blank'/> muhilneel: ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும் - சிறுகதை விமர்சனம்

Tuesday, April 15, 2014

ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும் - சிறுகதை விமர்சனம்

ஆப்பிள் கன்னங்களும் 

அபூர்வ எண்ணங்களும் !


[சிறுகதை]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

 
”டேய் ... சீமாச்சூ! ஒரு சின்ன ஹெல்ப் பண்ணணும்...டா. 

அந்தப் பிள்ளையார் கோயில் டெய்லரிடம் போய் இந்தப் புதுசா தைத்த ஜாக்கெட்டை கைப்பக்கம் கொஞ்சம் பிரிச்சு லூஸ் ஆக ஆக்கிக்கொண்டு வரணும்...டா. 

விலை ஜாஸ்தியான ஒஸ்தித் துணி...டா. 

ஜாக்பாட் நிகழ்ச்சியில் வந்த, குஷ்பு போல முதுகுப் பக்கம் பெரிய ஜன்னலா வைக்கச் சொன்னேன்டா. 

ஏதோ சுமாரான ஜன்னலாக வைத்துவிட்டு கைகள் பக்கம் ரொம்பவும் டைட்டா தைத்துத் தொலைத்து விட்டான்.....டா. 

அளவு ரவிக்கையைக் கொடுக்கும் போதே படித்துப் படித்து சொன்னேன்....டா. 

பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிவிட்டு, வேணும்னே இப்படி டைட்டாகத் தைத்துத் தொலைத்திருக்கிறான்....டா. 

நானே அந்த டெய்லரிடம் போகலாம்ன்னு தான் நினைச்சேன்....டா. 

ஆனாக்க அவனையும், அவன் அசட்டுச் சிரிப்பையும், திருட்டு முழியையும், பார்க்க எனக்கு சகிக்கலை...டா, பிடிக்கலை...டா”, என்றாள் என் பக்கத்து வீட்டு ஜிகினாஸ்ரீ. 

அவளின் உண்மைப் பெயர் என்னவோ ’ஜெயஸ்ரீ’ தான். இருந்தாலும் நான் அவளுக்கு என் மனதுக்குள் வைத்துள்ள பெயர் ஜிகினாஸ்ரீ. 

நொடிக்கு நூறு தடவை என்னை “டா” போட்டு பேசி வருகிறாள். “ஸ்ரீனிவாசன்” என்கிற என் முழுப்பெயரைச் சுருக்கி “சீமாச்சூ” என்கிறாள். அதிலும் எனக்கென்னவோ என் மனதுக்குள் ஒரு வித கிளுகிளுப்பு தான்.

சின்ன வயதிலிருந்தே எங்களுக்குள் மிகவும் பழக்கம். தாயக்கட்டம், பரமபத சோபன படம், பல்லாங்குழி, கண்ணாமூச்சி, பாண்டி, பம்பரம், கோலிக்குண்டு, சடுகுடு, பச்சைக்குதிரை தாண்டுதல் எனப் பல விளையாட்டுகள், நாங்கள் சேர்ந்தே ஜாலியாக விளையாடியதுண்டு.

என்னை விட அவள் இரண்டு வயது சிறியவள். விஞ்ஞான பாட நோட்டில் சயன்ஸ் டயக்கிராம் வரைய என் உதவியை நாடுவாள். அவளுக்கு சரியாக ஓவியம் வரைய வராது. 

இந்த வேலை, அந்த வேலை என்று பாகுபாடு இல்லாமல் என்னை நன்றாகவே எல்லாவற்றிற்கும் பயன் படுத்திக் கொள்வாள்.

நானும் மகுடிக்கு மயங்கும் நாகம் போல அவள் எது சொன்னாலும், சின்ன வயதிலிருந்து என்னையும் அறியாமல் தட்டாமல் செய்து கொடுத்துப் பழகி வந்து விட்டேன்.  

ஒருநாள் மதியம் அவள் வீட்டுக்கு நான் எதற்கோ சென்றிருந்தேன். அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து, அங்கிருந்ததோர் வார இதழைப் படித்துக்கொண்டிருந்தேன். இவள் குளிப்பதற்காக பாத்ரூமுக்குள் நுழைந்து விட்டாள். அவள் வீட்டிலோ அன்று வேறு யாருமே இல்லை.

சற்று நேரத்தில் பாத்ரூம் கதவை லேஸாகக் கொஞ்சூண்டு மட்டும் திறந்து, தன் கைகள் மட்டும் வெளியே தெரிவதுபோல, தன் உள்பாவாடையை என்னை நோக்கி வெளியே விட்டெறிந்தாள். 

