blank'/> muhilneel: சுடிதார் வாங்கப் போறேன் ! - சிறுகதை விமர்சனம்

Friday, February 7, 2014

சுடிதார் வாங்கப் போறேன் ! - சிறுகதை விமர்சனம்

VAI. GOPALAKRISHNAN தளத்தில் எழுதி வரும் ஐயா திரு. வை. கோபாலகிருஷ்ணன்  அவர்கள் சிறுகதை விமர்சனப் போட்டி ஒன்றை நடத்தி வருகிறார்.

அவரது சுடிதார் வாங்கப் போறேன்  சிறுகதைக்கான  எனது விமர்சனத்திற்கு மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகு நல்வாய்ப்பினை வழங்கிய ஐயா அவர்களுக்கு  என் மனமார்ந்த நன்றிகள்.

 

நன்றி ! நன்றி !! நன்றி !!!


சுடிதார் வாங்கப் போறேன் என்ற அவரது சிறுகதைக்கான எனது விமர்சனம்.

 

 சிறுகதை

வெகு நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் ஜவுளிக்கடைக்குப் போக வேண்டிய நிர்பந்தம்.  ஒவ்வொரு தடவை போய் ஜவுளிகள் வாங்கி வந்ததும் இனி அந்தப் பக்கம் போகவே கூடாது என்று சபதம் செய்து கொள்வேன்.

ஊரில் இல்லாத அதிசயமாக என் மனைவிக்கு மட்டும் கடை வீதிக்கு வருவதோ, கடை கடையாக ஏறுவதோ, மணிக்கணக்காக கும்பலில் நின்று புடவை செலெக்ட் செய்வதிலோ துளியும் விருப்பம் கிடையாது.  நான் பார்த்து ஏதாவது அவளுக்கு எடுத்துக் கொடுத்தால் தான் உண்டு.

எனக்குப் பிடித்த கலர், டிசைன் முதலியவற்றில் புடவையும், மேட்ச் ப்ளவுஸ் பிட்டும் ஆசையாக எடுத்து வந்து விடுவேன்.  வீட்டுக்கு வந்ததும், அதை மனைவியிடம் காட்டி அவளை அசத்த வேண்டும் என்றும் ஆசைப்படுவேன்.  அவள் அநேகமாக ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பாள்.  எழுப்பினால் கோபம் வரும்.   அல்லது டி.வி. சீரியலில் மூழ்கி இருப்பாள்.  இடையில் குறுக்கிட்டாலும் பிரச்சனை வரும்.  

டி.வி. சீரியல்கள் முடிந்து அவள் வருவதற்குள் பெரும்பாலும் நான் தூங்கி விடுவேன். நள்ளிரவில் இருவரும் விழித்துக் கொண்டால், நான் வாங்கி வந்த புடவையை காட்ட எண்ணுவது உண்டு.  அதிலும் ஒரு சிறிய பிரச்சனை உண்டு. 

அவளாகவே எங்கே போனீர்கள், என்ன வாங்கிண்டு வந்தீர்கள் என்று ஆசையாகக் கேட்க மாட்டாளா என்று நினைப்பேன்.

கல்யாணம் ஆகி மூணு மாமாங்கத்திற்கு மேல் ஆகி விட்டது. அந்த நாள் முதல் இந்த நாள் வரை அது போல எதுவும் கேட்டதே கிடையாதே; இன்று மட்டும் புதிதாகக் கேட்டு விடப் போகிறாளா என்ன, என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டு, புடவை வாங்கி வந்த விஷயத்தை மெதுவாக எடுத்துரைப்பேன்.  

”இப்போ எதுக்குப் புடவை?  வீட்டில் தான் நிறைய புடவைகள் பிரித்துக் கட்டிக் கொள்ளாமல் புதிதாக இருக்கின்றனவே!” என்பாள்.

எதற்கும் ஆசைப் படமாட்டாள்.  அவஸ்தை கொடுக்க மாட்டாள்.  ஒரு விதத்தில் நான் அதிர்ஷ்டசாலி என்று தான் சொல்ல வேண்டும். 

”இன்னும் நாலு நாட்களில் நமக்கு திருமண நாள் வருகிறதே, அதற்காகத்தான்” என்பேன்.  அதைக் காதில் வாங்கிக் கொண்டாளோ என்னவோ மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டதாக அறிந்து கொள்வேன். 

சமயத்தில் வாங்கி வந்த புடவையை அவள் பார்த்து விடும் வாய்ப்பு ஏற்பட்டால் ”நன்றாக இருக்கிறது.  எனக்கு ரொம்பவும் பிடித்துள்ளது” என்று ஒரு முறையேனும் வாய்தவறியும் சொல்லி விடாமல் சர்வ ஜாக்கிரதையாக இருந்து விடுவாள்.

மின் விளக்கு வெளிச்சத்திலும், சூரிய வெளிச்சத்திலும் பல முறை பார்த்து விட்டு அதை ஒரு ஓரமாக அலட்சியமாக வைத்து விட்டு, ”எந்தக் கடையில் வாங்கினீர்கள்? என்ன விலை?” என்பதைத் தெரிந்து கொண்டு, ”பில் இருக்கிறதா? அது பத்திரமாக இருக்கட்டும்.  தேவைப்பட்டால் இதைக் கொடுத்து விட்டு வேறு புடவை மாற்றி வாங்கி வந்து விடலாம்” என்பாள்.

“திரும்பத் திரும்ப இந்தப் பச்சையும் நீலமும் தான் அமைகிறது”  என்றும் சொல்வதுண்டு. 

