blank'/> muhilneel: August 2013

Tuesday, August 27, 2013

அதலைக்காய் - முள்ளிக்காய் - மிதி பாகற்காய்












அதலக்காய் / அதலைக்காய்

Binomial Name: Momordica cymbalaria




அதலைக்காய் பாகற்காயுடன் நெருங்கிய மரபுவழித் தொடர்பு கொண்ட ஓர் தாவரம் ஆகும். இது விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் சில இடங்களில் மட்டுமே கிடைக்கிறது.இது நாட்டு மருத்துவத்தில், நீரிழிவு நோயினை கட்டுப்படுத்தவும், குடற் புழுக்களுக்கான மருந்தாகவும் பயன்படுத்தப் படுகிறது. இந்தக் காயினை பயன்படுத்தி வற்றல், வதக்கல், புளிக்குழம்பு செய்யலாம்.



முள்ளிக்காய்  
Binomial Name :Solanum surattense

Common Name: Yellow-Berried Nightshade.




கண்டங்கத்தரி என்றும் முள்ளிக்காய் என்றும் இது அழைக்கப்படுகிறது. இது கத்தரி குடும்பத்தைச் சார்ந்தது. சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கண்டங்கத்திரி / முள்ளிகாய்க்கு உண்டு.பொதுவாக முட்கள் நிறைந்த மூலிகைகள் சுவாச சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் குணமுள்ளவை. காயினை தட்டி, விதைகளை எடுத்துவிட்டு புளிக்குழம்பு செய்யலாம்.



மிதி பாகற்காய் / குருவித் தலை பாகற்காய்

Momordica balasamina

 

பாகற்காய் குடும்பத்தைச் சார்ந்த இவை, குட்டி பாகற்காய் போல் இருக்கும். இவற்றிற்கு மிதி பாகற்காய் அல்லது குருவித் தலை பாகற்காய் என்று பெயர்.உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும்.சுரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழு இவை நீங்கும். நீரழிவு வியாதி உள்ளவர்கள் இதை உட்கொள்வது நல்லது.

 

படங்களுக்கு நன்றி.

1. http://eegaraionline.blogspot.com

2. மின்தமிழ் கூகிள் குரூப்

3. http://annaimira.blogspot.com






Wednesday, August 21, 2013

ஓர் இனிய நட்பின் உதயம் !!!



அந்த  மூன்றாண்டு கல்லூரிப் படிப்பு, காலமெலாம் அவளது நினைவுகளில் பசுமையாய் நிறைந்திருக்கக்  கூடிய இனிமையானதோர் தன்னலம் பேணா உறவினை ஏற்படுத்திக் கொடுக்குமென்பதை அவள் அறிந்திருக்கவில்லை.


அந்த  அன்புத் தாரகையுடன் அவளிற்கு ஏற்பட்ட அழகானதோர் நட்பிற்கும், ஆழமான நேசத்திற்கும்  அடித்தளம் அமைத்துக்  கொடுத்து, வசந்த்தத்தினை  அள்ளித் தந்த தோழியவளுக்கு கோடானு கோடி நன்றிகளை ஆனந்தக் கண்ணீருடன்  காணிக்கையாக்கினாலும் தகும்.


இனிமையானதொரு உறவிற்கு அடித்தளமிட்ட அந்த நிகழ்வு - அது என்றென்றும் மனதில் பசுமையாய் பூத்துக் குலுங்கும், நினைத்த மாத்திரத்தில் சுகந்தத்தை அள்ளித் தெளிக்கும் இன்பகரமான நினைவுகள். 


கல்லூரி வாழ்வுதனை கூண்டுப் பறவையாய் கழித்த மூன்றாண்டுகளில், காலை,மதியம்,மாலை, இரவு என்று நான்கு வேளைகளிலும் உணவருந்தச் செல்லும்  அந்த உணவுக் கூடம். வழக்கம் போல் ஓர்நாள் மாலை, சிற்றுண்டி முடித்து தோழியருடன் அரட்டை அடித்தபடியே தற்செயலாய் அமர்ந்து விட்டாள் அன்புத் தாரகையின் அருகில். தோழியர் குழாமே கலகலப்பாய் அரட்டையில் இலயித்திருக்க, அங்கு வசந்தம் புன்னகையுடன் நிழலாடியது.


ஏனோ, திடிரென்று வசந்தம் தகிக்கும் கோடையாக மாறி அனல் பார்வை வீச, ஒன்றும் விளங்காதவளாய் அவள், வசந்ததினை ஏனென்று வினவ,வசந்தமோ, அன்புத் தாரகை  தன்னுடன் மட்டுமே நட்புப் பாராட்ட வேண்டுமென்றும், தனக்கு மட்டுமே தாரகையின் நட்பு சொந்தமென உரிமை கொண்டாட, இவளோ அதையெல்லாம் விளையாட்டாய் எடுத்துக் கொண்டு,  "எனக்கு இவள் தான் தோழியே ! " என்று கிண்டலடித்து தாரகையை நெருங்கி அமர, வசந்தத்தின் நெஞ்சில் ஏனோ பூகம்பம்.