”டேய் சீமாச்சூ, இந்தப் பாவாடையிலிருந்து நழுவிவிட்ட நாடாவை மளமளன்னு ஊக்குபோட்டு கோர்த்துக்கொடு...டா;  ஊக்கு அதோ அந்த அலமாரியில் மூன்றாவது தட்டில் முன்னுடிக்க இருக்கு பாரு...டா” என்றும் அவள் சொன்னதுண்டு.  

நானும் அன்று அவளின் அந்த உள்பாவாடை நாடாவை மளமளன்னு ஊக்கால் கோர்த்து, பயபக்தியுடன், பாத் ரூம் கதவின் கைப்பிடியில் சொருகிவிட்டு, அவளிடம் எடுத்துக்கோ என்று சொல்லிவிட்டு, வார இதழை விட்ட இடத்தில் தொடங்கி படித்ததுண்டு.


 


என் தந்தையும் அவள் தந்தையும் ஒரே அலுவலகத்தில் பணியாற்றி வரும் நண்பர்கள். என் தாயும் அவள் தாயும் மிகவும் சிநேகிதிகள். அக்கம்பக்கத்திலேயே தான் எங்கள் வீடுகள். நாங்கள் இவ்வாறு சிறு வயதிலிருந்தே ஒன்றாகப்பழகி வருவதை யாருமே தவறாகவோ, வித்யாசமாகவோ நினைப்பதில்லை. 

நான் படிப்பில் சுமார் தான். இப்போது பீ.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். அவள் அப்படியில்லை. படிப்பில் படு சுட்டி. ப்ளஸ் டூ வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் வாங்கிப் புகழ் பெற்றவள்.

படிப்பு மட்டும் அல்ல, அவள் அழகோ அழகு. அன்று சிறு வயதில் என்னைவிட நோஞ்சானாகத் தான் இருந்தாள். அவள் எட்டாவது படிக்கும் போது, அவர்கள் வீட்டில் திடீரென ஒரு விழா எடுத்தார்கள்.

காது, மூக்கு, கழுத்து, கைகள் என புதுப்புது நகைகள் அணிவித்திருந்தார்கள். இதுவரை கவுன், பாவாடை சட்டை, சுடிதார், நைட்டி என அணிந்திருந்தவளுக்கு பட்டுப்பாவாடை சட்டையுடன், நல்ல பளபளப்பான ஜிகினா ஜரிகைகளுடன் மின்னும் தாவணி அணிவித்திருந்தார்கள். தலை நிறைய கலர் கலராக பூச்சூடிக்கொண்டிருந்தாள். 


கழுத்தில் நெருக்கமாகத் தொடுத்த நறுமணம் கமழும் மல்லிகைப்பூ மாலை அணிவித்திருந்தனர். அந்த மாலையின் அடியில் குஞ்சலம் போல சில பட்டு ரோஜாக்கள் தொங்கிக்கொண்டிருந்தன.

பூப்போட்ட தாவணியின் ஜரிகைகள் ஜிகினா போல மிகவும் பளபளப்பாக டால் அடித்துக் கண்ணைப் பறிப்பதாக இருந்தது. 

அதைப் பார்த்து திகைத்துப்போன நான், அவளை ஜிகினாஸ்ரீ என்று வாய் தவறி அழைத்தேன். விழா அமர்க்களத்தில் நான் சொன்னது அவள் காதில் சரியாக விழவில்லை போலும். 

அவள் வயதுக்கு வந்து விட்டதாகப் பேசிக்கொண்டார்கள். எங்கள் எல்லோருக்கும் இனிப்புப் புட்டு, எள்ளுப்பொடி என ஏதேதோ தின்பதற்கான பலகாரங்கள் கொடுத்தார்கள். 

பெண்களெல்லாம் என் ஜிகினாஸ்ரீயை ஒரு நாற்காலியில் பட்டுத்துணி போட்டு அமர வைத்து, கூடி நின்று பாட்டுப் பாடினார்கள். பெண்மணிகளின் கோலாட்டமும் கும்மாளமுமாக விழா இனிதே நடைபெற்றது. 

எனக்குத்தான் இந்த திடீர் விழாவைப் பற்றி ஒன்றும் புரியவில்லை. என் தாய் உள்பட எனக்குப் புரியும் படியாக யாரும் எதுவும் எடுத்துச் சொல்லவும் இல்லை. 

