blank'/> muhilneel: March 2014

Thursday, March 27, 2014

திரு. காமராஜர் அவர்கள் பயன்படுத்திய கார்


காமராஜர் அந்த நாளில் தமக்கு சொந்தமாக ஒரு கார் வாங்கியதில்லை. கட்சியின் சார்பில் கொடுத்தும் பெற்றுக் கொள்ளாதவர் . பல ஆண்டு காலமாகவே திரு .டி.வி .சுந்தரம் அவர்கள் கொடுத்த .எம்.டி .டி .2727 என்ற எண் கொண்ட காரையே பெருந்தலைவர் பயன் படுத்தினார். வேறு கார் வாங்கிக் கொடுக்க முயன்றும் பெருந்தலைவர் ஒப்புக் கொள்ளவில்லை எந்நாளும் மக்களின் வரிப் பணத்தை சிக்கனப் படுத்தியவர்.மக்களின் உழைப்பை வீணாக்காத தலைவர். நாட்டைத் தன் குடும்பமாக நினைத்தவர்  நம் பெருந்தலைவர் அவர்கள் தான்.

நன்றி,  Facebook

அமுதைப் பொழியும் நிலவே ! - சிறுகதை விமர்சனம்


'அமுதைப் பொழியும் நிலவே !'

[சிறுகதை]

By வை. கோபாலகிருஷ்ணன்





என் அலுவலகத்திற்கு மட்டும் அன்று விடுமுறை. காலை சுமார் ஆறரை மணி இருக்கும். வீட்டிலே அடுத்த மூன்று மணி நேரங்களுக்கு மின் வெட்டு அமுலில் இருக்கும் என்பதால், காற்று வாங்கவேண்டி காலாற நடந்து கொண்டிருந்தேன்.

திருச்சிக்குப் புதியதாக, அரசால் ஒரு சில தொடர் பேருந்துகள் (மிக நீளமான ரயில் பெட்டிகள் போல இணைக்கப்பட்டிருக்கும் இரண்டு பஸ்கள்) விடப்பட்டுள்ளன. அதில் பயணிக்க வேண்டும் என்று எனக்கும் பல நாட்களாக ஒரு ஆசை உண்டு. நேற்று வரை அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. 


அந்தத் தொடர் பேருந்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கென்னவோ விசித்திரமான ஒரு சில நினைவுகள் அடிக்கடி வருவதுண்டு. 

சிறு வயதில் நான் கண்ட மழைக்கால ‘மரவட்டை’ என்று அழைக்கப்படும் ரெயில் பூச்சியைப் போல அது நீளமாக இருப்பதாக மனதில் தோன்றும். 

மேலும் என்றோ ஒரு நாள், தெருவில் வால் பக்கமாக இணைந்தபடி இரு பைரவர்கள் என் கண்களில் பட்டனர். அந்த இரு பைரவர்களைப் போலவே இந்த இரண்டு பேருந்துகளையும் மிகவும் கஷ்டப்பட்டு இணைத்துள்ளார்களே என்றும் நினைத்துக் கொள்வதுண்டு.


சுப்ரமணியபுரம் டீ.வி.எஸ். டோல்கேட் அருகே, இன்று ரோட்டில் நடந்து சென்ற என்னை உரசுவது போல என் அருகே தொடர்பேருந்து ஒன்று வந்து நின்றது. 

கும்பல் அதிகமாக இல்லாததால், நானும் அதில் ஏறிக்கொண்டு, ஜன்னல் பக்கமாக ஒரு இருக்கையில் காற்று நன்றாக வரும்படி அமர்ந்து கொண்டேன்.


அந்தப் பேருந்து பொன்மலைப்பட்டியிலிருந்து துவாக்குடி வரை செல்வதாக அறிந்து கொண்டேன். காற்றாட துவாக்குடி வரை போய்விட்டு இதே பேருந்தில் திரும்ப வந்து விட்டால், வீட்டில் மின் தடையும் நீங்கி விடும். பாதி விடுமுறையை பஸ்ஸிலும், மீதியை வீட்டிலும் கழித்து விடலாம் என்று கணக்குப் போட்டு, துவாக்குடி வரை செல்ல ஓர்  பஸ் டிக்கெட் வாங்கிக் கொண்டேன். 


வெறும் காற்று வாங்க வேண்டி, காசு கொடுத்துப் பயணமா, என நீங்கள் கேட்பது எனக்கும் புரிகிறது. நான் என்ன செய்வது? மின் வெட்டுச் சமயங்களில் என்னைப்போன்ற சாமான்ய மனிதனின் பிழைப்பும் இன்று நாய்ப் பிழைப்பாகத்தானே உள்ளது !


வண்டி நகர்ந்த சிறிது நேரத்திலேயே வீசிய காற்று மிகவும் சுகமாக இருந்தது. அடுத்தப் பேருந்து நிறுத்தத்திலேயே இளம் வயதுப் பெண்கள் பலரும் ஏறிக் கொண்டு பேருந்தை கலகலப்பாக்கினர்.

கும்மென்று ஒரே மல்லிகை மணம் கமழ ஆரம்பித்தது. 



 

எனது பக்கத்து இருக்கையில் ஒரு அழகு தேவதை வந்து அமர்ந்தாள். 





“எக்ஸ்க்யூஸ் மீ, ஸார், இந்த பஸ் பீ.ஹெச்.ஈ.எல். [B H E L] வழியாகத் தானே போகிறது?” 

“ஆமாம், நீங்கள் எங்கே போகணும்?


“ பீ.ஹெச்.ஈ.எல். [B H E L] இல் உள்ள ‘வெல்டிங் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்’ க்கு எட்டு மணிக்குள் போய்ச் சேரணும், ஸார்; தயவுசெய்து ஸ்டாப்பிங் வந்ததும் சொல்லுங்கோ ஸார்” என்று குழைந்தாள்.


[குறிக்கோள் ஏதும் இல்லாமல் புறப்பட்ட என் பயணத்தில், பிறருக்கு, அதுவும் ஒரு அழகு தேவதைக்கு, உதவும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை நழுவ விடக் கூடாது என்பதில் நான் உறுதியானேன்.

பல்வேறு பில்டிங் காண்ட்ராக்ட் விஷயமாக, பல முறை இவள் போக வேண்டியதாகச் சொல்லும் இடத்திற்கு நான் சென்று வந்துள்ளதால், அது எனக்கு மிகவும் பரிச்சயமான இடமாக இருப்பதும், ஒரு விதத்தில் நல்லதாகப் போய் விட்டது]


“ஓ...கட்டாயமாகச் சொல்கிறேன். நானும் அங்கே தான் போகிறேன். நீங்கள் என்ன வேலையாக அங்கே போகிறீர்கள்?” 


”நான் பாலக்காட்டிலிருந்து வந்துள்ளேன். ஐ.டி.ஐ. தொழிற்கல்வி பயின்றுள்ளேன். உலோகப் பற்றவைப்பை சிறப்புப் பாடமாக கற்றுள்ளேன். வெல்டிங் சம்பந்தமாக உலகத்தரம் வாய்ந்த சிறப்புப் பயிற்சி எடுக்கப்போகிறேன். 

இதோ எனக்கு வந்துள்ள அழைப்புக் கடிதம். இன்று முதல் ஒரு மாதம் அந்த ட்ரைனிங் எடுக்கணும். தினமும் வரணும். இன்று முதன் முதலாகப் போவதால், பஸ் ரூட், வழி முதலியன தெரிந்து கொள்ள வேண்டியதாக உள்ளது”. என்றாள் மலையாளம் கலந்த பாலக்காட்டுத் தமிழில். 



அழைப்புக் கடிதத்தை வாங்கி நான் நோட்டமிட்டேன். 

பெயர்: அமுதா. வயது: 19, கனிந்த பருவம், அழகிய உருவம், அரைத்த சந்தன நிறம், மிடுக்கான உடை, துடுக்கான பார்வை, வெல்டிங் சம்பந்தமாக ட்ரைனிங் எடுக்கப்போகிறாள்.


அவளின் வெல்டிங் - ட்ரைனிங் முடியும் இந்த ஒரு மாத காலத்திற்குள் அவளுடன் என்னையும் நான் வெல்டிங் செய்து கொள்ள வேண்டும். முடியுமா? முயற்சிப்போம். என்னுள் பலவிதமான எண்ணங்கள் அலை மோதி, மனதில் பட்டாம் பூச்சிகள் சிறகு விரித்துப் பறக்கத் தொடங்கின.







  

“இந்த பஸ் நேராக நீங்கள் போக வேண்டிய BHEL Welding Research Institute என்கிற இடத்துக்குப் போகாது. திருவெறும்பூர் தாண்டியதும் ஒரு மிகப்பெரிய ரவுண்டானா வரும். அதை ‘கணேசா பாயிண்ட்’ என்று சொல்லுவார்கள். அங்கே இறங்கி ஒரு ஆட்டோ பிடித்து போய்விடலாம்” என்றேன்.

”ஓ. கே. ஸார், ஆட்டோவுக்கு எவ்வளவு நான் பணம் தரும்படியாக இருக்கும்?” என்றாள். 


“நோ ப்ராப்ளம்; நானே ஆட்டோவில் கொண்டு போய் உங்களை அந்த இடத்தில் விட்டுவிடுகிறேன். எனக்கும் அந்தப் பக்கம் ஒரு வேலை உள்ளது. நீங்களும் எட்டு மணிக்குள் அங்கு போய்ச் சேர வேண்டுமே! ... அதிருக்கட்டும் ... திருச்சியில் மேலும் ஒரு மாதம் தாங்கள் தங்கி ட்ரைனிங் எடுக்கணுமே, யாராவது சொந்தக்காரர்கள் இருக்கிறார்களா? எங்கு தங்கப் போவதாக இருக்கிறீர்கள்?” 

“நேற்று இரவு மட்டும் கல்லுக்குழி என்ற இடத்தில் உள்ள என் சினேகிதியின் வீட்டில் அட்ஜஸ்ட் செய்து கொண்டு தங்கிக் கொண்டேன். இன்று மாலையில் அவளுடனேயே சென்று வேறு எங்காவது லேடீஸ் ஹாஸ்டல் போன்ற நல்ல பாதுகாப்பான செளகர்யமான இடமாகப் பார்க்கணும் என்று இருக்கிறேன்”  என்றாள்.


என்னுடைய விஸிடிங் கார்டு, வீட்டு விலாசம், செல்போன் நம்பர் முதலியன கொடுத்தேன்.

“எந்த உதவி எப்போது தேவைப் பட்டாலும், உடனே தயங்காமல் என்னைத் தொடர்பு கொள்ளலாம்” என்றேன். 

“தாங்க்யூ ஸார்”  என்றபடியே அவற்றை தன் அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய கைப்பைக்குள் திணித்துக் கொண்டாள்.



என்னையே முழுவதுமாக அவள் தன்னுள் ஐக்கியமாக்கிக் கொண்டது போல நான் உணர்ந்து மகிழ்ந்தேன். 



   

ஞாபகமாக அந்த 'அமுதைப் பொழியும் நிலவான அமுதா’வின் செல்போன் நம்பரையும் வாங்கி என் செல்போனில் பதிவு செய்து, டெஸ்ட் கால் கொடுத்து, தொடர்பு எண்ணை உறுதிப் படுத்திக் கொண்டேன். 

இன்று இரவு அவளை ஒரு நல்ல பாதுகாப்பான இடத்தில் தங்கச் செய்து, அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து, அசத்த வேண்டும் என மனதிற்குள் திட்டம் தீட்டினேன்.


“குமரிப்பெண்ணின் ... உள்ளத்திலே ... குடியிருக்க ... நான் வரவேண்டும் ... குடியிருக்க நான் வருவதென்றால் ... வாடகை என்ன தர வேண்டும்” என்ற அழகான பாடல் பேருந்தில் அப்போது ஒலித்தது, நல்ல சகுனமாக எனக்குத் தோன்றியது.


அவள் மனதில் இடம் பிடித்து அவளை வெல்டிங்கோ அல்லது வெட்டிங்கோ செய்து கொள்ள, அவளிடம் முதலில் என் காதல் நெஞ்சைத் தர வேண்டும் என்று புரிந்து கொண்டேன். 





இந்த என் காதல் முயற்சியில் எனக்கு வெற்றி கிட்டுமா என சிந்திக்கலானேன்.