அடுத்தடுத்து  வந்த நாட்களில், வசந்தம் தண்மையாய் புன்னகை புரிய, அங்கு துவங்கியதோர் இனிமையான நட்புப் பயணம்.எத்துனையோ ஆத்திரங்கள் - அழுகைகள், புன்னகைகள் - புன்முறுவல்கள், சண்டைகள் - சமாதானங்கள். அத்தனையிலும் அவர்களது நட்பு மென்மேலும் பலம் பெற்றது. 


அந்த விடுதியின் வாசலில், சிலையென வீற்றிருந்த தாத்தாவும் நிச்சயம் மனதினுள் முறுவல் பூத்திருப்பார்,  இவர்களது அன்பு - ஆனந்தம், சண்டை - சமாதானம், ஆதரவு - அரவணைப்பு, சிரிப்பு - கோபம் இவையனைத்தையும் கண்டு !!!




Sunday, August 18, 2013

கண் திறந்தது !!!




உறையூர் கிராமத்தில் சொக்கன், விறகு வெட்டி தன் அன்றாட ஜீவனத்தை நடத்திக் கொண்டு வந்தார். தினமும் காலை, அருகிலிருக்கும் காட்டுக்குச் சென்று விறகுகளை வெட்டி வந்து, தன் குடிசைக்கு வெளியில் விறகு கட்டைகளை  சிறுசிறு கட்டுகளாகக்  கட்டி அடுக்கி வைத்திருப்பார். சில சமயங்களில், லாரி அல்லது டெம்போ போன்ற வாகனங்களில் ஆட்கள் வந்து மரங்களை ஏற்றிச் செல்வர். இல்லையெனில், சொக்கன் அவற்றை வண்டியில் கட்டி சுமை ஏற்றிக்கொண்டு சென்று மரமறுக்கும் தொழிற்சாலையில் போட்டு வருவார். சில சமயங்களில், சில்லறை விலைக்கும் மக்கள் விறகு வாங்கிச் செல்வர்.

சொக்கனுக்கு ஒரு மகன் இருந்தான். அவனது பெயர் முனியன். மிகவும் புத்திசாலி. சூட்டிகையானவனும் கூட. எதையும் கூர்ந்து கவனித்து கிரகித்துக் கொள்ளும்  ஆற்றல் பெற்றவன்.எந்த விஷயமானாலும் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்து விடுவான்.படிப்பிலும் முதல் மாணவனாகத் திகழ்ந்தான் .தான் கற்றதை அன்றாட வாழ்வில் செயல்படுத்துபவன்.

ஓர் நாள் மாலை, சொக்கன் வெட்டிய  மரச்சுமையை வண்டியிலேற்றிக் கொண்டு  வீடு வந்து சேர்ந்தார். அவர் வழக்கமாக மரங்களை இறக்கி வைக்குமிடத்தில் இரண்டு அரையாள் உயர வேம்பு கன்றுகள் புதிதாய் நடப்பட்டு இருந்தன. யாரிங்கு நட்டு வைத்திருப்பார்கள் என்று எண்ணியவாறு, 

“ முனியா ! முனியா ! இங்கன வா ஐயா ! “ என்று தன் மகனை அழைத்தார்.

“ என்ன அப்பாரு ? கூப்பிட்டீகளா ? “ என்றவாறு வந்தான் சொக்கனின் மகன் முனியன்.

“ யாரய்யா இங்ஙன வேப்பஞ் செடிய நட்டு வெச்சது ?” என்ற சொக்கனது கேள்விக்கு 

“நாந்தான் அப்பாரு வெச்சேன்” என்றான் முனியன்.

“ஏன்?” என்ற ஒற்றை வார்த்தையோடு நிறுத்தினார் சொக்கன். 

சிறிது நேர அமைதிக்குப் பின், “நமக்கு மரக்  கட்டைகள், விறகு அடுக்கி வைக்க இருக்கறதே இந்த கொஞ்ச இடம் தான், நீ இங்கன கொண்டு வந்து மரக் கண்ணை நட்டு வெச்சுட்டியே ஐயா” என்றார்  சொக்கன்.