பிறகு ஒரு நாள் இது பற்றிய என் சந்தேகத்தை நான் அவளிடமே கேட்டு விட்டேன். 

அதற்கு அவள் தன் தலையில் அடித்துக்கொண்டு, “மக்கு, மக்கு; பத்தாவது படிக்கிறாய்; உனக்கே உனக்காக ஒரு எழவும் புரியாது...டா. என்னைக் கேட்டது போல வேறு யாரையும் கேட்டு வைக்காதே...டா; அப்புறம் உனக்கு உதைதான் விழும்; 

உனக்கு முரட்டு மீசை முளைக்கும் போது ஒரு பொண்டாட்டி வருவாள்...டா. அவளிடம் போய் உன் சந்தேகங்களைக் கேளு...டா. அவ எல்லாம் விபரமா உனக்குச் சொல்லுவா...டா” என்றாள்.

இப்போது தான் அரும்பு மீசை முளைக்கலாமா என்று பார்த்துவரும் என் மேல் உதட்டுக்கும், நாசித் துவாரங்களுக்கும் இடைப்பட்ட பகுதியைத் தடவி பார்த்துக் கொண்டேன். 

அவளைவிட இரண்டு வயது பெரியவனாகிய எனக்கு, எங்கள் வீட்டில், வயது வந்து விட்டதாக விழா எதுவுமே எடுக்கவில்லை. இவளுக்கு மட்டும் என்ன திடீர் விழா ? என்பதே எனக்கான மிகப்பெரிய சந்தேகம். 

பள்ளியில் விசாரித்ததில் பருவம் அடைந்த வயதுப்பெண்களுக்கு நடைபெறும் விழாவென்றும், அதைப் ’பூப்பு நீராட்டு விழா’ என்று சொல்லுவார்கள் என்றும், ஏதேதோ தனக்குத் தெரிந்ததைச் சொன்னான் என் வயது நண்பன் ஒருவன்.

மொத்தத்தில் யாருக்கும் ஒன்றும் தெளிவாகத் தெரியவில்லையோ அல்லது எனக்குப் புரியும்படியாகத்தான் எடுத்துச் சொல்லத் தெரியவில்லையோ ! 

சரியென்று நானும் அதைப் பற்றி சந்தேகம் கேட்பதையே பிறகு ஒரு வழியாக விட்டு விட்டேன். 

  



அந்த விழா நடைபெற்ற பிறகு, அவளின் நடை உடை பாவனை தோற்றம், எல்லாவற்றிலும் ஒரு வித திடீர் மாற்றங்கள். 


திடீரென கொஞ்ச நாளிலேயே நல்ல சதை பிடிப்புடன் மொழு மொழுவென்று தேக அமைப்பு மாறி விட்டது. 

ஆப்பிள் போன்ற செழுமையான கன்னங்கள், ஆங்காங்கே அசத்தலான மேடு பள்ளங்கள் என ஆளே முற்றிலும் மாறி விட்டாள். 

என்னை “டா” போட்டு அழைப்பதும், அதிகாரமாக வேலை ஏவுவதும் மட்டும் இப்போதும் குறையவே இல்லை. அவள் எங்கு போனாலும் என்னையும் துணைக்கு அழைத்துப் போவதும், கடையில் வாங்கிய துணிமணிகள் போன்ற பொருட்களை என்னை விட்டு தூக்கி வரச்செய்வதுமாக, மொத்தத்தில் என்னை, ஒரு வேலையாள் போலவே நடத்தி வந்தாள். 

ஆனால் ஒன்று மட்டும் சொல்லியே ஆகவேண்டும். ஹோட்டலில் வயிறு முட்ட டிபனும், ஐஸ் க்ரீம் போன்றவையும், அவள் செலவிலேயே, அவ்வப்போது எனக்கு வாங்கித் தரவும் தவற மாட்டாள். 

நானும் அவளுடன் சிறு வயதிலிருந்தே பழகிய தோஷமோ என்னவோ தெரியவில்லை, வாலிப வயதாகிய எனக்கு அவள் மேல் நாளுக்கு நாள் ஒரு வித ஈர்ப்பும் இனக் கவர்ச்சியுமாக, என்னை ஆட்டிப் படைத்து வந்த ஏதோவொன்று, அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓடியாடி உதவிகள் செய்து வரச் செய்தது என்னை. 

எனக்கு இப்போதெல்லாம் அவளைப் பார்க்காவிட்டாலோ, அவளுடன் பேசாவிட்டாலோ, ஏதோ பைத்தியம் பிடித்தாற்போல ஒரு உணர்வு ஏற்பட்டு வருகிறது.

நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு போகும் போது, அவள் பொறியியற் கல்லூரியில் நுழைந்து படிக்க முயற்சித்து வருகிறாள். 

சிறந்த படிப்பாளியும், வருங்கால இஞ்ஜினியருமான அவளை, சாதாரணமானதொரு பட்டதாரியாகப் போகும் நான் என் சுமாரான நிறத்துடனும், மிகச் சாதாரணமான பெர்சனாலிடியுடனும், என்னுடைய வாழ்க்கைத் துணைவியாக அடைய முடியுமா?

அவளுக்கு என் மேல் ஒரு வித ஈர்ப்பும், ஈடுபாடும் ஏற்பட நான் என்ன செய்வது என்று யோசித்து, முடிவில் என்னுடைய ஓவியத் திறமைகளை முழுவதும் உபயோகித்து, என் மனதில் முழுவதுமாக நிறைந்துள்ள என் அன்புக்குரிய அவளை மிகப்பெரிய அளவில் ஓவியமாகத் தீட்டி வர்ணம் கொடுத்து வந்தேன்.

அவளின் அதே, ஆப்பிள் கன்னங்களுடன் படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. அதை ப்ரேம் போட்டு அவளுக்கு என் அன்புப் பரிசாக அளிக்க நினைத்துக் கொண்டிருந்தேன். 

நேற்று மாலை நல்ல ராயல் ஆப்பிள் பழமொன்று பெரியதாக வாங்கி வந்திருந்தேன். நான் வரைந்த அவளின் படத்தையும், படத்தில் நான் வரைந்துள்ள அவளின் ஆப்பிள் கன்னங்களையும், நான் வாங்கி வந்த ஆப்பிளையும் மாறி மாறிப் பார்த்து வெகுநேரம் ரசித்துக்கொண்டிருந்தேன்.

பிறகு ஆப்பிள் பழத்தைக் கத்தியால் எனக்கேயுள்ள காதல் கலையுணர்வோடு அழகாக வெட்டினேன்.


நான் கஷ்டப்பட்டு வரைந்திருந்த படத்திலிருந்த அவளின் கன்னத்தின் மேல், அந்த ஒரேயொரு துண்டு ஆப்பிளை வைத்து, குனிந்து என் வாயினால் கவ்வி ருசித்தேன். 
அவள் கன்னத்தையே நான், லேசாகக் கடித்து விட்டது போன்ற ஒரு வித இன்பம் எனக்கு ஏற்பட்டது. 

அந்த நேற்றைய இன்ப நிகழ்ச்சியையே மீண்டும் மீண்டும் என் மனதில் நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்த என் கையில், இப்போது அவளின் ஜாக்கெட் டெய்லரிடம் சென்று ஆல்டர் செய்து வரக் கொடுக்கப்பட்டுள்ளது. 


   

டைட்டான அவளின் ஜாக்கெட்டை லூஸாக்க, அவள் சொன்ன அந்த டெய்லரிடம் போய் அமர்ந்திருந்தேன். 


ஜாக்கெட்டை மட்டுமில்லாமல் என்னையும் லூஸாக்கி விட்டது அந்த டெய்லர் சொன்ன சமாசாரம். 



“யாரு சாமி, அந்தப் புதுப் பையன்? அந்தப் பொண்ணு அடிக்கடி ஒரு வாட்டசாட்டமான, சிவத்த, வாலிபனுடன் பைக்கில் உட்கார்ந்து ரெளண்டு அடிக்குது !” என்ற ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் அந்த டெய்லர். 

“யோவ் ! வாய்க்கு வந்தபடி ஏதாவது உளறாதே; அவள் அப்படிப் பட்ட பெண் இல்லை” என்றேன் நான். 

“நான் இப்போ என்ன சொல்லிப்புட்டேன்னு நீங்க கோச்சுக்கிறீங்க? 

அந்தப் பையன் யாருன்னு உங்களுக்குத் தெரியுமோன்னு கேட்டேன். தெரிந்தா யாருன்னு சொல்லுங்க; இல்லாவிட்டால் தெரியாதுன்னு சொல்லிட்டுப் போங்க !

அந்தப் பையன் ஏதாவது சொந்தக்கார முறைப் பையனாக் கூட இருக்கலாம். அல்லது நண்பனாக இருக்கலாம். கூடவே அந்தப் பெண்ணுடன் காலேஜில் படிப்பவனாகக் கூட இருக்கலாம். 