 







    



திடீரென குப்பென்று வியர்த்தது எனக்கு. 

யாரோ என் தோள்பட்டையைத் தட்டுவது போல உணர்ந்தேன். கண் விழித்துப் பார்த்தேன். எதிரில் பேருந்தின்  நடத்துனர்.

“துவாக்குடி வந்திடுச்சு, சீக்கரம் இறங்குங்க” என்றார். 

பக்கத்து இருக்கையில் பார்த்தேன். என் அமுதாவைக் காணோம். 


அப்போ நான் கண்டதெல்லாம் பகல் கனவா? 


தொடர் பேருந்தில் ஏறி அமர்ந்ததும், நல்ல காற்று வீசியதில் சுகமாகத் தூங்கியுள்ளேன். அருமையான கனவில், அற்புதமான என் அமுதா என்னருகில் அமர்ந்து பயணம் செய்திருக்கிறாள். 



 
  

கண்களைக் கசக்கிக் கொண்டே, மீண்டும் துவாக்குடியிலிருந்து சுப்ரமணியபுரம் டீ.வி.எஸ். டோல்கேட்டுக்கு ஒரு பஸ் டிக்கெட் வாங்கிக்கொண்டு, என் பயணத்தைத் தொடர்ந்தேன்.

\
“அமுதைப் பொழியும் நிலவே ..... நீ அருகில் வராததேனோ....” என்ற பாடல், மிகவும் பொருத்தமாக இப்போது பேருந்தில் ஒலிக்க ஆரம்பித்தது. 

பெரும்பாலும் காலியான இருக்கைகளுடன் இருந்த அந்தத் தொடர்ப் பேருந்தில், அடுத்த இரண்டாவது ஸ்டாப்பிங்கான திருவெறும்பூரில் பலர் முண்டியடித்து ஏறினர். 

“கொஞ்சம் நகர்ந்து உட்காரய்யா ..... சாமி” எனச் சொல்லி ஒரு காய்கறி வியாபாரக் கிழவி, தன் கூடை மற்றும் மூட்டை முடிச்சுக்களுடன் என் அருகில் அமர்ந்து கொண்டாள். 

அந்தக்கிழவி என்னைக் கட்டி அணைக்காத குறையாக ஜன்னல் வழியே தன் தலையை நீட்டி, வாயில் குதப்பிய வெற்றிலை பாக்குச்சாற்றை, சாலையில் உமிழ்ந்து விட்டு, என்னையும் ஒரு லுக் விட்டுவிட்டு, தொப்பென்று அமர்ந்து கொண்டாள்.



 

“அமுதா...ம்மா .... நீ அங்கன குந்திட்டியா, .... நான் இங்கன குந்தியிருக்கேன்; எனக்கும் சேர்த்து நீயே டிக்கெட்டு எடுத்துடு” யாரோ வேறு ஒரு கிழவியின் குரல் எனக்கு கர்ண கடூரமாக ஒலித்தது.


oooooOoooo
எனது விமர்சனம்
பேருந்தில் பயணம் மேற்கொள்வதற்கு காரணங்கள் பல இருக்கலாம். அது பணி நிமித்தமாக மேற்கொள்ளும் பயணமாக இருக்கலாம். நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் செல்லும் சுற்றுலாப் பயணமாக இருக்கலாம். பயணங்கள் சில வேளைகளில் சோர்வடைந்திருக்கும் மனதினை உற்சாகமூட்டும் வண்ணமும் அமையலாம். நேரமும் பொழுதும் ஓட மறந்து அப்படியே மயங்கிப்  போய், சோர்வினை துணையாக்கி மெல்ல ஊர்ந்து செல்லும் சமயங்களில், பயணங்கள் உற்சாகத்தினையும், பல அனுபவங்களையும், இன்னும் சொல்லப் போனால் கவலை மறந்த சுகமான கண்ணயர்வையும் வழங்கும். அத்தகு ஓர்  பயணத்தைப் பற்றி ஆசிரியர் இங்கு கூறுகிறார்.

தற்சமயம் மின்வெட்டு அதிகமாக அமுலில் இருக்கும் காலமிது. அனைத்தும் மின் மயமான இக்காலத்தில் மின்சாரம் இல்லாது போனால் நம் வாழ்கையே ஸ்தம்பித்துப் போனது போன்றதாகி விடுகிறது. அத்தகு ஒரு சமயத்தில் தான், கதையின் நாயகர் தனது பொழுதினை கழிக்க நகரப் பேருந்தில் பயணிக்கிறார். பேருந்துப் பயணம் பொழுதை கழிக்க மேற்கொண்டது போலும் இருக்கும், வீட்டினுள்ளேயே அடைந்து கிடக்காது,  இயற்கையான காற்றினை சுவாசித்த மாதிரியும் இருக்கும்.

பேருந்தோ, இரயிலோ, காரோ, எதுவாயினும் வேகமாக செல்லும் சமயங்களில், குளுமையான காற்று மெல்ல வந்து நம்மைத் தழுவ, உறக்கம் அது தானாக வந்து நம்மைத் தழுவிக் கொள்ளும். அத்தகைய உறக்கம் மிகவும் ஆழ்ந்த உறக்கமாக இருக்கவும் வாய்ப்புண்டு. அல்லது, சில சமயங்களில் அரைத் தூக்கமாகவும் இருக்க வாய்ப்புண்டு. எவ்வகைத் தூக்கமாயினும் கனவுகள் வந்து நம்மை ஆட்கொள்ள தடை எதுவும் இல்லையே. நமது ஆழ்மன எண்ணங்களே கனவுகளாக விரிகின்றன. இங்கு கதையின் நாயகரும் கனவு காண்கிறார்.

இன்றைய அவசர கதியான உலகில்,  தேவைகளும் ஆசைகளும் கூடவே சுயநலமும்   பெருகி விட்டன. சுயநல மனப்பான்மை பெரிதும் வளர்ந்து விட்டது. பிறருக்கு உதவும் மனப்பான்மை வெகுவாக குறைந்து விட்டது. பிறருக்கு உதவும் எண்ணம் இருந்தாலும் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிக் கொள்ளும் பலரை காண்கிறோம்.இதற்குக் காரணம், ஏமாற்றும் எண்ணமும், உதவி  செய்தவர்களே வம்பில் மாட்டிக் கொள்ளும் சூழ்நிலைகளும் அதிகமாக இருப்பதே ஆகும். 

இங்கே கதையின் நாயகர் ஓர் இளம் பெண்ணிற்கு (கனவினில்) உதவுகிறார். பேருந்தில் சந்திக்கும் அந்த பெண்ணையே தன் கனவுக் கன்னியாகயும் வரித்துக் கொள்கிறார். அந்த ஊருக்கு புதிதாக, பிரபலமான தொழில் நிறுவனத்தில் பயிற்சிக்காக வந்திருக்கும் அவளுக்கு, தான்  செய்யும் உதவிகளின் மூலம், அவளின் இதயத்தில் குடிபுகுந்துவிட எத்தனிக்கிறார். அவளுக்கு தங்க வீடு, பயிற்சிக்கு சென்று வர பேருந்து வழித் தடங்கள், ஆட்டோ கட்டணங்கள், ஏதேனும் அவசர உதவிகள் வேண்டியிருப்பின் எந்நேரமும் உதவ தயாராய் இருப்பதற்கு அடையாளமாய் தனது முகவரி, தொலைபேசி எண்  என்று அனைத்தையும் கொடுத்து உதவுகிறார்.

இதன் மூலம் நமக்கு என்ன விளங்குகிறது எனில், கதையின் நாயகர், பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவராக இருக்கிறார். உள்ளத்தின் அடி ஆழத்தில் புதைந்து கிடக்கும் எண்ணங்கள் தானே கனவுகளாக விரிகின்றன.

கனவினில் வந்து களிப்பூட்டிய இளம் பெண், நிஜத்தில் வயது முதிர்ந்த மூதாட்டி ஆகிப் போனதும், கதையின் நாயகரின் ஏமாற்றம், எழுத்துக்களில்  பிரதிபலிக்கிறது. அந்த ஏமாற்றத்தையும் கூட ஆசிரியர் நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார். இங்கும் அந்த வயதான மூதாட்டி, வேறு ஓர் மூதாட்டிக்கு உதவி புரிகிறார். 

மொத்தத்தில்,உதவும் உயர் குணத்தினை விளக்கும் அழகானதோர்  கதை.


நல்லதொரு வாய்ப்பளித்த திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு நன்றிகள் பல !!!

Gift bows





Tutorial video:



This video was downloaded from youtube.com

Wednesday, March 26, 2014

Egg carton flower




Materials Needed

Egg cartons
Straw
A vase


Procedure

Cut out the individual cups from the egg carton.

Cut out individual petals of the flower.

Paint them with the colour of your choice.

Put a small hole in the center of the cup and insert a straw.

Place the flowers in a vase.

Now, the egg carton flower vase is ready.

Monday, March 24, 2014

Mini hat ornament



Tutorial:



This video was downloaded from youtube.com

Friday, March 21, 2014

Tissue roll Goat




Materials Needed:

Tissue roll
Brown paint
A piece of paper (A printer sheet will  do)
Cotton 


Procedure

Paint the tissue roll brown.

Cut out two circular piece of paper and paste them as eyes.

Draw the nose and mouth of the goat.

Cut out the ears and horns out of paper and paste them. 


Use cotton for the beard of the goat.

Done !



Thursday, March 20, 2014

Wreath made of Egg carton flowers

Materials Needed:

egg cartons
Cardboard 
Acrylic colors / water color


Procedure:

Cut the cardboard in the form of a ring or you can use any circular object. Here I have used the ring from the diaper pail  refill. We can use a Styrofoam wreath ring too.

Cut out the individual cups egg carton.

Cut the petals in the egg carton.

Just bend the ends of each petal, so that the flower looks realistic.

Now paint them with your favorite colors.

Paste them in the cardboard ring.

Done!!!

Friday, March 14, 2014

புறாவும் வேடனும்



ஒரு நாள் மிகவும் தாகமாக இருந்த எறும்பு ஒன்று, அருகில் இருந்த ஆற்றில் நீரருந்த சென்றது. தாகம் தீர நீரருந்திய எறும்பு, கரையில் ஏற முயன்ற போது, தவறிப்  போய் ஆற்றில் விழுந்து விட்டது. நீரோட்டம் வேகமாக இருந்ததால், ஆற்றில் வேகமாக அடித்துச் செல்லப் பட்டது அந்த எறும்பு.

நீரில் தத்தளித்த எறும்பு  உதவிக்காக துடித்து அலறியது. அப்போது அங்கு ஆற்றின் கரையில் இருந்த மரத்தில் அமர்ந்திருந்த புறா ஒன்று, அபயம் தேடும் எறும்பின் குரலைக் கேட்டது. உடனே விர்ரென்று எறும்பின் அருகில் பறந்து வந்தது. 

"என்னைக் காப்பாற்றேன் ! என்னைக் காப்பாற்றேன்! " என்று புறாவைப் பார்த்து பயத்தில் அலறியது எறும்பு.

சற்று நேரம் யோசித்த புறா, மீண்டும் மரத்தை நோக்கி வேகமாக பறந்தது. மரத்தின் கிளையில் இருந்த இலைகள்  ஒவ்வொன்றாக பறித்து, நீரில் எறும்பு இருந்த இடத்திற்கு அருகில் போட்டது. மெல்ல தட்டுத் தடுமாறி, ஒருவாறு ஒரு இலையை பற்றிக் கொண்ட எறும்பு, அதன் மீது ஏறிக் கொண்டது. இலை மெல்ல நீரின் ஓட்டத்திற்கு ஏற்ப அப்படியே மிதந்து, கரைக்கு அருகில் ஒதுங்கியது. 

மெல்ல கரையில் ஏறிக் கொண்டு, தனக்கு உதவிய புறவினைக் கண்டு " எனக்கு உதவியதற்கு மிக்க நன்றி " என்றது. அதன் பின், புறாவும் எறும்பும் அவரவர் வழியில் சென்றனர்.

