blank'/> muhilneel: காதல் காதல் காதல்.. காதல் போயின்......

Monday, March 3, 2014

காதல் காதல் காதல்.. காதல் போயின்......

gmb writes  தளத்தில் எழுதி வரும் ஐயா.  திரு.G. M . பாலசுப்ரமணியம் அவர்களின் காதலர் தின சிறப்புக் கதைக்கான முடிவினை எழுதும் போட்டிக்காக எழுதப் பட்டது.

காதல் காதல் காதல்.. காதல் போயின்......



பாபு காதல் வயப் பட்டிருந்தான். கண்டதும் காதல் கேஸ்தான் இருந்தாலும் என்ன. ? யாரைக் கண்டாலும் காதல் வந்து விடுமா என்ன.?ஏதோ ஒரு ஈர்ப்பு.நிச்சயம் உடல் சார்ந்தது அல்ல.  பாபு நிச்சயம் எந்தக் கோவிலிலும் வேண்டுமானாலும் சூடம் ஏற்றி சத்தியம் செய்வான் இத்தனைக்கும் அந்தப் பெண்பற்றிய எந்த விவரமும் பாபுவுக்குத் தெரியாது. ஆனால் இது ஒரு அமர காதல் என்று நிச்சயம் நம்பினான்.கூடவே இது அமர காதலாயிருக்கக் கூடாது என்றும் வேண்டினான். ஏனென்றால் அமர காதல் என்று சொல்லப் படுபவை எல்லாம் தோல்வியில் முடிந்தவையே என்பதால் அச்சம் கொண்டான். சரி காதல் வந்தாய் விட்டது. ஆனால் இது ஒருதலை ராகமாக இருக்கக் கூடாதுஎன்றும் நினைத்துக் கொண்டான். அவளுக்கும் இவன் மீது “இது இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டாமா.?
அவளை சந்தித்துத் தன் காதலை வெளிப்படுத்தி விட வேண்டும் எப்படி எங்கு சந்திப்பது. அடுத்து இருக்கும் பூங்காவுக்கு வரச் சொல்லலாமா? சரி எப்படிச் சொல்வது. ? திடீரென்று அவள்முன் தோன்றி..... தோன்ற என்ன இவன் மந்திரவாதியா...யோசித்து யோசித்து தலையில் இருக்கும் முடிகளைப் பிய்த்துக் கொண்டதுதான் மிச்சம் எதையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டும். எதையாவது செய்யப் போய் சும்மா சொதப்பி விடக் கூடாது. யாரை கொண்டாவது அவளை அறிமுகப் படுத்தச் சொல்லலாமா. ? தன்னை ஒரு gang  அலைக் கழித்தது அவன் நினைவுக்கு வந்தது. அந்த மாதிரி செய்ய இவன் ஒன்றும் தாதா இல்லையே. பார்க்க வாட்ட சாட்டமாயிருந்தாலும் இவன் மனதில் கோழை. கோழைகள் காதலிக்கக் கூடாதா....கோழையான இவனிடம் சிலர் அவனது எதிர் வீட்டுப் பெண்ணின் தொலை பேசி எண்ணை வாங்கிக் கொடுக்கச்சொன்னதும் இவன் “ஐயோ அண்ணே , எனக்கு முடியாது என்னை விட்டுடுங்கோ என்று கதறி அழுததும் நினைவுக்கு வந்தது.