“எங்க பள்ளிக்கூடத்துல இன்னிக்கு வாத்தியாரு நமக்கெல்லாம் மூச்சுக் காத்து தர்றது இந்த மரங்களும் செடிகொடிகளுந்தேன்னு சொன்னாக. நம்ம வீட்ல தொழிலே மரம் வெட்டுறதுதேன். இப்போ நம்ம பொழப்புக்காக மரத்த வெட்டி சம்பாதிச்சு சாப்பிடறோம். இப்புடியே மரத்த வெட்டிட்டே இருந்தா, நாளைப்பின்ன நாம உசுரோட இருக்க தேவையான மூச்சுக் காத்துக்கு எங்ஙன போய் மரத்த தேடுறது ? அதேன், இங்ஙன ரெண்டு வேம்பு கண்ணுகளை நட்டு வெச்சிருக்கேன். இதுக வளந்து நின்னா, நாளைக்கு நமக்கு உபயோகமா இருக்குமில்ல ? நாம மரக் கட்டைகளை அடுக்கி வைக்க வேற இடம் பாத்துக்கலாம் அப்பாரு“ என்ற முனியனது பேச்சைக் கேட்டு வாயடைத்துப் போய் நின்றார் சொக்கன். அவரது கண்களில் நீர் கரைபுரண்டோடியது. அந்த நொடியே, சொக்கனது மனம், “ இனி மரங்களை வெட்டுவதில்லை! “ என சபதம் கொண்டது.

தான் இத்தனை காலம், மரங்களை வெட்டி மனித சமூகத்திற்கே பெரும் கேடுதனை விளைவித்து வந்திருந்ததை உணர்ந்தார். தான் இத்தனை நாள் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக, மாதா மாதம் ஒரு மரக் கன்றேனும் நட வேண்டுமென மனதில் உறுதி மேற்கொண்டார். அதனை நிறைவேற்றும் விதமாக, ஒரு மரக் கன்றினை நட்டு நீரூற்றினார். அந்த மரக் கன்று காற்றில் அசைந்தாடி, அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக அவர் மேல் உரசி நின்றது. அவரது மனதில் புத்துணர்வை உணர்ந்தார்.

Friday, August 16, 2013

தெளிவு பிறந்தது !!!

பாலன் ஒரு சிறந்த உழைப்பாளி. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பம் என்றாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் கிடைக்கும் இலவசங்களை பயன்படுத்தியும் தினம் கூலி வேலைக்குப்போயும் சந்தோஷமாகவே வாழும் ஒரு சாதாரண இந்திய பிரஜை. 

அவன் மனைவியும் அன்பானவள். நன்றாக சென்று கொண்டிருந்த குடும்பம் இப்போது ஏனோ சலிப்பதாகத்தோன்றியது பாலனுக்கு.
வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும், மனைவிக்குத் தேவையானதை எல்லாமே தான் வாங்கித்தர வேண்டும் என்ற இரு கனவுகள் மட்டுமே அவனுக்கு இருந்தது. அது அப்படியே நிறைவேறியும் வந்தது. 

கடந்த வருடம் இந்திராகாந்தி வேலைவாய்ப்புத்திட்டம் வந்த பின் அவன் மனைவியும் வேலைக்குப்போனாள். முன்பெல்லாம் அவளுக்குத்தேவையான பணம் கொடுக்கும் போதும் குடும்பத்திற்குத்தேவையான பொருட்களை வாங்கி வரும் போதும் அவனுக்கு ஒரு பெருமிதம் உண்டாகும். குடும்பத்தை நன்றாக கவனிக்கிறான் என்ற மகிழ்ச்சி மனநிறைவு ஏற்படும்.
ஆனால் இப்போதெல்லாம் அவன் மனைவி அவனிடம் தன் தேவையை எதுவும் சொல்வதில்லை. அவளே வேலைமுடிந்து வரும் போது தேவையானவற்றை வாங்கி வந்துவிடுகிறாள்.
தன் முக்கியத்துவம் குடும்பத்தில் குறைவதாக அவனுக்கு மனதில் தோன்றியது.

வேலை செய்யும் போதே எதற்கு இப்படி பாடுபடுகிறோம் என்ற சலிப்பு வர ஆரம்பித்தது.


 அன்று மாலை வழக்கத்திற்கு மாறாக, சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்து விட்டான் பாலன். வீட்டில் அவனது மனைவி பவானி இல்லை.வெறிச்சென்று இருந்த வீட்டைப் பார்த்த அவனுக்கு என்னவோ போல் இருந்தது. அடுப்படியில் இருந்த பாத்திரத்தில் இருந்த பழைய சாதத்தின் தண்ணீரை ஒரு தம்ளரில் ஊற்றி சிறிது உப்பு போட்டு குடித்துவிட்டு வந்து திண்ணையில் அமர்ந்தான். அசதியில் மெல்ல அப்படியே கண்ணயர்ந்தவனை, ராமய்யாவின் குரல் எழுப்பியது. 

" என்ன பாலா, வாசல்ல படுத்து உறங்கீட்டு இருக்க ? " என்றார் ராமையா.

" பவானி புள்ள வேலைக்கு போயிருக்கு. இன்னும் வரல. அது வந்துரும்னு திண்ணைல காத்து இருந்தேன். அப்படியே அசதில கண்ணசந்துட்டேன் போல.வாங்க உக்காருங்க மாமா. செத்த நேரம் பேசிக்கிட்டு இருப்போம்." என்றான்.