சில நாட்களுக்குப் பின், ஒரு நாள் காட்டில்  வேட்டையாட வந்த வேடனொருவனின் கண்ணில் புறா பட்டது. புறாவை நோக்கி அம்பெய்ய குறி பார்த்துக் கொண்டிருந்தான் அவ்வேடன். வேடனை கவனியாது வேறு திசை நோக்கித் திரும்பியிருந்தது புறா. வேடனையும் புறாவையும் கண்ட எறும்பு, வேக வேகமாக வேடனை நோக்கி ஊர்ந்தது. சென்ற வேகத்தில், வேடனது காலில் கடித்து விட்டது.

வலியால் துடித்த வேடன், சட்டென்று அசைய, அவனது குறி தவறிப்போய் மரத்தில் குத்திட்டு நின்றது. மரத்தின் அதிர்வினால் சுதாரித்துக் கொண்ட புறா, வேகமாகப் பறந்து விட்டது. எறும்புக்கு தன் நன்றியை தெரிவித்துக் கொண்டது.

நீதி: தன்னைப் போல் பிறரையும் நேசி.

படத்திற்கு நன்றி: http://tx.english-ch.com/

Wednesday, March 12, 2014

அன்புள்ள மணிமொழிக்கு



22.02.2014
சென்னை.

அன்புள்ள  மணிமொழிக்கு,
              
        உன் தோழி மலர்விழி எழுதிக் கொள்வது. நான் இங்கு நலம். உன் நலம் பற்றி அறிய ஆவல். அம்மா , அப்பா மற்றும் கனிமொழி நலம் குறித்தும் அறிய ஆவல். அனைவரது நலனுக்காகவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

கல்லூரி  எனும்   நந்தவனத்தில்  மணம்  கமழும்  வண்ண மலராய்  முகிழ்த்தது   நம்  நட்பு. அந்த  நட்பு  எனும்  மலரில்,  இன்பமெனும்  தேன்  பருகிய  கவலையிலா  வண்ணத்துப்  பூச்சிகள் நாம். நினைவுகளில்  பசுமையாய்  நிறைந்து  நிற்கும்   வசந்த  காலம்  அது. காலங்களும் மாறின. காட்சிகளும் மாறின.       நமது  வாழ்க்கைப் பயணம் திசைக்கு ஒன்றாய்  ஆகிப் போக, வாழ்வு இட்டுச் சென்ற திசையிலேயே நமது  பயணத்தைத் தொடர்ந்தோம்.

காலமது நம்மைப் பிரித்தாலும் கடிதங்கள் நம் நட்பை உரமூட்டி வளர்க்கின்றன. தொலைபேசி வழியே குரல் கேட்டு மகிழ்ந்தாலும், காலமும் கட்டணமும் நம் உரையாடல்களை சுருக்கி விடுகின்றன. விலாவாரியாக உன் மனதை என்னிடமும், என் மனதை உன்னிடமும் விளக்கிக் கூறுபவை நாம் அனுப்பிக் கொள்ளும்  கடிதங்களே.  இன்லேன்ட் லெட்டெர் எல்லாம் நம் எண்ணங்களையும் அன்பையும் கொட்டித் தீர்க்க போதுமானதாக இல்லை.எனவே, முழுநீள தாளில் ஐந்து ஆறு பக்கம் வரை தொடரும் கடிதம்.

இப்படியே நாட்கள் நகர, அவ்வப்போது எவரேனும் உன்னைக் காதலிப்பதாக சொல்லி கடிதத்தில் எழுதுவாய். அதைக் கண்டதும் என் மனதில் பயம் புளியைக் கரைத்திடும். வெள்ளந்தியான உன்னிடம் காதல் என்ற பெயரைச் சொல்லி எவரேனும் உன்னை ஏமாற்றி விட்டால், என்ன செய்வதென்று மனம் பதைபதைக்கும். உனக்கோ, உன்னிடம் உண்மையாகப் பழகுபவர் யார், சந்தர்ப்பத்திற்கேற்ப  உன்னை  பயன்படுத்திக்  கொள்பவர்கள் யார்  என்பது தெரியாது. உன்னைப் பொறுத்த வரை அனைவரும் நல்லவர்களே. வெளுத்ததெல்லாம் பால்  என்று எண்ணிக் கொள்பவள் நீ. உன்னருகே நான் இல்லையே என்றெண்ணி என் மனம் துடிதுடிக்கும். ஒவ்வொரு முறையும் உன்னிடம் “கவனமாய் இரு ! கவனமாய் இரு !! “  என்று எச்சரிக்கை செய்து வந்தேன். என்னிடம் எதையுமே என்றுமே மறைத்திட மாட்டாய் என்று  மலையளவு உன் மீது நம்பிக்கை வைத்தேன். ஆனால் !

சில  மாதங்களாக  உன்னிடமிருந்து  கடிதங்களும்  இல்லை. தொலைபேசி  அழைப்புகளும் இல்லை. கடிதம் அனுப்பினால் பதிலேதும்  இல்லை.  மாதங்கள்  வருடங்களாயின. என்னவோ ஏதோ  என்றெண்ணி  பதறித் துடித்தது  மனம். ஒரு நாள்  திடீரென்று  தொலைபேசியில்  அழைத்தாய்.  மனம் குதூகலித்தது.  ஆனால்,  எனக்கு பெரும்  அதிர்ச்சி தரும்  செய்தி ஒன்றை சொல்வாயென எதிர்பார்க்கவில்லை. ஆம் !

உனக்கு திருமணம்  ஆகி விட்டதென்று கூறினாய். காதல் திருமணம் செய்து கொண்டேனென்றாய். மனம் போல் உனக்கு மாங்கல்யம் அமைந்ததென்று மகிழ்ந்தேன்.

“ என்னிடம்  சொல்லக் கூட முடியவில்லை உன்னால் ? “ என்று  சற்று  காட்டமாக  கேட்க,    

“ சொல்லியிருந்தால்  நீ  செய்ய  விட்டிருக்க  மாட்டாயே ! என்னை எப்படியேனும்  தடுத்து  நிறுத்தியிருப்பாயே ! “  என்றாய்.

கணவரைப் பற்றிக்  கேட்க, வானமே  என் மீது இடிந்து விழுந்தது போல் ஓர்  பதிலை  சர்வ  சாதாரணமாகச்  சொன்னாயே !  கணவருடன்  வாழ  விருப்பமில்லை . அதனால், பெற்ற  பிள்ளையுடனும் தாய் தங்கையுடன் வாழ்வதாய்  சொன்னாய். உனக்கு  ஆதரவளிக்க  தாயும், தங்கையும்  உன்னுடன்  வந்துவிட, தந்தையோ, உனக்கு  ஆதரவளித்ததற்காக  தாயை  பகைத்துக்  கொள்ள, இன்று  குடும்பமே  சின்னாபின்னப் பட்டுப் போய்  நிற்கிறதே !  

உன் நிலை  கண்டு  தங்கை கனிமொழியோ  மண வாழ்க்கை  என்ற ஒன்றையே  வெறுத்து  ஒதுக்கி விட்டு  உனக்காகவும்  உன் பிள்ளைக்காகவும்  உன்னுடனே  வாழ்கிறாள்.

தாயும்  தங்கையும்  உன் மீது கோபப்படுவதாக மிகவும் வருத்தம் கொள்கிறாயே. இந்நிலைக்குக்  காரணம்  நீயே  தானென்பதை  ஏன் உணர  மறுக்கிறாய். உனக்காக  உன் தாய்,  தந்தையை  பிரிந்து வாழ்கிறார். திருமணத்திற்கு பின்  உன் கஷ்டங்களைக்  கண்டு  உன் தங்கை மணவாழ்வே  வேண்டாமென்று  இருக்கிறாள். உனக்காகவே  வாழும் அவர்களை புரிந்து கொள். அவர்களுக்கு  மன நிம்மதியைக் கொடு. 

உன் மீது  பாசமும் நேசமும் அக்கறையும் கொண்ட உறவுகளை, அவர்களின் உணர்வுகளை, உன்னால் அவர்களுக்கு ஏற்பட்ட வலிகளையும் வேதனைகளையும் புரிந்து கொள். அவர்களது கோபம் என்பது நியாயமானதே. சொல்லப் போனால், அவர்கள் தான் உனக்காக தங்களது இன்பங்களையும் வாழ்வையும் மறந்து நிற்கின்றனர். நீ  ஏதும் துன்பம் துயரத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக உனக்கு உறுதுணையாய் இருக்கிறார்கள். அடங்காத பிள்ளை மீது என்ன அக்கறை வேண்டியிருக்கிறது என்று உன் தாயும் சகோதரியும் உன் அப்பாவுடனே இருந்திருக்கலாம். ஆனால், உனக்காக அவரது கோபத்திற்கும், சமூகத்தின் கேலிப் பேச்சிற்கும் ஆளாகி நிற்கிறார்கள் உன் தாயும் சகோதரியும். ஒரு நாளும் அவர்களை குறைவாய் எண்ணாதே. கோயில் கட்டி வணங்க வேண்டிய தெய்வங்கள் அவர்கள். நினைவில் கொள். 

காதல்  உன்  கண்களை  மறைக்க, காதலன் என்று  வந்தவனின்  ஆசை  வார்த்தைகள்  உன் புத்தியை  மழுங்கடிக்க, சிறிதும்  யோசிக்காமல்,  புத்தி  கெட்டவளாய்  வீட்டிலிருந்த நகை பணம் அனைத்தையும்  வாரிச்  சுருட்டிக் கொண்டு  அவன் பின் ஓடினாயே ! இன்று  உனக்கு உறுதுணையாய்  இருப்பவர்  யார் ?  நீ  நம்பிப்  போன உன்  காதலனா அல்லது நீ நம்பிக்கைத்  துரோகம் செய்து விட்டு  ஓடி வந்த உன் குடும்பமா ?  நம்பி வந்தவன், உன் கையில் ஓர் குழந்தையை கொடுத்துவிட்டு  ஓடி விட்டான். இன்று உன்னைக்  காத்து நிற்பது உன்னை நம்பி ஏமார்ந்து போன உன் தாய் தான். அதை ஓர் நாளும் மறவாதே.

கற்ற கல்வியை உறுதுணையாகக் கொள். நல்லதொரு வேலையில் சேர்ந்து வருமானம் ஈட்டு.நியாயமாக செய்யும் தொழில் அனைத்தும்  உயர் தொழிலே. உன் கல்வித் தகுதியை  உயர்த்திக்  கொள். கற்ற கல்வியே என்றென்றும் துணை நிற்கும். உன் பிள்ளைக்கு கல்விச் செல்வத்தை வழங்கிடு. நம்பிக்கையை எந்நாளும் துணை கொள். உன் நல்வாழ்வுக்காய் நாளும் இறைவனை பிரார்த்திக்கிறேன். 

அம்மாவிற்கு என் வணக்கங்களை சொல்லவும். கனிமொழிக்கு என் அன்பை தெரிவிக்கவும். மற்றவை உன் கடிதம் கண்டு.

என்றும் அன்புள்ள,
உன் தோழி மலர்விழி


நன்றி, வல்லமை மின்னிதழ் 

Tuesday, March 11, 2014

உடம்பெல்லாம் உப்புச்சீடை - சிறுகதை விமர்சனம்


'உடம்பெல்லாம்  உப்புச்சீடை'

நெடுங்கதை 

By வை. கோபாலகிருஷ்ணன்





[1]


மாலை மணி 5.35 ; கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் சென்னையை விட்டுப் புறப்படத் தயாராக இருந்தது. பட்டாபி தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன், பல்வேறு மூட்டை முடிச்சுக்களுடன், மூச்சு வாங்க ரயிலின் வால் பகுதியிலிருந்து தலைப்பகுதி வரை தட்டுத்தடுமாறி ஓடி, தேடி முன்பதிவு செய்த தங்கள் இருக்கைகள் கொண்ட ரயில் பெட்டியை கண்டுபிடித்து ஏறவும், வண்டி மெதுவாக நகரத் தொடங்கவும் மிகச் சரியாக இருந்தது. 


தன்னுடைய சூட்கேஸ் மற்றும் இதர சாமான்கள் மொத்தம் பன்னிரண்டு உருப்படிகள் சரியாக உள்ளனவா என்று ஒரு முறை எண்ணிப் பார்த்துவிட்டு, இருக்கையின் கீழ்புறம் குனிந்து அவற்றைக் காலில் இடறாதவாறு ஒழுங்காக அடுக்கிக் கொண்டிருந்தார், பட்டாபி.


