blank'/> muhilneel: May 2012

Friday, May 25, 2012

கொன்றை வேந்தன்

கடவுள் வாழ்த்து

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

உயிர் வருக்கம்

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.
8. ஏவா மக்கள் மூவா மருந்து.
9. ஐயம் புகினும் செய்வன செய்.
10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு.
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு.

ககர வருக்கம்
14. கற்பெனப்படுவது சொல் திறம்பாமை.
15. காவல்தானே பாவையர்க்கு அழகு.
16. கிட்டாதாயின் வெட்டென மற.
17. கீழோர் ஆயினும் தாழ உரை.
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்.
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்.
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.
22. கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.
23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி.
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு.
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை.

சகர வருக்கம்
26. சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை.
27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு.
28. சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு.
29. சீரைத் தேடின் ஏரைத் தேடு.
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.
31. சூதும் வாதும் வேதனை செய்யும்.
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்.
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு.
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்.
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்.
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.

தகர வருக்கம் 37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
40. தீராக் கோபம் போராய் முடியும்.
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.
42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.
43. தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்.
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு.
46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது.
47. தோழனோடும் ஏழைமை பேசேல்.

நகர வருக்கம்
48. நல்லிணக்கம் அல்லல் படுத்தும்.
49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை.
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை.
51. நீரகம் பொருந்திய ஊரகத்து இரு.
52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.
53. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு.
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.
55. நேரா நோன்பு சீராகாது.
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்.
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்.
58. நோன்பு என்பதுவே (? என்பது) கொன்று தின்னாமை.

பகர வருக்கம்
59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்.
61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்.
62. பீரம் பேணி பாரம் தாங்கும்.
63. புலையும் கொலையும் களவும் தவிர்.
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்.
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்.
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.
67. பையச் சென்றால் வையம் தாங்கும்.
68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்.

மகர வருக்கம்
70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.
71. மாரி அல்லது காரியம் இல்லை.
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை.
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு.
77. மேழிச் செல்வம் கோழை படாது.
78. மை விழியார் தம் மனையகன்று ஒழுகு.
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்.
80. மோனம் என்பது ஞான வரம்பு.

வகர வருக்கம்
81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்.
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்.
83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்.
84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும்.
85. உரவோர் என்கை இரவாது இருத்தல்.
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.
88. வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை.
89. வைகல் தோறும் தெய்வம் தொழு.
90. ஒத்த இடத்து நித்திரை கொள்.
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்.

Source:http://library.senthamil.org

ஆத்திசூடி

  • ஆசிரியர்: ஔவையார்
  • பாடல்கள்: 109

    கடவுள் வாழ்த்து

    ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
    ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

    ஆத்தி-திருவாத்தி பூமாலையை சூடி-அணிபவராகிய சிவபெருமான் அமர்ந்த-விரும்பிய

    தேவனை-விநாயகக் கடவுளை ஏத்தி ஏத்தி-வாழ்த்தி வாழ்த்தி தொழுவோம்-வணங்குவோம் யாமே-நாமே.

    உயிர் வருக்கம்

    1.அறம் செய விரும்பு
    • நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.
    2. ஆறுவது சினம்
    • கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
    3. இயல்வது கரவேல்
    • உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.
    4. ஈவது விலக்கேல்
    • ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே
    5.உடையது விளம்பேல்
    • உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.
    6. ஊக்கமது கைவிடேல்
    • எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.
    7. எண் எழுத்து இகழேல்
    • கணித, இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல் நன்கு கற்க வேண்டும்.
    8. ஏற்பது இகழ்ச்சி
    • இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.
    9. ஐயம் இட்டு உண்
    • யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.
    10. ஒப்புரவு ஒழுகு
    • உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.
    11. ஓதுவது ஒழியேல்
    • நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
    12. ஔவியம் பேசேல்
    • ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.
    13.அஃகஞ் சுருக்கேல்
    • அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.

    உயிர்மெய் வருக்கம்

    14.கண்டொன்று சொல்லேல்.
    • கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே.
    15.ஙப் போல் வளை.
    • 'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ
      அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.
      • "ங" என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
                   16.சனி நீராடு.
    • சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்.
                  17.ஞயம்பட உரை.
    • கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாக பேசு.
                 18.இடம்பட வீடு எடேல்.
    • உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.
19.இணக்கம் அறிந்து இணங்கு.
  • ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.
20.தந்தை தாய்ப் பேண்.
  • உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.
21.நன்றி மறவேல்.
  • ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.
22.பருவத்தே பயிர் செய்.
  • எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.
23.மண் பறித்து உண்ணேல்.
  • பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே (அல்லது)
  • நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)
24.இயல்பு அலாதன செய்யேல்.
  • நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.
25.அரவம் ஆட்டேல்.
  • பாம்புகளை பிடித்து விளையாடாதே.
26.இலவம் பஞ்சில் துயில்.
  • 'இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு
27.வஞ்சகம் பேசேல்.
  • கபடச்(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களை பேசாதே
28.அழகு அலாதன செய்யேல்.
  • இழிவான செயல்களை செய்யாதே
29.இளமையில் கல்.
  • இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை (இலக்கணத்தையும், கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள்.
30.அறனை மறவேல்.
  • தருமத்தை எப்போதும் மறவாமல் செய்
31.அனந்தல் ஆடேல்.
  • மிகுதியாக துங்காதே

ககர வருக்கம்

32.கடிவது மற
  • யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.
33.காப்பது விரதம்
  • தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் (அல்லது)
  • பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.
34.கிழமை பட வாழ்
  • உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்
35. கீழ்மை யகற்று
  • இழிவான குணஞ் செயல்களை நீக்கு
36. குணமது கைவிடேல்
  • நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).
37. கூடிப் பிரியேல்
  • நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே
38. கெடுப்ப தொழி
  • பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.
39. கேள்வி முயல்
  • கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயர்சி செய்
40. கைவினை கரவேல்
  • உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.
41. கொள்ளை விரும்பேல்
  • பிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே.
42. கோதாட் டொழி
  • குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு)
43.கௌவை அகற்று
  • வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு

சகர வருக்கம்

44. சக்கர நெறி நில்
  • அரசன் வகுத்த நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் = ஆள்பவர், தலைவர் )
45.சான்றோ ரினத்திரு
  • அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.
46. சித்திரம் பேசெல்
  • பொய்யான வார்தைகளை மெய் போல்ப் பேசாதே
47. சீர்மை மறவேல்
  • புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.
48. சுளிக்கச் சொல்லேல்
  • கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்
49. சூது விரும்பேல்
  • ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.
50. செய்வன திருந்தச் செய்
  • செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்
51.சேரிடமறிந்து சேர்
  • நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடயவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.
52. சையெனத் திரியேல்
  • பெரியோர் 'சீ' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே
53. சொற்சோர்வு படேல்
  • பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே
54. சோம்பித் திரியேல்
  • முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.

தகர வருக்கம்

55. தக்கோ னெனத்திரி
  • பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்
56. தானமது விரும்பு
  • யாசிப்பவர்களுக்கு தானம் செய்.
57. திருமாலுக்கு அடிமை செய்
  • நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்
58. தீவினை யகற்று
  • பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.
59.துன்பத்திற் கிடங்கொடேல்
  • முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.
60. தூக்கி வினைசெய்
  • ஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளை நன்கு ஆராயிந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும்
61. தெய்வ மிகழேல்
  • கடவுளை பழிக்காதே.
62. தேசத்தோ டொத்துவாழ்
  • உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்
63. தையல்சொல் கேளேல்
  • மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.
64. தொன்மை மறவேல்
  • பழமையாகிய நட்பினை மறந்துவிடாதே.
65. தோற்பன தொடரேல்
  • ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே.

நகர வருக்கம்

66. நன்மை கடைப்பிடி
  • நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்
67. நாடொப் பனசெய்
  • நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்
68. நிலையிற் பிரியேல்
  • உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.
69. நீர்விளை யாடேல்
  • வெள்ளத்தில் நீந்தி விளையாடாதே
70. நுண்மை நுகரேல்
  • நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே
71. நூல்பல கல்
  • அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி
72.நெற்பயிர் விளை
  • நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.
73. நேர்பட வொழுகு
  • ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட
74. நைவினை நணுகேல்
  • பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே
75. நொய்ய வுரையேல்
  • பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.
76. நோய்க்கிடங் கொடேல்
  • மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.

பகர வருக்கம்

77. பழிப்பன பகரேல்
  • பெறியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றை பேசாதே.
78. பாம்பொடு பழகேல்
  • பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.
79. பிழைபடச் சொல்லேல்
  • குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.
80. பீடு பெறநில்
  • பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
  • உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்
82. பூமி திருத்தியுண்
  • விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.(அ)விவசாயத்தை வாழ்க்கை தொழிலாகக் கொள்
83. பெரியாரைத் துணைக்கொள்
  • அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்
84. பேதைமை யகற்று
  • அறியாமையை போக்கு
85. பையலோ டிணங்கேல்
  • அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.
86. பொருடனைப் போற்றிவாழ்
  • பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ்.
87. போர்த்தொழில் புரியேல்
  • யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாக செய்யாதே

மகர வருக்கம்

88. மனந்தடு மாறேல்
  • எதனாலும் மனக்கலக்கம் அடையாதே
89. மாற்றானுக் கிடங்கொடேல்
  • பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.
90. மிகைபடச் சொல்லேல்
  • சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.
91. மீதூண் விரும்பேல்
  • மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.
92. முனைமுகத்து நில்லேல்
  • எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே
93. மூர்க்கரோ டிணங்கேல்
  • மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே
94. மெல்லினல்லாள் தோள்சேர்
  • பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.
95. மேன்மக்கள் சொற்கேள்
  • நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.
96. மைவிழியார் மனையகல்
  • விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்
97. மொழிவ தறமொழி
  • சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்
98.மோகத்தை முனி
  • நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு

வகர வருக்கம்

99. வல்லமை பேசேல்
  • உன்னுடைய சாமர்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே
100. வாதுமுற் கூறேல்
  • பெறியோர்கள் இடத்தில் முறன் பட்டு வாதிடாதே
101. வித்தை விரும்பு
  • கல்வியாகிய நற்பொருளை விரும்பு
102. வீடு பெறநில்
  • முக்தியை பெறுவதற்க்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து
103. உத்தமனாய் இரு
  • உயர்ந்த குணங்கள் கொண்டவனாக் வாழு.
104. ஊருடன் கூடிவாழ்
  • ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்
105. வெட்டெனப் பேசேல்
  • யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே
106. வேண்டி வினைசெயேல்
  • வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே
107. வைகறை துயிலெழு
  • நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு
108. ஒன்னாரைத் தேறேல்
  • பகைவர்களை நம்பாதே
109. ஓரஞ் சொல்லேல்
  • எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு.

Source: Wikipedia

Monday, May 21, 2012

நாடி கவிதை வலைபூ நடத்திய கவிதை போட்டிக்கான பதிவு.




தாகத்திற்கு நீர்நிலை தேடி
பறந்து திரிந்த நிலை மாறி
குழாயடியில் - தொண்டை நனைக்க
துளி நீரேனும் கிட்டாதா
எனும் நிலை வந்ததோ??

http://nadikavithai.blogspot.com/2012/05/blog-post.html?showComment=1336145536366#c9014637680995489212