கம்ப்யூட்டர், சாட்டிங் அல்லது செல் போன் தொடர்புன்னு ஏதேதோ நியூஸ் பேப்பர்களில் போடுறாங்களே அது போல கூட இருகலாம். 

ஏதோ பாய் ஃப்ரண்டுன்னு சொல்றாங்களே அதுவாகவும் கூட இருக்கலாம்.

அவன் யாராக இருந்தாலும் சரி; நமக்கு எதற்கு வீண் ஊர் வம்பு” 
என்று சொல்லி, கைப்பக்கம் சற்று லூஸாக்கிய அந்த ஜாக்கெட்டை ஒரு பேப்பர் பையில் போட்டு என்னிடம் கொடுத்தார் அந்த டெய்லர். 

இதையெல்லாம் கேட்ட எனக்கு ஒரே பதட்டமாகிப் போனது. ஜிகினாஸ்ரீ ஒரு வேளை எனக்குக் கிடைக்காமல் போய் விடுவாளோ? 

இனியும் தாமதிக்காமல் அவளிடம் என் காதலைத் தெரிவித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேனே தவிர, அவளிடம் எப்படி ஆரம்பிப்பது, எப்படிப் பேசுவது என்பது ஒன்றும் புரியாமல் ஒரே குழப்பமாக இருந்தது, எனக்கு. 

தன் புது ஜாக்கெட்டை கையில் வாங்கிக் கொண்டவள்,

“தாங்க்யூ.....டா சீமாச்சூஊஊ...” என்றாள். 

அப்போதே சுடச்சுட அவளிடம் ஏதோ கேட்க நினைத்த நான், சற்றே தயங்கினேன். 

“அந்த டெய்லர் உன்னிடம் ஏதாவது கேட்டானா” என்றாள் அவளாகவே. 

“நீ யாருடனோ பைக்கில் ஊர் சுற்றுகிறாயாமே; அதை அவர் பார்த்து விட்டதில் உனக்கு ஒரு குற்ற உணர்ச்சியோ ! அதனால் தான் நீ டெய்லர் கடைக்குச் செல்லாமல் என்னை அனுப்பினாயோ?” 

கேட்டுவிடலாமா என்று நினைத்தும் என் வாயிலிருந்து வார்த்தைகள் வெளியே வர மறுத்தன.

“அந்த டெய்லர் என்னிடம் என்ன கேட்பார் என்று நீ எதிர்பார்க்கிறாய்?” என்றேன், மிகவும் புத்திசாலித் தனமாக அவளை மடக்குவதாக நினைத்து. 

”நீ சுத்த ட்யூப் லைட்டுடா, சீமாச்சூ; ஜாக்கெட்டை லூஸாக்கிக் கொடுத்தற்கு ஏதாவது காசு கேட்டானா?” என்றாள் சர்வ அலட்சியமாக. 

“அதெல்லாம் ஒண்ணும் கேட்கவில்லை. எல்லாமே அவன் செய்த கோளாறு தானே,  எப்படிக் கேட்பான்” என்று மட்டும் சொல்லிவிட்டு என் வீடு நோக்கி சென்று விட்டேன்.

    

நான் வரைய ஆரம்பித்த அவளின் படத்தை பைனல் டச் அப் செய்து, கீழே ஜிகினாஸ்ரீ என்கிற ஜெயஸ்ரீ என்று எழுதி, என் கையொப்பமிட்டு, ப்ரேம் செய்து கொண்டு வந்து விட்டேன்.

என் தாயாரிடம் மட்டும் காட்டினேன். “சபாஷ்...டா ஸ்ரீனிவாஸா, சூப்பரா வரைந்திருக்கிறாய். வரும் பதினெட்டாம் தேதி அவளுக்கு பிறந்த நாள் வருகிறது. அப்போது கொண்டுபோய் அவளிடம் கொடு. ரொம்பவும் சந்தோஷப்படுவாள்” என்றாள் என் அம்மா. 

“தாங்க் யூ..... ம்மா” என்றேன். 

ஆனால் பதினெட்டாம் தேதிக்கு, முழுசா இன்னும் பத்து நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்தப்பத்து நாட்களும் பத்து யுகமாக, நத்தை வேகத்தில் நகர்ந்தன. 

ஒருவழியாக அந்தப் பதினெட்டாம் தேதியும் வந்தது. 

நானும் என் அம்மாவும் அவர்கள் வீட்டுக்குப் புறப்பட்டோம். ஞாபகமாக அழகிய பேப்பர் கலர் பேக்கிங்குடன் படத்தை ஒரு ஃபேன்ஸி பையில் போட்டு கையில் எடுத்துச் சென்றேன்.