“அஸ்திக்கலசம் உள்ள அட்டைப் பெட்டி ஜாக்கிரதை. அதை உடையாமல் ஒரு ஓரமாக உள்ளடங்கி வைச்சுடுங்கோ. ஊர் போய்ச் சேரும் வரை அதை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 

சாப்பாடுக்கூடை; தயிர் சாத தூக்கு; டவரா, தம்ளர், வாட்டர் கேன், பிளாஸ்க் வைத்திருக்கும் ஒயர் கூடை; நொறுக்குத்தீனி வைத்துள்ள பிக் ஷாப்பர் பை முதலியன அடிக்கடி எடுக்கும் படியாக இருக்கும். அதையெல்லாம் டக்டக்குனு எடுக்க வசதியா முன்னாடி வைச்சிருங்கோ. 

பணப்பை ஜாக்கிரதையாக இருக்கட்டும். ரயில் டிக்கெட்களை சைடு ஜிப்பிலே வைச்சுடுங்கோ” மனைவி பங்கஜம் தொடர்ச்சியாக உத்தரவுகளைப் பிறப்பித்து வந்த வண்ணம் இருந்தாள்.


பொடிப்பயல் நாலு வயது ரவியும், சின்னவள் ஆறு வயது கமலாவும் ஜன்னல் பக்கத்து சீட்டைப் பிடிக்க தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். 


எதிர்புற லோயர் பெர்த் ஜன்னல் ஓரமாக யாரோ தன் பொருட்களை வைத்து விட்டு எங்கோ சென்றிருப்பார் போலும். 


வண்டியில் ஏறியதும் அவசரமாக கழிவறைக்குப் போன விமலாவை இன்னும் காணோமே என்று விசாரப் பட்டாள் பங்கஜம். 


குனிந்து நிமிர்ந்து பொருட்களை அடுக்கியதில் வியர்த்துக் கொட்டிய முகத்தை, டர்க்கி டவலால் அழுத்தித் துடைத்து, ஃபேன் ஸ்விட்ச்களைத் தட்டி விட்டார் பட்டாபி. 


“ஒரு ஜன்னல் தான் நமக்கு. நீங்க ரெண்டு பேரும் மாறி மாறி உட்காரணும். சண்டை போடக் கூடாது. சமத்தாய் இருக்கணும்” என்று ரவியையும் கமலாவையும் சமாதானப் படுத்தினாள் பங்கஜம்.





கழிவறையிலிருந்து கலவரத்துடன் ஓட்டமாக ஓடி வந்த விமலா, பயத்தில் தன் தாயாரை இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள். 


”என்னடி ஆச்சு ..... வயதுக்கு வந்த பெண், இப்படிப் பதறி அடித்து ஓடி வரலாமா? நான் சொல்லிக் கொடுத்ததெல்லாம் மறந்துட்டாயா? என்று பதறினாள் பங்கஜம்.





தான் கழிவறையிலிருந்து வெளிவரும் போது எதிர்புற கழிவறையிலிருந்து அந்தப் பயங்கரமான உருவம் வெளிப் பட்டதையும், தன்னை முறைத்துப் பார்த்ததையும், அதைப் பார்த்த தான் ஒரே ஓட்டமாக ஓடி வந்து விட்டதையும், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க எடுத்துரைத்தாள், விமலா.



புதிதாக வயதுக்கு வந்த [ 13 வயது ] தன் பெண் எதையோ பார்த்து பயந்து போய் இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு, “இனிமேல் கழிவறைக்குத் தனியாகப் போகாதே; நானும் உன்னுடன் துணைக்கு வந்து கதவருகில் நிற்கிறேன்” என்று சமாதானப் படுத்தி, அவளை அமரச் செய்து ஃபிளாஸ்கிலிருந்து சூடாகக் காஃபியை ஊற்றி தம்ளரை நீட்டினாள், பங்கஜம்.


ஒரு வாய் காஃபியை ருசிப்பதற்குள், அந்த உருவம் இவர்கள் பக்கமே நடந்து வந்து, தாண்டிக் குதித்து, ஜன்னல் ஓரம் இருந்த தன் சாமான்களை சற்று ஒதுக்கி கீழே வைத்து விட்டு, தானும் அங்கு அமர்ந்தது.





விமலா மீண்டும் பயம் வந்தவளாக தன் தாயின் புடவைத் தலைப்பில் புகுந்து கொண்டாள். 



“என்ன நீங்களெல்லாம் காசிக்குப் போறேளா! கங்கா ஸ்நானமா! பித்ரு கார்யமா! பில்டர் காஃபியா ... கும்முனு வாசனை மூக்கைத் துளைக்குதே” என்று கேட்டது அந்த உருவம்.



எல்லாவற்றிற்கும் மொத்தமாகத் தலையை ஆட்டி வைத்தாள் பங்கஜம்.



“நானும் காசிக்குத்தான் போறேன்” என்றது அது, யாரும் கேட்காமலேயே.



“காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது” என்பது சரியாகத்தான் உள்ளது என மனதிற்குள் நினைத்துக் கொண்டனர், பங்கஜமும் பட்டாபியும். 


[2]
”சூடான இட்லி, தோசை, வடை, காஃபி, டீ, சாயா” என்ற குரலுடன் இங்குமங்கும் ஒரு சில பணியாளர்கள் போய் வந்த வண்ணம் இருந்தனர்.

வண்டியின் வேகம் குறைந்து ஒரு குலுங்கலுடன் நிற்கத் தொடங்கியது. வெளியே ஏதோ ஒரு ஸ்டேஷன் வந்துள்ளது.

ஆசாமி கண்ணைத் திறந்து ரவியின் தலைக்கு மேல் தன் தாடையை உரசியவாறு குனிந்து வெளியே பார்த்தார். “கூடூர்” என்று கூறிக் கொண்டு, தன் கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்து, ”எட்டாகப் பத்து நிமிடம் உள்ளது”, என்றும் சொல்லிக் கொண்டார்.

வெளியே விற்கப்படும் கோன் ஐஸ் க்ரீம், ரவியின் பார்வையில் பட்டு விட்டது. தன் அப்பாவையும் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்தான் ரவி. அவர்கள் அவனிடம் கோபமாக இருப்பதாகத் தோன்றியது.

“கமலா, கமலா..... கோன் ஐஸ் விக்குதுடி” ஆவலுடன் கூறினான்.

ஆசாமி தன் இடுப்பிலிருந்த சுருக்குப்பையை அவிழ்த்துப் பிரித்து பணத்தை எடுத்து “மூன்று கோன் ஐஸ் கொடு” என்று சொல்லி கையை ஜன்னலுக்கு வெளியே நீட்டினார்.

ரவிக்கு நாக்கில் எச்சில் ஊறி உடம்பெல்லாம் ஜில்லிட்டுப் போனது போல ஒரே குஷியானது.

அவர் நீட்டிய கோன் ஐஸை வாங்கி ரவி உடனே கிடுகிடுவென சுவைக்க ஆரம்பித்து விட்டான். கமலா தயங்கியவாறே வாங்கி கையில் வைத்துக் கொண்டு, தன் அம்மாவையும் அப்பாவையும் பயத்துடன் ஒரு பார்வை பார்த்தாள். விமலா ”தனக்கு வேண்டாம்” என்று உறுதியாக மறுத்து விட்டாள்.

“ஐயா, உங்களைத் தயவுசெய்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம். இது போல எதுவும் வாங்கித் தராதீர்கள். எட்டாக்கைப் பயணம். குழந்தைகளுக்கு ஏதும் உடம்புக்கு வந்து விட்டால் நாங்கள் தான் கஷ்டப் படணும்” என்று மாற்றி மாற்றி கண்டிப்புடன் சொல்லி விட்டனர், பெற்றோர்கள் இருவரும்.

“வெய்யில் காலம், குழந்தைகள் ஏதோ ஆசைப்படுது. ஒரே ஒரு ஐஸ் தானே, உடம்புக்கு ஒண்ணும் வந்து விடாது. அப்படியே ஏதாவது காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் என்றாலும் என்னிடம் எல்லா மருந்துகளும் உள்ளன. கவலையே படாதீங்கோ” என்று சொல்லி விட்டு, தன் கையில் மீதியிருந்த ஒரு கோன் ஐஸையும் , ரவியின் மற்றொரு கையில் திணித்தார். ரவியின் சந்தோஷம் இப்போது இரட்டிப்பானது.

மிகவும் பொறுமையாக பல்லைக் கடித்துக்கொண்டு, ரவியை முறைத்துப் பார்த்தனர் பங்கஜமும், பட்டாபியும். விவரம் புரியாத அவனை தனியே கூட்டிப் போய் நாலு சாத்து சாத்தணும் போலத் தோன்றியது அவர்களுக்கு.

வண்டி மிகப்பெரியதொரு சத்தத்துடன் நகரத் தொடங்கியது.

"சாப்பாடு மூட்டையைப் பிரிச்சுடலாமா?" பட்டாபியிடம் வினவினாள் பங்கஜம்.

“அது ஒண்ணுதான் இப்போ குறைச்சல். எனக்கு ஒண்ணுமே வாய்க்குப் பிடிக்காது போல உள்ளது. குமட்டிக் கொண்டு வாந்தி வரும் போல உள்ளது” என்றார் மிகுந்த எரிச்சலுடன், சற்று உரக்கவே, அந்த ஆசாமிக்கு காதில் விழட்டும் என்று.

ஆசாமி, தன் ஏதோ ஒரு பையில் கையை விட்டு, எதையோ எடுத்து, “இ ந் தா ங் கோ.... ஸார் ..... ‘ஹா ஜ் மோ லா’ ஆயுர்வேத மருந்து. இரண்டு வில்லைகள் வாயில் போட்டுச் சப்பினால் போதும். குமட்டல் போய் நல்ல பசியைக் கிளப்பிவிடும்” என்றார் அந்த ஆசாமி.


இதைக் கேட்டதும், பட்டாபிக்கு பசிக்குப் பதிலாக கடுங் கோபத்தைக் கிளப்பி விட்டது, அவரின் பேச்சு.


பட்டாபி மிகுந்த கோபத்துடன் அவரிடம் என்னவெல்லாம் பேசினார் தெரியுமா?



[4]

”யோவ் .. சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. என் தகப்பனார் செத்துப்போய் பதினைந்து நாட்கள் தான் ஆகிறது. அவரின் கடைசி ஆசைப்படி கர்மா செய்ய காசிக்குப் போய்க் கொண்டு இருக்கிறோம். அது முடியும் வரை வெளி மனுஷ்யாள் யாரிடமும் பேசக்கூடாது. கண்டதைச் சாப்பிடக் கூடாது.

நிம்மதியா எங்களைக் கொஞ்சம் தனியா இருக்க விடுங்கோ. எங்கள் பொறுமையை ரொம்பவும் சோதிக்காதீங்க; ஏண்டா இந்த ரயிலில், இந்தப் பெட்டியில், முன்பதிவு செய்தோம்னு ரொம்பவும் வேதனைப் படறோம்.

வேறு எங்காவது ஒத்தை சீட்டு இருந்தா, நீர், டீ.டீ.ஆர். இடம் சொல்லி மாத்திண்டு போய்ட்டாக் கூட உமக்குப் புண்ணியமாப் போகும்” என்று பட்டாஸ் கட்டைப் பற்ற வைத்தது போல வெடிக்க ஆரம்பித்தார், பட்டாபி.

இதுபோன்ற எவ்வளவோ பேச்சுக்களையும், ஏச்சுக்களையும் இதுவரை பலமுறை சந்தித்த அந்த ஆசாமிக்கு, மனதிற்குள் சற்றே வருத்தமாக இருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், கழிவறைக்குப் போவது போல வெளியேறி, அருகிலிருந்த கம்பார்ட்மெண்ட்கள் சிலவற்றிற்குச் சென்று, இங்குமங்கும் உலாவிக் கொண்டிருந்தார். 

உடம்புத் தோலில் உள்ள கொப்பளங்கள் மட்டுமல்லாமல் அவர் மனதும் ரணமாகிப் போய் இருக்குமோ என்னவோ .... பாவம்.

வெகு நேரம் ஆகியும், அந்த ஆசாமியைக் காணாததால், சற்று நிம்மதி அடைந்திருந்தனர், பட்டாபியின் குடும்பத்தினர்.

