blank'/> muhilneel: தினமணி வார இதழ் தமிழ்மணி " இந்த வார கலாரசிகன்" பகுதியில் எனது கவிதை

Saturday, February 9, 2013

தினமணி வார இதழ் தமிழ்மணி " இந்த வார கலாரசிகன்" பகுதியில் எனது கவிதை

தினமணி வார இதழ் தமிழ்மணி       " இந்த வார கலாரசிகன் "
 பகுதியில் எனது கவிதை

கம்பன் கழகத்திலிருந்தும் ஏனைய இலக்கிய அமைப்புகளிலிருந்தும், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளுக்கான அறிவிப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு இலக்கிய ஆர்வத்தை ஏற்படுத்துவது இன்றியமையாதது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. வள்ளுவரையும், இளங்கோவையும், கம்பனையும், பாரதியையும் அவர்களுக்குக் கொண்டு செல்வதன் மூலம்தான் தமிழையும், இலக்கிய ஆர்வத்தையும் பாதுகாக்க முடியும் என்பதிலும் சந்தேகமில்லை.
÷பல்வேறு இலக்கிய அமைப்புகளும் இந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. அதே சமயம், அவர்கள் பேச்சு, கட்டுரைப் போட்டிக்கு வழங்கும் பரிசுத் தொகை எவ்வளவு என்று பார்த்தால் ஒருபுறம் சிரிப்பும், இன்னொரு புறம் வருத்தமும் மேலிடுகிறது.
÷இப்போதெல்லாம் பள்ளிகளில் கூடக் காலாண்டு கல்விக் கட்டணம் நான்கு அல்லது ஐந்து ஆயிரங்கள் என்றாகிவிட்ட நிலைமை. அப்படி இருக்கும்போது, முதல் பரிசு ரூ.1000, இரண்டாம் பரிசு ரூ.500, மூன்றாம் பரிசு ரூ.250 என்றெல்லாம் சொன்னால், அது இளைஞர்களுக்குப் போட்டியில் கலந்து கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தும் என்று தோன்றவில்லை. இலக்கிய விழாக்களை நடத்துபவர்கள், நிகழ்ச்சியில் பங்குபெறும் பேச்சாளர்களுக்கு 10,000, 25,000, 50,000 என்று செலவிடும்போது, போட்டியில் பங்கு பெற்றுப் பரிசு பெறும் மாணவ - மாணவியருக்கு முதல் பரிசு வெறும் 1000 ரூபாய் என்றால் என்ன நியாயம்?
÷இலக்கியப் போட்டி நடத்துபவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நட்சத்திரப் பேச்சாளர் ஒருவரைக் குறைத்துக்கொண்டு, போட்டியில் பரிசு பெறுபவருக்கு முதல் பரிசு குறைந்தது 10,000 ரூபாயாவது இருக்கும்படி செய்தால்தான், நாம் எதிர்பார்ப்பது போல, இளைஞர்களுக்கு ஆர்வமும் ஊக்கமும் ஏற்படுத்த முடியும் என்பது எனது கருத்து. இந்தப் பரிசுத் தொகையை வழங்க ஊருக்கு ஒரு புரவலர் கூட இல்லை என்கிற அவல நிலைக்குத் தமிழகம் இன்னும் தள்ளப்படவில்லை!
****
பாரதி பற்றிய புத்தகங்களுக்கா குறைவு? வாரம் தவறினாலும் தவறும், தமிழகத்தின் ஏதாவது ஒரு மூலையில் பாரதியார் பற்றிக் குறைந்தது ஏதாவது ஒரு புத்தகம் வெளியிடுவது தவறாது என்கிற நிலைமை இன்றளவும் தொடர்ந்த வண்ணம் இருப்பது மகிழ்ச்சியான ஒன்று.
÷சமீபத்தில் வெளிவந்திருக்கும் மகாகவி பாரதியார் பற்றிய புத்தகங்களில் ஒன்றுக்கு மூன்று முறை திரும்பத் திரும்பப் படித்துக் குறிப்புகள் எடுத்து வைத்துக் கொள்ளத் தூண்டிய புத்தகம் "பாரதியின் பன்முகப் பார்வை'. "சைவத் தமிழ் சீராளன்' முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி எழுதிய புத்தகம் இது. புதுவைப் பல்கலைக்கழக சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தின் தமிழ்ப் பேராசிரியர் அறிவுடைநம்பி.