”கண்ணைப் பறிப்பது போல, உடம்பு பூராவும் பளபளவென்று ஜரிகையுடன் உள்ளதே, இதெல்லாம் சிறுசுகள் கட்டிக் கொள்ளலாம்.  நான் கட்டிக் கொண்டால் நன்றாக இருக்காது.  குடுகுடுன்னு போய் எதையாவது வாங்கி வந்து விடுகிறீர்கள்.  பரவாயில்லை.  யாராவது சொந்தக்கார சிறுவயசுப் பெண்கள் நம் வீட்டுக்கு வந்தால், வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமத்துடன் கொடுத்து விட்டால் போச்சு” என்பாள்.

அது போல யாராவது வரும் போது இதைப் பற்றிய ஞாபகமே சுத்தமாக வராது என்பது தனி விஷயம்.

உள்ளூரில் உள்ள தன் சமவயதுள்ள மூத்த சம்பந்தி அம்மாள் வரும் போது மட்டும், அந்தப் புடவையை ஞாபகமாக எடுத்துக் காட்டி அபிப்ராயம் கேட்பதுண்டு.

மிகவும் நாகரீகமான மற்றும் விவரமான அந்த அம்மாள் திருவாய் மலர்ந்தருளி என்ன சொல்கிறார்களோ அதைப் பொறுத்தே புடவையை கட்டிக் கொள்வதோ, யாருக்காவது வஸ்த்ர தானமாக கொடுத்து விடுவதோ அல்லது கடைக்குப்போய் அவர்களை விட்டே மாற்றிக் கொண்டு வரச் சொல்வதோ நிகழும்.  இதெல்லாம் அவ்வப்போது நடந்து வந்த பழைய கதைகள்.

சமீபத்தில் ஒருநாள் நான் வாங்கிக் கொடுத்தப் புதுப் புடவையொன்றை சம்பந்தியம்மாள் தந்த ஒப்புதல் மற்றும் பரிந்துரையின் அடிப்படையில் என் மனைவி கட்டிக்கொள்ள நேர்ந்தது.   

அது சமயம், எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து மிகவும் சுவாதீனமாகப் பழகும் பெண் ஒருத்தி, “மாமி, வாவ்..... இந்தப்புடவை உங்களுக்கு சூப்பராக இருக்கு, திடீரென்று ஒரு பத்து வயசுக்குறைஞ்சாப்போல இருக்கிறீங்க, நல்ல கலர், நல்ல டிசைன், லைட் வெயிட்டாக, ஷைனிங் ஆக இருக்கு. பார்டரும், தலைப்பும் படு ஜோர் மாமி; எங்கே வாங்கினேள்? நம்ம ஊரா - வெளியூரா? எந்தக்கடையில் வாங்கினேள்? யார் செலெக்‌ஷன்? என்ன விலை?” என ஆச்சர்யமாகப் பல கேள்விகளைக் கேட்கலானாள்.

அவளின் எந்தக்கேள்விகளுக்குமே பதில் அளிக்க முடியாத என் மனைவி, “எனக்கு ஒன்றுமே தெரியாதும்மா; எல்லாம் எங்காத்து மாமாவைக் கேட்டால் தான் தெரியும். அவர் தான் வாங்கிவந்தார்” என்று சொல்லி நழுவப்பார்த்தாள் . 

வந்தவள் சும்மா இல்லாமல், ”அதானே பார்த்தேன், சும்மா சொல்லக்கூடாது மாமி, உங்காத்து மாமா கற்பனையும், ரசனையும் அலாதியானது, நீங்க ரொம்பக்கொடுத்து வச்சவங்க; அடிக்கடி அவர் பெயர் பத்திரிகைகளில் வருகிறது என்றால் சும்மாவா பின்னே?

அடுத்த முறை நான் புடவை எடுக்கப்போகும் போது, என் ஸ்கூட்டர் பின்னாடி உங்காத்து மாமாவை உட்கார வைத்துக்கொண்டு கடைக்குக் கூட்டிப்போய், அவரைவிட்டே செலெக்ட் செய்யச்சொல்லி,  அவர் எது எடுத்துத்தருகிறாரோ அதைத்தான் வாங்கிக்கட்டிக்கப் போகிறேன் ” என்று உசிப்பி விட்டாள்.

என்னவளுக்கு கண்ணில் நீர் வராத குறை தான்.  விட்டால் அந்தப்பெண் என் கைகளைப்பிடித்து குலுக்கி பாராட்டவும் செய்வாள் என்பது எனக்கும் என் மனைவிக்கும் நன்றாகவே தெரியும். அந்தளவு மிகவும் சோஷியல் டைப் அந்தப்பெண். 

என்னவள் என்னைப்பார்த்து ”நீர் எதற்கு இன்னும் இங்கு நிற்கிறீர்?” என்பதுபோல ஒரு முறை முறைத்துவிட்டு, கையில் கிடுக்கியுடன் சமையல் அறைக்குள் புகுந்தாள். நானும் வெளியில் எங்கோ புறப்படுவதுபோல கிளம்பி விட்டேன்.   பிறகு முழுசா மூன்று நாட்களுக்கு என்னுடன் பேசவே இல்லையே. அவ்வளவு ஒரு பொஸஸிவ்நெஸ், அவளுக்கு என் மேல்.  

அன்பையும், பாசத்தையும், பிரியத்தையும் நேருக்குநேர் அவ்வப்போது பகிர்ந்து கொள்ள மாட்டாளே தவிர, இதுபோல வேறு யாராவது உசிப்பிவிட்டால் போச்சு! “நம்மாளு, நமக்கு மட்டும் தான்; இவள் யாரு குறுக்கே” என்று கொதித்தெழுந்து விடும் சுபாவம் கொண்டவள். 

சரி ....... சரி, பழம் கதையெல்லாம் இப்போது எதற்கு? இன்றைய புதுக்கதைக்குப் போவோம்.

இன்று அடியேன் ஜவுளிக்கடைக்குச் செல்வது அடியோடு வேறு ஒரு முக்கியமான விஷயமாக.   ஒரு பெண்ணுக்கு சுடிதார் எடுப்பதற்காக.