“ஒரு வேளை நீங்க போட்ட சத்தத்தில், அந்த மனுஷன் ஓடும் ரயிலிலிருந்து குதித்திருப்பாரோ?” பங்கஜம் தன் கணவனிடம் சிரித்துக் கொண்டே மெதுவாகக் கேட்டாள்.

“அப்படியெல்லாம் இருக்காது; அவனைப் பார்த்தால், நீ சொல்வது போல ஓடும் ரயிலிலிருந்து குதித்து உயிரை விடும் அளவுக்கு மானஸ்தனாகத் தெரியவில்லை. பரதேசிப்பயல் ... இங்கு எங்காவது தான் கழிவறைக்குப் போய் இருப்பான். வந்துடுவான்” என்றார் பட்டாபி.

“இப்போது சாப்பாட்டு மூட்டையைப் அவிழ்த்தால், உடனே அவன் வந்து, அது என்ன? இது என்ன? என்று கேட்டுக் கேட்டே கழுத்தை அறுத்து நம்மைச் சாப்பிட விடாமல் சங்கடப் படுத்தி விடுவான். 

என்ன பண்ணித் தொலைப்பது என்றே தெரியவில்லை. 

இவ்வளவு விகாரமாயிருப்பவன் ஏன் ரயிலில் நம்முடன் வந்து தொலைந்தானோ? 

நாம் பண்ணின பாபம் நம்மைக் காசி வரை துரத்தி வருகிறது” பங்கஜம் மேலும் தூபம் போட்டாள்.

சற்று நேரத்தில் வண்டி ஏதோ ஒரு ஸ்டேஷனில் அவுட்டர் சிக்னல் கிடைக்காமல், நிற்க ஆயத்தமாகி, இஞ்ஜின் பெருமூச்சு வாங்குவது போல சத்தம் கேட்டது.

அந்த ஆசாமி மெதுவாக இவர்கள் இருக்குமிடம் வந்தார். ஏதோ ஒரு பையில் கையை விட்டு ஒரு பொட்டலத்தை வெளியில் எடுத்து அதை ஒரு கையிலும், குடிநீர் பாட்டிலை மறு கையிலும் வைத்துக்கொண்டு, ”தான் இங்கு அமர்ந்து சாப்பிடலாமா” என்பது போல, இவர்களை ஒரு பார்வை பார்த்தார். 

அவர்கள் அவரைக் கொஞ்சமும் கவனிக்காதது போலவும், வேறு எங்கோ பார்ப்பது போலவும், முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு பாசாங்கு செய்தனர்.

ஆசாமி ரவியைப் பார்த்து ஒரு புன்னகை புரிந்து விட்டு, “தம்பீ .... நான் சப்பாத்தி சாப்பிடப் போகிறேன், சாப்பிடலாமா?” என்றார். 

கணவனும் மனைவியும் மீண்டும் ரவியைப் பார்த்து முறைக்க, “சப்பாத்தி எனக்குப் பிடிக்காது, எனக்கு வேண்டாம், நீங்களே சாப்பிடுங்க” எனப் பட்டென்றுச் சொல்லி விட்டான், ரவி.

நான்கு சப்பாத்திகளை கொத்துமல்லித் துவையலுடன் சாப்பிட்டு விட்டு, குடிநீர் பாட்டிலையும் காலி செய்தார். சூடான பால் ஒரு கப் வாங்கிக் குடித்தார். பெரிய சைஸ் பச்சை மோரிஸ் பழத்தை உரித்து சாப்பிட்டு விட்டு, எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தார்.

பிறகு அவர் அந்தப் பொடியன் ரவியைப் பார்த்து, “ரவி, நீங்களெல்லாம் ஒரே குடும்பம். ஜாலியாக ரயில் பயணத்தை அனுபவியுங்கள். நீ எனக்கான லோயர் பெர்த்தில் படுத்துக்கோ; நான் உனக்கான அப்பர் பெர்த்தில் போய் படுத்துக் கொள்கிறேன்” என்று சொல்லி விட்டு, தன்னுடைய எல்லா சாமான்களுடனும், குடிபெயர்ந்து மேலே ஏறி விட்டார் அந்த ஆசாமி.

கீழே லோயர் பெர்த்தில் படுத்து பயணிக்க வேண்டிய உரிமையுடன் ரிஸர்வேஷன் டிக்கெட் வாங்கியுள்ள அந்த வயதான மூத்த குடிமகன், தங்களுக்காக கஷ்டப்பட்டு அப்பர் பெர்த்துக்கு, போகிறாரே என்ற ஒரு எண்ணமோ, பச்சாதாபமோ இல்லாமல் இருந்தனர் பட்டாபி கோஷ்டியினர்.

இதுதான் நல்ல சமயம் என்று சோத்து மூட்டையைப் பிரித்து, இரவு சாப்பாட்டை திருப்தியுடன் முடித்துக் கொண்டது, பட்டாபி கோஷ்டி.

“நாளைய ஒரு நாள் முழுவதும், நாம் ரயிலிலேயே கழித்தாக வேண்டும். அது கீழே இறங்காமல், மேலேயே படுத்துக் கொண்டு விட்டால் தேவலாம்” என்று இவர்களுக்குள் நினைத்துக் கொண்டனர்.


[5]

அதன்படியே மறுநாள் ‘பல்ஹர்ஷா’ வில் காலை டிபனும்; ‘நாக்பூர்’ இல் மதிய உணவும், ’இட்டார்ஸி’ யில் மாலை டிபனும், ‘ஜபல்பூர்’ இல் இரவு சாப்பாடும் என இவர்கள் நிம்மதியாக உண்டு களித்தனர். இடையிடையே தட்டை, முறுக்கு, கடலை உருண்டை, உருளைக்கிழங்கு சிப்ஸ் முதலிய கரமுராக்களும் கொறித்துக் கொண்டு வந்தனர்.

அந்த மனிதர் இவர்கள் பக்கமே வரவில்லை. வண்டி நிற்கும் ஸ்டேஷன்களில் மட்டும், மெதுவாக அப்பர் பெர்த்திலிருந்து இறங்கி, சோம்பல் முறித்துக் கொண்டு, காலாற நடந்து, கதவு வரை சென்று, எந்த ஊர் என்று தெரிந்து கொண்டு, கழிவறைக் காரியங்களையும் கையோடு முடித்துக் கொண்டு பரணையில் ஏறும் பூனை போல மெதுவாக ஏறிப் படுத்து வந்தார்.

நாக்பூரில் மட்டும், அப்பர் பெர்த்தில் அமர்ந்தபடியே அவர், மற்றொரு பொட்டலத்தைப் பிரித்து சப்பாத்தி சாப்பிட்டது போல, கொத்துமல்லித் துவையல் வாசனையை மோப்பம் பிடித்த பங்கஜம் தெரிந்து கொண்டாள்.

நிறைய பச்சை வாழைப்பழங்கள் போட்டுத் தொங்க விடப்பட்டிருந்த அவரின் ’கேரி பேக்’ ஒன்று இப்போது, மிகவும் சுருங்கி ஓரிரு பழங்களை மட்டுமே தன் வசம் வைத்துக் கொண்டு பரிதாபமாக காட்சியளித்தது.

அவர் இரண்டொரு முறை சூடாகப் பால் கேட்டு வாங்கி அருந்தியதை பட்டாபி கவனித்திருந்தார். மொத்தத்தில் பட்டாபி தம்பதிகளுக்கு நேற்றைய அளவு ரத்தக் கொதிப்பு இன்று இல்லை. 


அவர் தன் லோயர் பெர்த்தை விட்டுக் கொடுத்தது, என்னவோ இவர்களுக்கு, அவர் தன் வீடு வாசல், மாடு கண்ணு, சொத்து சுகம் அனைத்தையும் உயில் எழுதிக் கொடுத்தது போன்ற (அல்ப) சந்தோஷத்தை அளித்தது. அந்த ஆசாமியை மனதிற்குள் கொஞ்சம் பாராட்டவும் செய்தனர்.

இரவு மணி 10.45 க்கு, ‘கட்னி’ என்ற ஸ்டேஷன் வந்ததும் விளக்குகளை அணைத்து விட்டு, அனைவரும் படுக்கத் தொடங்கினர். அந்த ஆசாமி அதற்கு முன்பாகவே தூங்கி விட்டிருந்தார்.

பட்டாபி தான் கொண்டு வந்திருந்த அலாரத்தை [ இப்போது போல செல்போன் பிரபலமாகாத காலம் அது ] சரியாக அதிகாலை 4.30 மணிக்கு அடிக்குமாறு முடுக்கி விட்டார். பட்டாபி கோஷ்டி விடியற்காலம் 4.50 க்கு அலஹாபாத்தில் இறங்க வேண்டும்.


குழந்தையை ஆட்டிவிடும் தொட்டிலைப் போன்ற வண்டியின் அருமையான ஆட்டத்திலும், சீரான ஓட்டத்திலும், சுகமான காற்றிலும் அனைவரும் நிம்மதியாகத் தூங்கி விட்டனர். அவர்களை ஏற்றிச் சென்ற ரயில் மட்டும் தூங்காமல் ஓடிக்கொண்டே இருந்தது.

மறு நாள் அதிகாலை, அலாரம் அடித்ததும் அலறி எழுந்த பட்டாபி, அதை மேலும் தொடர்ந்து அடிக்க விடாமல், அதன் தலையில் ஒரு குட்டு குட்டி, அதை ஊமையாக்கினார்.

லைட்டைப் போட்டால் ஒருவேளை அந்த ஆசாமியும் தூக்கம் கலைந்து எழுந்து விடக்கூடும் என்ற பயத்திலும், காலை வேளையில் அதன் முகத்தில் மீண்டும் முழிக்க விருப்பமின்றியும், மங்கலான நைட் லாம்ப் வெளிச்சத்திலேயே, தன்னுடைய ஒவ்வொரு சாமான்களையும் விமலா +  பங்கஜம் உதவியுடன், ரயில் பெட்டியிலிருந்து இறங்க வேண்டிய கதவுப் பகுதி அருகில், அவர்கள் தாமதமின்றி உடனே இறங்குவதற்கு வசதியாக, வைத்துக் கொண்டார். 


விமலாவை விட்டு ஒருமுறை சாமான்களை எண்ணச் சொல்லி பன்னிரண்டு உருப்படிகள் என்பதை உறுதி செய்து கொண்டார், பட்டாபி.

குழந்தைகள் ரவியையும், கமலாவையும் மெதுவாக எழுப்பி, அவர்கள் முகத்தை வாஷ் பேசினில் அலம்பித் துடைக்கவும், வண்டி அலஹாபாத்தில் நிற்கவும் சரியாக இருந்தது.







மூட்டை முடிச்சுக்களுடன் கீழே இறங்கிய அவர்களை டாக்ஸி வாலாக்களும், போர்ட்டர்களும் சூழ்ந்து நின்று வரவேற்றனர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி முதலியவற்றைக் குழைத்த ஒரு புது மொழியில் சங்கரமடம் செல்ல பேரம் பேசி முடித்து, ஒருவழியாக டாக்ஸியில் ஏறி அமர்ந்தது அந்தக் குடும்பம்.





[6]

சற்று நேரத்தில் கண் விழித்த அந்த ஆசாமி தனக்குக் கீழே உள்ள இருக்கைகள் யாவும் காலியாக இருப்பது கண்டு, மெதுவாக அப்பர் பெர்த்திலிருந்து கீழே இறங்கி, சுதந்திரமாகச் சோம்பல் முறித்து விட்டு, சோப்பு, பேஸ்ட், ப்ரஷ், துண்டு, விபூதி சம்புடம் முதலியனவற்றை கையில் எடுத்துக்கொண்டு, தன் ஜோடி செருப்புகளில் ஒன்று மட்டும் கண்ணுக்குப் புலப்பட, மற்றொன்றைத் தேடி எடுக்க கீழே குனிந்தார். 

வாராணசி வரை செல்ல வேண்டிய அந்த வண்டி அலஹாபாத்திலிருந்து புறப்பட இன்னும் ஏழு நிமிடங்களே இருந்தன.