" உன் வேலை எல்லாம் எப்புடி போயிட்டு இருக்கு ? பவானி புள்ளையும் புதுசா வேலைக்கு போகுது போல? " என்றார்.

" என் வேலைக்கு என்ன ? அதே, மாடு மாதிரி நாளெல்லாம் உழைப்பு தான். சம்பளம் தான் உசந்த பாடு இல்ல.   ஏதாவது அவசரத்துக்கு கடன உடன வாங்கினாலும், அத தீக்கறதுக்கே சம்பளம் சரியாப் போயிடுது.என்ன செய்ய ? நான் தினம் விடியக்காலைல நம்ம ஊர் கூட்டுறவு பால் பண்ணையில பால் எடுத்து   ஊத்தலாம்னு நினைச்சு வெச்சிருக்கேன். பவானி புள்ளைய ராணியாட்டம் வெச்சுக்கனும்னு நினைக்கிறேன்.அந்தப் புள்ள வேலைக்கு போறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா" என்றான் பாலன்.

அப்போதுதான்  வேலையிலிருந்து வந்திருந்த பவானி, " வாங்க  சித்தப்பா, எப்ப வந்தீக? ஒரு நிமிஷம் இருங்க. காபித்தண்ணி கலந்துட்டு வந்துடறேன்." என்றவாறு  விறுவிறுவென்று வீட்டினுள் சென்றாள். 


" அந்தப் பிள்ளை உனக்கு ஒத்தாசையா இருக்கணும்னு பாக்குது ஐயா. அதுவும் பத்து வரைக்கும் படிச்சிருக்கு. தன்னோட படிப்பு உனக்கு உபயோகமா இருக்கணும்னு   நினைக்குது.  பக்கத்துல இருக்குற  சின்னப் பிள்ளைங்களுக்கு சாயந்திரம் வீட்டுப்பாடம் செய்ய, தெரியாதத சொல்லிக் குடுக்கன்னு, டியூசன் எடுத்துச்சு. அதுல நிலையா ஒரு வருமானம் இல்ல. நீயும் குடும்பத்த காப்பாத்த  பால் பண்ணை, வயக்கூலி வேலைன்னு மாடா உழைக்கிற. உன் கஷ்டத்துல பங்கெடுக்க நினைச்சு  அந்தப் பிள்ளை வேலைக்கி போகுது.  தப்பா எடுத்துக்காத ஐயா. சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டா நாளைப்பின்ன உன்னை மதிக்காம போயிடுமோ, குடும்பத்துல உனக்கு முக்கியத்துவம் இல்லாம போயிடுமோன்னு எல்லாம்  யோசிக்காத. அதுவும் சேர்ந்து உழைச்சு  காசு சேர்த்தா, நாளைப்பின்ன நல்லா வாழலாம்னு தான அது நினைக்கிது. அது தப்பில்லையே ஐயா. தேவையில்லாத சஞ்சலத்த மனசுல வளத்துக்காதப்பா. நிம்மதியா இரு. நல்லதே நடக்கும்." என்று  அவர் சொல்லிக் கொண்டிருக்கையில்   பவானி காபியோடு வந்தாள். காபியை வாங்கி குடித்து முடித்தவர், 

" சரி, நானும் கிளம்பறேன் பாலா. நேரமாச்சு. வரேனம்மா பவானி" என்றவாறு கிளம்பினார்.

பாலனுக்கு மனதிலிருந்த சஞ்சலம் தீர்ந்து தெளிவு பிறந்தது. வீட்டினுள் சென்றான். அன்பும் புரிதலும் நிறைந்த அவ்விடத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.



Thursday, August 15, 2013

சுதந்திர தின நல்வாழ்த்துகள் !!!





உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், நமது அடையாளம், நமது இனிய மொழிகளும், பண்பாடும் அன்றோ ? நம்மை ஒன்றிணைப்பது இந்தியன் என்ற மேன்மையான உணர்வே !

‘‘முப்பது கோடி முகமுடையாள்–உயிர்
மொய்ம்புறமொன்றுடையாள் – இவள்
செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில்
சிந்தனை ஒன்றுடையாள்’’

என்ற மகாகவி பாரதியாரின் கூற்றிற்கேற்ப வேற்றுமையில் ஒற்றுமை கண்ட  தேசம் நமது தேசம்.

