blank'/> muhilneel: ஓர் இனிய நட்பின் உதயம் !!!

Wednesday, August 21, 2013

ஓர் இனிய நட்பின் உதயம் !!!



அந்த  மூன்றாண்டு கல்லூரிப் படிப்பு, காலமெலாம் அவளது நினைவுகளில் பசுமையாய் நிறைந்திருக்கக்  கூடிய இனிமையானதோர் தன்னலம் பேணா உறவினை ஏற்படுத்திக் கொடுக்குமென்பதை அவள் அறிந்திருக்கவில்லை.


அந்த  அன்புத் தாரகையுடன் அவளிற்கு ஏற்பட்ட அழகானதோர் நட்பிற்கும், ஆழமான நேசத்திற்கும்  அடித்தளம் அமைத்துக்  கொடுத்து, வசந்த்தத்தினை  அள்ளித் தந்த தோழியவளுக்கு கோடானு கோடி நன்றிகளை ஆனந்தக் கண்ணீருடன்  காணிக்கையாக்கினாலும் தகும்.


இனிமையானதொரு உறவிற்கு அடித்தளமிட்ட அந்த நிகழ்வு - அது என்றென்றும் மனதில் பசுமையாய் பூத்துக் குலுங்கும், நினைத்த மாத்திரத்தில் சுகந்தத்தை அள்ளித் தெளிக்கும் இன்பகரமான நினைவுகள். 


கல்லூரி வாழ்வுதனை கூண்டுப் பறவையாய் கழித்த மூன்றாண்டுகளில், காலை,மதியம்,மாலை, இரவு என்று நான்கு வேளைகளிலும் உணவருந்தச் செல்லும்  அந்த உணவுக் கூடம். வழக்கம் போல் ஓர்நாள் மாலை, சிற்றுண்டி முடித்து தோழியருடன் அரட்டை அடித்தபடியே தற்செயலாய் அமர்ந்து விட்டாள் அன்புத் தாரகையின் அருகில். தோழியர் குழாமே கலகலப்பாய் அரட்டையில் இலயித்திருக்க, அங்கு வசந்தம் புன்னகையுடன் நிழலாடியது.


ஏனோ, திடிரென்று வசந்தம் தகிக்கும் கோடையாக மாறி அனல் பார்வை வீச, ஒன்றும் விளங்காதவளாய் அவள், வசந்ததினை ஏனென்று வினவ,வசந்தமோ, அன்புத் தாரகை  தன்னுடன் மட்டுமே நட்புப் பாராட்ட வேண்டுமென்றும், தனக்கு மட்டுமே தாரகையின் நட்பு சொந்தமென உரிமை கொண்டாட, இவளோ அதையெல்லாம் விளையாட்டாய் எடுத்துக் கொண்டு,  "எனக்கு இவள் தான் தோழியே ! " என்று கிண்டலடித்து தாரகையை நெருங்கி அமர, வசந்தத்தின் நெஞ்சில் ஏனோ பூகம்பம்.


அடுத்தடுத்து  வந்த நாட்களில், வசந்தம் தண்மையாய் புன்னகை புரிய, அங்கு துவங்கியதோர் இனிமையான நட்புப் பயணம்.எத்துனையோ ஆத்திரங்கள் - அழுகைகள், புன்னகைகள் - புன்முறுவல்கள், சண்டைகள் - சமாதானங்கள். அத்தனையிலும் அவர்களது நட்பு மென்மேலும் பலம் பெற்றது. 


அந்த விடுதியின் வாசலில், சிலையென வீற்றிருந்த தாத்தாவும் நிச்சயம் மனதினுள் முறுவல் பூத்திருப்பார்,  இவர்களது அன்பு - ஆனந்தம், சண்டை - சமாதானம், ஆதரவு - அரவணைப்பு, சிரிப்பு - கோபம் இவையனைத்தையும் கண்டு !!!




2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய நினைவுகள்...

Tamizhmuhil Prakasam said...

@ திண்டுக்கல் தனபாலன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

Post a Comment