எங்களுக்கு மூன்று மகன்கள் மட்டுமே.  முதல் இருவருக்கும் திருமணம் ஆகி வெளி நாட்டிலும், வெளியூரிலும் உள்ளனர். மூன்றாவது மகனுக்கும் வெளியூரில் தான் வேலை.  அவனுக்குத் திருமணம் செய்துவைக்க நாங்கள் இருக்கும் உள்ளூரிலேயே பெண் பார்த்து பிடித்துப்போய், நிச்சயதார்த்த தேதி முதலியன பற்றிய பேச்சு வார்த்தைகளும் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

இந்தப் பெண் பார்க்கும் படலத்திற்கும் நிச்சயதார்த்த தினத்திற்கும் இடைவெளி சற்று அதிகம் உள்ளது.   இந்த இடைவெளியில் அந்தப் பெண்ணுக்கு பிறந்த நாள் வருகிறது.

அந்தப் பெண்ணின் பிறந்த நாளுக்கு, வருங்கால மாமனார் மாமியார் என்ற முறையில் ஏதாவது நினைவுப் பரிசுகள் தர வேண்டும் என்ற ஆவலில் இன்று மீண்டும் என்னுடைய ஜவுளிக்கடை பிரவேசம்.

கல்லூரிப் படிப்பை சமீபத்தில் முடித்த இளம் வயது பெண் தானே, நல்ல சுடிதார் ஒன்று வாங்கிக் கொடுப்போம். பிறகு வயதானால் எவ்வளவோ புடவைகள் கட்டிக் கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்குமே என்று நினைத்து ரெடிமேட் சுடிதார்கள் விற்கும் பிரபல ஜவுளிக்கடைக்குள், நான் இப்போது நுழைகிறேன்.
பகுதி-2

நான் உள்ளே நுழைந்த அது, திருச்சியிலேயே மிகப்பெரிய ஜவுளிக் கடல். கண்ணைக் கவரும் ரெடிமேட் ஆடைகள். பகலா இரவா என பிரமிக்க வைக்கும் மின் விளக்குகள் ஜொலிக்கின்றன.  

முழுவதும் குளுகுளு வென்று ஜில்லிட்டுப்போக வைக்கும் ஏ.ஸி க் கட்டடம். கடையின் உள்ளே நுழையும் போதே வருவோர் தலையில் [ஏற்கனவே நமக்குள்ள ஒரு சில முடிகளையும் பறக்கச் செய்யும் புயலென ] ஜில் காற்று வேகமாக அடிக்கும்படி ஒரு சிறப்பு ஏற்பாடு.  வேறு கடைகளுக்குப் போய் விடாமல், இங்கேயே இந்தக்கடையிலேயே நாம் ஜவுளிகள் வாங்கி விட வேண்டும் என்று ப்ரைன் வாஷ் செய்யவதற்காகவே இது போல வைத்திருப்பார்களோ என்னவோ!

எங்கு பார்த்தாலும் ஜவுளி வாங்க வந்துள்ள மக்கள் கூட்டம்.  அவர்களின் ரசனைக்குத் தீனி போட தயாராக இருந்த விற்பனைப் பெண்கள்.

”வாங்க ஸார்! என்ன வேணும்” நுழைவாயிலில் மட்டும் நின்ற ஒரே ஒரு ஆண் மகனின் கேள்வி.

“சுடிதார் வேண்டும்”   நான்.

”நேரே உள்ளே போய் இடது பக்கம் திரும்புங்கள்”

நேரே உள்ளே போனேன்.  இடது பக்கம் திரும்பினேன்.  திரும்பிய இடமெல்லாம் ஒரே சுடிதார் மயம். ஆயிரக்கணக்கான சுடிதார்கள். எங்களை வாங்குபவர் வரமாட்டார்களா என்ற ஏக்கத்துடன் ஹாங்கரில் தொங்கிக் கொண்டிருந்தன.

எதைப் பார்ப்பது, எதை வாங்குவது, ஓராயிரம் குழப்பங்கள் எனக்கு. ஒரு சில விற்பனைப் பெண்கள் என்னை நெருங்கினர்.  

”யாருக்கு சுடிதார்? ....  எவ்வளவு வயது? ..... உயரமா?  குள்ளமா? நிதானமா?  ...... குண்டா இருப்பங்களா?, ஒல்லியா இருப்பாங்களா? மீடியமா இருப்பாங்களா? ....... ஃபுல் ஸ்லீவ்ஸா, முக்கால் சைஸா? ...... என்ன விலையில் பார்க்கிறீர்கள்?” வரிசையாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்து, என்னை பிரமிக்கச் செய்தனர்.  

முன்னப்பின்னே நான் சுடிதார் வாங்கியிருந்தால் தானே, எனக்கு அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்ற விபரம் புரியும்!

தொங்க விட்டுள்ள சுடிதார்களில் ஒரு சிலவற்றை சற்றே இழுத்துப் பார்த்தேன். தடவிப் பார்த்தேன்.  யாரோ ஒரு வயதுப்பெண்ணைத் தொட்டுவிட்டது போல எனக்கு மிகவும் கூச்சமாக வேறு இருந்தது.  

இவ்வாறு ஒருவித சங்கடத்துடன் இருந்த என்னை நெருங்கிய அந்தப்பெண் விற்பனையாளர் இங்குள்ளதெல்லாம் விலை ஐநூறு முதல் எழுநூறு வரை, சார்” என்றாள். இருப்பினும் எதுவும் எடுப்பாகவும், கவர்ச்சியாகவும், ஸ்பெஷலாகவும் தெரியவில்லை எனக்கு. 