"சுதந்திரம் நமது பிறப்புரிமை ! "

 எத்துனையோ இன்னலுக்குப் பின் அடைந்தோம், எத்துணையோ உயிர்களை தியாகம் செய்து அதற்கு ஈடாக பெற்றோம் தேசத்தின் சுதந்திரமதை. பலர் இன்னுயிர் ஈந்து நமக்கு பெற்றுத் தந்த சுதந்திரமதை காப்பது நம் கடமையென்பதை மனதில் இருத்தி, காத்திடுவோம் தேசத்தினை. தேசத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் நம்மாலான பணிகளை மேற்கொள்வோம்.
இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

கொடிப் பாடல் 

 

பல்லவி
தாயின் மணிக்கொடி பாரீர்! - அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!
சரணங்கள்
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்
உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
பாங்கின் எழுதித் திகழும் - செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்)
பட்டுத் துகிலென லாமோ? - அதில்
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு மிகுந்தடித் தாலும் - அதை
மதியாதவ் வுறுதிகொள் மாணங்க்கப் படலம் (தாயின்)
இந்திரன் வச்சிரம் ஓர்பால் - அதில்
எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்
மந்திரம் நடுவுறத் தோன்றும் - அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? (தாயின்)
கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற்க் குரியர் அவ்வீரர் - தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார். (தாயின்)
அணியணி யாயவர் நிற்கும் - இந்த
ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?
பணிகள் பொருந்திய மார்பும் - விறல்
பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்! (தாயின்)
செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந்
தீக்கண் மறவர்கள் சேரன்றன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின்
சேவடிக் கேபணி செய்திடு துளுவர். (தாயின்)
கன்னடர் ஓட்டிய ரோடு - போரில்
காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்,
பொனகர்த் தேவர்க ளொப்ப - நிற்கும்
பொற்புடையார் இந்துஸ் தானத்து மல்லர் (தாயின்)
பூதலம் முற்றிடும் வரையும் - அறப்
போர்விறல் யாவும் மறுப்புறும் வரையும்
மாதர்கள் கற்புள்ள வரையும் - பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் (தாயின்)
பஞ்ச நதத்துப் பிறந்தோர் - முன்னைப்
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,
துஞ்சும் பொழுதினும் தாயின் - பதத்
தொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும் (தாயின்)
சேர்ந்ததைக் காப்பது காணீர்! அவர்
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத - நிலத்
தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்)




உலகிலுள்ள இந்தியர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் !!!

Tuesday, August 6, 2013

எனது முதல் பதிவின் சந்தோஷம் தொடர்கிறது !!! - தொடர் பதிவு

     

      நான் கணினியில் பதிவெழுதத்  துவங்கிய   நாட்களை  மீண்டும் எண்ணிப் பார்த்து  மகிழ்ந்து, அந்த மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர அழைப்பு விடுத்த சகோதரி அம்பாளடியாள் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

         

        எனது கவிதைகளை சேமித்து வைப்பதற்காகவே வலைப்பூ ஒன்றைத் துவங்கினேன்.அது தான் முகிலின் பக்கங்கள். ஆரம்பத்தில், எனது வலைப்பூ இணையத்தில் எவர் வேண்டுமானாலும் பார்த்து படிக்குமாறு (Public) வைத்திருந்தேன். ஆனால், சில நாட்களிலேயே, எனது பதிவுகள் இணையத்தில் பல தளங்களில் பல்வேறு ஆசிரியர்களின் பெயர்களில் உலா வர, அவர்களுக்கு  மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு சிலர் நீக்கி விடுவர். சிலரோ, கண்டு கொள்ளாது நீக்க மாட்டார்கள். எதற்கு வம்பென்று, எனது கவிதை வலைப்பூவை  என் அழைப்பை பெறும் ஒரு சிலர் மட்டும் படிக்குமாறு ( Private ) மாற்றினேன்.மீண்டும், சிறிது நாட்களுக்கு முன்னர் தான் எனது வலைப்பூவை அனைவரும் படிக்கும்படி மாற்றியமைத்துள்ளேன்.

           

          நான் இரசித்த செய்திகள், கர்ம வீரர் காமராஜர் குறித்த  செய்திகள், புகைப்படங்கள், எனது அனுபவங்கள், சமையல் வலைதளங்களில் இருந்து நான் சமைத்து ருசித்த செய்முறை குறிப்புகள், எனது சிறுகதைகள், எனது கைவினை வேலைப்பாடுகள், ஓவியங்கள், உயிர் தகவல் தொழில்நுட்பம் (Bioinformatics) சார்ந்த வினா விடைகள், குறிப்புகள் ஆகியவற்றை இந்த  வலைப்பூவில் பகிர்ந்து வருகிறேன். 

 

                 ஒவ்வோர்  முறையும் புதிய பதிவொன்றை எழுதும் போதும், முதல் பதிவு எழுதும் போது ஏற்பட்ட ஆர்வமும், மகிழ்வும் குறையாது எழுதுகிறேன்.அதற்கு முழு காரணம், ஊக்கமும், உற்சாகமும், ஒவ்வோர் பதிவிற்கும் அன்பான  வாழ்த்தினை அளிக்கும் சக பதிவுலக நண்பர்களே காரணம்.அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

 

 

நன்றி ! நன்றி !! நன்றி !!!

