blank'/> muhilneel: October 2013

Monday, October 28, 2013

ஓடும் மேகங்களே !!! - விமான பயண அனுபவங்கள்.

காலில் சக்கரங்களைக் கட்டிக் கொண்டு புதிதாய் ஓடிப் பழகும் சிறு பறவை போல மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கையிலேயே, உள்ளந்தனில் புதியதாய் உத்வேகமொன்று பிறந்தது போல, சற்று வேகமாய் ஓடத் துவங்கி, வானில் ஜிவ்வென்று சுதந்திரமாய் சிட்டெனப் பறந்திட சிறகுகள் நீண்டு விரிந்தது போல் வானில் சிறகுகள் விரித்துப் பறக்கத் துவங்கியது அந்த விமானம்.


File:Stockholm, view from plane.jpgவிமானம் வானில் ஏற ஏற, எத்துனையோ உணர்வலைகள். ஏதோ திடீரென வாயிற்கும் வயிற்றிற்கும் இடையே பெரிய காற்றுப் பந்தொன்று  ஏறி இறங்குவது போல், இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. மெல்ல மெல்ல அந்த உணர்வுகளினின்று விடுபட்டு, ஆகாயத்திலிருந்து பூமியைக் கண்டால், எழில் ஓவியமென்று காட்சியளிக்கிறது. இரவுப் பொழுதில் மின் விளக்குகளின் ஒளியில், பூவுலகே ஜோதி வடிவாய்க் காட்சியளிக்கிறது. சாலையில் வாகனங்களின்  ஒளியும், அவற்றின் அணிவகுப்பும் ஏதோ விழா அணிவகுப்பு போல  காட்சியளிக்கிறது. பகல் பொழுதினிலோ, இதுவரை ஓவியர் எவரும் வரைந்திடாத எழில் ஓவியமென காட்சியளிக்கிறது. மலைகள், ஓடைகள், நதிகள் என இறைவனின் கைவண்ணத்தில் உருவான பூரணத்துவம் வாய்ந்த இயற்கையின் அழகை  இன்பமாய்  இரசிக்கலாம்.
View trough airplane window in flight

தரையிலிருப்பதெல்லாம்  காண்பதற்கு  சிறு கடுகாய் மாறிப் போக, ஆகாயத்தின் எழில்  பிரமிக்க வைக்கும் வகையில் கண்முன் விரிகிறது. விமானம் இன்னும் சற்று உயர ஏறி  நடுவானில் செல்கையில், மேகக் கூட்டங்களின் மீது  மிதந்து செல்வது போன்றொரு உணர்வு. பஞ்சுப் பொதிகளென வானில் மிதக்கும் மேகங்களை  சிறிது  கைகளில்  அள்ளிக் கொண்டுவிட்டால் என்ன என்று எண்ணுமளவிற்கு  கொள்ளை அழகுடன்  விளங்கின மேகக் கூட்டங்கள்.


ஆதவனவன்  துயில் கலைந்து,   தன மேகப் போர்வையை விலக்கிப்  பார்த்தானோ, அல்லது, தனது கடமையை செவ்வனே முடித்துவிட்டு, ஓய்வெடுக்க கிளம்பிக் கொண்டிருந்தானோ, தெரியவில்லை. வான் வெளியில் மங்களகரமாய்  பொன் மஞ்சள் வண்ணத்தில்  அழகானதோர் பட்டுக் கம்பளம்  விரிந்தது.


http://www.debbiephotos.com/wp-content/uploads/2011/11/Sunset-Plane-Window.jpg 
வானிலிருந்து பார்கையில் உயர்ந்து நிற்கும் கட்டிடங்களெல்லாம், ஓர் ஒழுங்குடன் நேர்த்தியாய் அடுக்கப்பட்ட தீப்பெட்டிகளைப் போல் காட்சியளிக்கின்றன. 





பூமியிலிருந்து  அண்ணார்ந்து   பார்த்து  இரசித்த நீலவான்வெளியின்  அழகினையும்,  இதயம்  கொள்ளை கொள்ளும்  ஓடும் மேகங்களின்  அழகினையும்  கண்முன்னே, கைக்கு எட்டும்  தொலைவில் - ஆனால்,  எட்டிப் பிடிப்பதென்பது  சாத்தியமற்ற  ஒன்றென்றாலும்,  மிக  அருகாமையில்  கண்டு  களிப்புறச்  செய்யும்  விமானப்  பயணம்  ஒவ்வொன்றுமே,  நினைவலைகளை  விட்டு  நீங்காத  இன்பம்  நிறைத்த  பயணங்களே !!!  


படங்களுக்கு நன்றி.
கூகுள்.


Tuesday, October 22, 2013

சேரிடம் அறிந்து சேர்

நட்பு !
இங்கு உதிர சம்மந்த 
உறவுகள் இல்லை !!
இதயத்தையே நண்பனின் 
உறைவிடமாக்கி  காலங்காலமாய் 
உவகையோடு சுமக்கும் 
உன்னத உள்ளங்கள் !!!

நட்பை என்றுமே உயர்வாக எண்ணுபவள் கலைவாணி.யார் எந்த உதவி கேட்டாலும் தயங்காமல் செய்வாள் . இளங்கலை பட்டப் படிப்பை  முடித்திருந்த அவள், மேற்படிப்பிற்காக புதிய கல்லூரியில் சேர்ந்திருந்தாள். அவளது வகுப்பில் பாதிக்கும் மேற்பட்ட மாணவியர் ஏற்கனவே, அதே கல்லூரியில் இளங்கலை வகுப்பில் ஒன்றாகப்  படித்தவர்கள். புதிய நண்பர்கள், புதிய சூழல் அனைத்தையும் பழக, கலைவாணிக்கு சிறிது காலம் ஆயிற்று.