“இவைகளை விட விலை அதிகமாக ஏதும் உள்ளனவா?” இக்கட்டான சூழலிலிருந்து விலக எண்ணி கேள்வி எழுப்பினேன்.  

விலை ஜாஸ்தியான சுடிதார்கள் அடுக்கப்பட்டுள்ள பிரிவுக்கு என்னைப் பிரியாவிடை கொடுத்தனுப்பினர்.  

ஏற்கனவே நான் பார்த்த பிரிவில் அங்கு தொங்கிய சுடிதார்கள் எல்லாமே அன்ரிஸர்வ்டு ரெயில் பயணிகள் போல, எனக்குக்காட்சியளித்தன.

இந்தப்புதிய பிரிவில் உள்ள சுடிதார்கள், அழகாக தூங்கும் வசதியுடன் பயணிக்கும் ”ஃபர்ஸ்ட் கிளாஸ் ஏ.ஸி” பயணிகள் போல, சுகமாக வசதியாக, [பரிதாபமாகத் தொங்கும் நிலை ஏதுமில்லாமல்] ஜோராகக் காட்சியளித்தன. 

அவையாவும் பளபளப்பான கண்ணாடிக் கவர்களில் அடுக்கி மடித்து அழகிய டிசைன்கள் மற்றும் கலர்களில் வைக்கப்பட்டிருந்தன.  அங்கிருந்த இளம் விற்பனைப் பெண்களின் அடுக்கடுக்கான வழக்கமான கேள்விகள் ஆரம்பமாகி விட்டன.

ஏதோ ஒரு சுடிதாரை கையில் எடுத்துப் பார்த்தேன். விலை ஆயிரத்து நானூறு என்று போடப்பட்டிருந்தது.

”எவ்வளவு வயது பெண்ணுக்கு சுடிதார் பார்க்கிறீர்கள்?” என்றாள் ஒருத்தி. 

“22 வயது” என்றேன்.

”நல்ல உயரமானவங்களா சார் ?” என்றாள்.

“ஓரளவு உயரம் தான்;  உங்கள் உயரம் இருக்கும்” என்றேன்.

“எல்லாமே ஃப்ரீ சைஸ் தான்;  யாரு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்” என்றாள்.

“நல்ல கலரா இருப்பாங்களா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள் 

“சிவப்பாக நல்ல கலராகவே இருப்பாள்” என்றேன்.

உயரம், உடல்வாகு, வயது முதலியன சொல்லிவிட அவ்விடம் மாதிரிக்கு விற்பனைப் பெண்கள் பலர் இருந்தனர்.  நிறத்தையோ அழகையோ வர்ணிக்கவும், ஒப்பிடவும் அங்கு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 

ஒரு வேளை அது போல யாரும் பேரழகிகள் இருந்து, சுடிதார் பார்க்க வந்தபோது, யாராவது அவர்களையும் சேர்த்து செலெக்ட் செய்து போய் இருப்பார்களோ என்னவோ;  என்றும் நினைத்துக்கொண்டேன்.  

நூற்றுக்கணக்கான சுடிதார்கள், பல வண்ணங்களில். பல டிசைன்களில் காட்டியும் எனக்கு முழுத் திருப்தியாகவில்லை. நான் விரும்பும் கலர் மற்றும் நான் எதிர்பார்க்கும் டிசைன், என் டேஸ்ட் முதலியவை பிரத்யேகமானது.   மிகவும் வித்யாசமான ரஸனை உள்ளவன் அல்லவோ நான் !

“2000 ரூபாய்க்கு மேல், நல்ல அருமையான கரும் பச்சைக்கலரில், நல்ல வேலைப்பாடுகளுடன் இருந்தால் காட்டுங்களேன்” என்றேன் முடிவாக. .

பட்டு ரோஜாக் கலரில் ஒன்று காட்டப்பட்டது.  கையில் வாங்கித் தொட்டுப் பார்த்த எனக்கு ஓரளவு மனதுக்குப் பிடித்த டிசைனாக இருப்பினும், வரப் போகிற மருமகளுக்கு முதன் முதலாக எடுத்துக் கொடுப்பது, சிவப்பு (டேஞ்சர்) நிறமாக இருக்க வேண்டுமா என்ற சிறிய குழப்பம் என்னுள் ஓடியது. 

“அருமையான கலர் மற்றும் டிசைன் ஸார்” போட்டுப் பார்த்தால் சூப்பராக இருக்கும் அவங்க சிகப்பு உடம்புக்கு” என்றாள். 

ஏற்கனவே நான் தொட்டுப் பார்த்த லைட் சந்தனக்கலர் சுடிதாருக்கும் இதே போலத் தான் சொன்னாள், இவள். அவளுக்கென்ன! ஏதோ ஒன்றை விற்பனை செய்து, பில் போட்டு பணம் கட்ட என்னை அனுப்பி வைக்கணும் சீக்கிரமாக.

டேபிள் டாப் மீது வரிசையாகக் குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சுடிதார்களை, கிளி ஜோஸ்யம் பார்ப்பவரிடம் இருக்கும் கிளி ஒவ்வொரு அட்டையாக எடுத்து நகர்த்துவது போல நகர்த்திக்கொண்டிருந்தேனே தவிர, எதிலும் மனம் லயிக்காமல், அங்கிருந்த ராக்குகளில் அடுக்கப்பட்டிருந்த பல சுடிதார்களையும் வரிசையாக நோட்டமிடலானேன்.  

திடீரென்று ஒரு சுடிதாரைச் சுட்டிக் காட்டி, அதை அந்த அலமாரியிலிருந்து எடுக்கச் சொன்னேன்.