காதல் வயப் பட்டால் பயப் படக் கூடாது. எதையாவது செய்து அவள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் முதலில் பேசவேண்டும் ஒரு நாள் திடீரென வந்த ஒரு வேகத்தில் பேப்பர் பேனாவை எடுத்தான் சில வரிகளைக் கிறுக்கினானவள் வரும் வழியில் திடீரென அவள் முன் தோன்றி” ”எனக்கு உன்னிடம் பேச வேண்டும் நாளை மாலை .  5 மணி எல்லா விவரங்களும் இந்தக் கடிதத்தில் “ என்று மூச்சு விடாமல் கூறி சிட்டாய்ப் பறந்து விட்டான். அவன் அப்படிப் பறக்க்க இரண்டு காரணங்கள் இருந்தன. இந்த திடீர் தாக்குதலில் அவள் என்ன செய்வதென்றோ என்ன நடக்கிறதென்றோ அறியும் முன்னர் இடத்தைக் காலிசெய்து விட வேண்டும். ஒரு வேளை அவள் சுதாரித்துக் கொண்டு கூக்குரல் இட்டால் தர்ம அடிதான் மிஞ்ச்லாம். ஆனால் ‘ அவள் வருவாளா. நாளை மாலை என்னைச் சந்திக்க வருவாளாஎன்று ஏதோ ராகத்தில் முணுமிணுத்துக் கொண்டான்
 சந்தியாவுக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை போகும் போதும் வரும் போதும் சும்மா முறைத்துப் பார்க்கிற பிள்ளைப் பூச்சிதான் என்று நினைத்திருந்தாள் ஆனால் இப்போது...... கடிதம் கொடுக்கிற வரை வந்து விட்டது இதன் தைரியம்.... இருந்தாலும் என்னதான் எழுதி இருக்கிறது என்று பார்க்க மனம் துடித்தது. வழியில் நின்று படித்துப் பார்க்கத் தயாராயில்லை. வீட்டுக்குப் போனதும் பாத் ரூமுக்குச் சென்று ஒருவித பட படப்புடன் அந்தத் துண்டுச்சீட்டை எடுத்துப் படித்தாள். படித்தவளுக்குச் ச்சேஎன்றாகி விட்டது. ஏதோ காதல் கடிதமென்று எண்ணியவள் ஏமாற்ற மடைந்தாள்.கன்னா பின்னாவென்று ஏதோ எழுதி இருப்பான் என்று எதிர் நோக்கியவள் அப்படி இல்லையே என்று ஏமாற்ற மடைந்தாள்.  அது சரி காதல் கடிதமாயிருந்தால் என்ன செய்திருப்பாய்.? என்று அவளது உள்மனம் கேட்டாலும் ‘என்னையும் ஒருவன் காதலிக்கிறான் என்றால் மகிழ்ச்சி அடைந்திருப்பேனோ யார் இவன் ? இவன் பேரென்ன.?என்ன எழுதி இருக்கிறான்? நாளை மாலை 5/-மணி......பூங்காவில் சந்திக்க வா. நிறையப் பேச வேண்டும்  என்ற அந்தத் துண்டுக்காகிதம் இவளைப் பார்த்து கேலி செய்வ்து போல் இருந்தது.இவன் வாவென்றால் வரவும் போ என்றால் போகவும் தான் என்ன இவனது காதலியா என்ன..? ஒருவேளை சென்று பார்த்தால் காதலிக்கத் துவங்கி விடுவேனோ.. அவனைப் போய்ப் பார்ப்பதா வேண்டாமா.... ஏன் பார்க்க வேண்டும்..? பார்த்தால் என்ன ... என்னதான் செய்து விடுவான் ... கடித்துக் குதறுவானோ... சே அது மாதிரி செய்யத் தைரியம் வேண்டும் ச்சீ என்ன நினைப்பு இது .?காதல் வார்த்தைகள் பேசுவானா என்பது,தவிர என்ன மாதிரி கடிப்பானா குதறுவானா என்றெல்லாம் எண்ண வைக்கிறது வெகு நேரம் பாத்த்ரூமில் இருந்தால் சந்தேகம் வந்து விடும். ஆகவே இன்னொரு தரம் அந்தத் துண்டுக் காகிதத்தை படித்துப் பார்த்தாள் நேரம் இடம் எல்லாம் உறுதிப் படுத்திக் கொண்டு அந்தக்காகிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்து டாய்லெட்டில் சிஸ்டெர்னைத் திறந்து அதில் போட்டாள்.காகிதத் துண்டுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