சங்கர மடத்தை அடைந்த பட்டாபியின் குடும்பத்தை வரவேற்று, தங்குவதற்கு ரூம் கொடுத்து, பாத்ரூம் டாய்லெட் வசதிகளை விளக்கி விட்டு, 

“எல்லோரும் ஸ்நானம் செய்து விட்டு, ஆகாரம் முடித்து விட்டு, பயணக் களைப்பு தீர சற்று ஓய்வு எடுத்துக்கோங்கோ. மத்யானமா நான் வந்து, நாளைக்கு திரிவேணி சங்கமம் போய் என்னென்ன கர்மாக்கள் எப்படி எப்படி செய்யணும், கங்கா ஜலத்தை சின்னச் சின்ன சொம்புகளில் அடைத்து சீல் செய்து கொள்வது எப்படி; பிறகு மறுநாள் காசிக்குப் போய் தம்பதி பூஜை செய்வது, புனித கங்கையின் பல்வேறு ஸ்நான கட்டங்களில், படகில் சென்று பித்ருக்களுக்கு பிண்டம் போடுவது, காசி விஸ்வநாதர் + விசாலாக்ஷியைத் தரிசனம் செய்வது, காலபைரவர் கோவிலுக்குப் போய் மந்திரம் சொல்லி காசிக்கயிறு அணிவதுஅதற்கு மறுநாள் கயா போய், கயா ஸ்ரார்த்தம் செய்வது முதலியனவற்றைப் பற்றி விபரமாகச் சொல்லுகிறேன்” என்று சொல்லி விட்டு, நித்யப்படி பூஜை செய்ய தன் பூஜை ரூமுக்குள் புகுந்தார், சங்கரமடத்து சாஸ்திரிகள். 

அவர் இவ்வாறு சுருக்கமாகச் சொல்லிவிட்டு தன் நித்தியப்படி பூஜை செய்யச் சென்றதும், பட்டாபிக்கு ஏதோ சுருக்கென்றது. ரத்தக் கொதிப்பு உச்சநிலைக்கு எகிறியது. 

ரயிலின் ஓரமாக உள்ளடங்கி வைத்த அஸ்திக் கலசத்துடன் கூடிய அட்டைப்பெட்டி, ரயிலிலிருந்து இவர்களுடன் கொண்டு வரப்படவில்லை.


சென்னையை விட்டுக் கிளம்பும் போது, தூக்கி வரமுடியாமல் மிகவும் கனமாக இருந்த ஒரு பெரிய பை, இப்போது ரயிலில் வரும் போது பங்கஜத்தால், எளிதில் தூக்க செளகர்யமாக வேறு ஒரு காலிப் பையின் உதவியினால், இரண்டாக மாற்றப்பட்டதால், மொத்த சாமான்களின் எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


சென்னையை விட்டுப் புறப்படும் போது மொத்தம் 12 பேக்கிங் ஆக இருந்தவை, ரயிலில் வரும் போது பங்கஜத்தால் 13 ஆக மாற்றப்பட்ட விபரம் யாருக்குமே தெரிய நியாயமில்லை. பங்கஜத்திற்கும் அது ஞாபகம் வராமல் போய் விட்டது.


அதிகாலை தூக்கக் கலக்கத்திலும், ரயிலை விட்டு இறங்க வேண்டும் என்ற அவசரத்திலும், அந்த ஆசாமி முகத்தில் மீண்டும் விழிக்கக் கூடாது என்ற எண்ணத்திலும், அஸ்திக் கலசம் வைத்துக் கட்டப்பட்ட அட்டைப் பெட்டி மட்டும், ரயிலில் உட்காரும் இடத்திற்கு கீழே மிகவும் உள்ளடங்கி ஒரு ஓரமாக இருந்ததால், ரயிலிலேயே மறந்து வைத்து விட்டு, மீதி சாமான்களை மட்டும் எண்ணி மொத்தம் 12 அயிட்டங்கள் மிகச் சரியாக உள்ளன என்ற திருப்தியில் அலஹாபாத் ஸ்டேஷன் வந்ததும், இறங்கி டாக்ஸி பிடித்து சங்கர மடத்துக்கு வந்து விட்டிருந்தனர்.


கொஞ்சம் கூட, பொறுப்போ கவனமோ இல்லை என, பங்கஜமும் பட்டாபியும் ஒருவர் மேல் ஒருவர் பழி போட்டுக் கொண்டிருந்தனர்.


குழந்தைகள் ரவியும் கமலாவும், சங்கர மடத்து வாசலில் புல்வெளியில் படுத்திருந்த பசுக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். 

அந்த பசு ஒன்று தன் முதுகில் மொய்த்துக் கொண்டிருந்த ஈக்களையும், கொசுக்களையும் விரட்டி விரட்டி அடிக்க, தன் நீண்ட வாலைச் சுழட்டிச் சுழட்டி அடிப்பதையும், காதுகள் இரண்டையும் ஆட்டிக்கொண்டே இருப்பதையும் , அதன் கழுத்தில் தொங்கவிடப்பட்டுள்ள சிறிய மணி ஒன்று, அந்தப் பசுவின் அசைவுகளுக்கு ஏற்ப எழுப்பும் இனிய ஒலியையும், ஆராய்ச்சி செய்த வண்ணம் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர்.


பெரியவள் விமலா மட்டும், வந்த இடத்திலும், பட்டாபி, பங்கஜத்தின் வாய்ச் சண்டை முற்றி கைச் சண்டையாக மாறாதவாறு, அவர்களைச் சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.


கை நிறையப் பணம் உள்ளது. போதாக்குறைக்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்ட், ஏ.டி.எம். கார்டு எல்லாம் உள்ளது. ரயிலில் தவற விட்ட, தன் அன்புத் தந்தையின் அஸ்தியை இந்தப் பணத்தால் வாங்கிவிட முடியுமா? பார்ஸலில் வரவழைக்கத் தான் முடியுமா? பட்டாபி கண் கலங்கினார்.


இங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்து, வாராணசி ஸ்டேஷன் வரை ரயிலைத் துரத்திப் பிடித்துப் பார்த்து விட்டு வரலாமா? அதற்குள் யாராவது அதை எடுத்துக் கொண்டு போய் இருப்பார்களோ? அதைப் பிரித்துப் பார்த்து ஏமாந்து போய் குப்பை என்று தூக்கிப் போட்டு ஒருவேளை உடைத்திருப்பார்களோ? பட்டாபிக்கு இவ்வாறு பலவித எண்ணங்கள் தோன்றி வந்தன.


எதற்காக காசிக்குப் புறப்பட்டு வந்தோமோ, அந்தக் காரியமே நடக்குமோ நடக்காதோ என்ற கவலையில் அடிவயிற்றைக் கலக்கிய பட்டாபிக்கு, ஸ்நானம் செய்யவோ, ஆகாரம் செய்யவோ எதுவும் தோன்றாமல் பித்துப் பிடித்தாற்போல ஆகி, தவியாய்த் தவிக்க ஆரம்பித்தார்.


எப்படியும் ஒரு டாக்ஸி பிடித்துப் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும் என்று தீர்மானித்து ரத்தக் கொதிப்பு மாத்திரை ஒன்றுக்கு இரண்டாகப் போட்டுக் கொண்டு , கிளம்பத் தயாராகி விட்டார்.

“பூஜை அறையிலிருக்கும் சங்கர மடத்து சாஸ்திரிகள் வெளியே வரட்டும். அவரிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போங்கோ” என்று பட்டாபியின் பதட்டத்துடன் கூடிய பயணத்தை சற்றே ஒத்தி வைத்தாள் பங்கஜம்.

 
[7]

தன் நித்யப்படி பூஜையை முடித்துக் கொண்டு வெளியே வந்த சங்கரமடத்து சாஸ்திரிகளிடம் விவரம் சொல்ல பட்டாபியும், பங்கஜமும் நெருங்கவும், மடத்து வாசலில் யாரோ ஆட்டோவில் வந்து இறங்கவும் சரியாக இருந்தது.

சங்கர மடத்து வாசலில் புல்வெளிகளில் படுத்திருந்த பசுமாடுகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ரவி + கமலா வின், கவனம் தங்கள் அருகில், படபடவென்ற சப்தத்துடன் வந்து நின்ற ஆட்டோ பக்கம் திரும்பியது.

“கோன் ஐஸ் வாங்கித் தந்த, ‘உடம்பெல்லாம் உப்புச் சீடை’ த் தாத்தா இங்கேயும் வந்துட்டார்டீ” எனக் கத்திக்கொண்டே, ரவியும் கமலாவும், சங்கர மடத்தின் உள்பக்கம் இருந்த விமலாவிடம் சொல்ல வேகமாக ஓடி வந்தனர்.

“வாங்கோ, வாங்கோ, வரணும்! தங்கள் வரவு நல்வரவு ஆகணும்., உட்காருங்கோ!” என நாற்காலியைப் போட்டு, மின் விசிறியைத் தட்டி விட்டு, தன் மேல் அங்கவஸ்திரத்தை இடுப்பில் சுற்றிக் கொண்டு, மிகவும் பெளவ்யமாக, வந்தவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார், சங்கரமடத்து சாஸ்திரிகள்.

வந்தவர் வேறு யாருமில்லை. இவர்களுடன் கூடவே ரயிலில் வந்த பயணி (பிராணி) தான். அவர் கையில் அஸ்திக்கலசம் வைத்துக் கட்டப்பட்ட இவர்களின் அட்டைப்பெட்டி பார்ஸல், இருந்தது. 

இதைப் பார்த்த பட்டாபிக்குப் போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது. இருக்காதா பின்னே! அவருடைய தந்தையின் உயிர் அல்லவா அடங்கி ஒடுங்கி அதனுள் சாம்பலாக உள்ளது! 

அந்தப் பவித்ரமான வஸ்துவை இந்த அருவருப்பான மனுஷன் கையால் தூக்கி வரும்படி ஆகிவிட்டதே என்ற சிறு வருத்தமும் மனத்தின் ஆழத்தில் ஏற்பட்டது, பட்டாபிக்கு. 


“இந்த அட்டைப்பெட்டியை மறந்து போய் ரயிலிலேயே வைச்சுட்டு, நீங்கள் எல்லோரும் அலஹாபாத் ஸ்டேஷனில் இறங்கிட்டேள் போலிருக்கு. நான் என் பாத ரக்ஷைகளை (செருப்புகளை) எடுக்கக் குனிந்த போது தான் இது என் கண்ணில் பட்டது.


உங்களுடையாகத் தான் இருக்கும்; இங்கு எங்காவது தான் தங்கியிருப்பேள்னு யூகித்துக் கொண்டு வந்தேன்.



நான் வாராணசி வரை போக வேண்டியவன். ரயில் கிளம்பாததால், இந்த அட்டைப் பெட்டியை உத்தேசித்து, நானும் அலஹாபாத்திலேயே இறங்கி விட்டேன்.



நல்லவேளையாக உங்களையும் மறுபடியும் பார்த்து விட்டேன். இந்தாங்கோ ஜாக்கிரதை” என்று சொல்லி பட்டாபியிடம் நீட்டினார். 





கைகள் நடுங்க நன்றியுடன் வாங்கிக்கொண்டார் பட்டாபி. 





அட்டைப் பெட்டியில் உள்ள பொருள் அஸ்திக்கலசம் என்பதை சங்கர மடத்து சாஸ்திரிகள் மூலம் கேள்விப்பட்ட அந்தப் பெரியவர், அதைத் தான் தூக்கி வந்ததால் ஏற்பட்ட தீட்டுக்கழிய, சாஸ்திரப்படி ஸ்நானம் செய்ய மடத்தின் கொல்லைப்புறம் இருந்த கிணற்றடிக்கு விரைந்தார். 


அதற்குள், அந்தப் பெரியவரின் அருமை பெருமைகளை சங்கர மடத்து சாஸ்திரிகள், பட்டாபி தம்பதிக்கு விளக்க ஆரம்பித்தார். 

“நான்கு வேதங்களும், அனைத்து சாஸ்திரங்களும் கரைத்துக் குடித்தவர். நானே அவரிடம் வேதம் படித்தவன். என்னைப் போல எவ்வளவோ பல்லாயிரம் பேர்களுக்கு வேதம் சொல்லிக் கொடுத்த மஹான். எங்களுக்கெல்லாம் அவர் தான் குருநாதர்.