இந்தப் பதிவினைத் தொடர

1. தேன் மதுரத் தமிழ்  -  சகோதரி  கிரேஸ் பிரதிபா

2.  மழைச்சாரல்  - சகோதரி ப்ரியா

3. கவரிமானின் கற்பனை காவியம்  -

 ஆகியோரை அன்புடன் அழைக்கிறேன்.

திருமதி. பி .தமிழ் முகில் நீலமேகம்


Monday, August 5, 2013

என் கணினி அனுபவங்கள் - தொடர் பதிவு

            



                 எனது முதல் கணினி அனுபவங்களை எழுத அழைத்த தோழி இராஜலஷ்மி பரமசிவம் அவர்கட்கு என் நன்றிகள். இதோ என் முதல் கணினி  அனுபவங்கள்.

                                 முதன் முதலில் கணினியைப் பயன்படுத்தியது பள்ளியில்   எட்டாம் வகுப்பு படிக்கும் போதுதான். அப்போதெல்லாம், கணினி ஏதோ விளையாடுவதற்காகவே பயன்படுத்தப் படுகின்ற ஒன்றாய் எனக்குத் தோன்றியது.ஏனோ, கணினி விளையாட்டுகளில் அவ்வளவாய் ஆர்வம் ஏற்படவில்லை. அதன் பின், பன்னிரெண்டாம் வகுப்பில் உயிரியல் பாடப்பிரிவு எடுத்துப் படித்தபடியால், கணினி பற்றி அறிய அவ்வளவாக வாய்ப்பு கிட்டவில்லை.

                             கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பில்  தகவல் தொழில்நுட்ப பாடப்பிரிவு எடுத்துப் படித்தேன். அப்போதெல்லாம் ஏதோ கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருக்கும். முதல் பாடம்  C Programming. Scanf, Printf, syntax இவையெல்லாம் புதிதாகவும், error, compilation,execution என புரியாத பலவும் வர, மனதில் பயமே கிளம்பியது. அதன் பின், அடுத்த செமஸ்டரில் C++, COBOL எல்லாம் பழகப் பழக எளிதாகி விட்டது.

                               ஒரு செமஸ்டர் விடுமுறையின் போது, ஜாவா ( JAVA) கற்றுக் கொள்ள  APTECH  Computers  பயிற்சி மையத்தில் சேர்ந்து, ஆறு மாத பயிற்சியில் பதிவு செய்து கொண்டேன். ஆனால், இருப்பதோ இரண்டு மாத விடுமுறை மட்டுமே. நான் விடுதியில் தங்கி படித்தபடியால், விடுமுறைக்குள் கற்றுக் கொண்டுவிட வேண்டும். அதற்கு அவர்கள், Crash Course ஆக இரண்டு மாதங்களிலேயே ஆறு மாதத்திற்கான பாடங்களை முடித்து விடுவதாகச் சொல்லி, சில ஆயிரங்களை கட்டணமாக வசூலித்து விட்டனர். வகுப்புகள் ஆரம்பமாயின. Java Complete Reference புத்தகத்தினைக் கையில் கொடுத்து, " இதிலுள்ள Programs Execute பண்ணிப் பாருங்கள்" என்று சொல்லிவிட்டு சென்று விடுவார். வகுப்பு ஆரம்பிக்கும் நேரத்திலும், முடியும் போதும் மட்டுமே வருவார். சந்தேகங்களை ஒரு நாளும் நிவர்த்தி செய்யவும் மாட்டார். நாளை சொல்லித் தருகிறேன் என்று சொல்லுவதோடு சரி. அதன்பின், அதனை மறந்தே போய் விடுவார். அடுத்த நாள் கேட்டால், இன்றைய பாடம் முடிந்ததும் சொல்லித் தருகிறேன் என்பார். அன்றைய பாடம் முடியவும், அடுத்த batch மாணவர்கள் வரவும் சரியாக இருக்கும். அதன்பின், எங்கே சொல்லிக் கொடுப்பார்?  நிர்வாகத்திடம்  அவரைப் பற்றி கூற, அவரோ, நான் கற்றுக் கொள்வதில்லை என்று என் மீதே குறை கூற  "இனி பயிற்சி மையங்களை நாடுவது கூடாது. சொந்த முயற்சியில் கற்றிருந்தாலே நன்றாக கற்றிருக்கலாமோ" என்று தோன்ற, அப்போதே பயிற்சி மையங்களுக்கு முழுக்கு போட்டேன்.

                                    முதுகலை பட்டப்படிப்பின் போது தான் இணைய அறிமுகம். அதன் பின், மின்னஞ்சல் கணக்கு துவங்குவது பற்றி அறிந்து கொண்டேன்.  பாடங்கள் முழுவதுமே இணையத்தை பயன்படுத்தி கற்க வேண்டியவையாகவே இருக்கும்.