வெகு நேர சிந்தனைக்குப் பின் அவனைப் போய் பார்ப்பது என்று தீர்மானித்தாள். அவளை அந்த முடிவுக்கு வர வைத்தது எது. அவளுக்கும் அவனிடம் ஒரு ஈர்ப்போ? அப்போது எங்கோ ஒரு பாடல் ஒலித்தது “ இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே இறைவன் அன்று.சந்தியாவுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. இன்னும் அவனைப் போய்ப் பார்க்க இல்லைபேசவில்லை. அதற்குள் இன்னார்க்கு இன்னார் என்ற நினைப்பு வருவது ஏன்
சந்தியா படித்தவள் பலதும் கற்றவள். இந்தக் காலத்துப் பிரதிநிதி. எதையும் சிந்தித்தே செயல் படுவாள். ஆனால் இந்த மாதிரித் தருணங்களில் சிந்தனையை மழுங்கடிக்கக் கூடியது காதலும் அதன் விளைவுகளும்.
சரி.. சந்தியா பாபு சந்திப்பைப் பார்க்கலாம்.
பாபு பூங்காவில் சந்தியாவுக்காகக் காத்திருக்கிறான் ஆட்கள் அதிக நடமாட்டமில்லாத பகுதியில் காத்திருந்தான் அவள் வருவாளா மாட்டாளா என்றே குழம்பிக் கொண்டிருந்தவன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான் நான்கு மணிகூட ஆகவில்லை. கடிகாரத்தின் முள்ளைத் திருப்பி வைத்தால் காலம் வேகமாக ஓடிவிடுமா....அவசரமாகப் போக வேண்டியவன் ரயிலில் சீக்கிரம் போய்ச் சேர கடைசிப் பெட்டியிலிருந்து முதல்பெட்டிக்கு வந்தானாம்  என்னும் நினைப்பு ஏனோ வந்தது. நேரம் காலம் எல்லாம் நம் கட்டுக்குள்ளா இருக்கின்றன..?அந்தப் பெண் வந்தால்....வருவாளா ... அட வந்தால் என்ன பேசுவது. முதலில் அவள் பெயரைக் கேட்கவேண்டும். காதலிக்கும் பெண்ணின் பெயர் கூடத் தெரியாமல்...இருந்தால் என்ன. முதலில் எல்லாமே தெரிந்துதான் காதலிக்கிறோமா. பெயர் தெரியாவிட்டாலும் அவளை என்ன சொல்லி அழைப்பது..?அன்பே எனலாமா.... காதலியே எனலாமா.. என்ன சொல்லி அழைப்பது எப்படி அழைப்பது. நேருக்கு நேர் பேசும்போது நாச்சுரலாக இருக்க வேண்டாமா.....முதலில் ஹாய் என்றோ ஹல்லோ என்றும் ஏதாவது சொல்லிச் சமாளிக்கலாம். பிறகு இருக்கவே இருக்கிறது பேப்பரில் எழுதி வைத்திருக்கும் விஷயங்கள் அவள்முகம் கோணாமல் படித்தால் நிறையவே பேச வேண்டும் தூரத்தே யாராவது சேலை கட்டி வந்தால் அது சந்தியாவா என்று எதிர்பார்த்து எதிர் பார்த்து ஏமாந்து போனவன் சந்தியா அருகில் வந்ததை எப்படி காணாமல் போனேன் என்று குழம்பினான் அருகில் வந்த சந்தியா அவனிடம் ஹாய் என்றாள். இந்த ஆங்கில மொழியால் எவ்வளவு சௌகரியம். இவனும் ஹாய் என்று விஷ் செய்தான். “என்ன தைரியம் இருந்தால் துண்டுக்காகிதத்தில் எழுதி வரச் சொல்வீர்கள்..?