அவா விளையாட்டுக்குக்கூட பொய் பேசாதவா. எதற்கும் கோபமே படாத தங்கமான குழந்தை மனஸு அவாளுக்கு.

அவாளுக்கு சொந்த ஊர் திருச்சிராப்பள்ளி பக்கம், காவேரிக்கரை ஓரம் ஏதோ ஒரு கிராமம். ஏழு தலைமுறைகளா வேதம் படித்து வரும் குடும்பம். வேதத்தை ரக்ஷிக்கும் பரம்பரையில் வந்தவா !

சங்கர மடத்து ஆச்சார்யாள், ஜகத்குரு மஹாபெரியவா ஆக்ஞைப்படி, கடந்த பல வருஷங்களாக இந்தப் பக்கமே தங்கி விட்டார்கள். இந்த கங்கைக் கரைப் பக்கம், இவாளைத் தெரியாதவாளே கிடையாது. 

வேதம் படிச்சு முடிச்சவாளுக்கெல்லாம் “வித்வத் சதஸ்” ன்னு, ஒரு பெரிய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் பரீட்சை மாதிரி நடக்கும். அதில் இவா தான் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மாதிரி உட்கார்ந்து, தப்பாச் சொல்றவாளை டக்குனு பிடிச்சுத் திருத்திக் கொடுப்பார்கள். அந்த அளவுக்கு ரொம்ப பாண்டித்யம் உள்ளவா !

ஒரு ஈ எறும்புக்குக் கூட கெடுதல் நினைக்க மாட்டார்கள். லோகத்திலே உள்ள எல்லா ஜனங்களும் எல்லா ஜீவராசிகளும் க்ஷேமமாய் இருக்கணும்னு எப்போதுமே பிரார்த்திப்பவர்கள். 


இந்த மஹான் உங்களுடன் ஒரே ரயிலில், ஒரே கம்பார்ட்மெண்டில், பக்கத்துப் பக்கத்து இருக்கைகளில் பயணம் செய்தது நீங்கள் செய்த ஒரு பெரிய பாக்யம்தான்னு சொல்லணும். 





நீங்களோ அல்லது உங்களின் அப்பாவோ செய்த புண்ணியம் தான், நீங்கள் ரயிலில் தவற விட்ட உங்க அப்பாவின் அஸ்திக்கலசத்தை, இந்த வேதவித்தாகிய ஒரு பெரிய மஹான், தன் கைப்படவே தூக்கி வரும்படி நேர்ந்துள்ளது. 

கங்கையில் அதைக் கரைப்பதற்கு முன்பு, இந்த ஒரு பெரிய மஹான் கைப்பட்டுள்ளதால், உங்கள் தகப்பனாருக்கு சொர்க்கம் தான் என்பது இப்போதே உறுதியாகி விட்டது, பாருங்கோ !



அந்த அட்டைப்பெட்டியில் உள்ளே உள்ளது என்ன ஏது என்றே தெரியாமல், பத்திரமாக உங்களிடம் சேர்த்திருக்கிறா பாருங்கோ!; எல்லாம் பகவத் சங்கல்ப்பம்.

நீங்கள் மிகவும் ஸ்ரத்தையாக காசிக்கு வந்து கங்கையில் உங்கள் தந்தையின் அஸ்தியைக் கரைக்கணும்னு வந்த காரியம் வீண் போகவில்லை, பாருங்கோ !

நான் அவாள்ட்ட வேதம் படிக்கும் போது, மிகவும் தேஜஸுடன் அழகாக மினுமினுப்பாக இருந்தவர் தான் இந்த என் குருநாதராகிய மஹான்” எனச் சொல்லி, தான் அவரிடம் வேத பாடசாலையில் படிக்கும்போது எடுக்கப் பட்ட (கருப்பு வெள்ளை) க்ரூப் போட்டோ ஒன்றைக் காட்டினார்.

“ஏதோ ஒரு பூர்வ ஜன்ம பாவம்; கடந்த ரெண்டு வருஷமாத்தான் இதுபோல அவருடைய வெளித் தோற்றத்தை இப்படி ஆக்கியுள்ளது” என மிகவும் வருத்தத்துடன் சொல்லி முடித்தார்.
சங்கர மடத்து சாஸ்திரிகள் வாயால், ரயிலில் தன்னுடன் கூடவே பயணித்தவரின் மஹிமைகள் பற்றிச் சொல்லுவதை உன்னிப்பாகக் கேட்டதும், யாரோ ஒரு சாட்டையால் தன்னை சுழட்டிச் சுழட்டி அடிப்பது போல உணர்ந்தார், பட்டாபி. 


[8]



சமையல் கட்டுக்குள் நுழைந்த சங்கர மடத்து சாஸ்திரிகள், தன் தர்ம பத்னியிடம் “என் குருஜி - பாடசாலை வாத்யார் - பெரியவர் வந்திருக்கார். ஸ்நானம் பண்ண கொல்லைப்பக்கம் கிணற்றடிக்குப் போயிருக்கார். இப்போ வந்துடுவார்.


அவர் வந்ததும் சாப்பிட சூடா கோக்ஷீரம் (பசும்பால்) பனங்கல்கண்டு போட்டு,  வெள்ளி டவரா டம்ளரில் கொடுத்துடு.

பிறகு நம் ஆத்திலேயே சாப்பிடச்சொல்லி அவாளை நாம் வேண்டிக் கேட்டுக்கொள்வோம். பாயஸம் பச்சிடியோட சாப்பாடு தயார் செய்துடு. நுனி இலை நேத்திக்கு வாங்கி வந்ததே இருக்கும்னு நினைக்கிறேன்; முடிஞ்சாக் கொத்துமல்லித் தொகையல் கொஞ்சம் அரைச்சுடு. அதுனா அவா கொஞ்சம் இஷ்டமாச் சாப்பிடுவான்னு எனக்கு ஏற்கனவே நன்னாத் தெரியும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார். 

ஸ்நானம் செய்துவிட்டு மடி வஸ்திரம் அணிந்து கொண்டு வந்து அமர்ந்த பெரியவரின் கைகளில் இருந்த கொப்புளத்தில் ஒன்றை மீண்டும் திருகி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தான், ரவி.

அவர் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிக் கொண்டிருந்த, பட்டாபி பங்கஜம் தம்பதியின் கண்ணீர் அவரின் பாதங்களை நனைத்துக் கொண்டிருந்தது.


“மாமா ... என்னை நீங்கள் தயவு செய்து க்ஷமித்துக் கொள்ளணும் (மன்னித்துக் கொள்ளணும்).


ரயிலிலே வரும்போது, தாங்கள் யார், தங்கள் மஹத்துவம் என்ன என்று தெரியாமல், அடியேன் ஏதேதோ வாய்க்கு வந்தபடி பேசி விட்டேன்.

பாவத்தைப் போக்க வந்த இடத்தில், பல்வேறு பாபங்களை மேலும் சம்பாதித்து விட்டேன். இப்போது நான் மஹாபாவியாகி விட்டேன்.

தயவுசெய்து இந்த மிகச்சிறிய தொகையான இருபதாயிரம் ரூபாயை தங்களுக்கு நான் தரும் வித்வத் ஸம்பாவனையாக தாங்கள் ஏற்றுக்கொண்டு, எங்களை மனப்பூர்வமாக மன்னித்து ஆசீர்வதிக்கணும். 


அப்போது தான் குற்ற உணர்வு நீங்கி என் மனம் கொஞ்சமாவது சற்று ஸாந்தி அடையும். தயவு செய்து மறுக்காமல் ஏத்துக்கோங்கோ” என்று சொல்லி ஒரு தட்டில் வெற்றிலை பாக்குப் பழங்களுடன், அந்தப் பணம் ரூ. 20000 த்தையும் அவர் முன்பாக வைத்து சமர்ப்பித்து விட்டு, பிறகு தன் இரு கன்னங்களிலும், தன் கைகளால், நல்ல வலி ஏற்படும்படி பளார் பளாரென்று, அறைந்து கொண்டார், கண்ணீருடன் பட்டாபி.

இதைக் கேட்ட அந்தப் பெரியவர் ஒரு குழந்தை போல சிரித்துக் கொண்டே பேசத் தொடங்கினார்:

“நீங்கள் எந்தத் தவறும் செய்ததாக நான் நினைக்கவே இல்லையே. நான் அவற்றையெல்லாம் அவ்வப்போதே மறந்தும் மன்னித்தும் விடுவது தான் என் வழக்கம்.

கோபதாபங்கள் என்பதெல்லாம், சாதாரணமாக எல்லா மனிதர்களுக்கு அவ்வப்போது ஏற்பட்டு வரும் இயற்கையான ஒரு செயல். ஞானம் ஏற்படும் வரை தான் கோபதாபங்கள் இருக்கும்.

ஞானம் வந்து விட்டால் இத்தகைய தேவையில்லாமல், நம்மை ஆட்டிப் படைக்கும் அல்ப விஷயங்களெல்லாம், நமக்கு மறந்தே போய் விடும்.


கோபங்களையெல்லாம் கட்டுப்படுத்தி, நடப்பது யாவும் நம் செயல் அல்ல, நமக்கெல்லாம் மேலே கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார்; அவர் பார்த்து அவ்வப்போது நமக்குத் தரும் சுக துக்கங்களை சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனப்பக்குவம் ஒரு சிலருக்கு மட்டுமே, ஞானத்தால் ஏற்படும்.

அந்த ஞானம் என்பதும் பகவத் க்ருபை இருந்தால் மட்டுமே ஏற்படுவது. தொடர்ந்து பக்தி செய்யச்செய்ய அந்த மனப் பக்குவம் தங்களுக்கும் சீக்கரமாகவே ஏற்பட்டுவிடும்.


அடுத்த க்ஷணம் யாருக்கு என்ன நடக்கும் என்பது, நம் பூர்வ ஜன்மத்து பாவ புண்ணியச் செயல்களால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று.

அதனால் நீங்கள் என்னை ரயிலில் மரியாதைக் குறைவாகப் பேசியதாகச் சொல்லுவதோ, நான் அதற்காக வருத்தப்பட்டதாக தாங்கள் நினைத்துக்கொண்டு வருந்துவதோ முற்றிலும் தவறான ஒரு அபிப்ராயமே.

நடந்து முடிந்தது, இப்போது நடப்பது, இனி நடக்கப்போவது எல்லாமே அவன் செயல் தான்.


உங்களிடம் உண்மையாகவே கோபப்பட்டவனாக நான் இருந்திருந்தால், நீங்கள் மறந்து போய் ரயிலில் விட்டுச்சென்ற இந்தப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு மீண்டும் உங்களை சந்திக்க விரும்பியிருக்குமா என் மனஸு?



எது எது, எப்படி எப்படி, எப்போ எப்போ, யார் யார் மூலம் நடக்கணுமோ, அது அது, அப்படி அப்படியே, அப்போ அப்போ, அவரவர்கள் மூலம் அவனால் நடத்தி வைக்கப்படுகிறது என்ற உண்மையை எல்லோருமே உணர்ந்து கொண்டு விட்டால், இந்த லோகத்தில் சண்டை சச்சரவுகளுக்கே இடம் இருக்காது.

நமது வேத சாஸ்திரங்கள் படித்தவாளுக்குத் தான் இந்த உண்மைகள் ஓரளவுக்குத் தெரிந்து, அந்த மாதிரியான மனப் பக்குவம் ஏற்படும்.


அது போன்ற மனப் பக்குவம் வந்து விட்டால், எந்த வயதை எட்டினாலும், நாமும் தங்கள் குழந்தை ரவி போல, கள்ளங்கபட மில்லாத, எதற்கும் பயம் என்பதே இல்லாத, தெளிவான மன நிலையை அடைந்து, பிரகலாதன் போல மாறி, நடப்பதெல்லாம் அந்த நாராயணன் செயல் என்பதை சுலபமாக உணர்ந்து விட முடியும்.

நீங்கள் எனக்கு ஸம்பாவனையாகக் கொடுக்க நினைக்கும் இந்தப் பணம் எதுவும் எனக்குத் தேவையே இல்லை. அதை எடுத்து முதலில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கோ!

அதற்கு பதிலாக, ஒரு வேளை நீங்களும் விருப்பப் பட்டால், நான் சொல்லுவதைச் செய்யுங்கோ!


