மாறினால், வெள்ளையாகி விட்டோம், வெள்ளை தான் அழகு என்றெண்ணி விட்டு விடலாமே ? அதை ஏன் வெண்குஷ்டம் அப்படின்னு சொல்லி டாக்டர் கிட்ட ஓடணும் ?

கருப்பு தான் அனைத்து நிறங்களுக்கும் அடிப்படை. எல்லா நிறங்களும் கருப்புக்குள்ள அடங்கிடும்.எனக்கு நல்லா சிவப்பா அல்லது மாநிறமா கூட மாப்பிள்ளை வேண்டாம். நல்ல கருப்பான மாப்பிள்ளையே பாருங்கப்பா. வெளித்தோற்றம் கருப்பா இருந்தாலென்ன ? உள்ளம் மாசு மரு இல்லாம வெள்ளையா இருந்தாலே போதும். அது தான் உண்மையான அழகு.

மனதில் தோன்றிய எண்ணங்களை எல்லாம் பொலபொலவென மழை சுமந்த கார்மேகம் போல கொட்டித் தீர்த்துவிட்டு, இலேசான மனதுடன் தனது அறை நோக்கி சென்றாள். அவளுக்கான இராஜகுமாரன் இனிமேலா பிறந்து வரப்போகிறான்? எங்கோ பிறந்து வளர்ந்து இருப்பான். விரைவில், இந்த இராஜகுமாரியை தேடி வருவான்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கண்டிப்பாக....

நல்ல கதை...

Tamizhmuhil Prakasam said...

மிக்க நன்றி ஐயா.

Post a Comment