                                    கணினியில் தமிழில் எழுதலாம் என்பதை அறிந்தபோது தாங்கவொன்னா சந்தோஷம். Blogger வழங்கும் இலவச வலைப்பூ சேவை தனை பயன்படுத்தி கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறேன். அன்றாடம், புதிது புதிதாய் ஏதேனுமொன்றை கற்று வருகிறேன்.

                                
                                     
                                   

Sunday, August 4, 2013

மனக் கோயில்

            

             சாருமதிக்கு கோவிலுக்கு செல்வதென்றாலே ஓர்  புது உற்சாகம் அவளையறியாது வந்து தொற்றிக் கொள்ளும். அது ஏனென்று அவளுக்கே புரியாத புதிர் தான். இத்தனைக்கும் அவள் விழுந்து விழுந்து சாமி கும்பிடுபவளும்  இல்லை. எங்குமே கிட்டாத அளவிலா மனமகிழ்வும், நிறைவான மனமும் அவளுக்கு கோவிலில் கிட்டியது. அர்ச்சனை, அபிஷேகம், நன்கொடை என்று எந்த தெய்வத்திற்கும் அவள் செய்தது கிடையாது. தெய்வ தரிசனத்தில் மனநிம்மதி அடைந்தாள். கோவிலில் பூஜை வேளையின் போது தீப ஆராதனை ஒளியில் இறைவன் அவளைக்கண்டு புன்னைகைப்பது போலவே உணர்வாள்.

              தனக்கும் இறைவனுக்குமான நெருக்கத்தினை அவள் தன் தாய் நாட்டினை விட்டு வெளி தேசத்திற்கு வந்ததும் தான் உணர்ந்தாள். இங்கும் கோவில்கள் இருக்கிறதென்று அறிவாள். ஆனால்,  எங்கு இருக்கிறதென்பது தெரியாது. இணையத்தில், கூகுள் வரைபடங்களின் உதவியோடு, தாம் இருக்கும் இடத்திற்கு அருகில் எங்கேனும் கோயில்கள் இருக்கின்றனவா என்று தேடிப் பார்த்தாள். அவளது அதிர்ஷ்டம், அவர்கள் இருந்த பகுதியில் ஓர் அனுமார் கோவில் இருந்தது. வார இறுதி நாட்களில் கடைகளுக்குச் சென்று, அந்த வாரத் தேவைக்கான பொருட்களை வாங்கி வரவே சரியாக இருக்கும். வார நாட்களில் ஏதேனும் ஓர் நாள் விடுமுறை கிட்டினால் நன்றாய் இருக்குமே என்று எண்ணினாள். அவளது எண்ணம் விரைவில் நிறைவேறியது. அந்த நாள் வெள்ளிக் கிழமையாய் அமைந்ததில் அவளுக்கு இரட்டிப்பு சந்தோசம்.
    
            கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றனர். மிகப்பெரிய பரப்பளவில் இருக்கும் ஓர் வணிக வளாகத்தில்  ஒரு பகுதியில் அந்தக் கோயில் அமைந்திருந்தது.உள்ளே சென்று, ஆஞ்சநேயரை கண்குளிர தரிசித்தனர். வெண்ணெய்க் காப்பு  அலங்காரத்தில், புன்னகை தவழ வீற்றிருந்தார்  ஆஞ்சநேயர். பூஜை வேளை நெருங்க நெருங்க மக்கள் கூட்டமாய் வந்தனர். வந்திருந்த மக்கள் பலரும் மலர் மாலைகள், வண்ண வண்ண புஷ்பங்கள் எல்லாம் கொண்டு வந்திருந்தனர். இதைக் கண்ட சாருமதி, " இவர்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு அழகிய வண்ண மலர்கள் கிடைத்தன? " என்று எண்ணினாள். ஏனெனில், அது குளிர் காலம். மரங்களனைத்தும் இலைகளை உதிர்த்து விட்டு, கிளைகள் மட்டும் நெடிதுயர்ந்து நின்றிருந்தன.

                         தீப ஆராதனை முடிந்து அனைவருக்கும் தீப தரிசனம் காட்டப்பட்டது. தீபத்தினை தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டாள். அதன் பின், அவளுக்கு அருகிலிருந்த அனைவரும் தீப ஆராத்தியை தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டனர்.  காணிக்கை செலுத்த எண்ணியவளாய் சாருமதி, கைப்பையை திறந்தாள். ஆனால், அது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளாய் நிரம்பியிருந்தது. கைப் பையை மூடிவிட்டு, தீபத்தினை தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டாள். அதன் பின், இறைவனுக்கு படைக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள், அனைவருக்கும் பிரசாதமாய் வழங்கப் பட்டது.அர்ச்சகர்  இவர்களுக்கு பிரசாதம் கொடுக்கும்போது ஏதோ, வேண்டா வெறுப்பாக  கொடுத்தது போல உணர்ந்தாள் சாருமதி. அவளுக்கு என்னவோ போல் இருந்தது.