நான் கேட்ட அதே கரும் பச்சைக்கலர்;  வெல்வெட் போன்ற நல்ல பளபளப்பும் வழுவழுப்பும். முன் பகுதியில் மட்டும் அருமையான கண்ணைப் பறிக்கும் வேலைப்பாடுகள்;  தங்கக் கலரில் ஜரிகை, ஜிம்கி, எம்ப்ராய்டரி என அனைத்தும் அருமையாக இருந்தன.

இருந்தும் எனக்கொரு பெரிய குறை.  இரண்டு பக்கமும் கை ஏதும் இல்லாமல் இது முண்டா பனியன் போலல்லவா உள்ளது! என்ற வருத்தம் ஏற்பட்டது.   



பகுதி-3  

”இதே கலர்  இதே டிசைனில் கை வைத்ததாக வேண்டும்” என்றேன்.

என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து அவர்களுக்குள் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிப்பது போலத் தோன்றியது. மல்லாக்காக இருந்த அந்தச் சுடிதாரை குப்புறப்படுக்கப்போட்டாள் அந்த விற்பனைப்பெண். கைகள் இரண்டும், சுடிதாரின் பின்புறம் முதுகுப்புறமாக பின் போட்டு ஒட்டப்பட்டிருந்ததை என்னிடம் சுட்டிக் காட்டினாள்.

”அச்சச்சோ! அந்தக்கைகளுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி வெட்டி பின்புறமாக ஒட்டி வைத்துள்ளீர்கள்?”  ஒருவித அனுதாபத்துடன் வினவினேன் அப்பாவியாக நான்.  

“கைகளைத்தனியே இப்படித்தான் இங்கே வைத்திருப்பார்கள் சார்; அவைகளைத் தனியே வைத்து அவரவர் விருப்பப்படி தைத்துக்கொள்ள வேண்டும்; ஒரு சிலர் கைகள் ஏதும் வேண்டாம், அப்படியே காத்தாட இருக்கட்டும் என்பார்கள்; அதனால் தான் அவற்றைத் தைக்காமல் தனியாக இப்படி வைத்திருக்கிறார்கள்” என்றாள்.

இந்த விளக்கத்தைக்கேட்ட நான் ஒரு வழியாக நிம்மதி அடைந்தேன். அப்படித்தனியே தொங்கிய கைகளும், தோள்பட்டையையொட்டி தைக்கப்பட வேண்டிய இடத்தில் கும்மென்று எக்ஸ்ட்ரா துணிகொடுத்து பஃப் வைத்ததாகவும், கீழே அழகிய கண்ணைக்கவரும் தங்கக்கலரில் பார்டர் கொடுக்கப்பட்டதாகவும், கரும்பச்சை நிறத்தில் ஜம்மென்று இருந்தது எனக்கு மகிழ்ச்சியளித்தது.  

என் முகம் வெளிப்படுத்திய திருப்தியை உணர்ந்த அந்த விற்பனைப்பெண் , ”இதன் விலை ரூபாய் 2400 மட்டுமே, அதிலும் 10% தள்ளுபடி உண்டு, சார்”  என்றாள். 

“இதற்கு மேட்சாக இதே கலரில் கால் குழாயும் (பேண்ட்டும்) அங்கவஸ்திரமும் ( துப்பட்டாவும் ) தருவீர்கள் அல்லவா?” என்றேன்.



மறுபடியும் ஒரு மாதிரியாக என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவள், “அதே கலரில் வராது சார், யூனிஃபார்ம் மாதிரி போட மாட்டார்கள்” என்றாள்.

“இதற்கு ஜோடி இது தான்” என்று ஒரு வித அழுகமாங்காய் [அழுகிப்போன மாவடு] கலர் போன்ற பழுப்புக் கலரில், ஆனால் மிகவும் நயமான கொசுவலை போன்ற துணியில் துப்பட்டாவும், கால் குழாயும் எடுத்துக் காட்டினாள். உள்புறம் துணி கொடுத்து, டபுள் ஸ்டிச்சிங் செய்து தொளதொள என்று இருந்தது அந்தக் கால்க்குழாய் (பேண்ட்).   
எனக்கு மட்டும் அதே கரும்பச்சைக் கலரில் மேட்ச்சாக இல்லாமல் மங்கிய கலரில் உள்ளதே என்று ஒரு பெரும் குறை மனதுக்குள் இருந்தது. 

சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் நான் இருந்த போது, அவற்றைப் பேக் செய்து கொண்டே, “ஒன்று போதுமா சார், வேறு ஏதாவது பார்க்கிறீங்களா” என்றாள்.

கால் குழாயும் துப்பட்டாவும் வேறு கலரில் இருப்பதோடு மட்டுமின்றி, போட்டுகொண்டால் “அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” படத்தில் வரும் பானுமதியின் பைஜாமா போல தொளதொளப்பாக இருக்குமோ என்ற விசாரத்துடன், பணம் ரூ. 2160 மட்டும் செலுத்தி விட்டு, பார்ஸலை வாங்கிக் கொண்டு கடையிலிருந்து புறப்பட்டேன். 

அந்த பரபரப்பான பஜாரில், வழிநெடுகிலும் பல இளம் வயதுப் பெண்கள் சுடிதாருடன் தென்பட்டனர். நான் அந்தத் தெருவின் ஒரு ஓரமாக நின்றபடி, வாழ்க்கையில் முதன் முதலாக, அந்த இளம் வயது பெண்களை உச்சி முதல் உள்ளங்கால் வரை உற்று நோட்டமிடலானேன். அவர்களைப் பார்த்துக்கொண்டே என் மனதினுள் சுடிதார்கள் பற்றிய கருத்துக்கணிப்பு நடத்தலானேன்.

அவர்களில் பாதிப் பேர் முக்கால் சைஸாக தொடை வரையிலும், மீதிப்பேர் முழுவதும் மறைப்பது போல முழங்காலுக்குக்கீழ் சற்றே இறக்கமாக (ஃபுல் ஸ்லீவ்ஸ்) சட்டையும் அணிந்திருந்தனர். 