என்று பிடி பிடிக்கப் போகிறாள் என்று பயந்து கொண்டிருந்தவன் அவள் புன்னகையுடன் ஹாய் சொன்னதும் அவனையே நம்பாமல் கிள்ளிப் பார்த்துக் கொண்டான்.உங்களைப் பார்க்க வேண்டும் உங்களிடம் பேச வேண்டும் என்னும் ஒரு உந்துதலே அந்தத் துண்டுக்காகிதம். இந்த முறை துண்டுக்காகிதமல்ல . நேர்த்தியாக எழுதப் பட்ட கடிதம். Please take yor time and read it என்றான். தமிழில் சொல்லத்தயங்குவது அன்னிய மொழியில் அனாயாசமாக வந்து விடுகிறது ஆங்கிலத்துக்கு ஜேசந்தியா கடித்ததை வாங்கி தன் ஜாக்கெட் உள்ளே பத்திரப் படுத்திக் கொண்டாள். “ ஐயோ என்ன அங்க வச்சுட்டீங்க படிக்கலையாஎன்று பாபு பதறினான் “ நீங்கள்தானே டேக் யுவர் டைம் என்றீர்கள்என்று சொல்லிக் கல கலவெனச் சிரித்தாள். ஏனோ அவளுக்கு பாபுவிடம் பலகாலம் பழகியதைப் போன்ற ஒரு  (B)பாவம் தோன்றியது.மீண்டும் ஜாக்கெட்டுக்குள் இருந்த அந்தக் கடிதத்தை எடுத்துப் படிக்கத் துவங்கினாள்  அவள் படிக்கும்போது அவளது முக பாவத்தையே பாபு பார்த்துக் கொண்டிருந்தான்.
“ உன்னை எப்படி அழைப்பதென்றே தெரியாமல் இக்கடிதம் எழுதினேன். அன்பே என்றழைக்கவா பேரழகே என்றழைக்கவா கண்ணே என்றழைக்கவா எப்படி அழைப்பேன் உன்னை எங்கே காண்பேன் “ இந்த இடம் வந்ததும் சந்தியா தலதூக்கி பாபுவைப் பார்த்துப் புன்னகைத்தாள் அதைப் பார்த்ததும் பாபுவுக்கு தலைகால் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது “ இதையே  சௌந்திரராஜன் குரலில் பாடிப் பார்த்தீர்களா.? என்று சந்தியா கேட்டதும் இவ்வளவு எளிதில் காதல் கைகூடும் என்று எண்ணிப்பார்க்காத பாபு நிறையே அசடு வழிந்தான்
பிறகு தன் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு ஒரு பிடி சாக்கலேட்டுகளை சந்தியாவுக்குக் கொடுத்தான் “ உன் இந்தப் பார்வைக்கு எது கொடுத்தாலும் தகும். ஆனால் தற்சமயம் இந்த இனிப்பே உள்ளது “ என்றவன் மேலே படிக்கச் சைகை காட்டினான்எப்படி அழைத்தாலும் உன் பெயர் சொல்லி அழைப்பதே சுகம் அல்லவா. உன் பெயரென்ன “ இதைப் படித்ததும் “ சந்தியாஎன்று கூறி முறுவலித்தாள்.என் பெயர் என்ன வென்று கேட்க வில்லையே என்ற பாபுவைப் பார்த்து சந்தியா “ பாபுஎன்றாள் “ அதெப்படி உனக்குத் தெரியும்?கடிதத்தின் கடைசியில் உங்கள் பெயரை முதலிலேயே பார்த்து விட்டேனே
“ ஓ.. பலே ஆள்தான் மேலே படி “ 
நிதானமாகப் படித்துக் கொள்கிறேன் இப்போதான் நேருக்கு நேர் பார்க்கிறோமே பேசிக் கொள்ளலாம் “ என்றாள் சந்தியா. இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் கேட்டுத்தெரிந்து கொண்டனர்
இப்படிக்கண்டதும் காதல் என்பதில் உனக்கு உடன் பாடாஎன்று பாபு கேட்டான். அந்த நிமிஷத்தில் அவன் வாயில் சனி இருந்திருக்க வேண்டும்