                      அன்னையின் மடியில் தங்குதடையின்றி தவழ்ந்தாடும் கிள்ளை போல், சுதந்திரமாய் தன் மன எண்ணங்களை, தன்  இன்ப துன்பங்களை, வெற்றி தோல்விகளை இறைவனிடம் பகிர்ந்து வந்தவளுக்கு, அந்தச் சூழலும், சுற்றமும்  அவளை  ஒதுக்கி வைத்து உதாசீனப் படுத்துவது போல் தோன்றியது. முதல் முறையாக அவள், கோவிலில் ஏதோ அந்நியப் படுத்தப்பட்டவள் போல உணர்ந்தாள்.

" இறைவா ! உன்னை நான் என் மனக் கோயிலில் வைத்தே ஆராதிக்கிறேன். உன் பூரண அருளை எனக்கு அளிப்பாய் !!!"  என்று அவளது மனம் அரற்றிற்று. 


Saturday, August 3, 2013

பிரம்ம கமலம்




நாம் பலவகையான தாவரங்களை அறிவோம். வித்து (Seeds) தாவரங்கள், கிழங்கிலிருந்து (tubers,bulbs ) உற்பத்தியாகும் தாவரங்கள்,வெட்டி வைக்கும் தண்டுகளில் இருந்து புதிய கிளைகளும் இலையும் தளைக்கும் தாவரங்கள் (Striking / Cloning) என்று பலவகைத் தாவரங்களும் உண்டு. ஓர் இலை மட்டும் கூட ஓர் பெரிய செடியை உருவாக்கும் ஆற்றல் பெற்றிருக்கும். அப்படிப்பட்ட ஓர் தாவரம் தான் நிஷாகந்தி என்றழைக்கப்படும் பிரம்ம கமலம்.

இத்தாவரத்தின் அறிவியல் இருசொற் பெயர்  ( Binomial Nomenclature)  Epiphyllum oxypetalum  என்பதாகும்.

இம்மலர்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில், பிரம்ம கமலம் என்றும், மலையாளத்தில் நிஷாகந்தி  என்றும், ஆங்கிலத்தில்   Queen of the Night, Night-blooming Cereus, Large-flowering Cactus, Sweet-scented Cactus, Vanilla Cactus, Lunar Flower, Large Blooming Cereus, Large flowered torch thistle, Large-flowered Night Cactus என்று பல மொழிகளில் அழைக்கப்படுகிறது.

அறிவியல் வகைப்பாடு

Kingdom : Plantae
(unranked) : Angiosperms
(unranked) : Eudicots
(unranked) : Core Eudicots
Order : Caryophyllales
Family : Cactaceae
Genus : Epiphyllum
Species : E.oxypetalum

நீண்டு சற்று அகலமானதாக இருக்கும் இலைகளைக் கொண்டது இத்தாவரம். இலையினைப் பாதியளவு மண்ணுள் புதையுண்டு இருக்குமாறு  நட்டு வைத்துவிட்டால், இலையே புதிதாக வேர்விட்டு மண்ணில் பதிந்து கொள்ளும். அதன் பின், இலையே அத்தாவரத்தின் தண்டு போல் செயல்படும். இலையின் பக்கவாட்டுகளில், சிறுசிறு கணுக்கள் தோன்றி, அவற்றிலிருந்து புது இலைகள் உருவாகும். அதே கணுக்களில் தான் மொட்டுக்கள் உருவாகி கண்கவர் மலர்களாய் மலர்ந்து  மணம் வீசும்.

 
இம்மலர்களுக்கு  உரிய தனிச் சிறப்பு என்னவெனில், இவை இரவில் தான் மலரும்.இம்மலர்களின் வாசனை அபாரமானதாக இருக்கும். இத்தகைய அபார வாசனைக்கு காரணியான வேதிப் பொருள்  Benzyl Salicylate என்பதாகும். 


மலர்ந்து சிலமணி நேரங்களே இம்மலர்கள் மணம் பரப்புகின்றன. அதன்பின் வாடிப் போய்விடுகின்றன.இம்மலர்கள் வாடாமல்லி, மஞ்சள், சிகப்பு வெள்ளை,ஆரஞ்சு என்று பல்வேறு நிறங்களிலும் இருக்கின்றன.அனைத்து மலர்களும் இரவிலேயே மலர்கின்றன.


 





ஒரு செடியில் அதிகபட்சமாக நான்கு முதல் ஐந்து மலர்கள் வரை இருக்கும். சில சமயங்களில் அதிசயத்தக்க வகையில் , பத்து முதல் பதினைந்து மலர்கள் வரையிலும் இருக்கலாம்.அனைத்தும் ஒரே நேரத்தில் மலர்ந்து , நம்மை வாசனையால் கிறங்கடிக்கலாம். 

படங்களுக்கு நன்றி.
1. jaghamani.blogspot.com
2. indiastudychannel.com
3. flikr.com
4.digplanet.com
5.parayilat.blogspot.com