அன்றாடம் கல்லூரிக்கு தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் செல்வாள். சில சமயங்களில், தந்தைக்கு ஏதேனும் அலுவல்கள் இருப்பின், கல்லூரிக்கு நடந்தே சென்று விடுவாள். அப்படி ஒருநாள் நடந்து செல்லும் போது தான், வகுப்பில் உடன் பயிலும் மாணவி சந்திரா இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாள். கலைவாணியைக் கண்டதும், வண்டியை நிறுத்தி அவளையும் ஏற்றிக் கொண்டாள். அவ்வப்போது நடந்து செல்லும் போதெல்லாம், சந்திரா, கலைவாணியை தன்னுடன் அழைத்துச் செல்வாள்.


ஒருநாள் சந்திரா, இனிமேல் தானே கலைவாணியை  வீட்டில் வந்து அழைத்துச் செல்வதாகக் கூறி, அன்றாடம் கலைவாணியை அழைத்துச் சென்று, கல்லூரி முடிந்ததும் வீட்டில் கொண்டுவந்து விட்டுச் செல்வாள். எங்கு சென்றாலும் சந்திராவும் கலைவாணியும் ஒன்றாகவே செல்வர். அவர்களிடையேயான உறவு  மிகவும் நெருக்கமானதாக கலைவாணி எண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால், உண்மையில்,  தனது  அவசர உதவிகள், வீட்டில் நடக்கும்  விசேஷங்களுக்கு பொருட்கள் வாங்க, சந்திராவின் காதலுக்கு தூது செல்ல என்று அவளது தேவைகட்கு எல்லாம் பயன்படுத்தினாள். இது பல நாட்களாக கலைவாணிக்கு புரியவில்லை.


ஒருமுறை, கல்லூரியில் சுற்றுலா செல்ல ஏற்பாடாயிருந்தது. கலைவாணியின் பெற்றோர் ஏதோ காரணத்திற்காக செல்ல வேண்டாமெனக் கூற, அவர்களை சமாதானப்படுத்தி கலைவாணியையும் சுற்றுலாவுக்கு வரச் செய்தாள். சுற்றுலாவின்  போது, கலைவாணிக்கு சற்று உடல்நலக் குறைபாடு ஏற்பட, மிகவும் சோர்வாக அமைதியாக இருந்தாள். அவளால் கலகலப்பாக இருக்க முடியவில்லை.இதை உணர்ந்து கொள்ளாத சந்திரா, மற்ற தோழியருடன் சேர்ந்து கலைவாணியை மிகவும் உதாசீனப் படுத்த, மிகவும் வருத்தப்பட்டாள் கலைவாணி. இந்த சம்பவத்திற்குப் பிறகு, சந்திராவுடன் பழக ஏனோ தயங்கினாள் கலைவாணி.


நான்கைந்து மாதங்கள் சென்றிருக்கும். அவர்களது பாடம் சம்மந்தமாக, ஏதேனும் நிறுவனத்தில் ஆறுமாத காலம் பணியாற்றி, திட்ட அறிக்கை சமர்ப்பித்தல் வேண்டும். அதற்காக, பல நிறுவனங்கள் தேடி அலைந்தால் கலைவாணி. இறுதியில், வெளியூரில் இருக்கும் ஓர்  நிறுவனத்தில் வாய்ப்பு கிடைக்க, அங்கு சேர்ந்தாள். அங்கு முதல் நாள் சென்ற அவளுக்கு, பெரும் ஆச்சர்யம் காத்திருந்தது. அங்கு ஏற்கனவே சந்திரா சேர்ந்திருந்தாள். ஆனால், அதைப் பற்றி கலைவாணியிடம் ஏதும் கூறவில்லை. இதனை அறிந்தபோது, கலைவாணி, இந்த விஷயம் அவளை பாதித்ததாக காட்டிக் கொள்ளவில்லை.


ஒருமாதத்தில் பொங்கல் விடுமுறை வர, விடுதியில் தங்கியிருந்த மாணவியர் அனைவரும் சொந்த ஊருக்கு செல்ல பிரயாணத்திற்கு பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்தனர். அன்று மாலை, சந்திரா, கலைவாணி , இன்னும் சில தோழிகள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, ஊருக்கு செல்வது பற்றி பேச்சு எழ, சந்திரா கலைவாணியிடம், பதிவுச் சீட்டு முன்பதிவு செய்தாயிற்றா என்று வினவினாள். அதற்கு கலைவாணி, தனது பெற்றோர் அவள் இருக்குமிடத்திற்கே வந்து விடுவதாக சொல்லியிருப்பதாகவும், அந்த விடுமுறையை அவர்கள் குடும்பத்துடன் அங்கேயே கழிக்கப் போவதாகவும் கூற, சற்றும் எதிர்பாராமல் " அப்போ, பொங்கலுக்கு முன்னாடி போகி வருமே? இங்க இருந்தா எப்படி கொண்டாடுவீங்க? " என்றவள், சட்டென்று " கலைவாணி போகிக்கு அவளே அவளை எரிச்சுக்குவாடி" என்று சொல்லி கொல்லென்று சிரித்தாள்.  அதைச் சற்றும் எதிர்பாராத கலைவாணி, கலங்கிய கண்களுடன் அவ்விடத்தை விட்டு அகன்றாள்.


" சேரிடம் அறிந்து சேர் " 

என்ற கூற்றில் பொதிந்திருக்கும் மாபெரும் உண்மையை அன்று தனது சொந்த அனுபவத்தில் உணர்ந்தாள்  கலைவாணி.