எனது தொடர்ச்சி

பாபுவிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர் பார்க்காத சந்தியா, " என்ன பாபு இப்படி கேக்கறீங்க ? ஆணோ  பெண்ணோ , ஒருவரது மனதில் காதல் குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட காரணத்தால் தான் மலரும் என்று சொல்ல முடியாது. அப்படி நேரம், காலம், காரண காரியம் குறித்துக் கொண்டு வருவது காதலே இல்லை என்பது என் கருத்து."

என்னைக் கண்டு உங்களது காதலைச் சொல்ல வேண்டுமென்ற எண்ணத்தில், என்னை ஐந்து மணிக்கு பூங்காவிற்கு வரச் சொல்லி கடிதம் கொடுத்தீர்களே, அப்படி ஒரு கடிதத்தைக் கொடுக்க உங்களுக்கு உந்துதலாய் இருந்தது என்ன ? காதல் தானே. அதே காதல் தான் இன்று என்னையும் உங்களின் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

காதல் என்பது என்ன ? உங்கள் மீது நானும், என் மீது நீங்களும் கொண்ட நம்பிக்கையின் பெயரே காதல். நாம் ஒன்றின் மீது வைக்கும் நம்பிக்கையினை, உண்மையான நம்பிக்கை, பொய்யான நம்பிக்கை என்று பிரித்துக் கூறுவோமா ?  இல்லையே ! அது போல் தான். காதல் என்பது உண்மையானது. என் மீது கொண்ட நம்பிக்கையினாலே தானே, எனக்கு கடிதம் எழுதினீர்கள் ? அந்தக் கடிதம் எழுதத் தூண்டியது எது ? என்னைக் கண்டதும் உங்களது உள்ளத்தில் என் மீது தோன்றிய அளப்பறியா அன்பு தானே. அந்த அளப்பறியா அன்பே காதல். உங்களது அன்பின் மீது உங்களுக்கு சந்தேகம் ஏதும் இல்லையே ?

என்ற சந்தியாவின் வார்த்தைகளைக் கேட்டதும் மனம் தெளிவுற்றவனாய், சந்தியாவின் கரங்களைப் பற்றினான் பாபு. பறவைகள் இவர்களது காதலுக்கு வாழ்த்து தெரிவித்து இன்னிசைப் பாடல்கள் பாட, மரங்கள் காற்றிலாடி இசை மீட்ட, பாபு - சந்தியா மனதில் காதல் அரங்கேறியதைப் போல், அருமையானதோர் இன்னிசைக் கச்சேரி அங்கு அரங்கேறியது.


கதையின் முடிவினை எழுத வாய்ப்பளித்த ஐயா அவர்கட்கு நன்றிகள் பல.

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றாக முடித்துள்ளீர்கள்... ஐயாவின் மனதில் இன்னிசைக் கச்சேரி அரங்கேற்றம் நடத்ததா என்பதை பார்ப்போம்...

வெற்றி பெற வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

(சின்ன வேண்டுகோள்... side-ல் உள்ள ....drop your ceomment - (http://images.blogaholicnetwork.com/tags/BLOGAHOLIC%20tag.gif) -யை எடுத்து விடலாமே... பகிர்வைப் படிப்பதற்கு சிரமமாக உள்ளது...

நன்றி...

இராஜராஜேஸ்வரி said...

அரங்கேறிய அருமையான முடிவு..பாராட்டுக்கள்..!

G.M Balasubramaniam said...

கதையின் என் முடிவை திரு.பாலகணேஷிடம் கொடுத்து இருக்கிறேன். பதிவை அவருக்குத் தெரியப் படுத்துகிறேன். பங்கேற்று மீதிக்கதை எழுதியதற்கு நன்றி. வாழ்த்துக்கள்.

Tamizhmuhil Prakasam said...

@ திண்டுக்கல் தனபாலன்

தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

"drop your comment " gadgetஇனால் ஏற்பட்ட சிரமத்தை அறியத் தந்தமைக்கு நன்றிகள் ஐயா. அதை நீக்கி விட்டேன்.

Tamizhmuhil Prakasam said...

@ இராஜராஜேஸ்வரி

தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி.

Tamizhmuhil Prakasam said...

@ G.M Balasubramaniam

போட்டியில் பங்கேற்க வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள் பல ஐயா.

தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

Post a Comment