அவர்கள் வீட்டுக்குள் நுழையும் போதே, நிறைய ஜோடி காலணிகள் வீட்டு வாசலில் கிடந்ததைக் காண முடிந்தது. 

உள்ளே அங்கு யார் யாரோ புது முகங்களுடன், பழத்தட்டுகள் மற்றும் பரிசுப் பொருட்களுடன் சோபாவில் அமர்ந்திருந்தனர்.

எங்களை ஜிகினாஸ்ரீயின் பெற்றோர்கள் வரவேற்று அமரச் செய்தனர். அவர்களுக்கு எங்களையும், எங்களுக்கு அவர்களையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தனர். 

டெய்லர் சொன்ன அதே வாட்டசாட்டமான சிவத்த வாலிபன், என் கையைப் பிடித்து குலுக்கியவாறே “அயம்... சுரேஷ்... சாப்ட்வேர் இஞ்சினியர்.... டி.ஸி.எஸ்; நெள அட் யுனைடெட் ஸ்டேட்ஸ்; ஜெயஸ்ரீயின் அத்தை பிள்ளை தான் நான்; கிளாட் டு மீட் யூ; ஜெயஸ்ரீ உங்களைப்பற்றி நிறைய என்னிடம் சொல்லியிருக்கிறாள்” என்றான். 

புத்தம் புதியதொரு பட்டுப்புடவையில், சர்வ அலங்காரங்களுடன், என் ஜிகினாஸ்ரீ, கையில் ஒரு ட்ரேயில் ஸ்வீட் காரம் முதலியன எடுத்து வந்து, மிகவும் நிதானமாக, முகத்தில் வெட்கத்துடன் கூடிய புன்னகையுடன், எல்லோருக்கும் விநியோகம் செய்ய ஆரம்பித்தாள். 

என்னைப் பார்த்ததும் “வாடா சீமாச்சூ, நீ எப்போ வந்தாய்? என்னுடைய ’வுட் பீ’ சுரேஷைப் பார்த்தாயா, உனக்கு அவரைப் பிடித்திருக்கிறதா?” என்று கேட்டாள்.

“பார்த்தேன், உனக்கு எல்லா விதத்திலும் மிகவும் பொருத்தமானவரே” என்றேன்.

என் கையிலிருந்த, நான் வரைந்துள்ள அவளின் படத்தை, அவளிடம் கொடுக்கத் தோன்றவில்லை எனக்கு. 

ஆனாலும் அவளாகவே என் கையிலிருந்து வெடுக்கென அதைப் பிடுங்கிக் கொண்டு பிரித்துப் பார்த்து, அசந்து போனாள். 

“யூ ஆர் ரியல்லி வெரி கிரேட்....டா..... சீமாச்சூ” என்று கூறி என் கையைப் பிடித்து ஒரு குலுக்குக் குலுக்கி, விரல்களை முத்தமிட்டு, தன் கண்களில் ஒத்திக் கொண்டாள். 

பிறகு தன் வருங்காலக் கணவன் சுரேஷிடம் அந்தப் படத்தை நீட்டினாள். அவரும் அதை ரசித்துப் பார்த்து விட்டு, எழுந்து என்னிடம் ஓடி வந்து என்னைக் கட்டித் தழுவிக் கொண்டார். என்னை மிகவும் புகழ்ந்து பாராட்டினார்.

“எப்படி ஸார், இவ்வளவு தத்ரூபமாக வரைய முடிகிறது உங்களால்?” என்றார் சுரேஷ். 

“எந்த உருவம் என் மனதில் ஆழமாகப் பதியுமோ, அதை என் கைகள் மிகச் சுலபமாக வரைந்து விடும்” என்று சொல்லத் துடித்தது, என் உதடுகள். ஆனால் நான் எதுவுமே சொல்லவில்லை. 

“எங்க சீமாச்சூ .... சின்ன வயதிலிருந்து நன்றாக படங்கள் வரையுவான். எனக்கு சயன்ஸ் டயக்ராம் எல்லாம் இவன் தான் வரைந்து தந்து உதவுவான். படம் வரைவதில் எங்கள் சீமாச்சூ... சீமாச்சூ... தான்” என்று பெருமையாகக் கூறினாள், ஜிகினாஸ்ரீ. 