அவர்களில் முக்கால் வாசிப்பேர் சுடிதார் ஒரு கலரிலும், துப்பட்டாவும், கால்குழாயும் வேறு கலரிலும் அணிந்திருந்தனர்.

மீதி கால்வாசிப் பேர்கள், எல்லாம் ஒரே கலரில் மேட்ச் ஆக அணிந்திருந்தனர்.  

இந்த டீன் ஏஜ் பெண்களையெல்லாம் விதவிதமான சைஸ்களிலும், கலர்களிலும், இன்று மட்டும் லுக் விட்ட எனக்கு மீண்டும் மனதில் ஓர் சஞ்சலம் ஏற்பட்டுவிட்டது.  

தவறாக நினைத்து விடாதீர்கள்.  நான் வாங்கி வந்துள்ள சுடிதார் செட்டில், சுடிதார் ஒருகலரும், கால்க்குழாய் வேறு கலருமாக இருப்பதாலும், அதுவும் ஆஃப் ஸ்லீவ்ஸுடன் தொடைவரையுள்ள மாடலாக இருப்பதாலும், அது இன்றைய நவ நாகரீகப் பெண்கள்  உபயோகிக்கக் கூடிய ஃபேஷன் தானா, என்பது தான் என் சஞ்சலமும், சந்தேகமும்.   

இதுபோல சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேல் சுடிதார் அணிந்த பல பெண்களை, பலவடிவங்களிலும், பல்வேறு ஆடைகளுடனும் கண்குளிர தரிஸித்து வந்த நான், இனிமேல் சுடிதார் அணிந்த எந்தப் பெண்ணையும் பார்த்து மனதைச் சஞ்சலப் படுத்திக் கொள்ளக் கூடாது என்ற முடிவுடன், மலைவாசல் பிள்ளையாரை வேண்டிக்கொண்டு, ஒரு ஆட்டோவைப் பிடித்து என் வீடு நோக்கிப் புறப்பட்டேன். 

ஆட்டோவில் வரும்போதும் ஆயிரம் எண்ணங்கள் அலைமோதின.  பெரிய பையன்கள் கல்யாணத்திற்கு ஒரே நாளில் நூற்றுக்கணக்கான புடவைகள், பல்வேறு கலர்கள், டிசைன்கள், விலைகள் என அள்ளி வந்து உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் அளித்து மகிழ்வித்த அனுபவம் எனக்கு உண்டு.   இன்று முதன்முதலாக ஒரு சுடிதார் எடுக்கப்போய் அதிலும் பல புதிய அனுபவங்களையும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டதிலும் ஒரு மகிழ்ச்சியே ஏற்பட்டது என்றாலும், மனதில் ஏதோ ஒரு சின்ன விசாரம் இருந்து வந்தது.

புடவையில் கூட எனக்கு என்று ஒருசில தனி அபிப்ராயங்கள் உண்டு. அதாவது ஒருசில புடவைகள் ஒருசிலர் கட்டிக்கொண்டால் மட்டுமே மிக அழகாக இருப்பதுபோல எனக்குத் தோன்றும். அதுபோல ஒருசிலர் எந்த ஒரு புடவை கட்டிக்கொண்டாலும் நல்ல அழகாகவே தென்படுகிறார்களே என்றும் நினைத்துக்கொள்வதுண்டு. ஒருசில புடவைகள் புடவைக்கடை வாசலில் உள்ள பொம்மைக்கு கட்டினால் மட்டுமே ஆடாமல், அசங்காமல், கசங்காமல் வெகு அழகாக இருப்பதுபோல அவ்வப்போது நினைத்துக்கொள்வேன்.    

இவ்வாறான பல நினைவுகளுடன் வந்த என்னை, ஆட்டோக்காரர் என் வீட்டு வாசலில் அடித்த சடர்ன் ப்ரேக், நிகழ்காலத்திற்கு மீட்டு வந்தது. ஆட்டோக்காரருக்கு பணம் கொடுத்து, நன்றி சொல்லிவிட்டு, நான் என் வீட்டை அடைந்தேன்.    

வழக்கம்போலவே, எங்கே போனீர்கள், என்ன வாங்கி வந்தீர்கள் என எதுவும் கேட்காவிட்டாலும், நானே சுடிதாரைப்பிரித்து என் மனைவியிடம் நீட்டினேன். வாங்கிப்பார்த்தவள், அதிசயமாக ஒரு சின்ன புன்னகை புரிந்தாள். 

“நீ ஒருமுறை இந்தச்சுடிதாரை அணிந்து பார்த்து, சைஸ் ஓரளவுக்கு அவளுக்கு சரியாக இருக்குமா என்று சொல்கிறாயா?” என்று கேட்டு என்னுடைய வெகுநாள் ஆவலை, மெதுவாக வெளிப்படுத்தலானேன்.

“எல்லாம் அந்தப்பொண்ணுக்கு சரியாகத்தான் இருக்கும்; பேசாமல் கசங்காமல் கொள்ளாமல், அப்படியே அந்த அட்டைப்பெட்டியில் போட்டு பத்திரமாக வையுங்கோ” என்று சொல்லிவிட்டு, ஓடிக்கொண்டிருந்த கிரைண்டரில் கையைவிட்டு, இட்லிமாவை தன் விரல்களால் எடுத்து பதம்பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

அடிக்கடி ஏற்பட்டு வரும் மின் தடை இப்போது ஏற்படாமல், அந்த கிரைண்டர் தொடர்ந்து ஓடியதில் எனக்கு சற்றே எரிச்சல் ஏற்பட்டது.