இங்கு பக்கத்திலேயே ஒரு வேத பாடசாலையில் சுமார் ஐம்பது வித்யார்த்திகள் (வேதம் பயின்று வரும் ஏழைக் குழந்தைகள்) படிக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் வஸ்திரமும் (நாலு முழம் வேஷ்டியும் துண்டும்), குளிருக்குப் போர்த்திக்கொள்ள ஒரு போர்வையும் வாங்கிக் கொடுத்துடுங்கோ;


தங்கள் குழந்தை ரவி கையால் அந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது சாப்பிட பிஸ்கட் பாக்கெட்டோ, சாக்லேட்களோ அல்லது பழங்களோ விநியோகம் செய்யச் சொல்லுங்கோ. நம் ரவிப்பயல் போலவே அந்தக் குழந்தைகளும் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.

நாளைக்கு இங்குள்ள கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்தால், எல்லா பாபமும் விலகி விடும். உங்களுக்கு சகல க்ஷேமமும் ஏற்படும்” என மனதார வாழ்த்தி கை தூக்கி ஆசீர்வதித்தார், அந்த வேத வித்தான பெரியவர்.

அந்தப் பெரியவரை உற்று நோக்கினார் பட்டாபி. அவர் இருந்த இடத்தில் ’நடமாடும் தெய்வமாய், கருணைக் கடலாய் இன்றும் நம்மில் பலரின் உணர்வுகளில் வாழும் ஜகத்குரு காஞ்சீ ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகள்,ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்கள்’ 
ஒரு நிமிடம் தோன்றி மறைந்தது பட்டாபியை மெய்சிலிர்க்க வைத்தது.


 
அழகிய உடலோ
அருவருப்பான உடலோ


உயிர் என்ற ஒன்று பிரிந்தபின்
அழுகக்கூடிய, 
நாறக்கூடிய
அப்புறப் படுத்த வேண்டிய   
பொருளாகி விடுகிறது.


அதை எரிக்க வேண்டிய 
அவசரமும், அவசியமும், நிர்பந்தமும் 
ஏற்படுகிறது.

எரிந்த அதன் சாம்பலில்


அழகும் இல்லை
அருவருப்பும் இல்லை.

சாம்பல் கரைக்கப்படும் கங்கையோ
என்றுமே புனிதமாகப் போற்றப்படுகிறது!


பெரியவர் சொல்லாமல் சொல்வது போலத் தோன்றியது, பட்டாபிக்கு.



oooooOooooo



-சுபம் -
-oOo-

எனது விமர்சனம்

குடும்பத்துடன் வெளியூர்ப் பயணம் என்பது  இன்பகரமான ஒரு பயணம் ஆகும். அதுவும் அசைந்தாடும் இரயிலில் சிறு பிள்ளைகளுடன் பயணிப்பது இனிமையே. குழந்தைகளை மேற்பார்வையிட்டுக் கொண்டே வருவது பெரியவர்களுக்கு சற்று சிரமமாகத் தோன்றினாலும், சிறுவர்கள் இரயில் பயணங்களை மிகவும் விரும்புவர். அத்தகையதோர் இரயில் பயணத்தை மையமாகக் கொண்டு, ஒரு குடும்பத்திற்கும், சக பிரயாணியான ஒரு பெரியவருக்கும் இடையில் ஏற்படும் அனுபவங்களை " உடம்பெல்லாம் உப்புச்சீடை " கதையில் சொல்கிறார் ஆசிரியர்.

தாய் தகப்பன், இரு பெண் பிள்ளைகள்,ஒரு ஆண் பிள்ளை என்று ஒரு குடும்பம். இவர்களுடன் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர், உடலெங்கும் சிறிதும் பெரிதுமான கொப்பளங்களுடன்  சற்றே பயமுறுத்தும்  தோற்றத்துடன்   பயணிக்கிறார். பெரியவர்கள் இருவரும் இவரது தோற்றத்தைக் கண்டு அருவருப்பு கொள்கின்றனர். இரு பெண் பிள்ளைகளும் பெரியவரைக் கண்டு பயம் கொள்கின்றனர். ஆனால், கடைக்குட்டி பையன் மட்டும் இவரைக் கண்டு பயமேதும் கொள்ளாது இவரது கொப்பளங்களை ஆராய்ச்சி  செய்கிறான்.

" குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று ""  என்று சொல்வார்கள். இறைவனது படைப்பில் அனைத்து உயிர்களும்  ஒன்றே  ஆகும். அவனது படைப்பில் எந்த உயிர்களிடத்தும் உயர்வு தாழ்வு கிடையாது. அதைப் போன்றே தான் கள்ளம் கபடமறியா கிள்ளை உள்ளமும். எனவே தான் குழந்தைகள்  தெய்வத்திற்கு சமமாகச் சொல்லப் படுகிறார்கள்.

குரூரமான தோற்றமுடையவர்கள், மனநிலை பாதிக்கப் பட்டவர்கள், நோயாளிகள், உடல் ஊனமுற்றோர் ( மாற்றுத் திறனாளிகள் ) என்று பலதரப்பட்ட மனிதர்களை  நாம்  அன்றாட வாழ்வில் சந்திக்கின்றோம். அவர்களது குறை கண்டு ஏளனம் செய்வோர்  சிலர். அவர்களைத் தீண்டத் தகாதவர் போல் ஒதுக்கி வைத்து, அவர்களையோ அவர்கள் பயன் படுத்திய பொருட்களையோ தொட்டு விட்டால் அது தீட்டு என்ற அறியாமை எண்ணம் கொண்டோர் சிலர். இன்னும் சிலரோ, இதற்கு ஒரு படி மேலே போய், அத்தகையோர் இருக்கும் பக்கம் செல்வதையே தவிர்க்கின்றனர். அவர்களை தனிமைப் படுத்துவதாலேயே  அவர்களது கவலையும் நோயும் அதிகமாகின்றன. அவர்களுக்குத் தேவை அன்பும் ஆதரவும் உற்சாகமூட்டும் வார்த்தைகளுமே ஆகும். தனிமைப் படுத்தப் படுபவர்களின் வழியையும் வேதனையையும் வயதான பெரியவரின் வாயிலாக சொல்கிறார் ஆசிரியர்.

பொதுவாக, பயணங்களின் போது, உடன் பயணிப்பவர்கள் ஏதேனும் கொடுத்தால் வாங்கக் கூடாது என்றே சிறு பிள்ளை பிராயத்திலிருந்தே நாம் பழக்கப் படுத்தப் படுகிறோம். அது மிகவும் நல்லதொரு பழக்கமாகும். ஆனால், சில சந்தர்ப்பங்களில் , அப்படி தவிர்ப்பதென்பது இயலாததொன்றாகி விடுகிறது.

பட்டாபி பெரியவரின் முகத்தைக் கண்டு தனக்கு வாந்தி வருவது போல் உள்ளதாக சொல்கிறார். ஆனால், பெரியவரோ சக மனிதர் ஒருவர் கஷ்டப்படும் வேளையில், அவருக்கு உதவுவதே மனிதாபிமானம் என்று   மனிதாப நோக்கோடு பெரியவர் பட்டாபிக்கு உதவிட எண்ணுகிறார். பெரியவரது பேச்சு பட்டாபிக்கு மேலும் ஆத்திரம் ஊட்டுகிறது.

வயதில் முதிர்ந்தவர் என்று கூட பாராது, அவர் மீது கனல் தெறிக்கும் வார்த்தைகளை உமிழ்கிறார் பட்டாபி.

" யாகாவா ராயினும் நாகாக்க  காவாக்கால் 
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு "

என்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். ஆனால், இங்கு பட்டாபியோ, அந்தப் பெரியவரின் மீது படபடவென்று பொரிந்து தள்ளிவிடுகிறார். பட்டாபி குடும்பத்தாரின் சோகமான சூழ்நிலை பெரியவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர், தன்னுடன் ஒரே பெட்டியில் தொலைதூரம் பயணிக்கப் போகிறவர்கள் தானே என்ற எண்ணத்தில், சிறு பிள்ளைகளுடன் அன்பாக உரையாடுகிறார். மேலும், சிறு  குழந்தைகளுடன்  பேசி சிரித்து உற்சாகமாய் இருப்பது யாருக்குத்தான் பிடிக்காது. எப்பேர்ப் பட்டவராயினும் ,  சிறு
கிள்ளை யின் புன்னகையில் மயங்காது போய்விட மாட்டார். அப்படித்தான், பெரியவரும் பிள்ளைகளிடம் பேச்சு கொடுக்கிறார். ஆனால், அதை உணராது, அவரது அன்பு உள்ளத்தை புரிந்து கொள்ளாது, வெளிப்புறத்  தோற்றத்தைக் கண்டு அருவருப்புக் கொண்டு , அவரை ஏசி  மனதை புண்படுத்துகிறார் பட்டாபி.

யாராக இருந்தாலும், எத்தகைய உடற்குறையை தன்னகத்தே கொண்டிருந்தாலும், தன்னைப்பற்றி எவரும் குறைத்து மதிப்பிடுவதையோ, கேவலப் படுத்துவதையோ விரும்ப மாட்டார்கள். இதனால், கோபம் கொண்டு திரும்ப ஏசுபவர்கள் ஏராளம். ஒரு சிலரோ, தன நிலையை எண்ணி வருத்தம் கொண்டு அமைதியாக சென்று விடுவார்கள். அப்படித்தான் இங்கே அந்தப் பெரியவரும் வருத்தம் கொள்கிறார். அத்தகையொருக்குத் தேவை அன்பும் கனிவும் நிறைந்த ஆறுதலான வார்த்தைகளே. அவர்களும் அனைவருடனும்  சகஜமாகப் பழகுவதையெ விரும்புகிறார்கள். பல சந்தர்ப்பங்களில் இதை நாம் உணர்ந்து கொள்வதில்லை.

பட்டாபி குடும்பத்தாரின் அஜாக்கிரதை, கவனக் குறைவினால், பட்டாபியின் தந்தையின் கடைசி ஆசைப்படி, காரியம் செய்ய எடுத்து வந்த அவரது அஸ்திக் கலசத்தை  இரயிலிலேயே தவற விட்டுச் சென்றுவிடுகின்றனர். பெரியவரின் முகத்தில் எங்கே மீண்டும் விழித்துவிடப் போகிறோமோ என்ற பயத்திலும் அவசரத்திலும் சரியாக கவனியாது கலசத்தை விட்டுவிட்டுச் சென்று விடுகின்றனர்.

கவனக் குறைவினால் தாங்கள் தவறவிட்ட தனது தந்தையின் அஸ்தி  தனக்கு மீண்டும் கிடைக்குமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், அது மீண்டும் கிடைத்ததே பெரும் பாக்கியம் என்று எண்ணாது, அதில் அந்தப் பெரியவரின் ( அருவருப்பான மனிதர் ) கை பட்டு விட்டதே என்று வருத்தம் கொள்ளும் இடத்தில் பட்டாபியின் பண்படாத மனதை சொல்கிறார் ஆசிரியர்.

பெரியவரது அருமை பெருமைகளை சங்கர மடத்து சாஸ்திரிகள் வாயிலாக உணர்ந்து கொண்ட பட்டாபி, அவரிடம் தான் செய்த பிழைக்காக மன்னிப்பு கோரி, காணிக்கை செலுத்த எண்ணுகையில், பெருந்தன்மையுடன் அதை மறுத்து பட்டாபி செய்த குற்றங்குறைகளை மன்னித்து அருளும் உயர்ந்த பண்பு,

"  கெட்டாலும்  மேன்மக்கள்  மேன்மக்களே   சங்கு 
   சுட்டாலும்  வெண்மை தரும் "

என்ற ஔவையின் மூதுரை வாக்கை நினைவுபடுத்துகிறது.

" நான், எனது, என்னால் என்னும் மாயைகள் எல்லாம் மறைந்து, எல்லாம் இறைவன் செயல், அவனன்றி அணுவேதும் அசையாது எனும் உண்மையை உணர்ந்து கொண்டால் , துன்பம் நம்மை அண்டாது "

என்ற மேலான உண்மையை இக்கதையின் வாயிலாக அழகாக எடுத்தியம்புகிறார் ஆசிரியர்.

நல்லதொரு வாய்ப்பளித்த திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கட்கு என்  மனமார்ந்த நன்றிகள்.