சுரேஷுக்கும் ஜெயஸ்ரீக்கும் வரும் தை பிறந்ததும் கல்யாணம் நடத்தலாம்னு இருக்கிறோம் என்று பொதுவாக அங்கு கூடியிருப்பவர்களுக்கும், எங்களுக்குமாக ஒரு தகவல் போல, ஜெயஸ்ரீயின் அப்பா மிகுந்த சந்தோஷத்துடன் தெரிவித்தார்.

“டேய், சீமாச்சூ, இந்தக் கல்யாணம் முடியும் வரை நிறைய வேலைகள் இருக்கும்....டா. நீ தான்...டா எனக்குக் கூடமாட இருந்து எல்லா உதவிகளும் செய்யணும். எனக்குக் கூடப் பிறந்த அண்ணன் தம்பிகள் யாரும் இல்லாத குறையை நீ தான்...டா தீர்த்து வைக்கணும்” என்று உத்தரவு பிறப்பித்தாள், என் அன்புக்குரிய ஜிகினாஸ்ரீ.

நான் வரைந்த ஓவியம் அவர்கள் வீட்டுச் சுவரில் ஆணி அடித்து அப்போதே மாட்ட ஏற்பாடானது. 

எவனோவொரு வேலையாள் சுத்தியலால் ஆணியை ஓங்கி அடிக்கும் போது, ஒரு ஆணி பறந்து வந்து, அங்கே அருகில் அமர்ந்திருந்த, என் நெற்றிப் பொட்டில் வேகமாக மோதித் தெறித்து கீழே விழுந்தது. நல்ல வேளையாக, என் கண் விழியினில் படாமல் தப்பியது. 

அதை யாரும் கவனிக்காத போதும், என்னால் மட்டுமே அந்த வலியை நன்கு உணர முடிந்தது. 

’ஜெயஸ்ரீ’ வீட்டில் சிற்றுண்டி சாப்பிட்டிருந்த நான் எழுந்து அருகிலிருந்த, வாஷ்பேசினில் கை கழுவிக் கொண்டேன்.