÷பாரதி பற்றிய அறிவுடைநம்பியின் பன்முகப் பார்வையும், அவரது படைப்புகள், படைப்புச் செயல்திறன், உரைத்திறன், ஆளுமைத்திறன் பற்றியெல்லாம் பலரும் எழுதியிருக்கிறார்கள். அவரவர் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். இவரும் தனது பார்வையில் பதிவு செய்திருக்கிறார்.
÷ஆனால், பாரதியின் மொழிபெயர்ப்புத்திறன் பற்றியும், பாரதியார் பார்வையில் இசுலாம் பற்றியும் முதுமுனைவர் அறிவுடைநம்பி செய்திருக்கும் பதிவு வித்தியாசமானது, சிந்திக்கத்தக்கது. பாரதியார் கவிதைகளில் மொழிபெயர்த்ததை விட உரைநடையில் மொழிபெயர்த்ததுதான் அதிகம். தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், வங்காளம், பிரெஞ்சு, தெலுங்கு, மலையாளம், கன்னடம், சீனம் முதலிய பல மொழிகள் பாரதிக்குத் தெரிந்திருந்ததாகக் கூறுவார்கள்.
÷""பாரதியார் பிற மொழியிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யும்போது, அந்தந்த மொழியில் உள்ள கருத்துகளை ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொள்கிறார். பின்னர் அவற்றை வரிக்கு வரி என்று மொழிபெயர்க்காமல், அதன் சாரத்தை மட்டும் தமிழில் மொழிபெயர்த்துத் தருவதாக அவரே கூறியிருக்கிறார். தமிழில் அவ்வாறு மொழிபெயர்த்துத் தரும்பொழுது, தமிழ் மொழிக்கும், பண்பாட்டுக்கும் ஏற்பத் தமிழ் இலக்கியங்களில் இருந்தே தகுந்த சான்றுகளை எடுத்துத் தருகின்றார்.
÷சில மொழிபெயர்ப்புகளைப் படிக்கும்போது பலருக்கும் புரியாமல், மூலத்தையே படித்துவிடலாம் போலத் தோன்றும். ஆனால் பாரதியாரின் நடையில் பார்க்கும்பொழுது மொழிபெயர்ப்புப் போலத் தெரியாது. மொழிபெயர்ப்பு என்று கூறாமல் இருந்திருந்தால், பாரதியாரின் உரைநடையைத்தான் அவர்கள் அவர்களது மொழியில் மொழிபெயர்த்திருக்கின்றனர் என்று சொல்லத் தோன்றும். அந்த அளவுக்குப் பாரதியாரின் மொழிபெயர்ப்பு எளிய தமிழில், எளிய நடையில் பாமரரும் படிக்கும் வண்ணம் அமைத்திருப்பது சிறப்புக்குரியதாகும்'' என்று  அறிவுடைநம்பி கூறுவது மெத்தச் சரி.
÷"பேசுவது போலவே உரைநடை அமைய வேண்டும்' என்ற கொள்கையில் விருப்பமுடையவர் பாரதியார். பாரதியாரின் கவிதைகளைப் போலல்லாமல், உரைநடையில் சம்ஸ்கிருதக் கலப்பு அதிகம் என்று குற்றம் சாட்டுபவர்கள் உண்டு. பாரதி வாழ்ந்த காலத்தில் பேச்சு வழக்கு மணிப்பிரவாள நடையில்தான் அமைந்திருந்தது. அதனால்தான் அவரது பத்திரிகைக் கட்டுரைகள் மணிப்பிரவாள நடையில் சம்ஸ்கிருதக் கலப்புடன் அமைந்திருந்தன. கவிதை என்று வரும்போது, அது இலக்கியத் தரத்தில் அமைய வேண்டும் என்று பாரதி கருதியிருக்கிறார்.
÷ஒரு முறையாவது கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று ம.சா.அறிவுடைநம்பியின் "பாரதியின் பன்முகப் பார்வை'.
****
அமெரிக்காவிலுள்ள ஜார்ஜியா மாநிலம் ஆல்பரேட்டா என்கிற ஊரிலிருந்து பி.தமிழ் முகில் என்பவர் இணையதளத்தில் பதிவு செய்திருக்கும் ஒரு கவிதையைப் படிக்க நேர்ந்தது. "ஊர்வலத்தில் ஓர் அத்துமீறல்!!! என்பது தலைப்பு. எந்த இணையதளம் என்று குறிப்பெடுத்து வைக்க மறந்துவிட்டேன்.
ஒழுக்கத்துடன் சீராய்
நடக்கிறது ஓர்
அழகு ஊர்வலம்!!!
திடீரென்று அதிரடியாய்
ஆங்கோர் அத்துமீறல்!!!
அமைதியாய்ச் செல்லும்
எறும்புக் கூட்டத்தின்
நடுவே ராட்சதப் பாதமென
ஓர் மனிதனின்
காலடி!!!

No comments:

Post a Comment