சுடிதார் அணிந்த நிலையில் என்னவளை மொபைல் போன் கேமரா மூலம் ஒரு படமாவது எடுத்து, தினமும் ஒருமுறை பார்த்து மகிழலாம் என்ற என் நினைப்பு வொர்க்-அவுட் ஆகாமல் நான் மூட்-அவுட் ஆகியும், வழக்கம்போல் என் மனதை நானே சமாதானம் செய்துகொண்டு உடனே இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டேன்.

ஒரு வழியாக வெற்றிலை பாக்கு, பழங்கள், புஷ்பங்கள், சாக்லேட்டுகள், மற்றும் ஸ்வீட் பாக்கெட்களுடன், நான் வெகு கஷ்டப்பட்டு வாங்கி வந்திருந்த சுடிதாரை, என் மனைவி கையால் என் வருங்கால மருமகளுக்கு வழங்க  ஏற்பாடு செய்தேன் நான்.   அந்தப் பெண்ணிடம், அவற்றைச் சந்தோஷமாகக் கொடுத்தாள் என் மனைவி.  

”கலரோ, டிசைனோ, சைஸோ  சரியில்லாவிட்டால் உடனே 2 நாட்களுக்குள் கடையில் கொடுத்து விட்டு வேறு ஒன்று மாற்றி வந்து விடலாம்” என்றோம் அந்தப் பெண்ணிடம். 

ஆனால் அவள் இதுவே நன்றாக இருப்பதாகச் சொல்லி மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டாள். பெண் பார்க்கும் படலம் முடிந்து நிச்சயதார்த்தம் நடைபெற நாள் குறித்துள்ள இடைக்காலத்தில், அவள் இன்று இருக்கும்  நிலைமையில் வேறு என்னதான், எங்களிடம், தைர்யமாகச் சொல்லிவிட முடியும் என்று என் மனதினுள் நினைத்துக் கொண்டேன்.

தனியாகத் தொங்கிக்கொண்டிருந்த கைகள் இரண்டையும் அழகாகத் தைத்து, அதை அப்படியே அணிந்து கொண்டு வருங்கால மாமியாரிடம் காட்டிவிட்டு, ”தனது ஸ்நேகிதிகள் எல்லோருமே இந்த டிரஸ் ரொம்பவும் சூப்பராக இருப்பதாகச் சொல்லிப் பாராட்டினார்கள்” என்றும் கூறி, நன்றி கலந்த நாணத்துடன், பிறந்த நாள் அன்று எங்களை நமஸ்கரித்துச் சென்றாள், அந்தப் பெண்.

அவள் புறப்பட்டுச் சென்ற அடுத்த நிமிடம் என் மூன்றாவது மகனிடமிருந்து எனக்குத் தொலைபேசியில் ஒரு அழைப்பு.

“நீ வாங்கிக் கொடுத்துள்ள சுடிதார் அவளுக்கு மிகவும் நன்றாக இருக்குப்பா. சூப்பர் செலக்‌ஷன், ரொம்பவும் தாங்ஸ்ப்பா” என்றான்.   

திருச்சியிலிருந்து 400 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் இவன் எப்படி அதற்குள் இந்த சுடிதாரைப் பார்த்தான்? என்று எனக்குள் ஒரே வியப்பு.  அவனிடமே  நான் இதைப்பற்றி அப்பாவித்தனமாகக் கேட்டு விட்டேன்.

“மெயிலை ஓபன் செய்து பார் தெரியும்” என்றான்.  

டிஜிடல் கேமராவில் போட்டோ எடுத்து, இண்டெர்நெட் மூலம் அவனுக்கு அனுப்பி விட்டுத் தான் எங்களைப் பார்க்க வந்திருக்கிறாள் எங்கள் வருங்கால மருமகள். 

எது எப்படியோ, நாம் வாங்கி வந்தது நன்றாக இருப்பதாக, வாழ்க்கையில் முதன் முறையாக ஒரு அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதில், என் மனம் மகிழ்ச்சிக் கடலில் நீச்சலடித்துக் கொண்டிருந்தது. 


*****************************************


எனது விமர்சனம்

பொதுவாக, பெண் என்பவள் , புடவைக்கும் நகைக்கும் மிகுந்த ஆசை கொண்டவளாகவே  சித்தரிக்கப் படுவாள். ஆனால், இந்தக் கதையில் ஆசிரியர்  அதற்கு விதிவிலக்காக, தனது இல்லத்தரசி  பட்டு, பகட்டு எதற்கும்  ஆசைப் படாதவளாக சித்தரிக்கிறார்.

ஒவ்வொருவருக்கும்  வாழ்வின் ஒவ்வோர் கட்டத்திலும்,  அவர்களது  செயல்களுக்கும்  முயற்சிகளுக்கும் கிடைக்கும்  பாராட்டுதல்களும்  அங்கீகாரங்களுமே , அவர்களது  அடுத்த  கட்ட வளர்ச்சிக்கு  ஊக்க மருந்தாக அமையும்.  ஒவ்வொரு சிறு பாராட்டும் புன்னகையும்  அதனை  பெறுபவர்களால் பெரும் பரிசாக கொள்ளப் படுகிறது.  அது அவர்களின்  வளர்ச்சிக்கு மென்மேலும்  உதவுகிறது.