oooooOooooo



எனது விமர்சனம்



பருவமடைதல் என்பது ஆண்  பெண் இருபாலருக்கும் பொதுவானதே. ஆனால், ஒரு பெண் பருவமடைந்ததும்,  அது ஓர் பெரும் விழாவாக கொண்டாடப் படுகிறது. அந்தச் சமயத்தில் அப்பெண்ணிற்கு கிடைக்கும் சலுகைகள் எல்லாம், ஆண் பிள்ளைகட்கு பெரும் ஆச்சர்யமாகவே தோன்றுகிறது. அப்போது, அந்தப் பிள்ளைகட்கு நாமும் இவள் வயதைத் தாண்டித் தானே வந்துள்ளோம், நமக்கு இப்படி ஓர் விமரிசையான விழா எதுவும் நடத்தப் படவில்லையே என்றொரு ஐயம் மனதுள் எழுகிறது.
மேலும், ஒரு பெண்ணுள் ஏற்படும் திடீர் பருவ மாற்றம் ஒரு ஆண் பிள்ளையின் மனதில், அதுவும் பதின்ம வயதுப் பாலகர்களின் மனதில் பெரும் கேள்விகளை எழுப்புகிறது. ஆனால், இதைப் பற்றி வெளிப்படையாக விவாதிக்கவோ, தெளிவாக விளக்கம் கேட்கவோ, யாரை நாடுவது என்ற தயக்கம். அப்படிக் கேட்பது என்பதும் பெரும் தவறாகவே எண்ணப்படுகிறது. இதனால், சம வயதுள்ள சிறுவர்கள் தங்களுக்குத் தெரிந்ததை, தங்களுக்குள்ளாகவே விவாதித்துக் கொள்கிறார்கள். பெண் என்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான எண்ணங்களை கொள்கிறார்கள். எது சரியானது, எது தவறானது என்பத அவர்கள் அறிவதில்லை.இதனால், பெண் என்றால் ஒரு பெரும் மாயை. அந்த மாயையினுள் என்ன தான் உள்ளது என்று அறிந்து கொண்டு விட வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்குகிறது.
முதன் முதலில் ஒரு இளைஞனுக்கோ யுவதிக்கோ வரும் முதல் ஈர்ப்பானது, அவர்களுடன் பழகும் ஒருவரின் மீதே ஏற்படுகிறது. அது உடன் பயிலும் சக மாணவன் / மாணவி, உறவினர்கள் ( அத்தை/மாமா மகன்/மகள் ), பக்கத்து வீட்டிலிருக்கும் பெண் /  ஆண்  இவர்களில் எவராகவேனும் இருக்கலாம். அப்படித் தான் இங்கு ஸ்ரீனிவாசன் என்கிற சீமாச்சுவிற்கு பக்கத்து வீட்டிலிருக்கும் ஜெயஸ்ரீ என்கிற ஜிகினாஸ்ரீ யின் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது.அந்த ஈர்ப்பு அவனுள் காதலாகவும் மலர்கிறது.
ஜெயஸ்ரீயின் மீது கொண்ட அளப்பறியா அன்பே , சீமாச்சு அவளுக்காக அனைத்து உதவிகளையும், அவள் இடும் ஏவல்கலையும் செய்யத் தூண்டுகிறது.மனதில் பதிந்த அவளது உருவத்தையும் ஓவியமாக எழுதச் செய்கிறது. அவளைப் பற்றி ஊரார் பேசும் அவச் சொற்களைக் கேட்டு சீறிப் பாயச் செய்கிறது.
ஒருவரைப் பற்றி மனதில் தோன்றும் எண்ணங்களை , உணர்வுகளை அவ்வப்போது வெளிப்படுத்தி விடவேண்டும். அப்படி செய்யத் தவறிப்போய்  மனதிற்குள்ளேயே பதுக்கி வைத்துக் கொண்டால்,  அதை பின்னாளில் சொல்லக் கூட வாய்ப்பு கிட்டாது போய்விட நேரலாம்.அப்படி ஓர் சூழ்நிலைக்குத் தான் தள்ளப்பட்டு விடுகிறான் ஸ்ரீனிவாசன்.
தான் மனதில் நினைத்த பெண், வேறொருவரை வாழ்க்கைத் துணையாக நிர்ணயித்து, அவரை தனக்கு அறிமுகம் செய்து வைக்கும் பொழுது, தனக்கு ஏற்பட்ட பெருத்த ஏமாற்றத்தை வெளியில் காட்டிக் கொள்ளாது, அமைதியாய் அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அனைவருக்கும் எளிதில் வாய்த்து விடாது.என்ன தான் ஏற்றுக் கொண்டாலும், காதல் ஏற்படுத்திய காயத்தின் வடு நெஞ்சைவிட்டு ஓர் நாளும் அகலாது. சீமாச்சு தன் மனதை ஒருவாறு சமாதானப் படுத்திக் கொண்டதை ஆசிரியர் "கை கழுவிக் கொண்டான்" என்று சொல்கிறார்.
ஆணோ, பெண்ணோ ஒருவரது மனதில் தோன்றும் காதல் என்பது, பசுமையான மரத்தில் அறைந்த ஆணியைப் போன்றது. தவிர்க்க முடியாத சந்தர்ப்ப சூழ்நிலைகளால்  அந்த ஆணியை பிடுங்கி எறிய நேரிட்டாலும் (காதலை துறக்க நேரிட்டாலும் ), அது ஏற்படுத்திய வடுவானது, காலத்திற்கும் மனதின் ஏதோ  ஓர்  மூலையில் இருந்து கொண்டே தான் இருக்கும்.

நல்லதோர் வாய்ப்பளித்த திரு. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் .

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மேலும் பல பரிசுகள் பெற வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

அருமையான விமர்சனம்..பாராட்டுக்கள்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஒருவரைப் பற்றி மனதில் தோன்றும் எண்ணங்களை , உணர்வுகளை அவ்வப்போது வெளிப்படுத்தி விடவேண்டும். அப்படி செய்யத் தவறிப்போய் மனதிற்குள்ளேயே பதுக்கி வைத்துக் கொண்டால், அதை பின்னாளில் சொல்லக் கூட வாய்ப்பு கிட்டாது போய்விட நேரலாம்.//

ஆஹா, மிகவும் அருமையாக அழகாகத்தான் எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். ;)

இதுபோன்று எடுத்துச்சொல்லக்கூடிய வாய்ப்புகள்கூட கிட்டாமல் போய்விடுகின்றன. ;(

இந்தத்தங்களின் பகிர்வுக்கும், இந்தப்பதிவினைப்பற்றி எனக்குத் தகவல் தந்தமைக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

அன்புடன் கோபு

Tamizhmuhil Prakasam said...

@ திண்டுக்கல் தனபாலன்
தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

Tamizhmuhil Prakasam said...

@ இராஜராஜேஸ்வரி

தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி.

Tamizhmuhil Prakasam said...

@ வை.கோபாலகிருஷ்ணன்

தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

Post a Comment