சில வேளைகளில். நம்முடனேயே,  நமக்கு நெருக்கமாய்   இருப்பவர்களது  நல்லியல்புகளும், அற்புதத் திறன்களும் ஏனோ  நமக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது. எங்கோ இருப்பவர்களது திறமையையும் வெற்றியையும் வானளாவ புகழ்ந்து கொண்டிருப்போம். ஆனால், நம்முடனேயே  இருப்பவர்கள் கொண்ட திறன் , நமக்கு மிகவும் சாதாரண ஒன்றாய் தெரியும் . அவற்றை  மற்றவர்கள் அல்லது புதியவர்கள் கண்டு கொண்டு உயர்த்திப் பேசும் போது , அதுவும் வாழ்த்தப் படுபவர்கள் , நமது மனதுக்கு மிகவும்  நெருக்கமானவர்களாய் இருந்து விட்டால், மனதில் தோன்றும் "   என்  உடைமை  - எனக்கு மட்டுமே சொந்தம்."  எனும் உரிமை உணர்வே மேலோங்கி  நிற்கும். அவர்களை பிறர்  பெருமையாக பாராட்டி பேசிவிட்டால், ""இந்தளவிற்கு நம்மவரை  கூர்ந்து கவனித்து உள்ளார்களே ! "   என்று  மனதிலுள்ள  உரிமை பொறாமையாய்  (possessiveness ) எட்டிப் பார்க்கும். இதை அழகாய் ஆசிரியர் சித்தரித்து உள்ளார்.

ஜவுளிக் கடையின் பிரம்மாண்டத்தையும், ஆடம்பரத்தையும், வாடிக்கையாளர்களைக் கவர அவர்கள் கையாளும் வியாபார உத்திகளையும் அழகாக சொல்லிச் செல்கிறார். ஜவுளிக் கடைகளில் பணிபுரியும்  இளம் பெண்களின், வியாபார தந்திரங்களையும், நயமான பேச்சு நடையையும் , தான் முடிக்கும் வியாபாரத்திற்கு கிடைக்கும் கமிஷன் தொகைக்காக, முடிந்தவரை  அதிக வாடிக்கையாளர்களைக் கவர்ந்து, வியாபாரத்தை முடிப்பதிலேயே  குறியாக இருப்பதை  படம் பிடித்துக் காட்டுகிறார்.

இன்று விற்பனைக்கு வரும் சுடிதார்களைப்  பற்றியும் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில், ரெடிமேட் சுடிதார்  எடுத்தால், அதில்  மேற்கொண்டு ஏதும்  தையல் வேலை எதுவும் இருக்காது. இன்றோ, சுடிதார்கள் எல்லாம்  கையில்லாமலேயே  விற்பனைக்கு வருகிறது. கைகள் தனி இணைப்பாக கொடுக்கப் படுகின்றன. வேண்டும்  என்கிறவர்கள், வைத்து தைத்துக் கொள்கிறார்கள். சிலரோ, கையில்லாமல்  போடுவதை (Sleeveless ) பேஷன்  ஆக எண்ணி, கை வைத்து தைப்பதில்லை. இங்கு,  இளம் தலைமுறையினரின் மாறிவருகின்ற  ரசனைப்  போக்கினையும் சொல்கிறார் ஆசிரியர்.

 தன்  மனைவியை சுடிதாரில் பார்க்க ஆசைப்படும் கணவன், அவருக்கும் புதிதாய் ஒரு சுடிதார்  எடுத்துக் கொடுத்திருந்தால், எப்போது வேண்டுமானாலும் அவரை போடச் செய்து  பார்த்து இரசித்துக் கொள்ளலாமே.


தகவல் தொழில்நுட்பம்  அபார வளர்ச்சி அடைந்துள்ள இந்நாளில்,  நினைத்த நேரத்தில், உலகில் உள்ள எவருடனும்  தொடர்பு கொள்ளும் வாய்ப்பு உள்ளது.  தூது விடு முறை, தபால், தந்தி, தொலைபேசி  என்று படிப்படியாக வளர்ந்து வந்த தகவல் தொடர்பு வசதிகள், இன்று ஒருபடி மேலேறி, இணையத்தின் உதவியால், உலகையே  கைக்குள் அடக்கி வைத்துவிடும்படி  முன்னேறி உள்ளது. 

அன்றாட வாழ்வில், ஒருவர் மேற்கொள்ளும்  சிறு சிறு  நன்முயற்சிகட்கு கிடைக்கும் ஊக்கமும்  அங்கீகாரமும், அவர்களது  அடுத்தகட்ட வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்குமென்பதை  ஆசிரியர்  அழகாய் சொல்லியுள்ளார்.


http://gopu1949.blogspot.in/2014/02/vgk-03-03-03.html

நல்வாய்ப்பளித்த திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும், எனது விமர்சனத்தை தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும்  நன்றிகள் !!!

6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் விமர்சனத்திறமைக்குப் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

இந்த மகிழ்ச்சியான செய்தியினை சுடச்சுட தனிப்பதிவாகவே பகிர்ந்து கொண்டுள்ள தங்களுக்கு முதலில் என் நன்றிகள்.

ஒவ்வொரு வாரமும் மேலும் மேலும் நடைபெற உள்ள பல்வேறு ’சிறுகதை விமர்சனப்போட்டி’ களிலும் வாராவாரம் தொடர்ந்து கலந்துகொண்டு மேலும் மேலும் பல பரிசுகளை தொடர்ச்சியாகப் பெற நல்வாழ்த்துகள்.

அன்புடன் VGK

Tamizhmuhil Prakasam said...

தங்களது அன்பான வாழ்த்துகட்கும் பாராட்டுதல்கட்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

முயன்றவரை போட்டிச் சிறுகதைகட்கு விமர்சனம் எழுதி அனுப்புகிறேன் ஐயா.

நன்றி.

மகிழ்நிறை said...

வாழ்த்துகள் முகில்!
அருமையான விமர்சனம் !

திண்டுக்கல் தனபாலன் said...

சற்றுமுன் ஐயாவின் தளத்தில் வாசித்தேன்... வாழ்த்துக்கள் பல...

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை எங்கே...?

Contact : dindiguldhanabalan@yahoo.com

Tamizhmuhil Prakasam said...

@ மைதிலி கஸ்தூரி ரங்கன்

தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி .

Tamizhmuhil Prakasam said...

@ திண்டுக்கல் தனபாலன்

தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.


Post a Comment